திருமண ஏற்பாடுகள் தீவிரமாய் நடந்து கொண்டிருக்க, முகூர்த்த தினம் நெருங்க நெருங்க, செல்விக்கு படபடப்பு அதிகரித்தது. இப்போதெல்லாம் ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு கதிர் தினமும் அங்கு வந்து சென்று கொண்டிருந்தான். மங்கையும் வேறு வழியில்லாமல் அனுமதிக்க வேண்டியிருந்தது.
அன்றும் கதிரவனின் வண்டி சத்தம் கேட்க,
“என்னடா இன்னமும் காணமேன்னு பார்த்தேன். இன்னைக்கு கோட்டாவுக்கு சரியா வந்துட்டார் உங்க ஆளு..” என்று கயல்விழி கிண்டல் செய்யும் அளவிற்கு இருந்தது செல்வியின் நிலைமையும், கதிரின் நிலைமையும்.
“வாங்க தம்பி..!” என்றார் மங்கை.
“அத்தை… செல்வி ப்ளவுஸ் எல்லாம் தச்சாச்சு..!” என்றபடி அவன் அதைக் கொடுக்க வர.
“உங்களுக்கு எதுக்கு தம்பி வீண் சிரமம்… நாங்க மாறனை அனுப்பி வாங்கியிருப்போமே..?” என்றார் மங்கை.
அவன் சின்ன பையன் அத்தை.. அவனை எதுக்கு அலைய வைக்கணும். நான் என்ன இதுக்குன்னு தனியாவா அலையறேன். அம்மாவுக்கு வாங்கப் போனேன். அப்படியே அவர் செல்வியோடதையும் குடுத்து விட்டார்…” என்றான்.
“செல்வி.. உனக்கு பிரச்சனையே இல்ல.. பாரு தலைவரு தீயா வேலை செய்யுறாரு..” என்று கயல் சிரிக்க,
“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த முறை முறைக்கிறவ.. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் என்ன பண்ண காத்திருக்கியோ..?” என்றான்.
“அதை அப்போ பார்ப்போம்.!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மங்கை வர, நல்ல பிள்ளையாய் அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்றான் கதிர்.
“எப்படி நடிக்கிறான் பாரு.. நடிப்புக்காரன்..” என்று தனக்குள் முனுமுனுத்தவள், அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டாள்.
அறைக்குள் வந்த செல்வியைப் பார்த்து சிரித்து வைத்தாள் கயல்.
“இப்ப எதுக்குடி சிரிக்கிற..?”
“இல்லை.. இது எத்தனையாவது கிள்ளுன்னு யோசிச்சுப் பார்த்தேன். எதுக்கும் இடுப்பை செக் பண்ணிக்கோ செல்வி. சிவந்துகின்ன இருக்கப் போகுது..” என்று கயல் சொல்ல…
“எல்லாம் என் நேரம்டி..! நீயெல்லாம் கிண்டல் பண்ணி சிரிக்கிற அளவுக்கு இருக்கு..” என்று நொந்து கொண்டாள் செல்வி.
“அப்போ, நான் கிளம்புறேன் அத்தை..!” என்று கதிர் அழுத்தி சொல்லிக் கொண்டிருக்க, அவன் எதற்காக அப்படி சொல்கிறான் என்று தெரிந்தும், செல்வி வெளியே செல்லாமல் இருந்துவிட்டாள்.
“எப்படியும் என்கிட்டே தானடிவருவா.. அப்ப வச்சுக்கறேன் உன்னை..!” என்று பல்லைக் கடித்தவன், கிளம்பிவிட்டான்.
நகையில் இருந்து, பண்ட பாத்திரம் வரை அனைத்தையும் இரண்டு குடும்பத்தையும் தனித் தனியே அழைத்து சென்று வாங்கிக் கொடுத்தார் ராஜாங்கம். சாந்தா அனைத்தையும் வாங்கிக் குவித்திருந்தார்.
