அன்று தன்னோடு மகளை சாவித்திரி வீட்டுக்கு அழைத்துப் போன மல்லி இரவு சமையலை பார்க்க மல்லி என்ன செய்தாளோ என்ற கவலையில் சீக்கிரமே வீட்டுக்கு வந்த சாவித்திரி ப்ரியாவை பார்த்துக் கொண்டாள்.
சாவித்திரியும் ப்ரியாவும் சேர்ந்து கார்ட்டூன், சிறு சிறு விளையாட்டுக்கள் என்று அந்த மாலையை கழிக்க மகளின் சிரிப்பில் மனம் நிறைந்ததில் மல்லிக்கு அன்று களைப்பே தெரியவில்லை.
எப்போதும் கிச்சனில் தான் இரவு உணவும் சமைப்பாள். அன்று ப்ரியாவால் சாவித்திரி வீட்டிலேயே சமைக்க அவர்களுக்கும் சுடச்சுட தோசையும் மீன் குழம்பும் கிடைத்தது. இரவு தன்னை இறுக கழுத்தைக் கட்டிக் கொண்டு உறங்கிய மகளை அணைத்துக் கொண்ட மல்லிக்கும் அன்று வெகு நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் வந்தது.
மறு நாள் காலை மகளுக்கு வேண்டிய காலை மற்றும் மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்தவள் சுந்தரை அழைத்து மகளை அழைத்துக்கொண்டு போய் பள்ளியில் விட சொன்னாள். சொன்னபடி வந்தவனிடம் ஒரு வார்த்தைக்கு கூட சாப்பாடு தரவா என்று கேட்கவில்லை. மாலையில் பள்ளி முடிந்து தானே அவளை அழைத்துக் கொள்வதாக சொன்ன மல்லி மகளுக்கு வேண்டியவைகளை சொல்லி முடியும் போது கொண்டு வந்து கொடுக்க சொன்னதோடு பேச்சை முடித்துக்கொண்டாள்.
என்ன தான் அவசர கதியில் பல ப்ரோக்கர்களிடம் சொல்லி வைத்து தேடியும் சுந்தர் வீடு பார்க்க பதினைந்து நாட்கள் ஆனது. வீடு மாற்ற மல்லி வந்து உதவுவாள் என்று நினைத்த சுந்தர் ஏமாந்து தான் போனான்.
அவன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அந்த வீட்டில் இன்னொரு முறை காலடி எடுத்து வைக்க மல்லிக்கு துளி கூட விருப்பம் இல்லை. அவள் வேலைக்கும் ப்ரியாவின் ஸ்கூலுக்கும் பக்கம் என்பது வெளியே சொன்ன காரணம் என்றாலும் ஆழ்மனதில் அவளை பிடிவாதமாக போக விடாமல் தடுத்தது இந்த கசப்பு தான்.
அதோடு அடுத்தவரை சார்ந்து வாழ்ந்தால் அவள் நிலைமை என்ன என்று நன்றாகவே அடி பட்டு புரிந்து கொண்டு விட்டாளே?
அவன் தொழிலை கவனிக்க முடியாமல் இந்த வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டி வர அப்போது தான் மல்லி இத்தனை நாள் வீட்டுக் கவலை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்ட அருமை புரிந்தது. மல்லியை கேட்க வழியில்லாதபடி அவள் பேச்சு சுருக்கமாக அதுவும் ப்ரியா பற்றி மட்டுமே இருக்க அவனால் வாயே திறக்க முடியவில்லை.
சஅவன் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களை வைத்து வீடு மாற்றி விட்டு வந்து சொல்ல அதன் பிறகே மல்லி அவன் வீட்டுக்கு வந்தாள். சாவித்திரிக்கு இப்போதும் மல்லி சுந்தரோடு போய் இருப்பதில் உடன்பாடு இல்லை. அதுவும் ப்ரியாவோடு பழகி அவளை மிகவும் பிடித்துப் போக மல்லியிடம் மீண்டும் முயற்சி செய்தாள்.
