மல்லி ஆறரை மணிக்கு வீட்டுக்கு வந்த போது வீடே ஒரு அசாதாரண அமைதியோடு இருந்தது. வாசலில் சுந்தரின் பைக் நிற்க மல்லிக்கு ஆச்சரியம். சில வருடங்களாகவே அவன் இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்ததே இல்லையே? கல்யாணம் ஆன புதிதில் அவளைப் பார்க்க ஆசையாக வந்திருக்கிறான் தான். ஆனால் இப்போது…?
காமாட்சி கூடத்தில் உட்கார்ந்து டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கணவர் ராமன் வழக்கம் போல அமைதியாக பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார். சுபாவத்திலேயே அமைதியான மனிதர். காமாட்சியை திருமணம் செய்த பிறகு மனைவியே அவருக்கும் சேர்த்து பேச பேச்சு இன்னும் குறைந்து போனது.
இதில் மகனும் மருமகளும் அவர் உழைப்பை பிடுங்கிக் கொண்டு வெளியே துரத்த உடம்பும் முடியாமல் போக மொத்தமாக ஆளே ஒடுங்கி விட்டார்.
காமாட்சி வீட்டுக்குள் நுழைந்த மல்லியை பார்த்த பார்வையில் இருந்தது வன்மமா ஏளனமா என்று மல்லியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த பார்வையை அவள் புரிந்து கொண்டு சுதாரித்து இருக்கலாம்.
ஆனால் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்த கவலைகளும் அடுத்து என்ன என்ற யோசனைகளும் அவளை மேலே யோசிக்க விடவில்லை.
சுந்தர் இந்த நேரம் வீட்டுக்கு வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் சுஷ்மிதா பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் வந்தாள்.
கோயிலில் அமர்ந்து தனிமையில் தன் நிலையை சிந்தித்தவளுக்கு சுந்தரிடம் இதை கேட்காமல் இந்த நிலைக்குத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள். கேட்காமலே இருப்பது அவனுக்கு துணிவைத் தான் கொடுக்கும். அதனால் பேசினால் அவன் மனதில் என்ன நினைத்திருக்கிறான் என்று பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.
அப்படி அவன் வீட்டை விட்டு விரட்டினாலும் தன் அம்மா அப்பா கைவிட மாட்டார்கள் என்று மனதிற்குள் அவள் பிறந்த வீட்டின் மேல் நம்பிக்கை இருந்ததும் அவள் துணிவுக்கு ஒரு காரணம்.
இன்று இரவு அவன் வந்த பிறகு பேச வேண்டும் என்று நினைத்தவளுக்கு அவனே வீட்டில் இருப்பதை பார்த்ததும் அந்த எண்ணம் இன்னும் உறுதியானது. காமாட்சியிடம் அவர் மகனைப் பற்றி சொல்லலாம் தான். ஆனால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் இல்லை. அவரிடம் அது எப்போதும் இருந்ததில்லையே?
காமாட்சியின் பார்வையை சந்தித்தாலும் அவரை சட்டை செய்யாமல் மல்லி பார்வை சுந்தர் இருந்த அறை பக்கம் போனது. அறைக்கதவு மூடி இருக்க உள்ளே சுந்தர் யாரிடமோ போனில் பேசும் சத்தம் கேட்டது.
மல்லி மகள் என்ன செய்கிறாள் என்று பார்க்கப் போக அவள் அவள் அறையில் இல்லை. சமையல் அறையை எட்டிப் பார்க்க அங்கே பிரியா காஸ் அடுப்பை பற்ற வைத்து அதில் பேப்பரைக் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்தாள். பேப்பர் திகு திகு என்று எரிய சூடு தாங்காமல் கீழே போட அது அவள் மேலேயே விழுந்தது.
நல்ல வேளையாக அவள் அணிந்திருந்த கவுன் காட்டன் என்பதோடு தண்ணீர் குடித்ததில் சற்று மேலே ஊற்றிக் கொண்டதால் நெருப்பு பிடிக்கவில்லை.
பார்த்த உடனேயே மல்லிக்கு பதறிப்போக நேராக போய் அடுப்பை அணைத்தவள் பேப்பரை அங்கிருந்த கால் மிதி போட்டு அணைத்தாள்.
மகள் செய்த வேலைக்கு கோபம் தலைக்கேற அவள் முதுகில் சுள்ளென்று அடித்தாள்.