இரண்டு குடும்பத்திற்கும் பிரச்சனை இல்லாமல் பக்கத்து டவுனில் இருந்த ஒரு பெரிய கல்யாண மண்டபத்தைப் பிடித்திருந்தார் ராஜாங்கம். கதிர் வேண்டாம் என்று கூட சொல்லிப் பார்த்தான். அமுதாவின் மாப்பிள்ளை வீட்டார், கல்யாணத்தை மகாலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இந்த ஏற்பாடு.
“ஏண்டா மாதவா..? இன்னும் மண்டபத்துக்கு கிளம்பாம இங்க என்ன பண்றவன்..? சாதி சனம் எல்லாம் கிளம்பியாச்சு..” என்றார் சாந்தா.
“வரேன்ம்மா..! வராம எங்க போய்ட போறேன்…” என்று எறிந்து விழுந்தான் மாதவன்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுற மாதவா..?” என்றார் சாந்தா.
“உங்களுக்கு சொன்னாலும் புரியாதும்மா..! அந்த கதிருக்கு ஏற்கனவே என்னைய ஆகாது. அவன் நம்மளைப் பழி வாங்கத்தான் இந்த செல்வியை கல்யாணம் பண்றான்னு தோணுது..!” என்றான் மாதவன்.
“அதுக்கு அவன் நம்ம அமுதாவைத்தான கல்யாணம் பண்ணனும். ஆனா, அவன் செல்வியைத் தான் கல்யாணம் பண்ணப் போறான். அப்படியே அவன் பழி வாங்குறதா இருந்தாலும், அவ வாழ்க்கை தான் கெட்டுப் போகும். நமக்கென்ன..?” என்றார் சாந்தா.
“அம்மா..!!!” என்று அதிர்ந்தான் மாதவன்.
“நான் அப்படி என்னடா தப்பா சொல்லிட்டேன்..!”
“நமக்குப் பிடிக்கலைன்னாலும், அவ வாழ்க்கை கெட்டுப் போகட்டும்ன்னு நினைக்காதிங்க. கொஞ்ச நாள் அவங்க அம்மா கையால தான் சாப்பிட்டிருக்கோம்..” என்றான்.
“எப்ப இருந்துடா அவங்க பக்கம் பேச ஆரம்பிச்ச..?” என்றார் சாந்தா.
“எனக்கு ஈகோ இருக்கும்மா.. அதுக்காக.. என்ன இருந்தாலும் செல்வியும் நம்ம வீட்டுப் பொண்ணு தானமா..?” என்றான்.
“இங்க பாரு மாதவா.. உனக்கு ஒரு தங்கச்சி தான். அது அமுதா மட்டும் தான். அவளுங்க எப்படி போனா நமக்கென்ன..? இனிமேல நீ இப்படி பேசுறதைப் பார்த்தேன், அப்பறம் உனக்கு அம்மா இல்லைன்னு நினைச்சுக்க..” என்றார் சாந்தா. அவர் அப்படி சொன்ன பிறகு மாதவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
மாதவனின் நண்பன் அவனிடம் சொன்ன செய்தி வேறு ஒரு பக்கம் அவனைக் குழப்பிக் கொண்டிருந்தது.
விடிந்தால் திருமணம். கதிருக்கு தூக்கமே வரவில்லை. எங்கு திரும்பினாலும் அவனுக்கு செல்வியின் பிம்பம் தான். கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.
பட்டுசேலையில் அவளைப் பார்த்ததில் இருந்து கதிரின் மனம் பாடாய் பட்டுக் கொண்டிருக்க,
“நீ தூங்கு கதிரு.. நாளைக்கு சீக்கிரமே எந்திரிக்கனும்..” என்றார் லட்சுமி.
“தூக்கம் எங்க இருந்து வரும்..?” என்று முனங்கியவன்,
“செல்வி என்னம்மா பண்றா..?” என்றான்.
“அவ அப்பவே தூங்கிட்டா கதிர். நான் பார்த்துட்டு தான் வந்தேன்..” என்றார் லட்சுமி.
