புது ஆபீஸ் கட்டிடம் தொடர்பாக அன்று முக்கிய ஆலோசனையில் இருந்தான் அன்பு செழியன். அவன் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்தவனுக்கு சுற்றி இருந்த எதுவும் கண்ணில் படவில்லை.
இதுவரை பேக்கிங் செக்சனில் மேன் பவர் தான் இருந்தது. இப்போது சில மெசின்களையும் வாங்கியிருந்தான் அன்பு. இனி பேக்கிங் செக்சன் மிஷின் பவரில் இயங்கும் என்பது அங்கிருந்தவர்களுக்கு உறுதியானது.
ஆபீஸ் செக்சனில் கூடுதல் வொர்க்கர்ஸ் அவனுக்குத் தேவைப்பட, அதற்கான இண்டர்வியுக்கும் ஏற்பாடு செய்திருந்தாள் இசை. மொத்தத்தில் அந்த வாரம் முழுவதும் மூச்சு விடவும் நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தான் அன்பு. அவனுடன் சேர்ந்து வேலை செய்ததில் இசை, ரோகிணி என அனைவரும் களைத்து தான் போய்விட்டனர்.
“எப்பா சாமி..! அன்பு சார் இந்த வாரம் புல்லா, சக்கையைப் பிழிஞ்சுட்டார். இந்த மனுஷனுக்கு அலுப்பு வருமா வராதா..? இவர்தான் இப்படின்னு பார்த்தா, நம்மளையும் அவர் ஸ்பீட்டுக்கு இழுத்துட்டு ஓடுறாரு..” என்றாள் ரோகிணி.
“ரொம்ப நல்ல விஷயம் தான ரோகிணி. உழைக்கிறதெல்லாம் வரம். அது எல்லாருக்கும் அமைஞ்சுடாது. அன்பு சாருக்கு அமைஞ்சிருக்கு. அதுமட்டுமில்லாம, வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குப் போகணும்கிற வெறி அவர்கிட்ட இருக்கு. அவரை சுத்தி இருக்குற எல்லாரும் சுறுசுறுப்பா இருந்தாத்தான், அவர் சுறுசுறுப்பா இருக்க முடியும்ன்றதை அவர் தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கார்..” என்றாள் இசை.
“இப்ப மட்டும் இவருக்கு என்னடி குறைச்சல்..? போதும்ன்னு சொல்ற அளவுக்கு வசதி இருக்கு. அவரே உருவாக்குன கம்பெனி இருக்கு. நல்ல படிப்பு இருக்கு.. அப்பறமும் ஏன் ஓடனும்..” என்றாள் ரோகிணி.
“பந்தயத்துல ஓடுறவங்க ஒரு தடவை ஜெயிச்சு கப் வாங்கிட்டா ,ஓடுறதையே நிறுத்திட மாட்டாங்க. கப்பு வாங்குனாலும், வாங்கலைன்னாலும் அடுத்தடுத்து அவங்க ஓடிட்டே இருக்கணும். அப்பத்தான் அவங்களை வீரன்னே இந்த உலகம் ஏத்துக்கும். இது பிஸ்னஸ்லையும் பொருந்தும்..!” என்றாள் இசை.
“தெரியாம கேட்டுட்டேன்டி.. அன்பு சார் கூட இவ்வளவு விளக்கம் குடுத்திருக்க மாட்டார்..” என்ற ரோகிணி சிரிக்க,
“உனக்குப் போய் விளக்கம் சொன்னேன் பாரு.. என்னை சொல்லணும்..” என்றாள் இசை.
“அதை விடு, அந்த சங்கீதா பத்தி நீ என்ன நினைக்குற..?” என்றாள் ரோகிணி.
“அவளைப் பத்தி நினைக்க என்ன இருக்கு..?” என்றாள்.
“அது இருக்கு நிறையா. மக வந்ததுல இருந்து காதம்பரி ஆன்ட்டி ஆட்டிட்யூட் அப்படியே மாறிடுச்சு இசை. அவங்க உன்னைப் பார்க்குற பார்வையிலையே ஒரு கோபம் தெரியுது. ஆனா, காரணம் தான் தெரியலை..” என்றாள் ரோகிணி.
