திருமணத்திற்கு முன்பே குழந்தை இருப்பதால் அதிரூபனை அருவருப்பாய் நினைத்த இளங்கோ.. அதிரூபனின் தற்போதைய செயல்களும் கர்ணனிடம் பேசிய தன்மையும்.. ஆதிரையின் மனம் அவன்பால் சாய்ந்திருப்பதையும் யோசித்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதுதான் சிறந்தது என காஞ்சனாவிற்கும் ராஜாத்திக்கும் எடுத்துரைத்தார்.
காஞ்சனா.. ‘இது சரி வருமா..? தாலி கழட்டி வீசிட்டானா என்ன செய்யிறது.?” என்றார் கலக்கமாக.
கர்ணன்.. ‘ஆதி என்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னதும் ஆடிப்போய்ட்டேன்.. ஆனா ரூபன் அவ மனசை எப்படி புரிஞ்சிருக்கான் பார்த்திங்கள்ல.? நேர்ல வராமலே அவளை புரிஞ்சவனுக்கு, பக்கத்துல இருக்கும்போது சமாளிக்க சொல்லியா தரனும்.? உங்க மருமகன் எல்லாத்தையும் யோசிச்சிதான் முடிவெடுத்திருப்பான்.. ரூபனோட சேர்த்து நாமளும் இத்தனை பேரிருக்கோம்.. அவ ஒத்த ஆளை சமாளிக்க முடியாதா என்ன.?” என்றான் சிரிப்போடு.
காஞ்சனாவின் முகம் சற்று பதட்டம் குறையவே.. ‘ரூபனுக்கு ஃபோன் செய்து என்னைக்கு என்னன்னு கேளு கர்ணா..” என்றார் இளங்கோ.
அதற்கு அவசியம் தராமல் கணேசன் காஞ்சனாவிற்கு அழைக்கவும்.. ‘கணேசண்ணாதான்..” என இளங்கோவிடம் கொடுத்தார் மொபைலை.
பெண் தரமாட்டேன் என அத்தனை பேசிவிட்டு தற்போது கல்யாணம் பற்றி பேச பெரும் தயக்கம் வரவே.. ‘அண்ணா..” என காஞ்சனா தடுமாற.. ‘ஆதியை ரூபனுக்கு கொடுக்க நினைச்சதுக்கு ரொம்ப நன்றி காஞ்சிமா.. இனி எனக்கு எந்த கவலையும் இல்ல..” என்றார் சந்தோசமாக.
காஞ்சனா அமைதியாக இருக்கவே.. ‘கர்ணனும் இளங்கோ பையனும் இன்னும் ஒரு வாரத்துல பாரின் போய்டுவாங்களாம்.. அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்க கர்ணன் கேட்டிருந்தானாம்.. எங்களுக்கு பெருத்த சந்தோசம்டா.. இருந்தாலும் உன் வாயால சம்மதம் கேட்டுட்டா நிம்மதியா இருக்கும்..” என்றார் ஆவலோடு.
‘ஆதிக்கு ரூபனை பிடிச்சிருக்கும்போது நான் எப்படி சம்மதிக்காம இருப்பேன்.? என் பொண்ணு சந்தோசம்தான் என்னோட ஒரே நிம்மதி.. ஆனா ஒரு வாரத்துல கல்யாணம் எப்படி ஏற்பாடு செய்யிறது.?”
கணேசன்.. ‘இங்க நானும் அங்க கர்ணனும் இளங்கோவும் பார்த்துக்குவாங்க காஞ்சனா.. எல்லா விபரமும் ரூபன் கர்ணாகிட்ட சொல்லிருக்கான், நீ கர்ணா சொல்றதுபோல மருமகளை மட்டும் கவனமா பார்த்துக்கோ..” என்றார் கனிவாக.