“அறிவிருக்காடி? விளையாட வேற எதுவும் கிடைக்கலியா உனக்கு? படின்னு தானே சொல்லிட்டு போனேன். அதை செய்யாம இது என்ன வேலை? ட்ரெஸ் தீப்பிடிச்சிருந்தா என்ன ஆகியிருப்பே?அப்பாவும் பொண்ணும் என்னை கலங்க அடிக்கன்னே இருக்கீங்களா? அப்படி உங்களுக்கு நான் என்னடி கெடுதல் செஞ்சேன் …?”
மல்லிக்கு பதட்டத்தில் பேச்சு நிற்காமல் போக அவள் மனதிற்குள் இருந்த உளைச்சல் எல்லாம் வெளியே கொட்டியது.
ப்ரியா ஏற்கனவே மேலே எரியும் பேப்பர் விழுந்த அதிர்ச்சியில் மிரண்டு போய் இருந்தாள். இதில் மல்லி அடித்தது வேறு சுள்ளென்று எரிய ப்ரியாவின் அழுகை உச்சஸ்தாயியில் ஆரம்பித்தது.
அந்த சத்தத்தில் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் சமையல் அறைக்கு ஓடி வந்தனர்.
காலையில் சுந்தர் அவன் கம்பெனிக்கு போனபோது அவனுக்கு முன்பே அங்கே அவன் கெட்ட நேரம் காத்திருந்தது. பத்து நாட்களுக்கு முன் பத்து லட்ச ரூபாய்க்கு அவன் பருப்பு வகைகளை வாங்கி இருந்தான்.
எப்போதும் மூட்டைகள் வந்ததும் அதன் தரம் பிரித்து காய வைத்து பிறகே பக்கெட் போடுவது வழக்கம். இவன் நிலக்கடலை கொள்முதலில் கவனம் செலுத்த இங்கே வேலை செய்தவர்கள் காய வைக்காமலே பக்கெட் போட்டிருந்தனர்.
சென்னை முழுக்க இருந்த கடைகளுக்கு இவனும் வழக்கம் போல அனுப்பி விட ,சொல்லி வைத்ததுபோல எல்லா கடைகளில் இருந்தும் அவன் அனுப்பிய சரக்கு திரும்பி வந்திருந்தது.
அவன் இந்த இழப்பை சமாளிக்கும் அளவுக்கு பெரிய வியாபாரி கிடையாது. மொத்தமாக பணம் இழப்பு என்பதோடு இப்போது தான் அவன் பிராண்ட் பெயர் வெளியே தெரிய வரும் இந்த நேரத்தில் இது அவனுக்கு பெரிய அடி. அவன் இருந்து மேற்பார்வை செய்யாததால் இந்த அடிக்கு அவன் தானே பொறுப்பு? கூலிக்கு வேலை செய்பவர்களை திட்டி என்ன பயன்?
இன்றே கம்பெனியில் இருந்து செய்ய எதுவும் இல்லை என்பதோடு அங்கேயே இருந்தால் இத்தனை வருடங்கள் வேலை செய்தவர்களை அவனுக்கிருந்த கோபத்திற்கும் மனஅழுத்தற்கும் கடித்து குதறிவிடுவோம் என்று தான் அந்நேரமே வீட்டுக்கு வந்திருந்தான்.
இதில் சுஷ்மிதா அவனைத் திட்டி அனுப்பியிருந்த வாட்சப் குறுஞ்செய்தியை வீட்டுக்கு வரும் வரை பார்க்கவில்லை.
காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் வெறும் காபியோடு போனவன் தான். அங்கே இருந்த பிரச்சனைகளில் சாப்பிட நேரமோ மனநிலையோ இல்லாமல் போக பசியோடும் தலைவலியோடும் வீட்டுக்கு வந்திருந்தான்.
வீட்டுக்கு வந்ததும் கூடத்தில் இருந்த அம்மாவிடம் மல்லி எங்கே என்று கேட்க அவர் இதற்குத்தானே காத்திருந்தார்.
“அவ எங்கே போனாளோ? காலையில நீ போகுமுன்னே படுத்தவ மதியம் வரைக்கும் நல்லா தூங்கினா. ஒரு குடும்ப பொம்பள இப்படி தூங்கினா குடும்பம் விளங்குமா? வீட்டுல பெரியவங்க முடியாதவங்க இருக்காங்க. அவங்க சாப்பிட்டாங்களா என்ன செஞ்சாங்க எதுவும் கேட்டுக்கலடா தம்பி. கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இதோ நீ வந்திருக்கே. நீ வர நேரம் வீட்டுல இருந்து உனக்கு சூடா காபி டிபன்னு பாக்காம வெளிய கிளம்பிட்டா.