“அதான், நீயே தெரியலைன்னு சொல்லிட்டயே..? தெரியாத விஷயத்தைப் பத்தி, நாம ஏன் ஆராய்ச்சி பண்ணனும்..?” என்றாள் இசை.
“உன்ன அளவுக்கு நல்லவளா என்னால இருக்க முடியாது. விஷயம் தெரியுமா இசை, அன்பு சார்க்கு பொண்ணுப் பார்க்க போறாங்களாம். அதுக்கு நாமளும் கூடப் போகணுமாம். காதம்பரி ஆன்ட்டி நேத்து அம்மாகிட்ட வந்து சொல்லிட்டு இருந்தாங்க..” என்றாள் ரோகிணி.
“போயிட்டு வா ரோகிணி. நல்ல விஷயத்துக்குத் தானே கூப்பிடுறாங்க..”
“நான் மட்டுமில்ல.. நீயும் தான். போறதைப் பத்தி பிரச்சனையில்லை. ஆனா, அந்த சங்கீதாவோட பில்டப்ப தான் தாங்க முடியாது. அதனால தான் போகலாமா, வேணாம்மான்னு யோசிச்சுட்டு இருக்கேன்..” என்றாள் ரோகிணி.
“அதுவும் சரிதான். ஆனா, அவங்க கூப்பிட்டும் போகலைன்னா, அது மரியாதையா இருக்காது. அவங்களுக்காக இல்லைன்னாலும், அன்பு சார்க்காக பார்க்கணும்..” என்றாள் இசை. இருவரும் பேசிக் கொண்டே மதிய உணவை முடித்திருந்தனர்.
இசையிடம் எதையோ கேட்க வந்த அன்பிற்கு அவர்கள் பேசியது அனைத்தும் அப்படியே காதில் விழுந்தது. எதிலும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளும் இசையின் குணம், அப்போதும் அவனைக் கவரத்தான் செய்தது. மீண்டும் அவளை நோக்கி அலைபாய்ந்த மனதை அடக்கிக் கொண்டு, அப்போது வருபவனைப் போல் வந்தான் அன்பு.
“அதெல்லாம் இல்லை சார்..! சாப்பிடுங்க சார்..” என்றாள் ரோகிணி.
“சாப்பிட்டு முடிச்சுட்டிங்களே..?” என்று அவன் கேள்வியாய் பார்க்க, அசடு வழிந்தாள் ரோகிணி.
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன்..” என்றான்.
“சொல்லுங்க சார்..!” என்றனர் இருவரும்.
“நம்ம சீபுட்ஸ் கேட்டிருந்தோமே.. அவங்க நம்ம ஆர்டருக்கு ஓகே சொல்லிட்டாங்க. இருந்தாலும் நேர்ல போய் நம்ம பார்த்து வாங்குற மாதிரி இருக்காது. முதல் தடவை நாம செக் பண்ணி வாங்கினோம்ன்னா, அவங்களுக்கும் தரமா குடுக்கணும்ன்னு எண்ணம் இருக்கும். என்ன சொல்றிங்க..?” என்றான்.
“உண்மை தான் சார்..” என்றாள் இசை.
“ஓகே..! அப்போ ரெடியா இருங்க.. இன்னைக்கு இந்த வொர்க்கை முடிச்சு குடுத்துட்டு, கிளம்பிக்கோங்க..” என்று சொல்லிவிட்டு சென்றான் அன்பு.
பல்லைக் கடித்த ரோகிணி,
“இவர் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கார்..? நம்மை ஒரு வழி ஆக்காம விட மாட்டார் போல..” என்று அவளால் நொந்து கொள்ள மட்டும் தான் முடிந்தது.
“விடுடி..! நாளைக்கு லீவ் தான. சேர்த்து ரெஸ்ட் எடுத்துக்கலாம்..” என்று இசை அவளை சமாதானப் படுத்தினாள்.
அங்கு செல்வதற்காக, அன்பு செழியனுடன் அவனுடைய காரிலேயே சென்றனர் இருவரும். சிவா அன்று காரை ஒட்டிக் கொண்டு வந்தான்.
