மல்லி சுந்தரிடம் ஐந்து மணி என்று சொன்னபோது அவள் வசதியை பொறுத்து சொன்னாளே தவிர சுந்தருக்கு வசதிப்படுமா என்று யோசிக்கவே இல்லை.
எப்போதும் மதிய உணவு அனுப்பிய பிறகு ஓய்வு எடுப்பவள் ஐந்து மணி போல இரவு உணவுக்கான தயாரிப்பில் இறங்கி விடுவாள். சட்னி சாம்பாருக்கு தேவையான காய்களை வெட்டி வைப்பது, பருப்பு வேக வைப்பது, சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைப்பது என்று சின்ன சின்னதாக நிறைய வேலைகள் இருக்கும்.
அதனால் இன்று ஓய்வெடுக்காமல் இரவு உணவுக்கான தயாரிப்பு வேலைகளை செய்து வைத்து விட்டால் சுந்தரிடம் பேசி விட்டு வந்து வேகமாக முடித்து அனுப்பி விடலாம் என்று முடிவு செய்து கொண்டாள்.
முன்பே அவன் வருவான் என்று தெரிந்திருந்தால் இன்று இரவுக்கான ஆர்டர் எடுக்காமல் தவிர்த்து இருப்பாள். எடுத்த பிறகு மறுப்பது தொழிலின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அவளுக்கு வாடிக்கையாளர்கள் அவநம்பிக்கையை சம்பாதித்து தரும் என்று தன் நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டாள்.
காலையில் சுந்தரிடம் மாலையில் வருகிறேன் என்று சொன்ன பிறகு அவளுக்கு வேலையே ஓடவில்லை. மகளின் நினைவு எப்போதுமே உண்டு என்றாலும் இன்று சுந்தர் வந்து பார்த்ததில் இருந்து மகளின் நினைவு அதிகமாகவே இருந்தது.
அவனிடம் விட்டு விட்டு வந்ததற்கு எப்படியாவது கஷ்டப்பட்டு வளர்த்துக் கொள்ளலாம் என்று கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டுமோ என்று உறுத்தல். எதுவானாலும் இன்று நிச்சயம் மகளை தன்னோடு வைத்துக் கொள்ளும் விதத்தில் பேசிவிட வேண்டும்; அவன் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கெஞ்சியாவது சண்டையிட்டாவது அவளை கூட்டிக்கொண்டு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
அவளுக்கு சுந்தரின் நிலை தெரியாது அல்லவா? அவள் அத்தை பார்த்துக்கொள்ள இருக்கும் போது அவன் தன்னுடன் அனுப்ப விடுவானா? அல்லது வீம்புக்காவது சண்டை இடுவானா என்று யோசனை.
அதுவே உள்ளே நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்க வேக வேகமாக வேலைகளை செய்து முடித்தவளுக்கு மகளும் வருவாள் என்ற நினைப்பே சந்தோஷம் கொடுக்க மகளுக்குப் பிடித்த சாக்லேட் கேக்கும், கொஞ்சம் பனீர் பகோடாவும் கொஞ்சமாக செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டாள். அதற்குள் மணி நாலரை ஆகி விட சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்.
வீட்டுக்கு வந்தவள் குளியல் போட்டு ஒரு குர்தி, காட்டன் பேன்ட் அணிந்து முடியை எப்போதும் போல ஒரு போனிடைல் போட்டு நெற்றியில் பொட்டு ஒன்றை ஒட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள்.
சரியாக ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் முன்னாலேயே சுந்தர் மல்லிக்கு அழைப்பு விடுத்தான்.
“எங்கே இருக்கே?”
சுந்தர் திருமணமாகி அதிகபட்சம் ஒரு மாதம் மாலையில் வீட்டுக்கு வந்திருந்தால் அதிகம். அதுவும் கூட மல்லிக்கு இந்த ஊர் பழக்கம் இல்லை என்பதற்காக தான். மெல்ல மெல்ல நேரத்தை அதிகரித்தவன் சில வருடங்களாகவே வீட்டுக்கு வர பத்து பதினொன்று என்று ஆகி விடும். வெகு சில தருணங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
அதே போல முக்கியமான விஷயம் இல்லாவிட்டால் ஒழிய சுந்தர் போனும் பேச மாட்டான். தொழில் நேரத்தில் அவனை தொல்லை செய்தால் பிடிக்காது என்பதால் அவசியமானால் ஒழிய மல்லி அழைப்பதை அவன் விரும்பியதில்லை.
