ஒரு வழியாக வளைகாப்பு நாளும் வந்தது. சிவன் அவனால் முடிந்த அளவு நல்ல விதமாகவே ஏற்பாடு செய்திருந்தான். அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
கண்மணி இந்த விழா வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தாள். ஆனால் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டாள். பார்வதி மகனிடம் “சிவா, சாப்பாடு ஒண்ணும் ரெடி பண்ணலை. நம்ம செந்தில் மாப்பிள்ளை வீட்ல சொல்லி செஞ்சு எடுத்துட்டு வரச் சொல்லுவோமா? வளைகாப்புக்கு பிள்ளைத்தாச்சிக்கு விதவிதமா சமைச்சு கொடுக்கணும் டா”, என்றாள்.
“அதெல்லாம் விடுங்க மா, நான் பாத்துக்குறேன்”, என்று சமாளித்த சிவன் யாரிடமும் உமா வீட்டில் இருந்து வருவதை சொல்ல வில்லை. பார்வதியும் உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்து விட்டான் போல என்று எண்ணிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் உமாவின் மொத்தக் குடும்பமும் அங்கே வர அனைவரும் திகைத்துப் போனார்கள். மதிக்கு மட்டும் உண்மை புரிந்தது.
முதலில் உமா மற்றும் அருணைப் பார்த்து சிவனுக்கு தெரிந்தவர்கள் என்று எண்ணிய கண்மணி ராதாகிருஷ்ணனைக் கண்டு திகைத்து நின்று விட்டாள். அவரும் அவளையே தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் எதுவும் பேச வில்லை.
“கண்மணி, என் கண்ணே”, என்று அன்புடன் அழைத்த ராதாகிருஷ்ணன் அவளை நோக்கி நடக்க “அங்கயே நில்லுங்க, கிட்ட வராதீங்க”, என்று கண்ணீருடன் கத்தினாள் கண்மணி.
பின் சிவாவை முறைத்தவள் “இது உன் வேலையா?”, என்று கேட்டாள்.
“மறக்கச் சொல்லலை. அவங்களை மன்னிக்க சொல்றேன். உன் வயித்துல குழந்தை இருக்கு. இப்ப நீ யார் மேலயும் வெறுப்பைக் காட்டக் கூடாது மா”, என்றான். பார்வதியும் அவளுக்கு அறிவுரை சொல்ல கண்மணி கல் போல இறுகி நின்றாள்.
ராதாகிருஷ்ணன் கண்ணீருடன் நின்றிருந்தார். அவ்வளவு பெரிய மனிதர் அழுவதை யாராலுமே தாங்க முடிய வில்லை.
“அக்கா, அப்பா அம்மா பண்ணினதை மன்னிச்சு எங்களை உங்க சொந்தமா ஏத்துக்கோங்க”, என்று சொன்ன உமா கண்மணியின் கையை பற்றிக் கொண்டாள். கண்மணி அழுத படி நின்றாலும் உமாவின் கையை தட்டி விட வில்லை. அருணும் அவளிடம் வந்து பாசமாக பேசினான். ஆனாலும் இறுகிப் போய் தான் நின்றாள்.
செல்வி, பார்வதி, வெண்ணிலா மூவரும் இது தான் கண்மணியின் குடும்பமா என்ற பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கோதையால் ராதாகிருஷ்ணனின் கண்ணீரைக் காண முடிய வில்லை. அதனால் வேகமாக கண்மணியை நெருங்கி “என்னை மன்னிச்சிரு மா. நான் தான் எல்லாத்துக்கும் காரணம். என்னோட சுயநலம் தான் காரணம். என்னை மன்னிச்சிரு”, என்று சொல்லி அவள் காலில் விழ கண்மணி பதறி பின்னடைந்தாள். அனைவரும் அதிர்ந்து போனார்கள். கண்மணி கூட அவ்வளவு பெரிய மனுஷி தன் காலில் விழுவாள் என்று நினைக்க வில்லை. உமாவும் அருணும் சென்று அன்னையை இரண்டு பக்கமும் பிடிக்க அடுத்து கண்மணி எதுவும் சொல்ல வில்லை.
“செஞ்ச தப்பை நாம மாத்த முடியாது கண்மணி. ஆனா அதை மன்னிக்க முடியும். பிளீஸ் அவங்களை மன்னிச்சிரு”, என்று சிவன் மீண்டும் சொல்ல சரி என்று மட்டும் சொன்னாள்.
ராதாகிருஷ்ணன் வந்து அவளது கரம் பற்ற அப்பா என்று அவரை சட்டென்று அழைக்க அவளுக்கு வர வில்லை. அழுத படி நிற்க அவர் அவளுடைய தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.
“சரி சார் உங்க பொண்ணை அப்புறம் கொஞ்சிக்கோங்க. இப்ப பங்ஷன் ஆரம்பிப்போம். எல்லாரும் உக்காருங்க”, என்று சிவன் சொல்ல அனைவரும் அமர்ந்தார்கள்.
கண்மணியை சேர் போட்டு அமர வைத்தார்கள். அப்போது “அது எப்படி புருஷன் இல்லாம மனைல பிள்ளைத்தாச்சியை உக்கார வைக்கலாம். அது குழந்தைக்கு நல்லது இல்லை”, என்றாள் ஒரு பெண். அவள் அப்படிச் சொன்னதும் சட்டென்று ஒரு இறுக்கம். அந்த இடமே அமைதியானது. கண்மணி அழுத படி நின்றாள். இளவரசனை நினைத்து அவள் மனம் வேதனை கொண்டது.