“சார் நான் ஒன்னு கேட்கட்டுமா..?” என்றாள் ரோகிணி.
“கேளுங்க ரோகிணி..?”
“இல்லை.. உங்கப்பா சென்ட்ரல் கவர்மென்ட் ரிட்டையர்ட் ஆபிசர். அவருக்கு பிஸ்னஸ் பண்ணனும்ன்னு தோணலை. ஆனா, உங்களுக்கு எப்படி சார் தோணுச்சு..? அதுவும் ஊறுகாய் பிஸ்னஸ்க்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..?” என்றாள்.
“அப்பாவுக்கும் இந்த தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை ரோகிணி. ஆனா, எங்க தாத்தாக்கும் இந்த தொழிலுக்கும் சம்பந்தம் இருக்கு. அவர் காலத்துல அவர் இதை ஒரு குடிசை தொழிலா பண்ணிட்டு இருந்தார். நான் அதையே கொஞ்சம் எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கேன், அவ்வளவு தான்..” என்றான்.
“ஹோ.. அப்போ இது பரம்பரை தொழில்ன்னு சொல்லுங்க..” என்றாள்.
“இருக்கலாம்..! அதனால வந்த ஆர்வமா கூட இருக்கலாம். ஆனா, எதை செஞ்சாலும் அதுல ஒரு நேர்த்தியும் தரமும் இருக்கணும். அப்பத்தான் தொழில்ல ஜெயிக்க முடியும்..”என்றான் அன்பு.
“உண்மை தான் சார்..!” என்று அவள் சொல்ல இசை எதுவும் பேசவில்லை. அவள் கவனம் முழுவதும் வீட்டில் இருக்கும் அகரன் மேல் இருந்தது. அன்று அவனுக்கு லீவ். ரோகிணியின் அம்மாவிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள். அதனால் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்தாள் இசை.
முன்னால் இருந்த கண்ணாடி வழியே, அவளைப் பார்த்த அன்பிற்கு, அவள் யோசனையில் இருப்பது புரிந்தது. அவளைத் தொந்தரவு செய்ய மனமின்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவர்கள் போன வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்ப, அன்று கொஞ்சம் நேரமாகியிருந்தது. அன்பு அவர்களை வீட்டிலேயே இறங்கிக் கொள்ள சொல்ல, அவர்களும் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஒரே காரில் வந்து இறங்குவதைப் பார்த்த, சங்கீதாவிற்கும், காதம்பரிக்கும் பக்கென்று இருந்தது.
அன்பு வீட்டிற்குள் வரும் வரை அமைதியாக இருந்த காதம்பரி,
“என்ன அன்பு இதெல்லாம்..?” என்றார்.
“எதை சொல்றிங்க..?” என்றான் அன்பும் புரியாமல்.
“இத்தனை நாள் இல்லாம, அவங்களையெல்லாம் ஏன் கார்ல கூட்டிட்டு வர..? பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க..?” என்றார் காதம்பரி.
“மத்தவங்களை விடுங்க, நீங்க என்ன நினைக்கிறிங்க..?” என்றான் அன்பு அவரையே பார்த்தபடி.
“எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இப்படி பேசறிங்க. காண்ட்ராக்ட் விஷயமா வெளிய போயிருந்தோம். போன இடத்துல லேட் ஆகிடுச்சு. எல்லாரும் ஒரே இடத்துக்குத் தான போறோம்ன்னு சொல்லி நான்தான் அவங்களை டிராப் பண்ணேன். இதுல என்ன தப்பைக் கண்டு பிடிச்சிங்க..?” என்றான்.
“இல்ல அன்பு.. இருந்தாலும்..” என்று அவர் இழுக்க,
“இவ்வளவு பெரிய சென்னையில, நான் எங்க போறேன்,யார்கூட போறேன், வரேன்னு பார்க்குறது தான் மத்தவங்க வேலையா..? நீங்களா எதையாவது நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது..” என்ற அன்பு, அங்கிருந்து நகரப் போக..
