மல்லியை மருத்துவமனையில் சேர்த்த போது அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் நெற்றியிலும் கன்னத்திலும் இருந்த காயங்களைப் பார்த்து எதனால் ஏற்பட்டது என்று கேட்ட போது சாவித்திரிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
நெற்றியில் பட்ட அடியை வேண்டுமானால் தவறி விழுந்ததால் என்று சொல்லி விடலாம். ஆனால் கன்னத்தில் சுந்தர் அடித்த விரல் தடம் இல்லையென்றாலும் கன்னம் கன்றி சிவந்து இருந்தது நன்றாகவே இன்னும் தெரிந்தது.
தெரியாமல் அடித்து விட்டார் அவள் கணவர் என்றா சொல்ல முடியும்? உண்மையை சொன்னால் போலிஸ் கேஸ் ஆகி விடும். நிஜமாகவே சாவித்திரிக்கு இருந்த கோபத்துக்கு சுந்தரை மாட்டி விட்டு லாடம் கட்ட வேண்டும் போல அவ்வளவு கோபம் இருந்தது தான்.
ஆனால் மல்லி என்ன நினைக்கிறாள் என்று சாவித்திரிக்கு தெரியவில்லை. கணவரை சார்ந்து வாழும் அவள் இதை ஒத்துக்கொள்வாளா என்று தெரியவில்லை.
அது போக இங்கே சிறு பிரச்சனைகளுக்கு கூட சட்டென்று கை நீட்டி விடும் ஆண்கள் அவளும் பார்த்து இருக்கிறாளே?
அதனால் இதை சொல்லி விஷயம் பெரிதானால் மல்லிக்கு தான் பாதிப்பு என்று தெரிந்ததால் சாவித்திரி உண்மையை சொல்லவே தயங்கினாள்.
அவள் தயங்கவும் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து விட்டு “என்ன நடந்தது? யார் அடிச்சாங்க? இவங்க வீட்டுக்கார் எங்கம்மா?” என்று இது நிச்சயம் போலிஸ் கேஸ் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்க ஆரம்பிக்க சாவித்திரி விழித்தாள். அவள் தடுமாறுவதைப் பார்த்து ரஞ்சன் உதவிக்கு வந்தான்.
“டாக்டர்! அவங்க ரோட்டில் போயிட்டு இருக்கும் போது பெரிய அல்சேஷன் நாய் எதிர்க்க பாஞ்சிட்டு வரவும் பயந்து ஓட அதுக்குள்ள நாய் அவங்க கன்னத்துல கைய வீசிடுச்சு. அதுல இன்னும் மிரண்டு ஓடி தடுக்கி விழுந்திட்டாங்க. வேற ஒண்ணும இல்லை டாக்டர்.
இவங்க எங்க சொந்தம் தான். எங்க வீட்டுக்கு தான் ஊரில் இருந்து வந்து இருக்காங்க….அவங்க ஹஸ்பெண்ட் ஊரில் இருக்காரு…”
என்று வாய்க்கு வந்த பொய்யை கோர்வையாக சொல்லி சமாளிக்க டாக்டர் சந்தேகமாக பார்த்தாலும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
ராஜன் அன்று எதுவும் கேட்காமல் இருந்தாலும் அடுத்த நாள் மறுபடி மல்லியின் குடும்பத்தை பற்றி சாவித்திரியிடம் விசாரித்தான்.
“சாவித்திரி! நேத்தில இருந்து இங்க இருக்கோம். இன்னும் இது வரைக்கும் இவங்க வீட்டுல இருந்து யாரும் இவங்கள தேடி வரல. விசாரிக்கல. என்ன நடந்தது சாவித்திரி? இவங்கள எப்படி உனக்கு தெரியும்?”
உண்மையில் சாவித்திரிக்கு மல்லியின் அந்தரங்கத்தை ராஜனிடம் சொல்ல விருப்பம் இல்லை. ஆனால் தேவை என்று அழைத்ததும் உடனே ஓடி வந்து உதவியவனிடம் மறுக்கவும் முடியவில்லை.