“வல்லி! இங்க பாரு! நீ இப்ப யாரையும் நம்பி இல்ல. உன் சொந்தக்காலில் நிக்கிற. நீ ஆசைப்பட்டபடி ப்ரியா குட்டியும் இங்க வந்தாச்சு. இனியும் ஏன் அங்க போறேடி? இப்ப தான் உடம்பும் மனசும் தேறி வந்திருக்கே! ஒரு தடவை மனசாட்சி இல்லாம தப்பு செஞ்சவன் மறுபடியும் தப்பு செய்ய தயங்க மாட்டான்.
ஆனா இன்னொரு தடவை நீ தாங்க மாட்டேடி..! நீ இந்த தடவையே செத்து பிழைச்சே…! இன்னொரு தடவை நல்லா யோசி. வேணாம் மல்லி…! இங்கயே இருந்திடுடி…!”
“சாவி…! இது என் கடமைடி…!அம்மாவா ப்ரியாவுக்கு இதை செஞ்சு தான் ஆகணும். ப்ரியாவுக்கு அம்மாவும் வேணும். அப்பாவும் வேணும். நானும் அத்தானும் சேர்ந்து தானே அவளை உருவாக்கினோம். அப்ப அவளை வளத்து ஆளாக்கறதுக்கும் நாங்க சேந்து தான் நிக்கணும். எங்களோட கருத்து வேறுபாடு எந்த விதத்திலும் அவளை பாதிக்கக் கூடாது.
ப்ரியா அவங்க அப்பா கூட இருக்கும் போது என்னை தேடி இருக்கா. இப்ப என் கூட இருக்கும் போது அப்பாவை கேட்கறா. அந்த பிஞ்சு மனச எங்க பிரிவை சொல்லி உடைக்க மனசில்ல…. அதான் அங்க போறேன்….!”
அவள் தன் மேல் உள்ள அக்கறையில் சொல்வதில் நெகிழ்ந்தாலும் மல்லியின் முடிவு மாறவில்லை.
“சரிடி! அவளுக்கு பார்த்து…உன் மனசு இன்னொரு அடியைத் தாங்குமா டி? சுந்தர் மேல் என்ன நம்பிக்கை வெச்சு அங்க போறே?”
“என் மனசா…? அது சுஷ்மிதா அத்தான் கல்யாணத்துக்கு கேட்டார்னு சொன்ன அந்த நிமிஷமே எரிஞ்சு போச்சுடி..! எரிஞ்சது எப்பவாவது உயிர் பெறுமா? நான் அத்தான மனசளவில் விவாகரத்து செஞ்சு நாலு மாசமாச்சு.
இப்ப நான் அங்க போறது ப்ரியாவோட அம்மாவா மட்டும் தான்…நான் மல்லியா மட்டும் இருந்தா சுயநலமா யோசிச்சு இருப்பேன். ஆனா ப்ரியாவோட அம்மாவும் ஆயிட்டேனே…. ? அம்மா சுயநலமா யோசிக்க மாட்டா சாவி….!”
அதற்கு சாவித்திரியால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் போக தோழியின் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.
“வல்லி! என் கிட்ட சொல்லிட்டோமே என்று கஷ்டப்பட்டு கிட்டு அங்க இருக்க கூடாது..உனக்கு எப்பவும் நான் இருக்கேன்..”
சாவித்திரி சொல்லவும் மல்லி அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“இந்த அன்புக்கு அப்படி நான் என்னடி செஞ்சிட்டேன்…?
மல்லியின் குரல் நெகிழ்ந்து தழுதழுத்தது.
அவளின் கண்கள் கலங்குவதை பார்த்து பொறுக்க முடியாமல் சாவித்திரி “வேறேன்னடி? பிரியாணி, மீன் குழம்பு, சிக்கன் ஃபிரை தான்….” என்று மூக்கை உறிஞ்ச இதமான மனநிலையோடு மல்லி அவளிடம் விடைபெற்று கிளம்பினாள்.
மல்லி வீட்டுக்கு வந்ததும் பழையபடி மாறிவிடுவாள் என்று சுந்தர் நம்பிக்கொண்டிருக்க அதற்கும் மல்லி வேட்டு வைத்தாள்.
இந்த வீட்டிலும் இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. ஒன்றை தனக்கும் மகளுக்கும் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டவள் அதில் தான் கொண்டு வந்த உடைகளையும் தன் சொந்த காசில் வாங்கிய பொருட்களையும் அடுக்கிக் கொண்டாள்.