“உன்னைப் பார்த்தா, ஒரு கம்பெனி முதலாளின்னு யாரும் சொல்ல மாட்டங்கண்ணா. நீ இப்படியே இருந்தா உன்னோட தலையில மிளகா அறைச்சிடுவாங்க..” என்றாள் சங்கீதா.
“நான் முதலாளின்னு என்னைக்குமே நினைச்சது கிடையாது சங்கீதா. என்னோட பிஸ்னஸ் விஷயத்தில் நீ தலையிட வேண்டாம். எனக்கு அதுல விருப்பமும் கிடையாது..” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
“பாரும்மா..! சொந்த தங்கச்சிகிட்ட பேசுற மாதிரியா பேசுறான். ஏதோ விரோதிகிட்ட பேசுற மாதிரி பேசறான். நான் இங்க இருக்குறதே அண்ணனுக்குப் பிடிக்கலை. இப்பவே இப்படின்னா, கல்யாணமும் பண்ணிட்டான்னா, எனக்கு பிறந்த வீடே இல்லாம போய்டும்..” என்று சங்கீதா, அழ ஆரம்பிக்க,
“அம்மா எதுக்கு இருக்கேன் சங்கீதா. அதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா..? எதுக்கெடுத்தாலும் அழக் கூடாது. அப்பறம் உள்ள இருக்குற உன் பிள்ளையும் அழுவான்..” என்றார் காதம்பரி.
இவர்களின் பேச்சை மேலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அன்பிற்கு எரிச்சலாய் வந்தது. சங்கீதாவை திருத்த முடியுமென்று அவனுக்குத் தோணவில்லை.
சங்கீதாவின் கணவனுக்கு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய நாள் பக்கத்தில் வந்து விட, அவன் இருக்கும் போதே அன்பிற்கு பொண்ணைப் பார்த்து பேசி விடுவது என்ற முடிவிற்கு வந்தனர்.
அன்பிடம் விஷயத்தை சொன்ன போது, அவனின் கண் முன்னால் தெரிந்த முகம் இசையின் முகம் தான். ஆனால் அது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அவனுக்குத் தெளிவாகத் தெரியும்.
‘ஒருவேளை கல்யாணம் பண்ணிட்டா, இசை நியாபகம் வராதோ. எது எப்படின்னாலும், இன்னொருத்தன் மனைவின்னு தெரிஞ்சும் இப்படியே அவளை நினைச்சுட்டு இருக்குறதுல அர்த்தமில்லை..’ என்று யோசித்தவன், காதம்பரி சொன்ன விஷயத்திற்கு தலையை ஆட்டியிருந்தான். அவனைப் பொறுத்தவரை அவன் நினைவில் இருந்து இசையை எடுத்து விட்டால் போதும் என்ற நிலைமை தான்.
இதோ முடிவெடுத்து இப்போது காரில் சென்று கொண்டிருந்தனர்.
“இவங்க வீட்ல மட்டும் போனா ஆகாதா..? எதுக்கு நம்ம உசுரையும் வாங்குறாங்க..?” என்று ரோகிணி புலம்பிக் கொண்டு வர, இசைக்கும் அந்த எண்ணம் இருந்தது. அவ்வளவு மறுத்த பின்பும், காதம்பரி வழிய அழைக்க, அதற்கு மேல் அவளால் முடியாது என்று சொல்லமுடியவில்லை.
அன்பின் குடும்பம் ஒரு காரில் சென்று கொண்டிருக்க, இசையும் ரோகிணி, ரோகிணியின் அம்மா என சிலர் இன்னொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
“இவ்வளவு தூரம் நம்ம எதுக்கு இசை..” என்றாள் ரோகிணி.
“சும்மா அப்படியே புலம்பாத ரோகிணி. சும்மா பொண்ணு பார்க்குறதுன்னா அவங்க மட்டும் போயிட்டு வருவாங்க. பேசி முடிச்சு அப்படியே பூ வைக்கப் போறாங்களாம். அதான் நம்மளையும் கூட்டிட்டு போறாங்க. எவ்வளவு பெரிய ஆளுங்க, கொஞ்சம் கூட பந்தாவே இல்லாம நம்மளைக் கூட்டிட்டு போறாங்க. நீ என்னடான்னா புலம்பிகிட்டே வர, பேசாம வா ரோகிணி..!” என்று ஒரு அதட்டல் போட்டார் அவர்.