அங்க ஒரு மாசத்துக்கு பக்கம் வேலையிருக்கும்னான்.. அது முடிஞ்சதுக்கப்புறம் மறுவீடு சாங்கியம்னு உனக்கு எப்படி வசதியோ அப்படியே எல்லாம் பார்த்துக்கலாம்..” என்றார்.
‘மலேசியாவா.?” என காஞ்சனாவோடு சேர்த்து கர்ணன் அபியும் அதிர்வான குரல் கொடுக்க.. ‘ஹா..ஹா.. அன்னைக்கு ஆஸ்பத்திரில.. சாவு வீட்ல.. ஃபோன்லன்னு நிறைய பேசினேன்னு சொன்னான்.. அவன் சினிமால டூப் ஆர்டிஸ்ட்னும்.. டப்பிங் கொடுப்பான்னும் யாருக்கும் சொல்லலையா.?” என்றார் சிரிப்போடு.
‘என்ன.?” என அனைவரும் மீண்டும் அதிர.. ரூபனின் தொழிலை விளக்கி.. ‘இப்போவே அவன் சென்னையில இல்லம்மா.. டெல்லில இருக்கான்.. திடீர் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணவும் டைரக்டர்கிட்ட சொல்லிட்டு வரன்னான்..” என்றார்.
‘இது சரி வருமா.?” என காஞ்சனா புலம்பியது கணேசனுக்கு கேட்கவும்.. ‘உன் மாப்பிள்ளை ரொம்ப நல்லவன்ம்மா.. நம்ம ஆதிக்கு ஒரு குறையும் வராதுடா.. போகப் போக நீயே புரிஞ்சிப்ப.. தைரியமா இரு காஞ்சனா.. சந்தோசமா மருமகளை நம்ம வீட்டுக்கு அனுப்பி வை..” என்றார் நிறைந்த அன்போடு.
‘சரிண்ணா..” என்க.. ‘புதன்கிழமை நைட் நாங்க அங்க வந்திடறோம்.. உங்க அப்பார்ட்மன்ட் வீட்ல காலியிருக்குல்ல.? அங்கதான் தங்கபோறோம்.. அங்க பக்கத்துலயிருக்க சிவன்கோவில்ல கல்யாணம்.. எதாவதுனா கால் பண்ணு.. நான் வைக்கிறேன்..” என இணைப்பை துண்டித்தார்.
‘வீட்ல ஒன்னும் இல்ல.. அதிக்கு புடவை கூட ஆறேழுதான் இருக்கு.. அதுவும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கவும் எடுத்ததுதான்.. எல்லாம் கட்டியாச்சு.. நலங்குக்குகூட ஒரு புதுப்புடவை இல்ல..
நகையும் கூட அவ சம்பளத்துல சேர்த்தி வச்சி வாங்கின ஒரே ஒரு ஜிமிக்கியும் டாலர்செயின் மட்டும்தான் புதுசா இருக்கு.. எங்கம்மாவுது பாட்டிதெல்லாம் பழைய மாடல்.. எனக்கே டிசைன் பிடிக்கல.. முக்கியமா கல்யாணத்துக்கு சாரி எடுத்து பிளொஸ் தைக்கனும்.. ஒரு வாரத்துக்குள்ள எப்படி ரெடி பண்றது.?” என மூச்சுவிடாமல் புலம்பினார் காஞ்சனா.
கர்ணன்.. ‘அத்தை.. அப்பார்ட்மன்ட் வாடகை பணம் அப்படியேதான இருக்கு.. பணம் கையிலயிருந்தா எல்லாமும் இரண்டு நாள்ல முடிச்சிடலாம்..” என்றான் இலகுவாக.
சொந்த பந்தங்களுக்கு சொல்லனும்.. ஏன் திடீர் கல்யாணம்னு கேக்குறவங்களுக்கு பதில் சொல்லனும்.. எல்லாம் போக என் வீட்ல நடக்குற ஒரே கல்யாண வைபவம்..” என மகனின் நினைவில் கண்கலங்கினார்.
