சுற்றிலும் வயல்வெளிகள் கண்களுக்கு பசுமையாக காட்சியளிக்க, அவற்றை சுற்றியும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள், அந்த வயல்வெளிகளுக்கு அரணாய் கம்பீரமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நெற்கதிர்கள் விளைந்திருக்க, அறுவடைக்கு இன்னும் காலம் இருந்தது. நெல்மணிகளை தாங்கிய நெற்கதிர்கள் நாணத்தால் குனிந்து இருக்க, கதிரவனின் ஒளிப் பாய்ச்சலில், அவை மேலும் சிவந்து நாணி தெரிந்தன. அதன் மேல், ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த பனித்துளிகள், கதிரவனைக் கண்ட அச்சத்துடன், சட்டென்று புற்களின் வழியாக ஓடி, நிலத்தை தஞ்சம் அடைந்திருந்தன. அந்த இளங்காலை நேரம், டவுனில் இருக்கும் மக்களுக்கு கேட்டாலும் கிடைக்காத ஒரு அற்புதமான நேரம்.
பச்சை பசேலென்று காட்சியளிக்கும் அந்த வயல்வெளிகளுக்கு இடையே காணப்படும் அந்த வரப்பு கூட அவ்வளவு பசுமையாய் இருக்கும். வெறும் காலில் அந்த வரப்பில் நடந்து செல்லும் சுகமே அலாதி தான். நாம் கால்களுக்கு செய்யும் எந்த தெரப்பியும் இந்த இயற்கை தெரப்பிக்கு முன்னால் நிற்க முடியாது. இப்படி சுத்தமான காற்றை இனி நாம் விலை கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கு இல்லை.
தென்னை மரங்களில் பசுமையாய், மொத்தமாக காய்த்திருந்த தேங்காய்கள், நிலத்தை நோக்கி சாய்ந்திருக்க, இடையே சில வயதான தென்னை மட்டைகள் பழுத்திருந்தது. புதிய காய்ப்புக்காக, தென்னம்பாலைகள் குருத்து விட்டிருக்க, அதை ஆழ்ந்து ரசித்து பார்ப்பர்களுக்கு மட்டுமே தெரியும், அதன் இயற்கை அழகு. அவற்றிக்கு இடையே இருந்த வாழை மரங்களில், வாழைத் தார்கள் நன்கு விளைந்து, வாழைக் காய்கள் பழுக்கும் தருவாயில் இருந்தது.
இவைகளுக்கு நடுவில் இருந்த அந்த அழகிய வீடு, கொஞ்சமும் பழமை மாறாமல், அப்படியே இருந்தது. சுற்றி இருந்த அந்த இயற்கையே, அந்த வீட்டிற்கு தனி அழகைக் கொடுத்தது. வீட்டினுள் சாம்பிராணி புகை ஜம்மென்று மணம் பரப்பிக் கொண்டிருக்க,
பன்னக சயனன் மகிழ்ந்திடும் முருகா…
பாரோர் புகழ்ந்து போற்றிடும் முருகா…
வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா…
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா…
வாழ்வில் இடரேதும் வாராது.. எப்போதும் முருகா…
பன்னிரு விழிகளிலே.. பரிவுடன் ஒரு விழியால்..
என்னை நீ பார்த்தாலும் போதும்..!
என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் வரிகள் அந்த வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் பூஜை அறையில் நின்று, முருகனையே பார்த்தபடி மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி லட்சுமி பெயருக்கு ஏற்ப லட்சுமிகரமான முகம், சமையல்கட்டில் நின்று ஆவி பறக்க, சூடான இட்லியை, சட்டியில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்.
வீட்டின் பின்கட்டில் இருந்த, ஜல்லிக் கட்டு காளைகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் ஒற்றைப் புதல்வன்…கதிரவன். வீட்டில் நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது மட்டும் அவன் வேலையல்ல. பல ஜல்லிக்கட்டுகளில், பல காளைகளை அடக்கியவன் என்ற பெருமை அவனுக்கு எப்போதும் உண்டு. காளையை அடக்கும் வீரனுக்கே உரிய உடல்வாகு,மாநிறம். எப்போதும் சிரிப்புடன் இருக்கும் முகமே அவனுக்கு தனிக் கலையாக இருக்கும்.
