நிழல் 5:
வீட்டிற்குள் ராஜாங்கம் நுழையும் போதே, அந்த வீட்டின் அமைதியே உணர்த்தியது, பின் வரப்போகும் பெரிய சண்டையைப் பற்றி. எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தார் ராஜாங்கம்.
“நாங்களும் வீட்ல சோறு தான் வடிக்கிறோம். ஆனா, உங்களுக்கு அவ வீட்ல சாப்பிட்டாத்தான் சாப்பிட்ட மாதிரி இருக்குமோ..?” என்றார் சாந்தா.
“உனக்கே அது தெரிஞ்சா சரி..” என்றார் ராஜாங்கம்.
“என்ன பண்றா..? என் தங்கச்சி..” என்று இழுத்தார் சாந்தா, என் தங்கச்சியில் அழுத்தம் கொடுத்து.
“அவ என்ன பண்ணா உனக்கென்ன..? எப்ப நான் வீட்டுக்கு வருவேன்னு காத்திட்டு இருப்பியோ..? வந்த உடனே என் வாயைக் கிளருனும்ன்னு..” என்றார்.
“உங்களுக்கு என்ன இருந்தாலும் அவ செல்ல பொண்டாட்டி ஆச்சே. ஒன்னு சொல்ல விட மாட்டிகளே..! நான் தான் இங்க கெடயா கெடக்குறேன். ஆனா, மனுஷனுக்கு அவளைத் தான பிடிக்குது..” என்று சாந்தா ஆரம்பிக்க,
‘சாந்தா, இப்பவும் சொல்றேன். அவள் ஒன்னும் என்னோட வப்பாட்டி இல்லை. முறைப்படி தாலி கட்டுன பொண்டாட்டி. யாருக்கும் எந்த மனக்கசப்பும் வந்துட கூடாதுன்னு தான், தனியா போய் இருக்கா. அவ அப்படி போய் இருக்கான்றதுக்காக நானும் அப்படியே விட்ருவேன்னு நினைச்சியா..? அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது..” என்றார் ராஜாங்கம்.
“உங்களுக்கு நம்ம கல்யாணத்தப்பவே அவ மேல ஒரு கண்ணு. நானும் முடியாம இருந்து அவளை கட்டிக்கோங்கன்னு சொன்னது தான்… நீங்களும் தலையை ஆட்டி தாலியை கட்டிட்டிங்க. அவளும் விவரம் இல்லாதவ கிடையாது. அவளுக்கு பிடிப்புக்கு வேணும்ன்னு, வந்த உடனே வளவளன்னு பிள்ளைகளை பெத்துப் போட்டுட்டா..! நான் திரும்பியும் பொழச்சு வருவேன்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டா..!” என்று மங்கையை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார்.
“உனக்கெல்லாம் நன்றிங்கிற வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமாடி. நீ உயிர் பிழைக்க காரணமே அவதாண்டி. அந்த நினைப்பு கொஞ்சமாவது இருக்கா உனக்கு..!” என்று எறிந்து விழுந்தார் ராஜாங்கம்.
“எது சொன்னாலும், இதை மட்டும் சொல்லிடுங்க. என்னோட பேச்சு எங்க எடுபடுது. அங்க போயிட்டு வந்தாலே போதுமே, அவ திருநீர் அடிச்சிருப்பா… நீங்க ஆடுவிங்க..” என்றார் சாந்தா கோபமாய்.
“இப்படி பேசாத சாந்தா.. உண்மையை சொல்லப் போனா, அவ என்கிட்டே அதிகம் பேசுறதே கிடையாது. அங்க இருக்குற மரியாதை இங்க சுத்தமா இல்லை. அவ என்னைக் கண்டு பயப்படுறா. நான் உன்னைக் பார்த்து பயப்படுறேன். அது தான் உண்மை..!” என்றார் கொஞ்சம் சோர்ந்தவராய்.
“நான் ஒன்னுமே சொல்லலை சாமி..! போதுமா..!” என்றார் சாந்தா.