மல்லிக்கு வேண்டியதை அவள் ஞாயிறுகளில் தான் கேட்க வேண்டும். அதுவும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்று அவனை அதிகம் தொல்லை செய்ய மாட்டாள். மகளுக்கு வேண்டியதை எல்லாம் அவளே பார்த்துக்கொள்ள பழகி இருந்தாள்.
அதனால் எப்படியும் தாமதமாகத் தான் வருவான் . அவன் வருமுன் தான் போய் விடலாம் என்று நினைத்து அவள் ஐந்து மணி போல கிளம்பிய போது தான் அவனிடம் இருந்து போன் வந்தது.
“இப்ப தான் வீட்டை விட்டு கிளம்பிட்டு இருக்கேன்…” என்று நிதானமான குரலில் பதில் சொன்ன மல்லிக்கு பக்கத்தில் “அப்பா….! அம்மாவா? நான் பேசறேன்பா….!” என்று ப்ரியா பரபரத்தது இங்கே கேட்க அதுவரை இருந்த நிதானம் காணாமல் போனது.
மூன்று மாதங்கள் கழித்து மகளின் குரல் கேட்க மல்லிக்கு நெஞ்சை அடைத்தது. மகளின் குரலில் இருந்த ஏக்கமும் பரபரப்பும் அவள் குற்றவுணர்வைத் தூண்ட இன்னொரு முறை தன் மூடத்தனத்தை நொந்து கொண்டாள்.
கண்களை துடைத்துக்கொண்டு தொண்டையை செருமிக் கொண்டு அவள் பேச ஆரம்பிக்குமுன் “அம்மா…! அம்மா!” என்று பல முறை அழைத்து விட்டாள் ப்ரியா.
“பாப்பா!”
மல்லி பேசுவதை தானும் கேட்க வேண்டும் என்று ஸ்பீக்கரில் போட்டு மகளிடம் போனைக் கொடுத்த சுந்தருக்கும் அவள் குரல் கேட்டது. இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் குரலில் இருந்த நெகிழ்ச்சியே நம்பிக்கை தர மல்லியின் வருகைக்காக காத்திருந்தான்.
“எப்பம்மா வருவே? எங்கம்மா போன? நான்….” ப்ரியா பேசிக்கொண்டே போக மல்லி இடையிட்டாள்.
“பாப்பா! நீ இப்படி போன் பேசிட்டே இருந்தா அம்மா எப்படி உன்னைப் பார்க்க வருவேன்….? இன்னும் இருபது நிமிஷத்துல அங்கே இருப்பேன். வந்து பேசறேன்டா ..”
“சீக்கிரம் வாம்மா….” என்ற மகளின் கெஞ்சலில் அதன் பிறகு மல்லி அங்கே நிற்பாளா என்ன?
சாவித்திரி அவ்வளவு தூரம் மல்லி வண்டி ஒட்டிக்கொண்டு போக வேண்டாம் என்று கேப் ஏற்பாடு செய்திருந்தாள்.
கோயிலுக்குள் மல்லி நுழைந்த போது மணி ஐந்து இருபது ஆகியிருந்தது. நிதான நடையில் மகளுக்காக கண்களை இரு பக்கமும் சுழற்றியபடி மல்லி நடக்க இருபது அடி தூரத்தில் சுந்தரின் கையைப்பிடித்து கொண்டு நின்றிருந்த ப்ரியா மல்லியை பார்த்து அடையாளம் தெரியாமல் ஒரு நொடி தயங்கி நிற்க சுந்தர் “உன் அம்மா தான் போ…” என்று ஊக்கினான்.