அதோடு அவளுக்குமே இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாதே. மல்லியும் எதுவும் சொல்லவில்லையே.
அதனால் மேலோட்டமாக தான் போன போது நடந்ததை அவனிடம் சொன்னாள். அவள் தனியே வெளியே விழுந்து கிடந்ததையும் வீட்டுக்கதவு சாத்திய நிலையில் யாருமே அவள் என்ன ஆனாள் என்று எட்டிப் பார்க்காததையும் சொன்னாள்.
அவளையும் மீறி “என்ன சண்டையா கூட இருக்கட்டும். அவரு பொண்டாட்டி தானே? வெளிய விழுந்து கிடக்கறாளே? என்ன ஆனா ? போய் பாப்போம் என்று கூட அந்த அண்ணாவுக்கு தோணலியே….” என்று கோபமாக பொரிந்து விட்டாள்.
ராஜன் அவள் மனம் புரிந்தது போல அவளை அறியாமலே அவளிடம் இருந்து விஷயத்தை தெரிந்து கொண்டான்.
“சாவித்திரி! அவர் கோபத்துல இந்த மாதிரி நடந்து இருக்கலாம். ஆனா நேத்துல இருந்து இவங்கள காணோம்னு கண்டிப்பா வீட்டுல தேடுவாங்க. அதனால அவங்க வீட்டுல சொல்றது தான் சரி!”
ராஜன் சொன்னதும் சாவித்திரிக்கும் அது தான் சரி என்று தோன்ற அப்போதே கிளம்பி விட்டாள்.
அவள் மல்லி வீட்டுக்கு போகும்போது மணி காலை பத்து இருக்கும். அப்போதும் வீடு வெளியே பூட்டி இருக்க அக்கம்பக்கம் போய் விசாரித்தாள்.
நேற்று அவள் மல்லியை அழைத்து வந்த போது வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற பக்கத்து வீட்டு பெண்மணி மட்டும் “எல்லோரும் எங்கேயோ வெளியே போயிருக்காங்க…” என்றதோடு சரி. யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
மேலே என்ன செய்வது என்று தெரியாமல் சாவித்திரி மருத்துவமனைக்கே திரும்பி விட்டாள்.
சட்டென்று ஒரு யோசனை தோன்ற மல்லியின் செல் போனுக்கு “நான் சாவித்திரி அண்ணா. மல்லி கூட படிச்சவ. மல்லி என்னோடு இருக்கா அண்ணா! மல்லிக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. நீங்க இந்த மெசேஜ் பாத்திங்கனா உடனே என்னை காண்டக்ட் பண்ணுங்க…” என்று வாட்சப் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.
அதன் பிறகு அவள் அலுவலக வேலை மல்லியை பார்த்துக்கொள்வது என்று வேலைபளு இழுக்க சாவித்திரியால் சுந்தரை அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.
அதையே ராஜனிடம் சொல்லி விட இருவருக்கும் மேலே என்ன செய்வது என்று தெரியாமல் மல்லி கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தனர்.
ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் மல்லி கண்விழிக்காமல் சுயநினைவு வராமல் ஏதேதோ முனகியபடி உடலை முறுக்கி படுத்திருந்த கோலம் டாக்டரை யோசிக்க வைத்தது என்றால் சாவித்திரியை பயமுறுத்தியது.
மொத்தமாக வேலையை ராஜனிடம் விட்டு விட்டு மல்லியோடு மருத்துவமனையிலேயே தங்கி விட்டாள்.