“கதிரு..! அந்த காளையையே எவ்வளவு நேரம் தான் குளிப்பாட்டுவ..? நேரம் ஆகிட்டு இருக்கு சாப்பிட வாய்யா..!” என்ற லட்சுமியின் குரலில் திரும்பினான் கதிரவன். நிஜ கதிரவனின் கதிகர்கள் பட்டு, இந்த கதிரவனின் முகம் பளிச்சென்று தெரிய,
“கதிரு இன்னைக்கு என்ன விசேஷம்..? காலைலேயே வீடு அமர்க்களமா இருக்கு..!” என்றான் சின்ன பாண்டி என்கிற சின்னு. கதிரை விட சிறியவன், ஆனால் அவனை பேர் சொல்லித்தான் அழைப்பான்.
“இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் சின்னு..!” என்றான் கதிர்.
“அட ஆமாம்ல..! நான் மறந்தே போயிட்டேன்…! கையைக் குடு கதிரு..பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!” என்றான் சின்னு.
“ரொம்ப நன்றி சின்னு. ஆமா, நீ இன்னும் இங்க என்ன பண்ணுற…? உனக்கு காலேஜ்க்கு நேரம் ஆகலையா..? கிளம்பு முதல்ல..!” என்றான் கதிர்.
“அதெல்லாம் ஒன்னும் நேரம் ஆகலை. அப்படியே ஆனாலும் இன்னைக்கு லீவு போட்டுடலாம்..! சுமாரா படிக்கிறோம்ன்னு தெரிஞ்சாலும் நம்மளைத் தான் கேள்வி கேக்குறாணுக. இந்த வருஷம் எப்படா முடியும்ன்னு இருக்கு..!” என்றான் சின்னு.
“படிக்கிறதுக்கு உனக்கு அவ்வளவு கஷ்ட்டமா இருக்கா..? என்னதான் வாய்க்கா, வரப்புன்னு இருந்தாலும் இந்த காலத்துல படிப்பு இல்லன்னா ஒன்னும் செய்ய முடியாது. ஒழுங்கா படிக்கிற வழியைப் பாருடா..!” என்ற கதிரவன், கல்லூரி படிப்பை முடித்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தது.
“ஏலேய்..! கழுத வயசுக்கு மூத்தவனை பிடிச்சுகிட்டு பேர் சொல்லி கூப்பிட்டு இருக்கவன். ஒழுங்கா, அண்ணன்ன்னு சொல்லுடா..!” என்று சொல்லியபடி அங்கு வந்த லட்சுமி,
“நீங்க போங்கம்மா..! இந்த செவலையை மட்டும் குளிக்க வச்சுட்டு வந்துடுறேன்..!” என்ற கதிரவன், மீண்டும் அதே வேலையை செய்ய போக,
“இதெல்லாம் நீதான் செய்யனுமா கதிரு. தோட்டத்துல நிறைய வேலை கிடக்கு. நீ வாய்யா..! சின்னு அதை குளிக்க வைக்கட்டும்..!” என்று லட்சுமி சொல்ல,
“பெரியம்மா, உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது. செவலை நமக்கு எல்லாம் அடங்காது. அதுக்கு கதிரு தான் லாயக்கு. என்னை ஆளைவிடுங்கடா சாமிகளா. என் ஜோலியை முடிக்கிறதுலையே குறியா இருக்கீங்க..!” என்ற சின்னு அந்த இடத்தை காலி செய்ய, செவலை என்று அழைக்கப்படும் அந்த ஜல்லிக் கட்டு காளை, கம்பீரமாய் தலையைத் தூக்கிப் பார்த்தது.
“ஆத்தி..! இதுக்கென்ன கொம்பு நாளுக்கு நாள், வளர்ந்துகிட்டே போகுது..!” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றான் சின்னு.
“சீக்கிரம் வா கதிரு சாப்பிட..!” என்று சொல்லி விட்டு லட்சுமி சென்று விட, செவலையை குளிக்க வைத்தவன், அவற்றை எல்லாம் மாற்று இடத்தில் கட்டி, தீனியையும் போட்டு விட்டு வந்தான். அந்த நான்கு காளைகளும் குளித்து முடித்து, ஜம்மென்று தீனியை தின்று கொண்டிருக்க, இந்த கதிரவன் காளையும் சாப்பிட சென்றான்.