அதில் அவன் கையை விட்ட ப்ரியா “அம்மா ..” என்று கூவியபடி மல்லியிடம் ஓட மல்லிக்கு அவளைப் பார்த்ததில் அப்படி ஒரு நிம்மதி. மண்டியிட்டு மகளை மார்போடு அணைத்துக் கொண்டவளுக்கு இந்த உலகமே மறந்து போனது. கடந்து போன மூன்று மாதங்களை அந்த ஒரு அணைப்பில் ஈடு கட்ட நினைத்தாள்.
அது முடியாது என்று அறிவு உணர்த்த கண்கள் கலங்க மகளை மேலும் கீழும் பார்த்தபடி கைகளால் அவளை வருடினாள்.
“அம்மா ..! எங்கமா போனே? ஏன் என்னை விட்டுட்டு போனே? நான் உன்னை எவ்வளவு தேடினேன் தெரியுமா? நீ உன் பிரெண்டை பார்க்க போனேன்னு அப்பா சொன்னாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு பாத்துக்க போனியாம். என்னையும் உன் கூட கூட்டிட்டு போக வேண்டியது தானே…..?”
மகளின் பேச்சில் சுந்தரை நிமிர்ந்து பார்க்க அவன் எதுவுமே நடக்காதது போல அமர்த்தலாக சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
மல்லி மண்டியிட்டு இருந்தவள் மெதுவாக எழுந்து நிற்க ப்ரியா அவள் எங்கும் போகாதபடி அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“அப்புறம் என்ன மல்லி! கோயில்ல ஒரு சுத்து சுத்திட்டு அப்படியே வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தானே?”
அவனைப் பொறுத்தவரை அவ்வளவுதான். சண்டை முடிந்து விட்டது….
மல்லியின் பார்வையில் இப்போது மகளிடம் இருந்த இளகல் மறைந்து ஒரு நிமிர்வு வந்தது.
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்த பையை மகளிடம் கொடுத்தவள் “பாப்பா! இதுல உனக்கு பிடிச்ச சாக்லேட் கேக்கும் பனீர் பகோடாவும் இருக்கு பாரு. இங்க உக்காந்து சாப்பிடு. அப்பாவும் நானும் கொஞ்சம் பேசிட்டு வரோம்…”
என்று மகளை அங்கேயே ஒரு ஓரமாக அமர்த்தியவள் சற்று தள்ளி அமர்ந்து சுந்தரை பார்த்து அமர சொல்லி கை காட்டினாள்.
சுந்தர் அவள் செயலில் குழம்பி “என்ன மல்லி இன்னும் பேச இருக்கு? பாப்பா நீ இல்லாம ரொம்ப தவிச்சு போய்டுச்சு. அவளைப் பற்றி கூட யோசிக்காம நீயும் மூணு மாசம் இருந்துட்டே. நான் தானே நீ வீட்டை விட்டு போனாலும் உன்னைத் தேடி பின்னால வந்து கூப்பிட வந்தேன்.
அதான் இப்ப எல்லாம் சரியாகிடுச்சே. இப்ப கிளம்பினா சரியா இருக்கும். உங்கள வீட்டுல விட்டுட்டு எனக்கு கம்பெனில வேலை இருக்கு…. வா சாமி பார்த்துட்டு அப்படியே கிளம்பலாம்..” என்று அவன் திட்டத்தை சொன்னான்.
மல்லிக்கு அவன் பேசுவதை கேட்ட போதே உள்ளுக்குள் ஜிவ்வென்று கோபம் ஏறியது. அவன் ப்ரியாவை வைத்து தன்னை சரிகட்ட திட்டமிட்டு இருப்பதை புரிந்து கொண்டாள்.
“நான் எப்ப சொன்னேன் உங்க வீட்டுக்கு வரேன்னு…. ?”
இருக்கும் இடம் கருதி மல்லி சின்ன குரலில் சீற சுந்தர் அதிர்ந்து பார்த்தான். அவன் அவளிடம் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை.
“……ஏன் சுஷ்மிதாவை கல்யாணம் பண்றதா இருந்தீங்களே? அது என்ன ஆச்சு? இருந்திருந்து இந்த தத்தியை எதுக்கு மறுபடி உங்க வீட்டுக்கு கூப்பிடறீங்க……?”