“பாரேன் இசை.. எங்கம்மாவுக்கு எம்புட்டு அறிவுன்னு. பந்தாவே இல்லாம கூட்டிட்டு போறாங்களாம். அவங்க நம்மளைக் கூட்டிட்டு வரதே பந்தா காட்டத்தான்னு சொன்னா, இவங்க நம்பவா போறாங்க..?” என்று ரோகிணி சொன்ன விதத்தில் இசைக்கு சிரிப்பு வந்தது.
“பேசாம வாடி..!” என்று அவள் சிரிக்க,
“மம்மி.. நம்ம எங்க போறோம்..?” என்றான் அகரன்.
“அது அன்பு அங்கிள் இருக்கார்ல.. அவருக்கு ஆன்ட்டி பார்க்க போறோம்..” என்றாள் ரோகிணி.
“அப்படின்னா..?” என்றான் அகரன் புரியாமல்.
“அப்படின்னா… அன்பு அங்கிள் ஒரு ஜாடி.. அவருக்கு ஆப்டா இருக்குற மூடியைத் தேடித் போறோம்..” என்றாள்.
“இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கலாமே ரோகிணி..” என்றாள் இசை வெளுத்த முகத்துடன்.
“பயப்படாத, நாம மதுரைக்குள்ள தான் போறோம்… வேற எங்கயும் போகலை. நான் உனக்குத் தெரியும்ன்னு நினைச்சேன் இசை. காதம்பரி ஆன்ட்டி உன்கிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்..” என்றாள்.
அவர் அப்படி சொல்லியிருந்தால், இசை இந்த பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டாள்.
“ரோகிணி, அடுத்து எந்த ஊர் வந்தாலும் அங்க நிறுத்த சொல்லு. நாங்க அப்படியே இறங்கி சென்னை போயிடுறோம். நீங்க போயிட்டு வாங்க..” என்றாள் இசை.
“என்ன விளையாடுறியா..? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஓடி ஒளிவ. பயப்படாம வாடி..!” என்றாள் ரோகிணி.
“எனக்கு இது சரியா படலை ரோகிணி. ரெண்டு நாளா மனசே சரியில்லை. ஏதோ வேண்டாத ஒன்னு நடக்கப் போற மாதிரி..” என்றாள் இசை.
“இதுக்கு மேல நடக்குறதுக்கு ஒண்ணுமில்லை. எது நடந்தாலும் அது நல்லதுக்கு தான்னு நினைச்சுக்குவோம். தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்காத..” என்ற ரோகிணி, அதற்கு மேல் அவளிடம் பேச்சை வளர்க்கவில்லை.
ஆனால் அங்கு நடந்து கொண்டிருந்ததோ, இசை கொஞ்சமும் எதிர்பார்க்காத சம்பவங்கள் தான். இறுகிப் போயிருந்த அவளின் மனம் மேலும் இறுகிப் போகப் போவதைப் பற்றி தெரியாமல் அங்கு சென்று கொண்டிருந்தாள்.
மதுரையை நெருங்கி, கார் செல்லும் பாதையைப் பார்த்தவளுக்கு, மனம் பக்கென்று தான் இருந்தது. அவள் ரோகிணியைப் பார்க்க, அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“அந்த சங்கீதாவை இங்கயா கட்டிக் குடுத்திருக்காங்க..” என்றாள் இசை.
“அப்படித்தான் சொன்னாங்க இசை. மதுரைன்னு தான் சொன்னாங்க. ஆனா, வேற ஏதோ ஊருக்கு போற மாதிரி இருக்கு..” என்றாள் ரோகிணி.
“இந்த ரோடு எங்க போய் முடியும்ன்னு எனக்குத் தெரியும். போற இடத்துல எது நடந்தாலும் நீ வாயைத் திறக்கக் கூடாது. எங்க வரவே கூடாதுன்னு நினைச்சேனோ.. கடவுள் அங்கேயே என்னை கூட்டிட்டு போயிட்டு இருக்கார்ன்னு நினைக்கிறேன்..” என்றாள் இசை. எப்போதும் இல்லாத அளவிற்கு அவளின் முகத்தில் வேதனையும், இறுக்கமும் குடி குடிகொண்டிருந்தது.