மணிகண்டன்- அந்த ஏரியாவில் பெயர் சொல்லக் கூடிய மனிதர்களில் ஒருவர். தெய்வ பக்தியும், நம்பிக்கையும் அவருக்கு அதிகம். கொஞ்சம் கண்டிப்பானவர். லட்சுமியும் அவருக்கு ஏற்ற மனைவியாக வாய்த்ததில் அலாதி பெருமை அவருக்கு. அதாவது அவர் சொல் தட்டாமல் இருப்பார். மணிகண்டனுக்கு காக்கா வெள்ளை நிறம் என்றால், லட்சுமிக்கும் அதே நிறம் தான். அவருக்கு அந்த வீடு, அவரின் கணவர், பையன் மட்டுமே உலகம். அப்படி இருப்பதில் அலாதி பிரியம் லட்சுமிக்கு. வெளி உலகம் தெரியாததைப் பற்றி அவர் எப்போதும் கவலை கொண்டதில்லை. சொல்லப் போனால், அந்த ஆர்வம் கூட அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. இப்படியே வருடங்களை ஒட்டி விட்டார்.
கதிரவன் ஒற்றை பிள்ளையாய் போனதில் மணிகண்டனுக்கு கொஞ்சம் வருத்தம் தான். அவனுக்குப் பிறகு பிறக்கும் எந்த குழந்தையும் நிரந்தரமாக இருக்காது என்று அவனின் ஜாதகத்தில் சொல்லிவிட, மனதை தேற்றிக் கொண்டனர். அந்த வகையில், அந்த ஒரு பிள்ளையும் ஆணாய் பிறந்ததில் அவருக்கு மனம் கொஞ்சம் மட்டுப் பட்டிருந்தது.
“கதிரு, கொப்பரைக்கு போக வேண்டிய லோடு எல்லாம் போயிடுச்சா..?” என்றார் மணிகண்டன்.
“இல்லப்பா…! கொப்பரை எல்லாம் குடோன்ல தான் இருக்கு. ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம். எப்படியும் கிலோ நூறு ரூபாய்க்கு மேல போகும். அப்ப லோடு ஏத்திக்கலாம்..” என்றான் சாப்பிட்டுக் கொண்டே.
“அதுவும் சரித்தான்..! கஷ்ட்டபட்டு வெள்ளாமை வச்சு எடுக்குறது நம்ம. சம்பந்தமே இல்லாம, இடையில கொள்முதல் பண்ணி விக்கிறவன் தான் நல்லா இருக்கான். விதை விதைக்கிற நமக்கு என்ன மிஞ்சுது இதுல..? இப்படியே போனா.. காடு கரை வச்சிருக்கவன் நிலைமை எல்லாம் என்ன ஆகப் போகுதோ..?” என்ற மணிகண்டன், சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
அவனுக்கு அசைவம் என்றால் அலாதி பிரியம். சொல்லப் போனால் அசைவம் மட்டும் தான் பிடிக்கும். நாட்டு கோழிகள் அங்கே கணக்கில்லாமல் திரிய, நினைத்த நேரத்தில் ஒன்றை பிடித்து அடித்து, குழம்பு வைத்து விடுவார் லட்சுமி.
அங்கே வடக்கு தென்னந்தோப்பிற்கு அருகே, ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றங்கரையை ஒட்டிய தோப்பு என்பதால், மற்ற தோப்புகளை விட, அங்கு காய்க்கும் தேங்காய்களின் சுவை அலாதியானது. இளநீர் அவ்வளவு இனிப்புடன் இருக்கும்.
அந்த ஆற்றகரையின் மேட்டில் நான்கு ஐந்து வாண்டுகள் புடை சூழ, அடுப்பு கூட்டிக் கொண்டிருந்தாள் செல்வி. அவள் அணிந்திருந்த பாவடை சட்டை அவளை சிறு பெண் போல் காட்ட, அந்த வாண்டுகளின் வரிசையில் அவளுடைய உடன் பிறந்த தம்பி மாறனும் இருந்தான்.
“சீக்கிரம் அடுப்பைக் கூட்டுக்கா..!” என்று அவசரப் படுத்திக் கொண்டிருந்தான் மாறன்.
“இருடா மாறா..! ஒரே மாதிரி கல்லு இல்லடா..! இதுல சட்டியை வைச்சா, விழுந்திடும்..!” என்று சொல்லிக் கொண்டே, அதை சரி செய்து கொண்டிருந்த செல்விக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அந்த ஊரில் இருந்து தினமும் பஸ்ஸில் போய்விட்டு வருவாள்.