“என்னது தூங்கிட்டாளா..?” என்றவனுக்கு அதிர்ச்சி.
“பாவி..பாவி..! இவளுக்கு ஒண்ணுமே மனசுக்குள்ள தோணலையா..? ஏதோ மத்தவங்க கல்யாணத்துக்கு வந்தவ மாதிரி, நல்லா சாப்பிட்டு தூங்கிட்டு இருக்கா..? எல்லாம் என் நேரம். இவளைக் கட்டி இன்னும் என்ன பாடெல்லாம் படப் போறியோ கதிரு..” என்று அவன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க,
“கதிரு… என்ன நீயா பேசிட்டு இருக்க..?” என்றான் சின்னு.
“அட நீயேண்டா.. மனுசனை வெறுப்பேத்துற..?” என்றவன் விட்டத்தைப் பார்த்து படுக்க,
“அடிங்க..!” என்ற கதிருக்கும் அப்படித்தான் தோணியது. செல்வியைப் பற்றித்தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே..
அடுத்த நாள் காலைப் பொழுது, ரம்மியமாய் விடிந்தது செல்விக்கு.
முகூர்த்தப் பட்டு உடுத்தி, அவள் மேடைக்கு செல்ல தயாராக, வெளியே சத்தம் கேட்டது. முதலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அவள் கிளம்பிக் கொண்டிருக்க, நேரம் ஆகஆக சத்தம் பெரியதாய் கேட்டது.
“கயலு.. வெளிய என்ன சத்தம்..?” என்றாள்.
“தெரியலைக்கா..! நீ இரு நான் பார்த்துட்டு வரேன்..” என்று வெளியே சென்ற கயல், சில நிமிடங்களில் திரும்பி வந்தாள். அவள் முகம் முழுவதும் பதட்டம்.
“என்னாச்சு கயல்..? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றாள்.
“என்னடி சொல்ற..?” என்ற செல்வி வேகமாய் வெளியே செல்ல, மணமேடையில் அமர்ந்திருந்த கதிரும் எழுந்திருந்தான். அமுதாவிற்கு பார்த்த மாப்பிள்ளை, அங்கு கோபமாய் நின்றிருக்க, ராஜாங்கம் செய்வதறியாது நிற்பது தெரிந்தது.
“அம்மா என்னம்மா ஆச்சு..?” என்றாள் மங்கையின் அருகில் சென்று.
“நீ அமைதியா இரு செல்வி..” என்ற மங்கை அவளை அவருக்கு பின்னால் இழுத்துக் கொண்டார்.
“எங்களை இப்படி அசிங்கப்படுத்தணும்ன்னு தான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிங்களா..? உங்க பொண்ணு இப்படி ஓடிப் போவான்னு தெரிஞ்சிருந்தா உங்க குடும்பத்துல பொண்ணே எடுத்திருக்க மாட்டோம்..” என்று அந்த பெரியவர் கத்திக் கொண்டிருந்தார்.
“என்ன நடந்ததுன்னு தெரியலைங்க. அவளை சம்மதம் கேட்டு, அவ முழுமனசோட சம்மதம் சொன்ன பிறகு தான், நாங்க இந்த கல்யாண ஏற்பாட்டையே செஞ்சோம்..” என்று ராஜாங்கம் மன்றாடிக் கொண்டிருந்தார்.
“எங்க குடும்ப மானம், மரியாதை எல்லாமே போச்சு..” என்று அந்த மாப்பிள்ளையின் தாய் ஒப்பாரி வைக்க,
“இதுக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்..” என்றனர்.
“அவங்க என்னமோ வேணும்ன்னு பண்ண மாதிரி பேசுறிங்க..? உங்களை விட அவங்களுக்குத் தான் நடந்த விஷயம் அதிர்ச்சியா இருக்கும்..” என்றான் கதிர்.
“உங்களுக்கென்ன தம்பி…? நீங்க கட்டிக்க போற பொண்ணா ஓடிப் போயிருக்கு.அவமானம் யாருக்கு..? எங்களுக்குத் தானே..?” என்று எகிறிக் கொண்டு வந்தனர்.