இப்படித்தான் பல வருடங்களாக சமாளித்துக் கொண்டிருக்கிறார் ராஜாங்கம்.
நம்ம அமுதாவும் காலேஜ் முடிச்சுட்டா..அவளுக்கு ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு எண்ணம் இருக்கா..? எதுவும் இல்லை, ஆனா.. பேசாத மக மேல மட்டும் பாசம் பொங்கி வந்துடும்..” என்று சாந்தா சொல்ல,
“அதெல்லாம் நான் சொல்லித்தான் வச்சிருக்கேன். எதை எப்படிப் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். நீ கொஞ்ச நேரம் வாயை மூடு..” என்று எறிந்து விழ ஆரம்பித்தார் ராஜாங்கம். அவ்வளவுதான் சாந்தா அதோடு வாயை மூடிக் கொண்டார். அவருக்குத் தெரியும், ராஜாங்கத்திற்கு கோபம் எப்படி வரும் என்று.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கோபமாய் உள்ளே வந்தான் மாதவன். வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் செல்ல,
“என்னாச்சு மாதவா..? ஏண்டா இவ்வளவு கோபமா வர..?” என்றார் சாந்தா.
“அந்த கதிருக்கு மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பும்மா..! ரொம்பத்தான் சீனைப் போடுறான். இருக்கு ஒருநாள் அவனுக்கு என்கிட்டே..” என்றான் கோபமாய்.
“விஷயம் என்னன்னு சொல்லாம, ஏன் இப்படி கத்திட்டு இருக்க மாதவா..?” என்றார் ராஜாங்கம். அவரை நிமிர்ந்து பார்த்தவன், எந்த பதிலும் சொல்லாமல் அசட்டையாக திரும்பினான். அவனின் இந்த உதாசீனம் ராஜாங்கத்தின் அடி மனதை அப்படி பாதித்தது. ஆனால் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், சாந்தாவை முறைத்தார்.
“அப்பா கேட்குறார்..? என்ன பார்வைடா இது..?” என்று திட்ட ஆரம்பித்தார் சாந்தா.
“நாலு மாட்டை அடக்கிட்டா, அவன் பெரிய வீரனா..? இந்த வருஷம் மாடு பிடிக்கும் போட்டிக்கு அவன் பேரைத்தான் முதல்ல குடுத்திருக்கானுக. மத்தவங்களை எல்லாம் ஆம்பளையா தெரியலை போல..” என்றான் மாதவன்.
“என்ன வார்த்தை மாதவா இது..? நீயும் காளையை அடக்குனா, உன்னையும் அப்படித்தான் சொல்லுவாங்க. அதை விட்டுட்டு அவன் மேல பொறாமைப்பட்டு என்ன ஆகப் போகுது..?” என்றார் ராஜாங்கம்.
“உங்களுக்கு நான் அவனை ஒண்ணுமே சொல்லிடக் கூடாது. பெத்த பையனை விட அவன்தான் உங்களுக்கு உசத்தியா போய்ட்டான்..” என்று அதற்கும் கோபப்பட்டான் மாதவன்.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..” என்று துண்டை உதறி தோளில் போட்டவர், எழுந்து வெளியே சென்று விட்டார்.
“ஏண்டா, அவரைக் கோபப்படுத்திட்டே இருக்க..? ஏற்கனவே இங்க வரணும்ன்னா மனுஷன் யோசிக்கிறார். நீங்களும் இப்படியே பண்ணிட்டு இருந்தா, அந்த மனுஷன் மொத்தமா அங்கேயே போய்டுவார்..” என்றார் சாந்தா.
“என்னமோ நான் மட்டும் தான் அவரை அப்படி பேசுற மாதிரி பேசுறிங்க..? ஏன் நீங்க அப்படி பேசுறதே இல்லையா என்ன..?” என்றான் நக்கலாய்.
“நான் என் புருஷனை பேசுறேன்..” என்றார் சாந்தா.