பரதனோடு படித்தவர்களுக்கு திருமணம் நடக்கையில் அன்றெல்லாம் காஞ்சனாவின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும்.. பின்னே தனக்கு தானே சமாதனம் செய்து மகளின் திருமணத்தை தன் சமத்துக்கு விமரிசையாக செய்ய வேண்டும் என நினைப்பார்.. இன்று பணமிருந்தும் எதுவும் செய்ய முடியாத அவசரக் கல்யாணம் நடத்தியாக வேண்டிய சூழல்..
ம்.. கர்ணனும் அபிமன்யுவும் வெளிநாடு செல்வதற்குள் திருமணம் முடித்தாக வேண்டும்.. இவர்களும் இல்லையென்றால் ஆதிரையை சமாளிப்பது பெரும்கஷ்டம் என்பதில் காஞ்சனாவிற்கு சந்தேகமேயில்லை.. மகளிற்கு பிடித்தம் என்பதாலும் அவசர திருமணத்தினாலும் சில சங்கடங்களை சந்தித்துதான் ஆகவேண்டும் என தன்னை தேற்றிக்கொண்டு.. ‘சரி கர்ணா.. வா ஆதிகிட்ட பேசலாம்..” என்றழைத்தார் காஞ்சனா.
‘நான் இரண்டு நாள் கழிச்சி ஆதிக்கு நலங்கு வைக்க ஏற்பாடோட வரேன்த்த.. இப்போ நீங்க.. அபி.. இளாமாமா எல்லாருமா சேர்ந்து கல்யாண ஏற்பாடு பத்தி சொல்லி அவளை மனதளவுல தயார்படுத்துங்க..” என கிளம்பினான் கர்ணன்.
—– —— ——
இரவு ஏழு மணியாகியும் யாரும் வராமலிருக்கவே.. இளா சித்தப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து மீட்டிங்போட்டு அபி ஃபிரண்டோட அண்ணனையே எனக்கு கல்யாணம் செய்து வைக்க ப்ளான் போட்டிருப்பாங்க.. யார் என்ன சொன்னாலும் நம்ம முடிவிலயிருந்து மாறக்கூடாது என்ற திடத்தோடு தானும் ஒரு முடிவிற்கு வந்து அன்னையின் வருகைக்காக காத்திருந்தாள் ஆதிரை.
கர்ணனைத் தவிர்த்து காஞ்சனாவோடு அனைவரும் வரவே.. எப்படியும் நாளை பெண்பார்க்க வருவான் என தன்னை சமாதனப்படுத்த விழைவார்கள்.. இவர்களே ஆரம்பிக்கட்டும் என இறுகிய முகத்தோடு அமைதியாய் அமர்ந்திருந்தாள் ஆதிரை.
கர்ணன் பேச சொன்னதுபோல் பேச நினைத்த காஞ்சனாவிற்கு மகளின் உப்பிச் சிவந்திருந்த கன்னம் மனதை பிசைய.. தன் கோபம் மறந்து ஆதிரையருகே வந்தமர்ந்தார்.
அதிரூபனை விரும்புகிறேன் என அழுகையோடு ஒப்புக்கொண்டது நினைவு வர.. அதிரூபனோடு திருமணம் பற்றி ஒருமுறை பேசிப்பார்ப்போமே.. சம்மதிக்கவில்லையென்றால் கர்ணன் சொன்னதுபோல் பேசலாம் என ஆதிரையின் கன்னம் வருடினார் அன்போடு.
சண்டை போடுவார் என நினைத்த ஆதிரைக்கு காஞ்சனாவின் வருடல் மனதிற்கு அத்தனை ஆறுதலாய் இருக்கவே.. ’ம்மா..” என அன்னை மடிசாய்ந்தாள்.