சாந்தாவிற்கு பேச்சே வரவில்லை. ராஜாங்கம் கூனிக் குறுகிப் போய்விட்டார். எவ்வளவு நம்பினார் அவளை. இப்படி கல்யாண மேடை வரை வந்து கழுத்தருப்பாள் என்று அவருக்கு மட்டும் தெரியுமா என்ன..?
லட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“என்ன கதிரு..? ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற..? ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட அமுதாவையும், இன்னொரு பையனையும் வச்சு சோளக்காட்டுகிட்ட ஏதோ பேசிட்டு இருந்தியே..?” என்றான் மாதவனின் நண்பன்.
அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.
“கதிரு.. என்ன சொல்றான் இவன்..? இவன் சொல்றது நிஜமா..? அமுதா விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா..?” என்றார் ராஜாங்கம்.
“மாமா..! எனக்கு முன்னாடியெல்லாம் தெரியாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி அமுதா ஒரு பையன் கூட பேசிட்டு இருந்ததைப் பார்த்தது நிஜம். நான் பக்கத்துல போய் விசாரிச்சேன். கூட படிச்ச பையன், பக்கத்து ஊருக்கு விசேஷத்துக்கு வந்திருந்தான். அதான் பேசிட்டு இருக்கோம்ன்னு சொல்லுச்சு. அவ்வளவு தான். மத்தபடி விஷயம் இது தான்னு எனக்குத் தெரியாது. அப்பக் கூட நான்தான் அதட்டி, வீட்டுக்குப் போக சொன்னேன்..” என்றான் கதிர்.
“கூடப் படிச்ச பையனுக்கு, அமுதா கூட சோளக்காட்டுல என்ன வேலை..?” என்றான் மாதவனின் நண்பன்.
“அது என்னைக் கேட்டா, எனக்கு எப்படித் தெரியும்..” என்றான் கதிரும் கோபமாக.
“டேய் மாதவா.. எனக்கு என்னமோ இவன் மேல தான் சந்தேகம். இவன்தான் அமுதாவை அனுப்பி வச்சிருப்பான்…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை ஓங்கி ஒரு குத்து குத்தியிருந்தான் கதிர்.
“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற..? என்னைப் பார்த்தா, மாமா வேலை பார்க்குறவன் மாதிரியா இருக்கு..?” என்றான் கதிர்.
“ஆமாடா அப்படித்தாண்டா இருக்கு..” என்றார் சாந்தா. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. கதிர்மேல் பழியைப் போட்டு, பிரச்சனையை திசை திருப்ப பார்த்தார் சாந்தா. இவளுக்கு மட்டும் கல்யாணம் நடப்பதா என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.
சாந்தாவின் பேச்சில் மணிகண்டனுக்கு கோபம் வந்தது.
“என்ன ராஜாங்கம்.. உன் பொண்டாட்டி பேசுது. நீ வேடிக்கைப் பார்த்துகிட்டு நிக்குற..? நாங்க எங்க பையனை அப்படி வளர்க்கலை..” என்றார் மணிகண்டன்.
“ஹோ.. அப்ப நாங்க வளர்த்த வளர்ப்பு சரியில்லைன்னு சொல்ல வரீங்களா..?” என்றார் சாந்தா.
“அதை நாங்க சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்ல.. அதுவே தெரிஞ்சிடுச்சே..” என்றார் மணிகண்டன்.
இவர்களுக்கு இடையில் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தார்கள்.
“தம்பி..நீங்களாவது விஷயத்தை அப்பவே என் காதுல போட்டிருக்கலாம்ல. இப்ப இவ்வளவு பெரிய அசிங்கத்தை அவ பண்ணிட்டு போக விட்டிருக்க மாட்டேன்ல..” என்றார் ராஜாங்கம்.