அவர்கள் வீட்டில் அவள் தான் அதிக நிறம். அதில் அவளின் அம்மா மங்கைக்கு அப்படி ஒரு பெருமை. மங்கை, அவளை சின்னப் பிள்ளையில் இருந்து அழகி என்று தான் அழைப்பார். அதற்கு ஒரு பெரிய சண்டையே கட்டி, இப்போது தான் செல்வி சென்று கூப்பிட்டுப் பழகிக் கொண்டிருக்கிறார். பிறந்ததில் இருந்து அவளுக்கு ஷாம்பு என்ற ஒன்றையே மங்கை பயன்படுத்தியதில்லை. அவளையும் பயன்படுத்த விட்டதில்லை. இயற்கையான சீயக்காயில் வளர்ந்த முடி, அவளுக்கு இடையைத் தாண்டியிருந்தது.
“கட்டிட்டுப் போறவனுக்கு… உன் தலைமுடிக்கு எண்ணெய் வாங்கிக் குடுத்தே அவன் சொத்து அழியப் போகுது..!” என்பது தான் மங்கையின் தினசரி பாட்டு.
தம்பி மாறன் இப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவளுக்கு கயல்விழி என்ற ஒரு தங்கையும் இருக்கிறாள். அவளும் பள்ளியின் இறுதியாண்டில் இருக்கிறாள்.
“நீ மட்டும் எப்படிக்கா இவ்வளவு வெள்ளையா பிறந்த..?” என்று அங்கிருந்த வாண்டுகளில் ஒருவன் கேட்க,
“நீ அடி வாங்கப் போறடா..! சரி சாப்பாடு வைக்கிற சட்டி எங்க..?” என்று அவள் கேட்க, மாறன் அவள் கேட்டதை எல்லாம் எடுத்துக் கொடுத்தான். அவர்கள் அந்த ஆற்றின் கரையில் உட்கார்ந்து கூட்டாஞ் சோறு செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து ஒவ்வொரு பொருளை எடுத்து வந்திருக்க, முக்கியமான ஒரு பொருள் மட்டும் திருட்டுப் பொருள்.
“எவன்டா கேட்பான்..! அப்படியே வந்து கேட்டாலும், நான் இருக்கேன் மாறா..! நீ கவலையை விடு..!” என்றவள் வேகவேகமாய் சமைக்க ஆரம்பித்தாள். எதையும் அரைக்காமல் அப்படியே ஒண்ணா ரெண்டாகப் போட்டு அவள் வைத்த கோழிக் குழம்பு வாசனை மூக்கைத் தொலைத்தது.
“சும்மா ஜம்முன்னு இருக்குக்கா..!” என்ற வாண்டுகள், கொதித்துக் கொண்டிருந்த சோறு எப்போது வேகும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இல்ல மாமா..! சாரி மாமா.. இலை மட்டும் தான் மாமா..!” என்று வார்த்தைக்கு நூறு மாமா போட்டான் மாறன்.
“என்னடா.. இத்தனை மாமா போடுற..? ஏதாவது தில்லாலங்கடி வேலை எதுவும் பன்றிங்களா..?” என்றான் யோசனையுடன்.
“அதெல்லாம் ஒன்னும் பண்ணலை மாமா..! சும்மாதான் மாமா..!” என்றவன் ஓட்டம் பிடிக்க, அவனின் ஓட்டத்தில் இருந்தே விஷயத்தை புரிந்து கொண்டான் கதிர்.
“என்னடா மாறா..? இலைய அறுத்துட்டு வர இவ்வளவு நேரமா..?சோறு வடிச்சு எவ்வளவு நேரம் ஆகுது..?” என்று கடிந்து கொண்டாள் செல்வி.
“எக்கா..! அந்த கதிர் மாமா பார்த்துட்டாருக்கா. இதுக்குத்தான் நான் போகும் போதே சொன்னேன். இப்பப் பாரு, அவர் கண்ணுல சிக்கிட்டேன்..!” என்றான் அழாத குறையாக.
“டேய்..! இப்ப எதுக்கு இப்படி சீனைப் போடுற..? நீ பயப்படுற அளவுக்கு அவன் ஒன்னும் அப்பாடக்கர் இல்லை. அவனெல்லாம் ஒரு ஆளுன்னு, அவனுக்கு பயந்துகிட்டு இருக்க. இலையைப் போட்டு உட்காருங்கடா. பசிக்குது, சாப்பிடலாம்..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பயப்பார்வை பார்த்தான் மாறன்.