அவள் பார்வையில் உக்கிரம். பல்லைக் கடித்தபடி கோபம் கொப்பளிக்க கேட்டவளை சுந்தர் புதிதாக பார்த்தான்.சுந்தர் இத்தனை நாள் பார்த்த மல்லி வேறு. இந்த மல்லி முற்றிலும் அவனுக்கு முற்றிலும் புதிது.
“மல்லி…அது….” என்ன சொல்வதென்று அவன் தடுமாற மல்லியிடம் எந்த தடுமாற்றமும் இல்லை.
“நான் இங்க வந்தது என் பொண்ணை பார்க்க. அவளை என் கூட கூட்டிட்டு போக….நீங்க தான் உங்களுக்கு குழந்தைங்களே இல்லன்னு சுஷ்மிதா கிட்ட சொல்லி இருக்கீங்களே? அதனால அவள் இனி என் மகளா என் கூடவே கூட்டிட்டு போக தான் இங்க வந்தேன். நீங்க சொன்ன மாதிரி எனக்கும் வேலை இருக்கு. நான் என் பொண்ணை கூட்டிட்டு கிளம்பறேன். நீங்க உங்க வேலைய தாராளமா பார்க்க போகலாம்….”
சொன்னபடி மல்லி எழுந்திருக்க சுந்தர் “மல்லி…” என்று அழைத்து அவளை நிறுத்தினான். அவன் மேலே பேசுமுன் சாப்பிட்டு முடித்த ப்ரியா ஓடி வந்து இருவர் கையும் தன் இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு “நாம வீட்டுக்கு போறோமா அம்மா..அப்பா…!” என்று துள்ளிக் கொண்டு கேட்க பெற்றவர்கள் இருவருக்கும் இடையே மௌனம்.
அந்த பிஞ்சு மனதை முறிக்க இருவருக்குமே மனம் வராமல் தயங்கி நிற்க அந்த தருணத்தை சுந்தர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.
“மல்லி..! உனக்கு இன்னும் என் மேல கோபம் போகல என்று புரியுது. அதே சமயம் பாப்பாவுக்காக நீ உன் முடிவை மறுபடி யோசி. நீ என்ன சொன்னாலும் அதுக்கு நான் கட்டுப்படறேன்….”
சுந்தர் மல்லியிடம் இப்போது இறைஞ்சினான். மல்லி அதற்கு பதில் சொல்ல தயங்க எடுத்த நிமிடங்களில் ப்ரியா உற்சாகமாக இருவரிடமும் பேசிக்கொண்டே போனாள்.
“அம்மா! என் பிரெண்ட்ஸ் எல்லாம் புதுசா வந்த சினிமா பாத்துட்டாங்க. நான் தான் பாக்கலமா. அப்பா நீ கூட்டிட்டு போறியா? அம்மா நீ சொன்னா தான் அப்பா கேப்பாங்க…சொல்லுமா…! நாம மூணு பேரும் சேந்து போய் எவ்வளவு நாளாச்சு. போயிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு போவோம்மா…“
என்று அம்மாவின் கையைப்பிடித்து தொங்கியவள் அப்பாவிடமும் தன் விருப்பத்தை சொல்லி கெஞ்ச பெற்றவர்கள் இருவருக்கும் மகளை நினைத்து மனம் நெகிழ்ந்து போனது.
சாதாரண விஷயத்திற்கு கூட மகளை கெஞ்ச வைக்கிறோமே என்று இருவருக்குமே தோன்றி விட சுந்தர் மல்லியின் கேள்வியாக முகத்தை பார்த்தான்.
“பாப்பா! அம்மாவுக்கு வேலை இருக்குடா . சினிமாவுக்கு இன்னொரு நாள் போகலாம். இப்ப தானே நான் கொண்டு வந்த ஸ்நாக்ஸ் சாப்பிட்டே..! நாம கோயிலுக்கு போயிட்டு இப்ப கிளம்பலாம். போற வழியில ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் சரியா? இன்னொரு நாள் சினிமா போகலாம் பாப்பா..” என்று மகளை சமாதானம் செய்ய ப்ரியா உடனே சம்மதம் சொன்னாள்.
“நீ சொல்றதை சமத்தா கேப்பேன்மா. இனிமே என்னை விட்டு போகக்கூடாது…” என்று சுட்டு விரலை காட்டி கண்டிஷனாக கேட்க மல்லி கண் கலங்க தலையசைத்தாள்.