மகளின் கண்ணீரில் அன்னை மனம் தவிக்க.. ஆதிரையின் கேசம் வருடியவாறு.. ‘ஆதிம்மா.. உனக்கு பிடிக்காத கல்யாணம் செய்து வைக்க ரொம்ப கஷ்டமா இருக்குடா.. இதுக்கா இத்தனை பசங்களை வேணாம்னு நிராகரிச்சேன்.? நீ உன் மனசுல இருக்கிற ரூபனையே கட்டிக்கிறியா..? அபி பார்த்த மாப்பிள்ளையை நாளைக்கு வரவேணாம்னு சொல்லிடறேன்..” என்றார் மிகுந்த பொறுமையோடு.
‘மாட்டேன்.. இன்னொருத்தியோட குடும்பம் நடத்தினவனை கட்டிக்கவே மாட்டேன்..” என்றாள் கோபத்தோடு.
‘அப்போ இரண்டு பிள்ளை இருக்கிற கர்ணா மாமாவை மட்டும் எப்படி கட்டிக்கிறன்ன.?” என காய்ந்தார் பொறுமையிழந்து.
‘அ.. அது.. வந்து..” என திணறியவள்.. ‘கர்ணா மாமா கல்யாணம் செய்து குழந்தை பெத்துகிட்டார்.. அக்கா உடம்புக்கு முடியாம இறந்துட்டாங்க.. அப்படியிருந்தும் இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிச்சாங்களா.?” என பெருமையாய் சொன்னவள்..
‘அவன் அப்படியா.? கல்யாணத்துக்கு முன்னவே குழந்தை பெத்துக்கிட்டான்.. காதலி போனதும் அடுத்த பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சிட்டான்.. அவனை எதுக்கு கர்ணா மாமாவோட இணைசேர்க்குற.? எனக்கு அவன் வேணாம்..” என்றாள்.
‘உன் விருப்பம்தான் என் சந்தோசம்..” என்ற அன்னையின் சொல்லில் வியந்து நிமிர்ந்தவள்.. ‘ம்மா..” என்றாள் அதிர்வாக.
‘ம்.. என்ன செய்யிறது.? போறவங்க வரவங்ககிட்டல்லாம் கர்ணாவைதான் கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லிட்டிருந்தா நல்லாவா இருக்கும்.? எப்படியாவது கர்ணாகிட்ட பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.. ஆனா.. கல்யாணத்துக்கப்புறம் கர்ணா மனசு மாறலைன்னா.? உன்னை பொண்டாட்டியா ஏத்துக்கலைன்னா நான் அதுக்கு பொறுப்பாக முடியாது..” என ரூபன் சொன்ன காரணமே பதிலாய் வருமா என்று ஆழ்ந்து பார்த்தார் மகளை.
‘மாமா என்னை பொண்டாட்டியா ஏத்துக்கமாட்டார்ன்னு எனக்கும் தெரியும்.. எனக்கு மாமாவை கல்யாணம் செய்தா மட்டும் போதும்..” ஆனா மாமா ஒத்துப்பாங்களாமா.?” என்றாள் பயத்தோடு.
மகளின் மனதை நான் கூட சரியாய் யூகிக்கவில்லையே.. எதற்காக கர்ணாவை திருமணம் செய்ய நினைக்கிறாள் என எத்தனை துல்லியமாய் கணித்திருக்கிறான் என ரூபனை நினைத்து வியந்தவர்..
‘நாங்க எல்லாருமா சேர்ந்து உன் மாமன சம்மதிக்க வைக்கிறோம்.. ஆனா.. கல்யாணத்துக்கப்புறம் மனசு மாறாம இருப்பியா.? ஏன்னா உன் மனசுல இருக்கிறவனை விட கர்ணாக்கு வயசு ஜாஸ்தி..”