“இப்ப எதுக்குடா இப்படி முழிக்கிற..?” என்றாள் கேள்வியாய்.
“அக்கா..! கதிர் மாமா..!” என்றான் மாறன்.
“என்னடா சொல்ற..?” என்று அவள் வேகமாக திரும்பிப் பார்க்க, அவளையே முறைத்துக் கொண்டு நின்றான் கதிர். ஒரு நிமிடம் பயந்தவள், அடுத்த நிமிடம் அதையே வெளியே காட்டிக் கொள்ளாமல் கெத்தாக நின்றாள்.
“அடுத்தவங்க தோட்டத்துல ஒரு பொருளை எடுக்குறதுக்கு முன்னாடி அனுமதி கேட்கணும்ன்னு தெரியாதா..?” என்றான் கதிர்.
“கேட்க முடியாது..! என்ன செய்ய முடியும் உன்னால..?” என்றாள் தெனாவெட்டாய்.
“ஒன்னும் செய்ய முடியாது தான். ஆனா பாரு, இன்னைக்கு இருக்குற காலேஜ இல்லைன்னு சொல்லி, நீ மட்டம் போட்டிருக்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். இப்ப உன் வீட்டுப் பக்கம் தான் போறேன்..!” என்றான் ஜாடையாக.
“தடிமாடு…! அப்படியே போய் அம்மாகிட்ட போட்டுக் குடுப்பான். அம்மாவும் இவன் பேச்சை கேட்டுட்டு என்னை வெளுத்தி எடுக்கப் போகுது. இந்த மாட்டுக்கார வேலனுக்கு மப்பு கொஞ்சம் கூடிட்டே தான் போகுது…!” என்று எரிச்சலாய் நினைத்தவள்,
“அப்படியெல்லாம் சொல்லாதிங்க கதிர் மாமா..!” என்றாள் அன்பொழுகும் குரலில்.
“எப்படி நடிக்கிறான்னு பாரு கதிரு. அப்படியே ரொம்ப நல்லவ மாதிரி முகத்தை வச்சிக்குவா. இவளை விடாத..! நாளுக்கு நாள் இவளோட ஆட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது..!” என்று மனதிற்குள் நினைத்தவன்,
“உட்காருங்க..! போடுறேன்..!” என்று வெளியே சொன்னவள், ‘போட்டுத் தொலையறேன்..!’ என்று உள்ளே கறுவிக் கொண்டாள்.
அந்த வாண்டுகளுடன் அவனும் வரிசையில் அமர, அவனுக்கும் சாப்பாட்டை போட்டாள் செல்வி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
“வெடக்கோழியா இருக்கும் போல இருக்கே..?” என்றான் ஒரு மாதிரி குரலில்.
“என்ன சொன்னிங்க..?” என்றாள் கோபமாக.
“இல்லை..! வெடக்கோழி குழம்பு நல்ல ருசியா இருக்கும்ன்னு சொன்னேன்..!” என்றான் சன்னமான சிரிப்புடன்.
“இருக்கும் இருக்கும்..!” என்றவள் குழம்பை ஊற்ற, நாளே வாயில் அவள் போட்ட சாதத்தை சாப்பிட்டு முடித்திருந்தான்.
“மாடு மாடு.. எப்படி மாடு மாதிரி திங்கறான் பாரு..!” என்று அவளால் நொந்து கொள்ள மட்டும் தான் முடிந்தது.
“என்ன பார்க்குற..? சாப்பாட்டை போடு..!” என்று அவன் மீண்டும் கேட்க, மாறனுக்கு அவன் அக்கா செல்வியைப் பார்த்து பாவமாகிப் போனது. அவளுக்கு எதுவும் மிஞ்சாது என்று அப்போதே தெரிந்து போனது. செல்வி சட்டியை சுரண்டும் வரை கதிர் விடவில்லை. கடைசியில், ஆக்கிய அவளுக்கு ஒண்ணுமே மிஞ்சவில்லை.