“நான் என் அப்பனைப் பேசுறேன். அவ்வளவு தான்..!” என்று அசட்டையாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான் மாதவன்.
இரண்டு மனைவிகள், ஐந்து பிள்ளைகள் என்றாலும், ராஜாங்கத்திற்கு அனைவருக்கும் செய்யும் அளவிற்கு குறைவில்லாத சொத்துக்கள் இருந்தது. இரண்டு குடும்பத்தையும் செல்வ செழிப்புடன் தான் வைத்திருந்தார்.
அன்று அதிகாலையிலேயே கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் செல்வி. சுடிதாரின் துப்பட்டாவை அவள் ஒரு பக்கமாக போட்டிருக்க,
“செல்வி துப்பட்டாவை ரெண்டு பக்கம் போடு. என்ன பழக்கம் இது..?” என்று கடிந்து கொண்டார் மங்கை.
“அம்மா..! என்னை படுத்தி எடுக்காதிங்க. நான் எங்கயும் அறை குறையா போட்டிருக்க மாதிரி எனக்குத் தெரியலை. முதல்ல நான் கேட்ட செல்போன் என்னாச்சு. எல்லா பிள்ளைங்ககிட்டயும் போன் இருக்கு. என்கிட்டே மட்டும் தான் இல்லை..” என்று குறைபட்டுக் கொண்டிருந்தாள்.
“படிக்கிற பிள்ளைக்கு போன் எதுக்கு..? நீ என்ன வெளியூர்லையா படிக்கிற..?” என்றார் மங்கை.
“வெளியூர்ல படிச்சா மட்டும் அப்படியே வாங்கிக்குடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பிங்க நீங்க… அடப்போமா..” என்றவள் எரிச்சலுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கு உனக்கு காலேஜ் லீவு தான செல்வி..” என்றார் மங்கை.
“ஆமாம்மா..! ஏன் கேட்குறிங்க..?” என்றாள் சந்தேகமாய்.
“இதென்ன கேள்வி.. சும்மாதான் கேட்டேன்..” என்ற மங்கை அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
கதிரின் வீட்டில்…
“என்னங்க நான் கேட்டுட்டே இருக்கேன்..! நீங்க எந்த பதிலும் சொல்லாம இருக்கீங்க..?” என்றார் லட்சுமி.
“இதெல்லாம் சரியா வராது லட்சுமி. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். ஆனா, ராஜாங்கத்துக்கு ஏற்கனவே அங்க பல பிரச்சனை. ரெண்டு குடும்பத்துக்கும் கிடந்து அல்லாடுறான். இதுல மூத்த பொண்ணு வேற இருக்கு. இப்போ போய் செல்வியை கேட்டா, பொண்ணு தருவானோ என்னவோ..?” என்றார் மணிகண்டன்.
“அதெல்லாம் தருவாருங்க. நம்ம கதிருக்கு செல்வின்னா அப்படி இஷ்ட்டம். அவமேல உசுரா இருக்கான். நம்ம கதிருக்கும் என்ன குறை..? அறிவு இல்லையா..? இல்லை அழகு தான் இல்லையா..? இல்ல சொத்து சுகம் தான் இல்லையா..? நம்ம கதிருக்கு கேட்ட உடனேயே பொண்ணைக் குடுத்துடுவார்..” என்றார் லட்சுமி.
“கேட்டுப் பார்க்குறேன். அவங்க ஏதாவது மறுப்பு சொல்லிட்டா, நீயும் உம்மகனும் புலம்ப கூடாது..” என்றார் மணிகண்டன்.
“அதெல்லாம் சரின்னு தாங்க சொல்வாங்க..!” என்றார் லட்சுமி.
அவர் சொன்னதைப் போல், மங்கைக்கு இதில் முழு சம்மதம் தான். அதிலும் கதிருக்கு என்றால் கண்ணை மூடிக் கொண்டு பொண்ணைக் கொடுக்க தயாராக இருந்தார்.