“என்ன மாமா..? நீங்களும் புரியாம பேசிட்டு இருக்கீங்க..? அந்த பையனை அமுதா லவ் பண்ற விஷயமே எனக்குத் தெரியாது. அவங்க பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன் அவ்வளவு தான். பிரண்ட்ன்னு சொல்லும் போது, எனக்கும் வேற விதமா நினைக்கத் தோணலை..” என்றான் கதிர் பொறுமையாக.
“உனக்கு வாங்குன அடி பத்தாதா..? இவ்வளவு வியாக்கியானம் பேசுறவன்.. நீயும் தானடா பார்த்திருக்க. நீயே சொல்லியிருக்க வேண்டியது தான..” என்றான் கதிர்.
“நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது. அப்பவே மாதவன் கிட்ட சொல்லிட்டேன்..!” என்றான் அவன்.
“என்னடா மாதவா நடக்குது..? நீயேன் என்கிட்டே சொல்லலை..” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க,
“போனவ மானத்தையே வாங்கிட்டு போய்ட்டா. இப்ப போய், நீ சொல்லலை நான் சொல்லலைன்னு பேசிட்டு இருந்தா, நடந்து எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா..?” என்று ஒரு கிழவி சொல்ல, அப்போதும் ராஜாங்கம், மாதவனைத் தான் முறைத்துக் கொண்டிருந்தார்.
“அப்பா.. அது வந்து… நான் கதிர் தான் ஏதோ பழி வாங்குறதா நினைச்சு.. அமுதா அப்படியெல்லாம் பண்ண மாட்டான்னு நினைச்சேன்ப்பா.. அவகிட்டயும் கேட்டேன். அவளும் அப்படி எதுவுமில்லைன்னு தான் சொன்னா..! அதான் உங்ககிட்ட சொல்லலை..” என்றான் மாதவன்.
“டேய் மாதவா..! உன் தங்கச்சியை ஒருத்தன் கூட அனுப்பி விட்டுட்டு, உன் குடும்ப மானத்தை வாங்குற அளவுக்கு நான் போவேன்னு நினைச்சியாடா..? உனக்கும், எனக்கும் அப்படியென்ன பகை இருக்கு..? அதுவும் நானும் அதே குடும்பத்தில் தான பொண்ணு கட்டுறேன். இதையெல்லாம் யோசிக்க மாட்டியா நீ ” என்று கதிர் கேட்ட கேள்வியில் தலை குனிந்தான்.
“போனா போகுதுன்னு எங்க குடும்பத்துல பொண்ணு எடுக்குற மாதிரி பேசிட்டு இருக்க கதிரு..” என்றார் சாந்தா. சாந்தா எதற்காக இப்படி தூண்டுவதைப் போல் பேசுகிறார் என்று மாதவனுக்கு புரிந்து போனது. சாந்தவை முறைத்தான் மாதவன்.
“அக்கா..! கொஞ்சம் பேசாமத் தான் இரேன். தப்பு நம்ம பக்கம் இருக்கு. நாம தான் அமைதியா போகணும்..” என்றார் மங்கை வாயைத் திறந்து.
“வாடி என் சக்களத்தி..! எம்மக எப்படிப் போனாலும் பரவாயில்லை. உம்மகளுக்கு மட்டும் நல்லபடியா கல்யாணம் நடக்கணும். அதானடி உன் எண்ணம். ஆரம்பத்துல இருந்தே உன் புத்தி எனக்குத் தெரியும்டி..” என்றார் சாந்தா கோபமாக.
“வாடா வா, பெத்த தாய் கத்திட்டு இருக்கேன். நீ அவளுகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கியா..?” என்று அவனிடமும் எகிறினார்.