“வந்திருக்கவே கூடாது..” என்று ஆயிரமாவது முறையாக மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அவள்.
அதிலும் கார் சென்று நின்ற வீட்டைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பிரளையமே வெடித்தது.
“எவ்வளவு நேரம்மா இங்கயே இருப்பிங்க. சங்கீதாவுக்கு அவ வாக்கப்பட்டு வந்த வீட்டை உங்களுக்கெல்லாம் சுத்திக் காட்டணுமாம்… வாங்க..!” என்றார்.
“நான் சொன்னேன் பார்த்தியா..?” என்பதைப் போல் ரோகிணி பார்த்து வைக்க,
“இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கோம். அவங்க இப்போ பிரக்னன்ட்டா வேற இருக்காங்க. எதுக்கு ஆன்ட்டி அவங்களுக்கு வீண் சிரமம். நாங்க கார்லயே இருக்கோம்..!” என்றாள் இசை.
காதம்பரிக்கு அதற்கு மேல் அவர்களை வற்புறுத்துவதில் இஷ்ட்டம் இல்லை.
அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம், இசைக்கு கண்கள் கலங்கியது. யார் வீட்டை யாருக்கு, யார் சுத்திக் காட்டுறது.. என்று எண்ணியவளுக்கு தன் மீதே கழிவிரக்கம் தோன்றியது.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பட்டென்று வெளியே வந்தான் அவன். நேராக வெளியே தேடியவனுக்கு, காரில் இருந்த இசை தென்பட, சற்றும் யோசிக்காமல் அவள் அருகில் சென்றான். இத்தனை வருடங்கள் கழித்து அவனைப் பார்த்ததில் அவளுக்கும் பேச்சே வரவில்லை.
“இப்போ கூட உனக்கு உள்ள வரணும்ன்னு தோணலையா..? இதுக்காகத் தான் உன்னை கஷ்ட்டப் பட்டு வரவச்சேனா..?” என்றான் அவன். அவன் வேறுயாருமில்லை மாதவன் தான்.
“அது வந்து..!” என்று இசை தயங்க,
“என்ன செல்வி..? எதுக்கு வீட்டுக்குள்ள வர இவ்வளவு யோசிக்கிற..?” என்றான் மாதவன்.
“இல்ல, பரவாயில்லை..!” என்றாள் பட்டென்று.
“சங்கீதா என்னோட மனைவி தான். அவங்க வீட்ல நீ குடியிருக்குற விஷயம், அன்னைக்கு அவகூட வீடியோ கால் பேசுறப்போ தான் தெரிஞ்சது. அப்பவும் நீதானான்னு எனக்கு உறுதியா தெரியலை. அப்பறம் உறுதிப் படுத்திகிட்டேன். உன்னை இங்க கண்டிப்பா கூட்டிட்டு வரணும்ன்னு சொன்னது யாரு..? நான் தான்..! அன்பு பார்க்க வந்த பொண்ணு வேற யாருமில்லை. உன்னோட தங்கச்சி கயல்விழியைத் தான்..!” என்றான் மாதவன்.
“எதுக்கு இப்படி பண்ண..?” என்றாள் இசை வெறுமையான குரலில்.
“தப்பா எதுவும் பண்ணலை. நல்லது தான் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்..!” என்றான் மாதவன்.
“சரி அப்படியே இருந்தாலும், என்னால இந்த வீட்டுக்கு வர முடியாது. என்னைப் பார்த்தா உங்கம்மாவுக்கும் வீணா மனக்கஷ்ட்டம்..” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டாள் இசை.
“என்னங்க..? இங்க என்ன பண்றிங்க…?” என்றபடி வந்தாள் சங்கீதா.
“இவங்ககிட்ட பேசிட்டு இருந்தேன்..” என்றான் மாதவன்.