அவள் அந்த சேரில் இருந்து எழுந்து கொள்ள அவளை அமர வைத்த பார்வதி “இப்ப என்ன? அவ சுமங்கலியா புருஷன் கூட மனைல உக்காரனும். அவ்வளவு தானே? என் மகன் சிவா அவளைக் கல்யாணம் பண்ணிக்குவான்”, என்று சொன்னாள்.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். கருப்பட்டி கூட அதிர்ந்து விட்டான். அப்படி என்றால் உமாவின் நிலை என்று எண்ணி அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ இயல்பாக இருந்தாள். அவள் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது அவளுக்கு தான் தெரியும்.
முன்பிருந்த உமாவாக இருந்திருந்தால் இந்நேரம் அவள் கத்திய கத்தலில் பெரிய பிரளையமே வெடித்திருக்கும். இந்த உமாவோ வாழ்வில் அடி பட்டு திருந்தியவள். அது மட்டுமில்லாமல் சிவன் மனதில் அவள் மீது காதலும் இல்லையே? அதனால் எளிதாக மன உணர்வை மறைத்துக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.
“என்ன உமா அமைதியா இருக்க? உனக்கு கஷ்டமா இல்லையா?”, என்று கேட்டான் அருண்.
“ஏதாவது முடிவு தெரிஞ்சா எனக்கு ஆறுதலா தான் இருக்கும் அண்ணா”, என்று சொல்ல அவளை வியப்பாக பார்த்தான் அருண்.
சிவனுக்கோ என்ன சொல்ல என்றே தெரிய வில்லை. அன்னையை சபையில் வைத்து எதிர்த்து பேச முடிய வில்லை. அதே நேரம் சரி என்று சொல்லவும் முடிய வில்லை. அமைதியாக சூழ்நிலைக் கைதியாக நின்றான்.
கண்மணிக்கோ அத்தை சொன்னதை நம்பவே முடியாத அதிர்ச்சி. ஏற்கனவே அவர் மறு திருமணத்துக்கு அவளிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அது சிவனாக இருக்கும் என்று ஒரு சதவீதம் கூட எண்ண வில்லை.
அவளைப் பொறுத்த வரை சிவன் அவளுக்கு ஒரு நல்ல நண்பன். அவளது வெல்விசர். அவன் மற்றவர்களிடம் காட்டும் அக்கறையும் குடும்பத்தை அழகாக கொண்டு செல்லும் விதமும் தன்னை அக்கறையாக கவனித்துக் கொள்வதும் சேர்ந்து அவன் மீது பெரிய மரியாதையை அவளுக்கு உருவாகி இருந்தது.
அந்த மரியாதை அதிகமாகுமே தவிர ஒரு சதவீதம் கூட குறையாது. அவனைப் போய் தன்னுடைய கணவனாக ஒரு சதவீதம் கூட அவளால் எண்ண இயலாது.
அவள் கண்களில் தேங்கிய கண்ணீருடன் நிற்க “அன்னைக்கு நீ என்ன சொன்ன? வரவன் உன்னோட குழந்தையை பாத்துக்குவான்னு பயத்துல தானே கல்யாணம் வேண்டாம்னு சொன்ன? இப்ப என் மகன் தான் மாப்பிள்ளை. அவனை விட என்னோட பேரனையும் உன்னையும் வேற யார் நல்லா பாத்துக்க முடியும்? (https://wbctx.com) நான் சொன்னா கேப்பேன்னு சொன்ன தானே? இப்ப நீ இதுக்கு சம்மதிக்கணும்”, என்றாள் பார்வதி.
உமாவோ “இப்போது சிவன் என்ன பதில் சொல்லப் போகிறான்?”, என்பது போல பார்த்திருந்தாள். ஏற்கனவே அவன் பேசிய பேச்சில் அவள் பாதி உயிர் அவளை விட்டு போய் விட்டது. மீதம் இருக்கும் உயிர் எதற்காக இருக்கிறது என்று கூட அவளுக்கு தெரிய வில்லை.
அவனாக தன்னிடம் வந்து காதலைச் சொல்லுவான் என்று காத்திருக்க அவன் இப்போது வரை அவளிடம் அது பற்றி பேசவே இல்லை. அவள் ஏன் மெலிந்து போனாள் என்று கூட அவன் கேட்டதில்லை. அவனிடம் மீண்டும் சென்று காதல் பிச்சைக் கேட்க அவள் தயாராக இல்லை. ஆனாலும் அவள் மனதில் இருந்த காதல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது.
மதி மற்றும் செல்விக்கு கூட அன்னை பேசியது திகைப்பு தான். மதி சபையில் வைத்து அன்னையை எப்படி எதிர்த்து பேச என்று தெரியாமல் திகைக்க செல்விக்கு அந்த எண்ணம் எல்லாம் இல்லை.
“அம்மா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? சட்டுன்னு யார் மனசுல என்ன இருக்குனு தெரியாம உன் இஷ்டத்துக்கு பேசிருவியா? அடுத்தவங்க என்ன யோசிப்பாங்கன்னு உனக்கு அறிவு வேண்டாம்? அங்க பாரு அண்ணியை எப்படி அழுறாங்கன்னு”, என்று பட்டென்று கேட்டு விட்டாள்.
“வாயை மூடு டி. உனக்கு எப்பவும் ஒரு நல்லது நடந்துறக் கூடாதே? உடனே அபசகுனம் மாதிரி பேச ஆரம்பிச்சிடுவியே? கண்மணிக்கு நல்லது நடந்தா உனக்கு எங்க இருந்து தான் பொறாமை வருமோ? பேசாம வாயை மூடிட்டு இரு சொல்லிட்டேன்”, என்று சொல்ல செல்வி கண்கள் கலங்கி விட்டது.