‘அம்மா..” என சற்று கோபமாய் குரலுயர்த்தியவள்.. ‘அவனை விரும்பினது உண்மைதான்.. ஆனா தப்பானவனை விரும்பிட்டேன்னுதானே அவனை வேணாம்னு விலகுறேன்.. அவனோட எதுக்கு மாமாவை இணை வைக்கிறிங்க.?” என்றாள் மீண்டும்.
‘சரி நான் யாரோடவும் இணைவைக்கில.. எப்படியாவது நான் சம்மதம் வாங்குறேன்.. கழுத்துல தாலி ஏறினதுக்கப்புறம் கல்யாணத்துலயிருந்து பின் வாங்கமாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்துகொடு..” என கையை நீட்டினார்.
அம்மா மட்டும்தான் பேசுறாங்க.. சித்தப்பா அபியெல்லாம் வாயே திறக்கல.. வேறு எதாவது வில்லங்கம் செய்கிறார்களா என ஆதிரை கலக்கமாக பார்க்க்கவும்..
காஞ்சனா.. ‘இரண்டாவதா வாழப்போறதைப் பத்தி பலபேர் பலவிதமா பேச செய்வாங்க.. அதெல்லாம் தாண்டி தைரியமா வாழ்ந்து காட்டனும்.. எது எப்படியானாலும் கழுத்துல தாலி ஏறிட்டா இதுதான் உன் வாழ்க்கைன்னு மனசுல பதிச்சிக்கனும்..
ஆம்பிளையில்லாத வீடு.. கல்யாணத்தை விளையாட்டா நினைச்சிட்டாங்க.. அதான் இப்படி வாழாம வந்திருக்கா அப்படியிப்படின்னு யாராவது சொல்ற மாதிரி நடந்துகிட்ட.. அடுத்த நிமிஷம் என்னை உயிரோட பார்க்க முடியாது.. “ என்றார் மிரட்டலாக.
ஓஹ்.. இவ்வளோதானா என நிம்மதியடைந்தவள்.. ‘என்னால உங்களுக்கு கெட்ட பேர் வரமாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன்ம்மா..” என்றாள் உறுதியாக.
ராஜாத்தியிடம்.. ‘சின்னபுள்ள கல்யாணத்தைப்பத்தி புரியாம பேசுறா.. கர்ணா நாலு அப்பு விட்டான்னா பயத்துல இந்த வாழ்க்கையே வேணாம்னு நம்மளை திண்டாட வச்சிடுவா.. இவளை நம்பி என் மகன்கிட்ட எப்படி கேக்குறது அத்தனை சொன்னிங்களே.? இப்போ பாருங்க கெட்ட பேரு வாங்கி தரமாட்டன்னு வாக்கு கொடுத்திருக்கா.. இனியாவது என் பொண்ணை நம்புவிங்களாண்ணி..?”
ராஜாத்தி.. ‘ஆதி கல்யாணத்துல எனக்கு சந்தோசம்தான்.. ஆனா கர்ணாகிட்ட நீதான் பேசனும்..” என நழுவிக்கொண்டார். ஆம்.. நான் உளறிடுவேன்.. எதுன்னாலும் நீயே பேசிக்க.. தலையை மட்டும் ஆட்டறேன் என ராஜாத்தி முன்னமே சொல்லியிருந்தார்.
காஞ்சனா இளங்கோவைப் பார்க்க.. இளங்கோ.. ‘அப்பா அண்ணன் இல்லாததால குழந்தையிருக்கிறவனுக்கு கட்டிவச்சிட்டன்னு சொல்லக்கூடாது.. நீ இப்ப எடுக்கிற முடிவுதான் கடைசி வரைக்கும்.. நல்லா யோசிச்சிக்க..” என்றார் ஆதிரையிடம்.
‘நல்லா யோசிச்சிதான் சித்தப்பா முடிவெடுத்தேன்.. எனக்கு இந்த கல்யாணத்துலதான் நிம்மதி கிடைக்கும்..” என தலைகுனிந்தாள்.