டாக்டர் சாவித்திரியிடம் “இவங்க எதோ ஸ்ட்ரெஸ்ல இருக்க மாதிரி தெரியுது. நான் கொடுத்த ட்ரீட்மெண்ட்க்கு சாதாரண பீவருக்கு இத்தனை நேரத்துக்கு சரியாகி இருக்கணும். ஆனா இவங்க இன்னும் கண்ணைக் கூட திறக்கல. எதுக்கும் அவங்க வீட்டுல இருந்து வரச்சொல்லுங்க…” என்று சொல்லி விட்டு போய் விட சாவித்திரிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
வீட்டுக்கு போய் பார்த்தாச்சு. மெசேஜும் அனுப்பியாச்சு. மெசேஜ் பார்த்ததற்கான நீல டிக்கும் காட்டுது. அதே மல்லி நம்பருக்கு போன் செஞ்சா யாரும் எடுக்கல. இன்னும் இந்த சுந்தர் அண்ணா மல்லி எங்க என்றே வந்து பார்க்கல. இப்ப எங்க போய் அவரைத் தேட?
அவள் அம்மா அப்பாவும் ஊருக்கு போயிருக்கும் நேரத்தில் தன்னந்தனியாக எப்படி சமாளித்திருப்பாளோ?
ராஜன் அவர்கள் வேலை முழுவதும் பார்த்துக் கொண்டதோடு தினமும் காலையும் மாலையும் வந்து அவர்களையும் பார்த்துக் கொண்டான்.
டாக்டருக்கும் அவனே எதோ சொல்லி சமாளிக்க அதன் பிறகு அவர் சாவித்திரியிடம் எதுவும் கேட்கவில்லை.
ஒரு வழியாக சாவித்திரியை ஏகத்துக்கும் பயமுறுத்தி விட்டு மல்லி ஒரு வழியாக கண் விழித்தாள்.
தான் எங்கிருக்கிறோம் என்றே புரியாமல் மலங்க மலங்க விழித்த மல்லிக்கு சாவித்திரியை பார்த்ததும் தான் தைரியம் வந்தது.
பத்து நாட்களாக ட்ரிப்ஸில் ஏறிய க்ளுகோஸ் மட்டுமே உணவாக இருக்க மல்லிக்கு பேசக் கூட தென்பில்லை.
மெல்ல மெல்ல நடந்தது நினைவுக்கு வர சாவித்திரியின் கையைப்பிடித்து கொண்டவளுக்கு மளமளவென நிற்காமல் கண்ணீர் கொட்டியது. அளவுக்கு மீறிய துக்கத்தில் விசும்பல் வர மூச்சு விடவே திணறினாள்.
சாவித்திரிக்கு அவள் நிலையைப் பார்த்து அந்த நேரத்திலும் சுந்தர் மேல் அப்படி ஒரு கோபம்.
மல்லி அவளோடு பள்ளியில் படிக்கும் போது அழுதோ கவலையோ பட்டு அவள் பார்த்ததே கிடையாது. எப்போதும் சிரித்த முகமாக உற்சாகமாக வலம் வருவாள். நன்றாகவும் படிப்பாள். முதல் மூன்று ரேங்குகளில் இருப்பாள். சாவித்திரியும் அவளும் ஒருவருக்கொருவர் புரியாததை சொல்லிக் கொடுத்துக்கொண்டு போட்டி போட்டு முதல் ரேங்க் வாங்குவார்கள்.
வீட்டில் சுந்தரோடு கல்யாணம் பேசியிருப்பது எல்லாம் அவளிடம் சொல்லி இருக்கிறாள். இருந்தாலும் அவள் அப்பா அவளை படிக்க வைக்க போவதாக சொல்வதையும் சொல்லி “அப்பா சொல்றதுக்காக என்று இல்லை சாவி! எனக்கே படிக்க ஆசையா இருக்கு.. அப்பா பெரிய லெவல்ல டாக்டர் என்ஜினியர் எல்லாம் படிக்க வைக்க மாட்டாங்க. அதனால ஒரு டிகிரியாச்சும் படிக்கனும்டி…” என்று சொல்லி இருக்கிறாள்.
சாவித்திரி அவள் வீட்டு கஷ்டங்களை சொல்லி படிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்து போகும் போது அவளுக்கு தைரியம் சொன்னவளும் மல்லி தான். அந்த வயதில் அவளுக்கு தெரிந்த யோசனைகளை சொன்னாலும் அதில் முதிர்ச்சி இருக்கும்.