மகள் அவர்கள் பதிலில் சந்தோஷமாகி குதித்தபடி முன்னால் நடக்க சுந்தரும் மல்லியும் இருவருக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு பின்னால் நடந்தனர்.
“நான் சொல்ற கண்டிஷன் எல்லாம் கேப்பேன்னு சொன்னீங்களே? அது நிஜமா?”
மல்லியே பேச்சை ஆரம்பிக்க சுந்தர் திரும்பி அவளைப் பார்த்தான். அவளுக்கு என்ன கண்டிஷன் இருக்கப் போகிறது? அது அவன் சும்மா அவளை சமாதானம் செய்ய சொன்னது.
அவள் மனநிலை புரியாமல் “என்ன கண்டிஷன் சொல்லு…!” என்று கேட்டான்.
“நான் இனி அந்த வீட்டுக்கு வர மாட்டேன். நீங்க இந்த பக்கம் வீடு பாக்கணும்…”என்று அவள் கிச்சன் இருக்கும் இடம் சொல்ல சுந்தருக்கு அப்போது தான் காலையில் அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.
“என்ன வேலை செய்யற…?” மூன்று மாதங்களில் அவள் என்ன பெரிதாக செய்திருக்கப் போகிறாள் என்று அவனுக்கு எண்ணம்.
“ நான் க்லௌட் கிச்சன் நடத்தறேன்….அப்புறம் முன்ன மாதிரி எப்பவும் பாப்பாவை என்னால பாத்துக்க முடியாது. எனக்கு காலையில பத்துல இருந்து ராத்திரி ஏழு மணி வரைக்கும் வேலை இருக்கும். சில சமயம் எட்டு கூட ஆகும். நடுவுல ரெண்டுல இருந்து நாலு வரைக்கும் எனக்கு ப்ரேக். அந்த நேரம் நீங்க தான் பாப்பாவ பார்த்துக்கணும்..”
மல்லி பேசிக் கொண்டே போக சுந்தர் யோசனையாக பார்த்தான்.
“நீயே சமைககறியா? ஏன் இந்த கஷ்டம் எல்லாம்? என்ன பெருசா இதுல வருமானம் வந்திடப் போகுது….? அதுக்கு நீ பேசாம வீட்டுலயே இருக்கலாம்….”
அவன் அலட்சியமாக பேசிக் கொண்டே வர “வேற என்ன செய்ய? எனக்கு தெரிஞ்சது இது ஒண்ணு தானே…?” என்று கசப்பாக புன்னகை செய்தவள் “… ஆனா நிறைய பேருக்கு இதோட அருமை தெரியுது. தினமும் எல்லா செலவும் போக மூணாயிரம் நிக்குது… இப்போதைக்கு இது போதும்….”என்று தன் வருமானத்தை சொல்லவும் சுந்தர் ஆச்சரியமாக தான் பார்த்தான்.
அவன் மனக்கணக்கில் மாத வருமானத்தை போட கிட்டத்தட்ட ஒரு லட்சம். அதை அடைய அவன் தொழிலில் ஒரு வருடம் மெனக்கெட வேண்டி இருந்தது.
“அப்புறம் நான் இப்ப வரது பாப்பாவுக்கு அம்மாவா மட்டும் தான். நாம அவளுக்காக ஒரே வீட்டுல இருந்தாலும் உங்க மனைவியா என் கிட்ட எந்த விதத்திலும் எதிர்பார்க்காதீங்க…” என்றவள் எந்த என்பதை அழுத்தி கூறினாள்.
“இப்ப போகும் போது பாப்பாவை நான் கூட்டிட்டு போறேன். நீங்க வீடு பார்த்து மாத்திட்டு வர வரைக்கும் பாப்பா என் கூட இருக்கட்டும்….”
எங்கும் எதிலும் அவன் கருத்தை கேட்கவில்லை. தன் முடிவுகளை மட்டும் அழுத்தம் திருத்தமாக தெளிவாக பேசும் மல்லி சுந்தருக்கு புதிதாகத் தெரிந்தான்.