ஸ்கூல் விட்டு வந்த பொண்ணையும் எதுவும் கேக்கல. எதோ கடமைக்கு அவளுக்கு மட்டும் எதோ கிண்டி வெச்சிட்டு மூணு மணிக்கு போனவ தான். இப்ப மணி அஞ்சாச்சு. இன்னும் ஆளைக் காணோம்…
நீ சம்பாதிச்சு அவ மகாராணியா வீட்டுல உக்காந்து சாப்பிடும் போதே எங்களுக்கு இந்த கதி. இன்னும் இவ பொறந்த வீட்டுல இருந்து சீரும் செனத்தியுமா வந்திருந்தா எங்க கதி? தப்பு பண்ணிட்டோம் தம்பி. அண்ணன் பொண்ண கட்டி வெச்சா குடும்பம் உடையாம பாத்துப்பானு பாத்தேன்.
இவ அப்பனும் உறவு வேணும்னு நினைக்கல. இவளும் நினைக்கல. இப்படி ஒரு கழிசடைய கட்டி நீ ஏண்டா கஷ்டப்படறே? அடிச்சு துரத்து. உனக்கு இருக்கிற அழகுக்கும் வசதிக்கும் உன்ன கட்டிக்க ஆயிரம் பொண்ணுங்க வருவாளுங்க…”
ஒரே ஒரு நாள் அவருக்கு வேண்டியதை செய்யாததால் மல்லி அவருக்கு கழிசடை ஆகிப்போனாள். அது சரி .. கல்யாணம் பண்ணி பத்து வருடங்கள் குடும்பம் நடத்திய சுந்தருக்கே அவள் தேவையில்லையே? பிறகு இவர் என்ன?
காமாட்சியால் முடிந்தது சுந்தரின் கோபத்தையும் தலைவலியையும் அதிகப்படுத்தியது தான். ஏற்கனவே தலைவலி பசியில் இருந்தவனுக்கு அவன் அழைத்த கடைக்காரர்கள் எல்லோரும் சொல்லி வைத்தது போல பிடி கொடுக்காமல் பேச சுந்தரின் மொத்த கோபமும் மல்லியின் மேல் திரும்பியது.
வேறு வழியில்லாமல் சுந்தர் தன் அறையில் உட்கார்ந்து ஒவ்வொரு கடையாக அழைத்து விளக்கம் கொடுத்து அப்போதும் முயற்சிகளைத் தொடர்ந்தான்.
சுந்தர் தன் தொழில் பிரச்சனையிலும் காமாட்சி சீரியலில் கதாநாயகிக்கு நேர்ந்த பிரச்சனையிலும் மூழ்கியதில் இருவருமே ப்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கவனிக்கவில்லை.
ப்ரியாவுக்கு வந்த உடனே அம்மா கேட்பாள் என்று பொறுப்பாக வீட்டுப்பாடங்களை எழுதி முடித்த பிறகு பொழுதே போகவில்லை. அப்பாவை போய் பார்த்தவளுக்கு சுந்தர் தீவிரமான குரலில் எதோ பேசிக்கொண்டு இருக்க அங்கிருந்து வெளியே வந்து பாட்டியை பார்த்தாள்.
பாட்டியை விளையாட அழைத்துப் பார்த்தவளை திரும்பிக் கூட பார்க்காமல் காமாட்சி சீரியலில் மூழ்கி இருக்க பொழுது போகாமல் சமையல் அறைக்கு போனாள். சமீபத்தில் கொண்டாடிய தீபாவளி அன்று நெருப்பு வைத்து வெடித்த வெடிகள் மத்தாப்பு எல்லாம் அவளுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
இப்போதும் வெடிக்க வேண்டும் போல ஆசை வர பட்டாசு இல்லாததால் என்ன செய்யலாம் என்று பார்த்தவளுக்கு கேஸ் அடுப்பு பார்த்து ஐடியா வர வெளியே ஓடி செய்தித்தாள் ஒன்றைக் கொண்டு வந்து கேஸ் அடுப்பை பற்ற வைத்து அதில் பேப்பரை நீண்ட குழல் போல செய்து பற்ற வைத்தாள்.
அது தள்ளி எரிந்த போது நன்றாக இருந்தது போகப்போக பெரிதாக கொழுந்து விட்டு எரியவும் கை மேல் சூடாக காற்று பட பயந்து விட்டாள் பிரியா.
அந்த நேரத்தில் தான் மல்லி வர ஏற்கனவே தான் செய்தது தப்பு என்று பிரியா உணர்ந்த நேரத்தில் மல்லி அடிக்க அம்மா மேலே அவளுக்கும் அவ்வளவு கோபம். எல்லாம் அவளை அம்மா தனியாக விட்டு விட்டு போனதால் தானே?