சமைத்த பாத்திரங்களை அவள் ஆற்றில் கழுவிக் கொண்டிருக்க,
“குழம்பு செம்ம ருசியா இருந்துச்சு மாறா. நல்ல சீமைக் கோழியா இருக்கும் போல..!” என்று சொல்ல,
“நீங்க வளர்க்குற கோழி எல்லாமே சீமைக் கோழிதான..!” என்று வாயை விட்டான் மாறன்.
“என்னடா சொல்ற..?” என்று கதிர் கேட்ட பிறகுதான் மாறனுக்கு தான் உளறிவிட்டது புரிந்தது.
“நிஜமாவா மாமா..! அத்தை வைக்கிற கோழி குழம்புன்னா அக்காவுக்கு அவ்வளவு இஷ்ட்டம். நான் அக்காகிட்ட சொல்றேன்..” என்றான் மாறன்.
“டேய்..! அவகிட்ட சொன்னா, வீம்புக்கு வரமாட்டா. அதனால சொல்லாம கூட்டிட்டு போ..! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..!” என்று திரும்பி அந்த ஆற்றின் கரையில் நடக்க ஆரம்பித்தவனின் கண்களில், நீருக்குள் தெரிந்த செல்வியின் வெண்டை பிஞ்சு பாதங்கள் கவனத்தை ஈர்த்தது.
“சொன்னாலும் சொல்லாட்டியும் நீ அழகி தாண்டி..!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், ஒரு பெருமூச்சோடு அவ்விடத்தை விட்டு நகன்றான்.
அவன் தன்னை பார்த்தாலும், பார்க்காததைப் போல் இருந்த செல்வி, அவன் அந்த பக்கம் நகர்ந்த உடன்,
“என்னடா சொல்லிட்டு போறான் அந்த மாட்டுக்கார வேலன்..” என்றாள் தம்பியிடம்.
“ஒன்னும் சொல்லலைக்கா..!” என்றான்.
“டேய் மாறா..! ரொம்ப பசிக்குதுடா. அந்த தடிமாடு மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டான்..!” என்றவளின் முகத்தில் பசியின் சாயல் தெரிய, அக்காவின் முகத்தைப் பார்த்து உருகிப் போனான் மாறன்.
“நீ வாக்கா..! நாம வீட்டுக்குப் போகலாம்..!” என்று அவன் அழைக்க,
“இதெல்லாம் எடுத்துட்டு போகனுமேடா..!” என்றாள்.
“அதெல்லாம் இவனுக எடுத்துட்டு வருவானுக..! நீ வாக்கா..!” என்றபடி அவளை நேராக கதிரின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
“இப்ப எதுக்குடா, இவன் வீட்டுக்கு வந்தோம்..?” என்றாள் கேள்வியாக.
“அக்கா..! அத்தையும் இன்னைக்கு கோழி குழம்பு தான் வச்சிருக்காங்களாம். உன்னோட சாப்பாட்டை முழுசா அவர் சாப்பிட்டார் தான. இங்க அவரு சாப்பாட்டை எல்லாம் நீ முடிச்சுடு. கணக்கு சரியா போய்டும்..!” என்று ஐடியா கொடுத்தான் மாறன்.
“ஆமாடா மாறா, இன்னைக்கு அவனுக்கு ஒண்ணுமே இருக்கக் கூடாதுடா..!” என்றவள்,
“அத்தை..அத்தை..லட்சுமி அத்தை..!” என்று கத்திக் கொண்டே சென்றாள்.
“செல்வி..! வாடி தங்கம்..” என்று லட்சுமி சந்தோஷமாய் அழைக்க,
“எனக்குப் பசிக்கலை அத்தை..! இருந்தாலும் நீங்க மனசு கஷ்ட்டப்படுவிங்க.. அதனால சாப்பிடுறேன்..!” என்று போனா போகுது என்பதைப் போல் பேசிவிட்டு, சாப்பிட ஆரம்பித்தாள் செல்வி.
“அக்கா..! மெதுவா சாப்பிடு. நீ சாப்பிடுற வேகத்தைப் பார்த்தா,பசியில்லாம சாப்பிடுற மாதிரி இல்லை..!” என்றான் மாறன்.
“அப்படிங்கிற..?”
“அப்படித்தான்..!” என்றான்.
“இப்பப் பாரு..!” என்றவள், மெதுவாக ரசித்து, ருசித்து சாப்பிடத் தொடங்கினாள். இதையெல்லாம் இவர்கள் பார்க்காதவாறு நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கதிரவன்.