ராஜாங்கத்திற்கு தான் கொஞ்சம் யோசனையாக இருந்தது. அமுதா இருக்கும் போது, செல்விக்கு செய்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பது அவருடைய எண்ணம்.
“இப்போதைக்கு பேசி முடிச்சுக்குவோம். அமுதாக்கு முடிஞ்ச உடனே இவங்க கல்யாணத்தை பண்ணிக்கலாம்..” என்று மணிகண்டன் சொல்ல, அதுவும் சரியென்று தான் பட்டது ராஜாங்கத்திற்கு.
அவர் நினைத்ததைப் போல, ஆடித் தீர்த்துவிட்டார் சாந்தா. மூணு வயசுக்கு மூத்தவ இருக்கும் போது அவளுக்கு மட்டும் எப்படி நீங்க பேசி முடிப்பிங்க. என் மகளுக்கு ஒரு நல்லது செய்யாம, அவளுக்கு செய்றதுக்கு என்கிட்டையே வந்து கேட்குறிங்க..?” என்றார் சாந்தா.
“இப்போதைக்கு பேசி மட்டும் முடிச்சுக்கலாம். அமுதா கல்யாணம் முடிஞ்ச பிறகு, செல்வி கல்யாணத்தை வச்சுக்கலாம்..!” என்றார் ராஜாங்கம்.
“என்னது..? அவனுக்கு நம்ம வீட்ல இருந்து பொண்ணு குடுக்குறதா..? முடியவே முடியாது. சும்மாவே அவன் ஓவரா ஆடுவான். இதுல பொண்ணையும் குடுத்துட்டா, ரொம்பத்தான் ஆடுவான்..” என்றான் மாதவனும்.
“நான் உங்ககிட்ட அனுமதி கேட்கலை. தகவல் தான் சொன்னேன். நீ இப்படி சொல்லுவன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதான் அமுதாவுக்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். மாப்பிள்ளை கவர்மென்ட் வேலை பார்க்குறார். கைநிறைய சம்பளம். அவங்களுக்கும் அமுதாவை ரொம்ப பிடிச்சுப் போய்டுச்சு. அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரதா சொல்லியிருக்காங்க..!” என்றார் அவர்.
மாப்பிள்ளை கவர்மென்ட் வேலை என்றதும் சாந்தாவின் மனம் கொஞ்சம் அமைதியானது. அதற்கடுத்து அவர் செல்வியைப் பற்றி யோசிக்கவில்லை. அமுதாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் அவரின் கவனம் முழுவதும் இருந்தது.
ஆனால் மாதவனுக்கு தான் மனம் ஆறவில்லை. ஏனோ, அவனுக்கும் கதிருக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆவதில்லை. என்னதான் செல்வியை பிடிக்காவிட்டாலும், கதிருக்கு அவளைக் கட்டிக் கொடுப்பதில் மாதவனுக்கு துளியும் விருப்பமில்லை.
வீட்டில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் கதிருக்கும் தெரிந்திருக்கவில்லை. செல்விக்கும் தெரிந்திருக்கவில்லை. அன்று கல்லூரி முடித்து வந்து கொண்டிருந்தாள் செல்வி.
காலையில் இருந்து அவளுக்கு மனசே சரியில்லாமல் இருந்தது. லேசாக காய்ச்சல் அடிப்பதைப் போல் இருக்க, சுறுசுறுப்பில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள். எதிரே இவளைப் பார்த்துக் கொண்டே பைக்கில் வந்து கொண்டிருந்தான் கதிர்.
“எதுக்கு இப்படி சோகமா வரா..?” என்ற யோசனையுடன் வந்து கொண்டிருந்தான் கதிர். அவனே எதிர்பார்க்காமல் ஒரு சின்னப் பையன் குறுக்கே வந்துவிட, அவன்மேல் மோதாமல் இருக்க, வண்டியைத் திருப்பிய கதிர், பேலன்ஸ் இன்றி விழுந்திருந்தான். அவன் வருகிறான் என்று செல்விக்கும் தெரிந்து தான் இருந்தது. அவன் விழுந்தவுடன், வேகமாக ஓடினாள்.