சுந்தர் இந்த வீட்டில் இருந்த பெரிய அறையை தங்கள் படுக்கை அறையாக வைக்க முடிவு செய்து அந்த வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த மல்லியின் உடைகள், நகைகள் எல்லாம் தன்னோடு சேர்த்து பழையபடி ஒரே அலமாரியில் வைத்திருக்க மல்லி அந்த அறைக்குள் கூட போகவில்லை.
ஒரு பார்வையிலேயே அதை தவிர்த்தவள் அடுத்த அறையை தனதாக்கிக் கொண்டாள். ப்ரியா வந்து அம்மாவோடு படுத்துக் கொள்ள சுந்தர் தனியாக படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல பொழுது விடிய அதிகாலையிலேயே எழுந்த மல்லி சமையல் அறையில் பம்பரமாக சுழன்றாள்.
ஏழு மணிக்குள் டிபன், சாப்பாடு என்று எல்லாம் தயார் செய்தாள். பிறகு மளமளவென்று குளித்து தன் குர்தி காட்டன் பேண்டை அணிந்து கொண்டு மகளை பத்து நிமிடம் கழித்து எழுப்புவோம் என்று தனக்கு ஒரு காபியை கலந்து கொண்டு டைனிங் சேரில் அமர்ந்தாள்.
மல்லி சமையல் அறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தமும், சமையலின் வாசமும் சுந்தரையும் சீக்கிரமே எழுப்பி விட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு போல வீடு பழையபடி மாறிய நிம்மதியில் சுந்தர் சிரித்த முகமாகவே எழுந்து முகம் கழுவி காலைக் கடன்களை முடித்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
மல்லியின் எதிரே அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகை செய்தவன் காபியோடு உட்கார்ந்து இருப்பதை பார்த்து “ஒ சீக்கிரம் கிளம்பிட்டியா? நானும் சீக்கிரம் கிளம்பணும். எனக்கும் டிபன் எடுத்து வைக்கறியா? அதுக்கும் முன்னால ஒரு காபி தரியா மல்லி..?” என்று கேட்டான்.
அவன் கேள்வியில் மல்லியின் உதட்டோரம் துடித்தது. எப்படி அது எதுவுமே நடக்காதது போல இவனால் பேச முடிகிறது? நம்பி வந்தவளை மனசாட்சியே இல்லாமல் கழுத்தை அறுத்து விட்டு சிரித்து பேச முடிகிறது? யோசித்து பார்க்கையில் அவன் தேவை மட்டுமே அவனுக்கு என்பது இப்போது புரிந்தது.
முன்பு அவள் படித்துக்கொண்டிருந்த போது அவள் வேண்டும் என்பதும் பத்து வருடங்களுக்கு பிறகு அவள் வேண்டாம் என்பதும் இப்போது மறுபடி அவள் வேண்டும் என்பதும் அவனைப் பொறுத்து, அவன் சுயநலம் பொறுத்து மட்டுமே. அப்படி தான் அவளுக்கு இப்போது தோன்றியது.
இனி மல்லி அப்படி எது சொன்னாலும் நாய் குட்டி போல பின்னால் வர மாட்டாள் என்று அவனுக்கு புரிய வைக்க வேண்டாமா?
“அதோ பால் இருக்கு. பக்கத்துல டிகாஷன் இருக்கு…உங்களுக்கு எப்படி வேணுமோ கலந்துக்கோங்க..”
அவன் கேட்டதற்கு எழுந்து ஓடிப் போய் செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே மரத்த குரலில் பேசியவளை சுந்தர் அதிசயமாக பார்த்தான். அந்த நொடி நான்கு மாதங்களுக்கு முன்பு வரை மல்லி அவள் அவனை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்ட விதம் அவன் மனக்கண்ணில் ஓடியது. ஒன்றும் பேசாமல் எழுந்து போய் சுந்தர் தனக்கு காபி கலந்து கொண்டு வந்து அமர்ந்தான்.