“இவங்க யாருன்னு தெரியாமலே இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கிங்களா..? பொதுவா இசையைப் பார்த்தா, எல்லாரும் பேசிட்டே நின்னுடுவாங்க. இல்லையா இசை..?” என்றாள் ஜாடையாக.
அவள் ஜாடையாக அவளை ஏதோ பேசுகிறாள் என்று தெளிவாக தெரிந்து போனது ரோகிணிக்கு.
“அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுரு சங்கீதா..” என்றான் மாதவன்.
“என்னங்க நீங்க..? இவங்களை சரியா கவனிக்கலைன்னா, அன்பு அண்ணா சண்டைக்கு வந்துடுவான். அப்பறம் வில்லேஜ்ல இப்படி பெரிய வீட்டையெல்லாம் இதுக்கு முன்னாடி பார்த்திருப்பாங்களோ என்னவோ..? வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்துகிட்டா தான..?” என்றாள் சங்கீதா.
அவளின் பேச்சைக் கேட்ட மாதவன் பல்லைக் கடிக்க,
“அட அற்ப பதரே…” என்பதைப் போல் பார்த்து வைத்தாள் இசை.
“ஒன்னும் வேண்டாம்..! கிளம்புங்க போகலாம்..!” என்றான் மாதவன். அவள் காதம்பரியை அழைக்க சென்று விட,
“சித்தி ரொம்ப பாவம் செல்வி. இப்படி ஒரு தண்டனையை அவங்களுக்கு நீ குடுத்திருக்க வேண்டாம். உன்னை நினைக்காத நாளில்லை..இப்ப வந்தாவது அவங்ககிட்ட பேசு செல்வி..” என்றான்.
“நான் யாருக்கும் தண்டனை குடுக்கலை. எனக்கு நானே குடுத்துகிட்டேன். உனக்கு புதுசா சித்தி மேல பாசமெல்லாம் வந்திருக்கு போல..?” என்றாள் இடக்காக.
“எல்லா மனுஷங்களும் எல்லா நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. ஏன் நாங்கல்லாம் மாறக் கூடாதா என்ன..?” என்றான் மாதவன்.
“நீ மாறினாலும், உன்னைப் பெத்தவங்க மாறியிருக்க வாய்ப்பேயில்லை..” என்று அவள் உண்மையை சொல்ல, அதை அவனும் உணர்ந்ததால் அதற்கடுத்து பேசவில்லை.
“எது எப்படின்னாலும் அவளுக்கு நீ ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்திருக்க. அன்பு சாரை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. கயல் நிச்சயம் சந்தோஷமா இருப்பா..” என்றாள் இசை மனதார.
அவர்கள் பேசிக் கொள்வது பாதி புரிந்தும் புரியாததைப் போல் இருந்தது ரோகிணிக்கு. ஆனால் இசையின் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் வரப் போகிறது என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து போனது.
அந்த வீட்டிற்குள் மூச்சு முட்டுவதைப் போல் இருக்க, வெளியே வந்து விட்டான் அன்பு. வந்தவன் மாதவனும், இசையும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து குழம்பிப் போனான்.
“அந்த இசைக்கு உண்மையாவே திறமை அதிகம் தாண்ணா..! பாரு, வந்ததுல இருந்து, என் வீட்டுக்காரர் அவகிட்ட தான் பேசிட்டு இருக்கார்..!” என்றாள் சங்கீதா.
“நீ அந்த பொண்ணை தரம் தாழ்த்தி பேசுறதா நினைச்சு, உன் புருஷனையும் சேர்த்து தான் பேசிட்டு இருக்க.. அதுவாவது புரியுதா இல்லையா..?இந்த ஊரைப் பத்திக் கூட பேசிட்டு இருக்கலாம்..இல்ல வேற ஏதாவது விஷயமா கூட இருக்கலாம். ஒரு பொண்ணு கொஞ்சம் சகஜமா பேசிட்டா, அவ தப்பானவளாத்தான் இருக்கனும்ன்னு எந்த அவசியமும் கிடையாது..” என்றான் அன்பு.
“ஐயோ..அண்ணா..! நான் தப்பா எதுவும் சொல்லலை…” என்றாள்.