ப்ரியா அழ மல்லி கத்த என ஒரே நேரத்தில் வீடு களேபரமாக அவரவர் வேலையில் மூழ்கி இருந்தவர்கள் எல்லாம் பதறி ஓடி வந்தனர்.
சுந்தர் அங்கே வரும் நேரம் மல்லி அவனை குறை சொல்லிக் கொண்டு இருக்க ஏற்கனவே அவள் மேல் கடுங்கோபத்தில் இருந்த சுந்தர் “ஏய்! நான் என்னடி உன்னை பண்ணினேன்? மனுஷன் வேலை செஞ்சிட்டு தலைவலியோட வீட்டுக்கு வந்தா ஒரு காபி போட்டுக் குடுக்கக் கூட வீட்டுல இல்லாம நீ எங்கயோ ஊர சுத்திட்டு வந்திருக்கே. இதுல குழந்தையையும் தனியா விட்டுட்டு அப்படி என்ன உனக்கு வெளிய அர்ஜென்ட்டான வேல? இதுல ஊர் சுத்திட்டு வந்து குழந்தைய வேற அடிச்சிட்டு இருக்கா! போடி அந்த பக்கம்….!”
என்று மல்லியை தள்ளி விட்டு மகளை அணைத்து சமாதானம் செய்ய முயன்றான் சுந்தர்.
மல்லிக்கு முதல் நாளில் இருந்து உள்ளே அடக்கி வைத்திருந்த ஏமாற்றம் கோபம் வேதனை எல்லாவற்றையும் அவனின் இந்த செய்கை கிளறி விட்டது.
அப்போதும் எல்லோர் எதிரிலும் தங்கள் பிரச்னையை சொல்ல விரும்பாமல் மல்லி உதட்டைக் கடித்து அமைதியாக நிற்க காமாட்சி விடுவாரா?
“நிக்கறா பாரு அழுத்தமா? இப்படி ஒரு அழுத்தம் எங்களுக்கு எல்லாம் கிடையாதுடா சாமி…! சுந்தர் எல்லாம் நீ குடுக்கிற இடம். கையில் வெச்சிட்டு தாங்கற இல்ல? அந்த திமிர்… ஒரு ஒரு பைசாவும் சம்பாதிக்க நீ கஷ்டப்படறே? இவளுக்கு அந்த கஷ்டம் கொஞ்சமாச்சும் புரிஞ்சா உனக்கு அனுசரணையா இருப்பா.. எங்கே ? அந்த பொறுப்பெல்லாம் இருந்தா நீ இப்படி கஷ்டப்படுவியா? என்னவோ பா….பாவம் ப்ரியா குட்டியும் இப்ப இவ கிட்ட அடியும் திட்டும் வாங்கி ரொம்ப கஷ்டப்படுது…நீ வாடா கண்ணு…! பாட்டி நான் இருக்கேன்..உன்னை நல்லா பாத்துப்பேன்.” என்று வலுக்கட்டாயமாக அப்பாவிடம் சாய்ந்து அழுதுகொண்டு இருந்த பேத்தியை தன் மேல் அணைத்து போலி அனுதாபம் காட்டினார்.
காமாட்சி எதுவும் அறியாமலே இருவருக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனையின் மையப்புள்ளியை தொட்டு விட இருவருக்கும் கவனம் அதில் நின்றது.
மல்லிக்கு அதற்கு மேல் பொறுமையாக நிற்க முடியவில்லை.
“எனக்கு பொறுப்பு வரது இருக்கட்டும். மொதல்ல நீங்க பெரியவங்களா லட்சணமா பொறுப்பா இருங்க அத்தை. நீங்க வந்ததுல இருந்து நானும் பாக்கறேன்.. அவர் கிட்ட என்னைப் பத்தி இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க… இப்ப ப்ரியா கிட்டயும் அதே வேலையை செய்ய ஆரம்பிசிருக்கீங்க. உடம்பு சரியில்லாமல் அங்கே ஊரில் பாக்க ஆளில்லாமல் இருந்த உங்கள இங்க கூட்டிட்டு வந்து பாத்ததுக்கு நீங்க செய்யற வேலையா இது…?”
அவள் அப்படி சொன்னது தான் தாமதம்..காமாட்சி ஓவென்று ஒப்பாரியே வைத்தார்.