அப்படி துணிவாக தன்னம்பிக்கையோடு இருந்தவளை சுந்தர் என்ன ஆக்கி வைத்திருக்கிறான்? எப்போது சுந்தரை காதலிக்க ஆரம்பித்தாளோ அப்போது தான் அவளுக்கு சனி பிடித்தது என்று சாவித்திரிக்கு தோன்றியது.
“சாவி! அத்தை இன்னிக்கி வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட மல்லிக் காட கேட்டாங்க. எப்பவும் அப்பா அத்தை கேட்கறத விட கூட செய்வாங்க. இன்னிக்கி என்ன ஆச்சு என்று தெரியல. அத்தைய நல்லா திட்டி வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. அப்பா இனி இந்த கல்யாணமே இல்ல என்று சொல்லிட்டாரு…”
என்று அவள் சொன்ன போது மல்லி எப்படி இருந்தாளோ ஆனால் சாவித்திரிக்கு ரொம்பவே சந்தோஷம். நிம்மதி.
‘அப்பாடா! நிம்மதி. வல்லி இனி என் கூடவே இருப்பா..!’
சாவித்திரியின் நிம்மதியை அல்பாயுசாக்கி சுந்தர் வந்து மல்லியைப் பார்த்தான். தன் காதலை சொன்னான்.
மல்லியும் அவன் காதலை ஏற்க இருவரும் தினமும் சந்திப்பது சாவித்திரிக்கும் தெரியும். சில் சமயங்களில் சாவித்திரி மல்லியோடு சென்றிருக்கிறாள்.
அவளுடைய வல்லியை சுந்தர் மல்லியாக்கி ஆசையாக கூப்பிடும்போது அவளுக்கு பொறாமையாக கூட இருக்கும்.
அவன் வந்த பிறகு மல்லி முன் போல அவளோடு படிப்பதில் ஆர்வம் காட்டாமல் எந்நேரமும் அவள் அத்தானின் நினைவில் மூழ்குவதை கடுப்போடு கவனித்திருக்கிறாள்.
“ஏய் வல்லி! டிகிரி படிக்கப் போறேன்னு சொன்னியேடி? இப்பலாம் எப்ப பார்த்தாலும் அண்ணா ஞாபகத்துல நீ படிப்புல கவனம் செலுத்தறதே இல்ல? படிச்சா தான் நம்ம சொந்தக்காலில் நிற்க முடியும் என்று நீ தானே சொல்லுவே? இந்த காதல் கண்றாவி எல்லாம் வேணாம்டி. ஒழுங்கா படிப்ப பாரு. அப்பா வேணாம்னு சொல்றாங்கனா சரியா தான் இருக்கும்…”
என்று சண்டை கூட போட்டிருக்கிறாள்.
மல்லி சுந்தரை கல்யாணம் செய்து கொண்டு ஊரை விட்டு போன போது அதிகம் அழுதது அவள் தான். இப்போது இத்தனை வருடங்கள் கழித்து அவளை கண்டுபிடித்தபோது அதிகம் சந்தோஷப்பட்டதும் அவள் தான்.
வல்லி அவளுக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கம் அப்படி. அதனாலோ என்னவோ பல வருடங்கள் கழித்து சந்தித்த போதும் அவளுக்கு இத்தனை வருட இடைவேளி தெரியவே இல்லை.
பார்த்த முதல் முறையே மல்லி இருந்த நிலைமை சுந்தரின் மேல் அவளுக்கு இருந்த மதிப்பை இன்னும் தரைமட்டமாக ஆக்கி இருந்தது.
அதுவும் இந்த பத்து நாட்களாக அவள் என்ன ஆனாள் என்று கவலைப்படாதவனை அறவே பிடிக்கவில்லை.
இப்போது மல்லி குலுங்கி அழ அவளை இப்படி குற்றுயிராக்கி படுக்க வைத்தவனை அறவே வெறுத்தாள்.