நல்ல நேரமாக, அவனுக்கு அடியெதுவும் படவில்லை. கைகளில் லேசான சிராய்ப்பு இருக்க,
“ஐயோ.. என்னாச்சு மாமா..?” என்று பதறியபடி வந்தாள்.
“ஒண்ணுமில்லை செல்வி..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, செல்வியின் பார்வை அவன் உடல் முழுவதும் ஆராய்ந்தது.
“சொல்லிட்டே இருக்கேன்ல ஒன்னும் இல்லடி..!” என்றான் கதிர்.
“பார்வையை ரோட்ல வச்சு வண்டி ஓட்டனும். அதைவிட்டுட்டு உங்க இஷ்ட்டத்துக்கு ஓட்டினா, இப்படி தான் விழுந்து புதையல் எடுக்கணும்..” என்றாள்.
“என்னோட பார்வை ரோட்ல இல்லைன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. நான் விழுந்த உடனே ஓடி வந்திருக்க.. மாமன் மேல பாசம் இல்லாமையா..?” என்றான்.
“யார் விழுந்திருந்தாலும் இப்படித்தான் ஓடி வந்திருப்பேன்..!” என்றவள் கிளம்ப முற்பட,
“நான் வீட்ல இறக்கி விடட்டுமா..?” என்றான் கண அக்கறையாக.
“ஒன்னும் தேவையில்லை. இங்கன இருக்குற வீட்டுக்கு வண்டி வேறையா..?” என்று இடக்காக சொன்னவன், அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
“இவ என்ன இப்பவே ஆள் கும்முன்னு இருக்கா..! இப்பத்தான பத்தொன்பது வயசுன்னு சொன்னாங்க. ஆனா, மனுஷன் மனசுக்குள்ள புகுந்து கபடி ஆடுறாளே..? இவளைப் பார்த்து தான் வண்டியை விட்டேன்னு எப்படி சொல்லுவேன்..? கதிரு உன் நிலைமை இப்படியா ஆகணும்..? சீக்கிரம் முந்திக்கடா கதிரு..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
கதிரின் மனம் முழுவதும் செல்வி மட்டுமே நிறைந்திருந்தாள். அவளுக்குத் தெரியாமலேயே அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவான். இதெல்லாம் செல்விக்குத் தெரியாது என்று அவன் நினைத்திருக்க, அவளுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், வெளியே கா++++++ட்டிக் கொள்ளாதவாறு இருந்து விட்டாள் செல்வி.
சுற்று வாட்டாரத்தில் எங்கு ஜல்லிக் கட்டு நடந்தாலும், அங்கு கதிர் தான் இருப்பான். வெற்றியாளனும் அவனே. வயசுப் பெண்களுக்கு அவன் கனவு நாயகன். அவனின் நாயகியோ செல்வி மட்டும் தான். ஏனோ அவளிடம் தோன்றும் அந்த உணர்வு வேறு யாரைப் பார்த்தாலும் அவனுக்குத் தோன்றுவதில்லை. மற்ற பெண்களிடம் நின்று கூட பேச மாட்டான் கதிர். அவனின் அந்த ஒழுக்கம் தான், செல்விக்கு அவனிடம் பிடித்தது.
வீட்டிற்கு வந்த செல்வியிடம் முதல் ஆளாக விஷயத்தைப் போட்டுடைத்தான் மாறன்.
“அக்கா, உனக்கு விஷயம் தெரியுமா..?” என்றான்.
“என்னடா விஷயம்..?”
“நம்ம கதிர் மாமாவுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம். அம்மாவும் அப்பாவும் பேசிட்டு இருந்தாங்க..!” என்றான் மாறன்.
“எதையாவது உளறாத மாறா..? அம்மா எதுவும் சொல்லலை..” என்றாள்.