“கேட்டியா தம்பி? என் புள்ள வீட்டுக்கு நான் வந்ததுக்கு கண்டவ கிட்டயும் பேச்சு வாங்கற நிலைமை…! இப்படி ஈனப்பொழப்பு பொழைக்க நா நாண்டுக்கிட்டு சாகலாம்..இப்பவே நானும் என் புருஷனும் போயிடறோம்…நீங்க ரெண்டு பேரும் நல்லா இருங்க.. என்ன செய்ய? நான் வாங்கி வந்த வரம் அப்படி..!
அந்த புள்ள தான் சொத்தைனு நினைச்சேன். உன்ன மலை போல நம்பி வந்தேன்.. ஆனா உன் பொண்டாட்டிக்கு என்னையும் உங்கப்பாவையும் நீ இங்க வெச்சிருக்கறது பிடிக்கல போல தம்பி..நாங்க இனி போக எங்கயும் இடம் இல்ல…எங்கயோ போய் சாகறோம்…ஏங்க கிளம்புங்க…நாம பிடிக்காத இடத்துல இருக்க வேண்டாம்…”
காமாட்சி தன் வேலையை கச்சிதமாக செய்தார். ஏற்கனவே கோபத்தில் இருந்த சுந்தர் இப்போது காமாட்சி பேசவும் அவன் கோபத்தில் இன்னும் எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தது போல ஆனது.
எட்டி மல்லியின் முடியை கொத்தாக பிடித்து இழுத்தவன் ஓங்கி அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.
மல்லிக்கு அவன் முழு பலத்தில் அடித்த வேகத்தில் ஒரு நொடி கிர்ரென தலை சுற்றியது.
“ஏய்! நீ யாருடி எங்க அம்மா அப்பாவை இங்க இருக்கக்கூடாதுன்னு சொல்ல? அப்படி சொல்றவ எனக்கு தேவையே இல்ல… இப்ப சொல்றேண்டி….உன்னக் கண்டாலே எனக்கு பிடிக்கல.. நீயா வீட்டை விட்டு வெளிய போறியா? இல்ல நானே உன்னை கழுத்தை பிடிச்சு தள்ளுவேன்….”
என்றவன் அவள் கழுத்தைப்பிடிக்க மல்லிக்கும் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவன் கையைத் தட்டி விட்டு அவனிடம் இருந்து விலகி நின்றவள் பார்வையில் இப்போது தீப்பொறி பறந்தது.
“ஓ! என்னைப் பிடிக்காம தான் அந்த சுஷ்மிதாவ ரெண்டாவது கல்யாணம் பண்ண முடிவு செஞ்சீங்களா? கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கழிச்சு கையில் ஒரு பொண்ணையும் வெச்சுகிட்டு ரெண்டாம் கல்யாணத்துக்கு பொண்ணு தேடற நீங்க எல்லாம் ஒரு ஆம்பள? உங்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு துப்பு கெட்ட அப்பா அம்மா…!
எங்க அப்பா அப்பவே ஆன மட்டும் என்னைத் தடுத்தாரு. நான் தான் புத்தி கெட்டு போய் உங்க பின்னால வந்தேன்…”
தன் பெற்றோரின் எதிரிலேயே தன்னை ஆம்பளையா என்று கேட்டதில் அவன் தன்மானத்தை மல்லி சீண்ட ஏற்கனவே தலைவலியிலும் மனவழுத்தத்திலும் பாதிக்கப்பட்டிருந்த சுந்தர் அந்த நொடி மிருகமானான்.
“…..பதினெட்டு வயசுல உங்க பின்னால நம்பி வந்தவளை வெச்சு காப்பாத்த வக்கு இல்ல. பெத்த பொண்ண இல்லன்னு சொல்லி புதுப்பொண்டாட்டி தேடறவன் எல்லாம் யோக்கியன் இந்த ஊருல. அந்த அதிர்ச்சியில படுத்தவ எல்லாம் குடும்பப் பொம்பள இல்ல….நல்லா இருக்கு உங்க குடும்ப நியாயம்….”
மல்லி முதல் நாளில் இருந்து மனதுக்குள் பொங்கிய கோபம் மொத்தமும் கொட்ட சுந்தர் மறுபடி எட்டி அவள் கழுத்தைப் பிடித்தவன் “ஏய் அப்படி ஒண்ணும நீ இந்த ஞாயம் கெட்ட குடும்பத்துல இருக்க வேண்டிய அவசியம் இல்ல… போடி இந்த வீட்டை விட்டு….” என்று அவளைத் தள்ளிக் கொண்டே வாசல் வரை வந்தவன் அவளை வெளியே தள்ளி விட்டு அவள் என்னவானாள் என்று கூட பார்க்காமல் வாசல் கதவை அறைந்து சாத்திக் கொண்டு உள்ளே போனான்.