“நான் காலையில எட்டு மணிக்கு கிளம்பிடுவேன். வீட்டுல பாப்பாவுக்கு மட்டும் தான் சாப்பாடு செஞ்சு வைப்பேன். அது தவிர சமையல், வீடு மைண்டைன் பண்றது இப்படி வேற எந்த பொறுப்பும் என்னை எதிர்பார்க்காதீங்க. மதியம் ரெண்டு மணிக்கு வந்திட்டு மறுபடி நாலு மணிக்கு கிளம்பினால் மறுபடி வீட்டுக்கு வர ராத்திரி எட்டு மணி ஆகிடும். வாரத்துல ஆறு நாளும் வேலை உண்டு. ஞாயிறு மதியம் மட்டும் தான். அந்த நாள் எனக்கு ரெஸ்ட் நாள்.
மல்லி நெத்தியடியாக தன் நிலைப்பாடை தெரிவிக்க சுந்தருக்கு எரிச்சல் வந்தது. ‘இதையெல்லாம் பாப்பா என்று தானே வேலை மெனக்கெட்டு கூட்டிட்டு வந்தேன். இப்ப என்னவோ பெரிய இவ மாதிரி நினைச்சு நினைச்சு மாதிரி பேசிட்டு இருக்கா…’
சுந்தரின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிய மல்லி அவன் பேசுமுன்னே இடையிட்டாள்.
“…என்னடா இவ பாட்டுக்கு பேசிட்டு இருக்காளேன்னு நினைக்கறீங்களா? நீங்க வேண்டாம்னு என்னை கழுத்தைப் பிடிச்சு தள்ளற நிலையில் நான் இப்ப இல்லை. நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு ஓகேன்னா நாம இந்த வீட்டுல இருக்கலாம். இல்லனா என் வழியை நான் பார்த்துக்கறேன். யோசிச்சுக்கங்க. …”
இப்போதும் அவள் பேச்சே இறுதியாக இருக்க சுந்தருக்கு கோபம் எகிறிய போதும் மல்லியை முறைத்துப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் காபியை அப்படியே வைத்து விட்டு சேரை பின்னால் தள்ளி விட்டு எழுந்தவன் விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறினான்.
மல்லி அவன் செல்வதை அமைதியாக பார்த்தவள் தோளை குலுக்கிக்கொண்டு மகளை எழுப்ப சென்றாள்.
அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை முறை புதிதாக மாறியது. மல்லி காலையில் எழுந்து சமைத்து மகளை கிளப்பி பள்ளியில் விட்டு விட்டு கிளம்பி விடுவாள். முன்பு போலவே போகும் வழியில் சாவித்திரிக்கு காலை உணவு கொண்டு போய் கொடுத்து விட்டு அன்று வந்த ஆன்லைன் ஆர்டர்களை கேட்டு தெரிந்து கொள்வாள்.
பிறகு நேராக அவள் கிச்சனுக்கு செல்லுபவளுக்கு பனிரெண்டு மணி வரைக்கும் வேலை இருக்கும். உணவை பார்சல் செய்து கொடுத்து அனுப்பி விட்டு சாவித்திரி ராஜன் இருவருக்கும் ஸ்பெஷலாக சமைப்பவள் அதில் கொஞ்சம் பள்ளி முடிந்து வரும் மகளுக்காக எடுத்து வைப்பாள்.
அடுப்பின் சூட்டில் வேலை செய்வதில் உடம்பு ஆடிப்போய் இருக்கும். மதியம் வந்து மறுபடி குளித்து விட்டு கையோடு தனக்கு கொண்டு வரும் மதிய உணவை சாப்பிட்டு அப்படியே படுத்து விடுவாள்.
வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை என்பதால் முழு ஓய்வு தான். பிறகு மூன்றரை மணிக்கு போய் மகளை அழைத்து வந்து சாப்பிட வைத்து நாலரை மணிக்கு தன்னோடு அழைத்துக்கொண்டு கிளம்பி விடுவாள்.
பக்கத்தில் இருந்த ட்யுஷன் சென்டரில் ப்ரியா படிக்கும் நேரத்தில் மல்லியின் சமையல் வேலை பெரும்பாலும் முடிந்து விடும்.