“உண்மைதான் செல்வி.. நானும் கேட்டேன். மணிகண்டன் மாமா பேசியிருப்பார் போல. பேசாம நீ கதிர் மாமாவை கட்டிக்க செல்வி. அவரை மாதிரி ஒருத்தரை தேடுனாலும் கிடைக்காதாம். பக்கத்து வீட்டு அக்கா, அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க..!” என்றாள் கயல்.
“விஷயம் பக்கத்து வீடு வரைக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனா, எனக்குத் தான் தெரியலை..!” என்று எரிச்சல் அடைந்தாள் செல்வி.
“எப்ப வந்த செல்வி..? எதுக்கு முகம் கூட கழுவாம உட்கார்ந்திருக்க..?” என்றார் மங்கை.
“அம்மா, இவங்க சொல்றது உண்மையா..? கதிருக்கு என்னை பொண்ணு கேட்டாங்களா…?” என்றாள்.
“அதுக்குள்ளே சொல்லியாச்சா..?” என்று மங்கை, மாறனையும், கயலையும் முறைத்தார்.
“அவங்களை எதுக்கும்மா முறைக்கிறிங்க..? இப்ப ஏன் புதுப் பிரச்சனையை ஆரம்பிக்கிறிங்க..? அதுலயும் அமுதாவுக்கு கல்யாணம் பண்ணாம, நீங்க எனக்கு பேசி முடிச்சா, அந்தம்மா அந்த ஆட்டம் ஆடும்..” என்றாள் செல்வி.
“பெரியம்மான்னு சொல்லுவ செல்வி..!” என்று அதட்டினார் மங்கை.
“உங்களுக்காக வேணுமின்னா சொல்லுவேன். மனசுல இருந்து சொல்ல மாட்டேன். பரவாயில்லையா…?” என்றாள் செல்வி.
“இப்படி வாயாடுறதை முதல்ல நிறுத்து செல்வி. இதென்ன பழக்கம்..? அமுதாவுக்கும் வரன் பார்த்திருக்கார் அப்பா. மாப்பிள்ளை கவர்மென்ட் வேலையாம். அவளுக்கு பேசி முடிச்சுட்டே, உனக்கு முடிக்கலாம்ன்னு சொல்லிட்டேன்..” என்றார் மங்கை.
“அதான, நீங்களாவது, தைரியமா பேசுறதாவது..?” என்ற செல்வி சிரிக்க,
“அதை விடு செல்வி..! உனக்கு சம்மதம் தான..? கதிர் ரொம்ப நல்லவன் செல்வி…” என்றார் மங்கை.
“கதிர் மாமா நல்லவர்ன்னு எனக்கும் தெரியும்மா..! ஆனா, நான் இன்னும் படிக்கணும். வாழ்க்கையில எந்த ஆம்பளையையும் என்னால நம்ப முடியாது. பொண்டாட்டி குணமான உடனேயே, உன்னையே கழட்டி விட்டவர் தான உன் புருஷன். என்னைக் கட்டுறவனும் அப்படி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்..?” என்றாள்.
“எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அதென்ன கழட்டி விட்டார் அப்படி இப்படின்னு பேசிட்டு இருக்க..? அது என் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அவர் பொண்டாட்டி நானே அதை பெரிசா எடுத்துக்கலை. நீயேன் இதையே பேசிட்டு இருக்க. ஒழுங்கா கதிருக்கு கழுத்தை நீட்டுற வழியைப் பாரு..” என்றார்.
“கழுத்தை நீட்ட நான் ஒன்னும் ஆடு கிடையாது. வெட்டிப் போட நீங்க பூசாரியும் கிடையாது..!” என்றாள் செல்வி.
“தப்புத்தாண்டி..! எனக்கு தான் வாழ்க்கை ஒழுங்கா அமையலை. நம்ம பொண்ணாவது நல்ல வாழ்க்கை வாழணும்ன்னு நினைக்கிறேன் பாரு.. இதெல்லாம் எனக்கு பேராசை தான்..!” என்றார் மங்கை. அவர் கோபமாகவே பேசிப் பார்த்த செல்விக்கு அவர் இப்படி பேசவும் ஒரு மாதிரியாகிப் போனது.