“என்னய்யா மணி இது..? எதுவும் பேசக் கூடாதுன்னு பொறுத்து போனா, அந்தம்மா ரொம்ப பேசுது. மக செஞ்ச தப்பை அப்படியே மூடி மறைச்சுட்டு, நம்ம பயமேல பழியைப் போட்டு பேசிட்டு இருக்கு. நீயும் பார்த்துகிட்டு இருக்க. இன்னைக்கு இதைப் மறைக்க இப்படி பேசுறவங்க, நாளைக்கு வேற எதையாவது மறைக்க எப்படி வேணும்ன்னாலும் பேசுவாங்க. பொண்ணே கிடைக்காத மாதிரி தொங்கிகிட்டு இருக்கீங்க..?” என்று மணிகண்டன் வழி சொந்தத்தில் ஒரு பெரியவர் பேச, அதைக் கேட்ட ராஜாங்கத்திற்கு மேலும் அவமானமாய் போனது.
“இந்த மானங்கெட்டவன் குடும்பத்துல இருந்து நீங்க பொண்ணே எடுக்க வேண்டாம்..!” என்றார் அவர் இயலாமையில்.
“இப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் ராஜாங்கம்..! பெரியவங்க ஆதங்கத்துல நாலு வார்த்தை பேசுறது தான். நானும் பார்த்துகிட்டே இருக்கேன். உன் பொண்டாட்டியை அடக்க முடியாம மத்தவங்க மேல கோபத்தை காட்டுற..? இதெல்லாம் சரிப்படாது. இங்க பாருமா மங்கை.. உன்னோட முகத்துக்காகத் தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்ததே. இனியும் அப்படி இருக்க முடியாது.. என்றவர்,
“டேய் கதிரு..! வாடா போகலாம்..” என்றார் மணிகண்டன்.
“என்னங்க நீங்க..? செல்வியை ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்திங்களா..?” என்றார் லட்சுமி.
“அதை அந்த பொண்ணோட அப்பன் யோசிக்கணும்.. நீ வாயை மூடு..” என்று அதட்டி விட்டார் மணிகண்டன்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, மேடையில் இருந்து தாலியை எடுத்து வந்த கதிர், யாரையும் சட்டை செய்யாமல் செல்வியின் கழுத்தில் கட்டியிருந்தான்.
செல்வி திகைத்து அவனைப் பார்க்க,
“இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.. அது போதும். நாம ஒன்னும் ஓடிப் போய் கல்யாணம் பண்ணலை. அதனால உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம்..” என்று சொல்லிக் கொண்டே தாலியை கட்டியிருந்தான், அவனுக்கு குறித்த அதே முகூர்த்தத்தில்.
“என்ன பண்ணிட்டு இருக்க கதிரு..?” என்றார் மணிகண்டன் கோபமாய்.
மங்கைக்கு மனதிற்குள் சந்தோசம் தாங்க முடியவில்லை. செல்வியை அவன் நன்றாக வைத்துக் கொள்வான் என்று இதிலிருந்தே தெரிந்தது அவருக்கு.
சாந்தாவிற்கு உள்ளுக்குள் எறிந்தது. அமுதா போன கோபம் ஒரு பக்கம், செல்விக்கு மட்டும் கல்யாணம் நடந்தது இன்னொரு பக்கம் என்று அவருக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு கனல் மூண்டது.
மங்கையின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன், மணிகண்டன்-லட்சுமி கால்களிலும் விழுந்தான், செல்வியுடன். செல்வி அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் பின்னால் சென்று கொண்டிருந்தாள். வேறு வழியில்லாமல் அவர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.
“அத்தை..! செல்விக்கு நீங்க வாங்குன எந்த பொருளும் வேண்டாம். அதாவது அப்பன் வீட்டு சீருன்னு எதுவும் வரக்கூடாது. அவளுக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும். தப்பா எடுத்துக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். எனக்கும் கொஞ்சம் தன்மானம் இருக்கு..!” என்ற கதிர் ராஜாங்கத்திடம் மட்டும் எதுவும் பேசவில்லை.
மாதவனுக்கு என்னதான் கதிரைப் பிடிக்காது என்றாலும், இப்படி ஒரு சூழ்நிலையில் அவன் எடுத்த முடிவைக் கண்டு அவனுக்கு மனதிற்குள் திருப்தி தான்.
கதிர்-செல்வியின் வாழ்க்கை, அன்றிலிருந்து ஆரம்பமானது.