பிறகு மகளுக்கு சூடாக இரவு உணவும் பாலும் கொடுத்து தானும் சாப்பிட்ட பிறகு இருவருமாக வீட்டுக்கு வருவார்கள். வந்த உடனே மல்லிக்கு நாள் முழுதும் நின்றதில் முதுகு வலி எடுக்க படுத்து விடுவாள். பக்கத்தில் ப்ரியாவும் படுத்து அம்மாவை கட்டிக் கொள்வாள். கொஞ்ச நேரம் அம்மாவும் மகளும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அப்படியே இருவரும் கண்ணயர்ந்தும் விடுவார்கள். சுந்தர் நள்ளிரவில் வீட்டுக்கு வரும் போதும் காலையில் எட்டு மணிக்கு எழுந்து கிளம்பும் போதும் வீடே அமைதியாக இருக்கும். தனக்கு மட்டும் சமைக்க பிடிக்காமல் சுந்தர் மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய பக்கத்தில் ஒரு வயதான அம்மாவை வைத்திருக்க நாட்கள் ஓடின. ஞாயிறு அன்று காலையிலேயே மகளை அழைத்துக்கொண்டு போய் சாவித்திரி வீட்டில் விட்டு விட்டு மல்லி கிச்சனுக்கு போய் விடுவாள்.
மதியம் மூவருக்கும் ஏதாவது விசேஷமாக செய்து சூடாக கொண்டு வருவாள். மூவரும் ஒன்றாக சாப்பிட்டு ஓய்வெடுத்து பிறகு சினிமா, பீச் என்று சாவித்திரியின் காரில் சுற்றுவார்கள். இரவு வழக்கம் போல படுக்க மட்டுமே வீட்டுக்கு வருவார்கள். சில சமயங்களில் ராஜனும் அவர்களோடு சேர்ந்து கொள்வான்.
ஆக ஞாயிறு அன்றும் சுந்தர் வீட்டில் இருந்தால் தனியாக தான் இருக்க வேண்டும். இப்படியே ஒரு மாதம் போனது.
மல்லி அவளுக்கு நடந்த அநீதிக்கு கத்தவில்லை. சண்டை போடவில்லை. அவனைப் போல வன்முறை செய்யவில்லை. அவனை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டாள். இதுவும் ஒரு பழி வாங்கும் முறை என்று அவனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுத்தாள்.
சுந்தர் கொஞ்சம் கொஞ்சமாக அதில் தோல்வியை தழுவிக் கொண்டு இருந்தான்.
அன்று ஞாயிறு. பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை. அதனால் மல்லி அன்று கிச்சனுக்கு விடுமுறை விட்டிருந்தாள். சாவித்திரி அக்காவை பார்த்து விட்டு அம்மா அப்பாவை அழைத்து வர ஊருக்கு போயிருந்தாள்.
மல்லியையும் தன்னோடு வரும்படி அழைத்தாள் தான். அப்படியே அவள் அப்பாவையும் தம்பியையும் பார்த்து விட்டு வரலாம் என்று கூப்பிட்டுப் பார்த்தாள். ஆனால் மல்லி மறுத்து விட்டாள்.
“இல்ல சாவி! வாழ்க்கையில தோத்துட்டேன் என்று அப்பா முன்னால போய் நிற்க எனக்கு விருப்பம் இல்லைடி. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். சாவி…!” என்று சொல்லி அவளை மட்டும் அனுப்பி விட்டாள்.
ப்ரியா காலையிலேயே எழுந்தவள் போய் சுந்தரை எழுப்பினாள்.
“அப்பா..அப்பா! எந்திரிப்பா! பிள்ளையார் வாங்கப் போகலாம்….” என்று அவள் போட்ட கூச்சலில் சுந்தர் எழுந்து விட்டான். வெகு நாட்கள் கழித்து அவன் காலையில் கண் விழிக்கும்போது வீட்டில் பேச்சுக்குரல். அதுவே அவனுக்கு இன்னிசையாக இருந்தது.
சமையல் அறையில் மல்லி வேலை செய்யும் அரவங்களும் சேர்ந்து அவனுக்கு அன்றைய நாளையே சந்தோஷமாக எதிர்கொள்ள வைத்தது. இனிமேல் எப்படி இருக்குமோ…?