“உங்களைக் கஷ்ட்டப்படுத்தனும்ன்னு நான் அப்படி சொல்லலை. எனக்கு கதிர் மாமாவை பிடிக்கும் தான். ஆனா, நான் படிக்கணும். அதுக்கு அவர் சம்மதிச்சா சரித்தான்..!” என்றாள் செல்வி.
“அப்போ உனக்கு சம்மதமா..?” என்றார்.
“நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்..!” என்றாள்.
“வேண்டாம் செல்வி. நீ பேசாம ஏதாவது எக்குத் தப்பா பேசி வைப்ப..” என்றார்.
“என்னை நம்புங்கம்மா..! நான் தேவையில்லாம எதையும் பேச மாட்டேன்..!” என்றாள் செல்வி.
மறுநாள் கதிரைத் தேடி அவனுடைய தோட்டத்திற்கே சென்றாள் செல்வி.
வாழைத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் கதிர். அவனைத் தேடி சென்றவள், அவனுக்கு அருகில் சென்ற பின்னும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் மேல் அவளுக்கு வெறுப்பும் இல்லை, விருப்பும் இல்லை. சமீப காலமாக, அவளின் நினைவுகளில் அவனின் முகமும் வந்து போகிறது.
யாரோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது கதிருக்கு. நிமிர்ந்து பார்த்தவன், அங்கு செல்வியை எதிர்பார்க்கவில்லை.
“ஹேய் செல்வி.. நீ எப்போடி வந்த..?” என்றான் உரிமையாய். ஏனோ அவனின் அந்த உரிமை உணர்வு அவளுக்கு புது விதமாய் இருந்தது. வரும் வழியில் அவளை மறைத்து மாதவன் பேசிய பேச்சுக்களும், அவளுக்கு நியாபகத்தில் வந்தது.
“எங்க போற செல்வி..?” என்றான் மாதவன்.
“என்ன..? என்னைக்குமில்லாம இன்னைக்கு வந்து பேசுறான். என்னைக் கண்டாலே இவனுக்கு ஆகாதே..?” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட செல்வி, அதை முகத்திலும் காட்ட,
“நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது செல்வி. என்ன இருந்தாலும் நான் உனக்கு அண்ணன். அந்த பாசத்துல சொல்றேன், அந்த கதிரை மட்டும் கட்டிக்காத. அவனுக்கு பதிலா யாரை வேணும்ன்னாலும் கல்யாணம் பண்ணிக்க..!” என்றான் எடுத்த எடுப்பில்.
“அப்படியா..? ரொம்ப நன்றி. வழியை விடு..!” என்றாள் செல்வி.
“நான் விளையாட்டுக்கு சொல்லலை. நிஜமாவே தான் சொல்றேன்..” என்றான் மாதவன்.
“இதைப் போய் உங்கப்பாகிட்ட சொல்லு. என்னடா திடீர்ன்னு பாசப்பயிரை வளர்குறியேன்னு பார்த்தேன்..! நான் எதை செய்யணும், செய்யக் கூடாதுன்னு நீயில்லை, உங்கப்பா கூட சொல்ல முடியாது..!” என்று பட்டென்று சொன்னவள், அவனைத் தாண்டி வந்து விட்டாள். அதைத் தான் இப்போது நினைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் செல்வி.. என்னாச்சு.? எதுக்கு இப்படி பேயறஞ்ச மாதிரி நிக்குற..?” என்றான் கதிர் அவளை உலுக்கி. மேல்சட்டை இல்லாமல், பனியனுடன் அவனை இத்தனை அருகில் பார்த்தவளுக்கு மூச்சை அடைத்தது.
“ஆங்..! ஒண்ணுமில்லை..!” என்றாள்.
“என்ன மேடம்..? இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்திருக்கிங்க..?” என்றான்.
“எனக்குப் படிக்கணும்..” என்றாள் மொட்டையாக.
“இப்ப படிச்சுட்டு தானடி இருக்க.. அதையேன் என்கிட்டே வந்து கேட்குற..?” என்றான் புரியாமல். அவன் இப்படி பேசவும் அவளுக்கும் புரியவில்லை.
“இல்லை கல்யாணத்துக்கு அப்பறமும் நான் படிப்பேன்..! அதைத் தான் சொல்ல வந்தேன்..!” என்றாள்.
“இதையேண்டி என்கிட்டே சொல்ற..?” என்றவனுக்கு லேட்டாகத் தான் பல்ப் எறிந்தது.
“கள்ளி..! என்னை பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு, இப்ப வந்து எவ்வளவு நாசூக்கா கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்ன்னு கேட்குற..?” என்றான் சிரிப்புடன். அவன் சிரிப்பது அத்தனை அழகாய் இருந்தது.
“இவனுக்கு விஷயமே தெரியாது போல இருக்கே..” என்று அவள் யோசிக்க,
“நீங்கதானே பொண்ணு கேட்டு வந்திங்க. இப்ப எதுவுமே தெரியாத மாதிரி பேசுறிங்க..?” என்றாள்.
“நிஜமாவா செல்வி. நீ சொல்லித்தாண்டி எனக்கே தெரியும். என் மனசுல நீதான் இருக்கேன்னு அம்மாவுக்கு நல்லா தெரியும். அதான் என்கிட்டே சொல்லாமலேயே பேசி முடிச்சிருக்காங்க..!” என்றான் சந்தோஷமாய்.
“இப்பவும் ஒன்னும் பிரச்சனையில்லை. நான், உங்களுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிடவா..?” என்றாள் இடக்காய்.
“அடியேய்..! நான் எப்ப அப்படி சொன்னேன். நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்.. இந்த செல்வி என்னைக்குமே கதிரோட பொண்டாட்டிதான்..!” என்றான்.
“எனக்கு படிக்கணும்..!”
“அடியேய்..! எவ்வளவு வேணும்ன்னாலும் படி. ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு படி..! எனக்கொண்ணும் பிரச்சனையில்லை..!” என்றான் கதிர்.
“நிஜமாவா மாமா..” என்றாள் செல்வி.
அவளின் மாமா என்ற அழைப்பே அவளின் சம்மதத்தை சொன்னது. கதிருக்கு அப்படி ஒரு சந்தோசம் மனதில்.
அடுத்து நடக்க வேண்டிய அனைத்தும் துரித கதியில் நடந்தது. செல்விக்கு எல்லாமே வேகமாய் நடப்பதைப் போல் இருந்தது. கதிர் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கினான். அவனின் அன்பில், அனைவரும் வாயைப் பிளந்தனர். லட்சுமிக்கே பொறாமை வந்தது.
“கதிரு.. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வையி.. எனக்கே செல்வி மேல பொறாமை வருது..!” என்றார் லட்சுமி.
“அம்மா..! அவ என் மகாராணிம்மா. அவளை உள்ளங்கையில் வச்சுத் தாங்கத்தான் போறேன். இதுவரைக்கும் அவ அனுபவிக்காத எல்லா சந்தோஷத்தையும் அவளுக்கு குடுக்கணும்..! அவ சந்தோஷத்தைத் தவிர வேற எதுவுமே எனக்குப் பெரிசில்லை..!” என்றான்.
“உன்னோட குணத்துக்கே, நீ நல்லா இருப்ப கதிர். அவகூட சந்தோஷமா இருப்ப..உன்னோட சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்..” என்றார் லட்சுமி.
மாறனுக்கு ஒரு பக்கம் சந்தோசம். செல்வி, கதிரைக் கட்டிக் கொண்டால், கதிரைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்று எண்ணினான் அவன். கயல்விழிக்கு இரட்டிப்பு சந்தோசம்.
கதிர்-செல்வி கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாய் நடந்தேறிக் கொண்டிருந்தது.