“வல்லி! இங்க பாருடி! உனக்கு ஒண்ணும இல்லை. ஜுரம் தான்! எல்லாம் சரியாகிடும்..! அழாதேமா! பிரியா குட்டிய கூட்டிட்டு அண்ணா இப்ப வருவார்….மறுபடி ஜுரம் வந்திரப்போகுது…” என்று விதவிதமாக பேசி அவளை சமாதானம் செய்ய சுந்தர் பெயரை வேண்டாவெறுப்பாக சொன்னாள்.
சாவித்திரி சமாதனத்திற்கு சொன்னாலும் சுந்தர் வர மாட்டான் என்று மல்லிக்கு தெரியுமே!
ராஜன் அன்று மாலை வழக்கம் போல் வந்து பார்க்க அவனையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ராஜன் அவளிடம் உடல் நலத்தை விசாரித்து அவளிடம் பொதுவாக என்றாலும் இதமாகவே பேச மல்லி அவனிடம் இலகுவாக உணர்ந்தாள்.
மல்லி ஓரளவு தேறி எழுந்து உட்கார மேலும் நான்கு நாட்கள் ஆக சாவித்திரி தான் அவள் கூடவே இருந்தாள்.
சாவித்திரி சமாதானம் செய்த போதும் சுந்தர் அவளைப் பார்க்க வர மாட்டான் என்று மல்லியின் உள்மனதுக்கு தெரியும். அவர்களுக்குள் நடந்தது சாதாரண கணவன் மனைவி சண்டை இல்லையே? அவர்கள் திருமணவாழ்க்கையின் அஸ்திவாரத்தையே பெயர்க்க சுந்தர் முடிவு செய்த பிறகு எப்படி அவளைப் பார்க்க வருவான்?
கொஞ்சம் தேறி எழுந்தவள் சுற்றிப் பார்த்ததுமே அவளை சாவித்திரி தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதை உணர்ந்து கொண்டாள்.
பத்து நாட்களாக இங்கே இருக்கிறாள் என்றால் சாவித்திரிக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று யோசித்தாள்.
“சாவி! உனக்கு நிறைய செலவு ஆகியிருக்கும் போலவே? எப்படி சமாளிச்சியோ? என் கிட்ட காசு எதுவும் இல்ல…இந்தாடி இந்த வளையலை வித்து காசு எடுத்துக்கடி…”
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவள் நகைகளை எல்லாம் சாவித்திரியிடம் கொடுத்து வைத்திருந்ததை அன்று தான் சாவித்திரி அவளிடம் கொண்டு வந்து அணிந்து கொள்ள கொடுத்திருந்தாள்.
அதில் இருந்த நான்கு பவுன் வளையல்களை எடுத்து நீட்டியபடி மல்லி இப்படி சொன்னதும் சாவித்திரி அவளை முறைத்தாள்.
“என்னை இன்னும் உங்க வீட்டு தோட்டத்துல வேலை செய்யற கூலியோட பொண்ணுன்னு நினைச்சிட்டீங்களா முதலாளி அம்மா? பெரிசா காச கொடுக்க வந்திட்டா! ஒழுங்கா அதை கையில் போடுடி….” என்று அதட்ட அந்த உரிமையான கோபம் கூட மல்லிக்கு அந்த நேரத்தில் இதமாக தான் இருந்தது.
சுந்தர் கூட இப்படி உரிமையாக கோபப்பட்டவன் தான். திருமணம் செய்து வந்த போது மல்லி சமைக்க தெரியாமல் தடுமாறுவாள். உப்பு கூட போட்டு காரம் போதாமல் அவள் சமைத்ததை சுந்தர் குறையே சொல்லாமல் சாப்பிடும்போது மல்லி தான் அழுது விடுவாள்.
“அத்தான்! எவ்ளோ கேவலமா சமைச்சிருக்கேன்? எப்படி அத்தான் இதை சாப்பிட்டீங்க…?” என்று வருத்தப்பட்டு இருக்கிறாள்.
“ஏய்! உனக்கு இதுல உப்பு காரம் இதான் தெரியுது. அதான் குறை சொல்றே! எனக்கு இதுல உன் அன்பு எனக்கு நல்லா செஞ்சு போடணும் என்று நீ காட்டற அக்கறை இதெல்லாம் தெரியுது. இதுக்கு போய் அழுவியாடி! முதல்ல கண்ணைத் துடை. இனி அழுதா பாத்துக்கோ! “ என்று அதட்டுவான்.
அதற்காகவே அவனுக்கு நன்றாக சமைத்துப் போடவேண்டும் என்று சமையலை ஆர்வமாக கற்றுக் கொண்டாள்.
ப்ரியா வயிற்றில் இருக்கும் போது அவள் வாந்தி வருகிறது என்று சாப்பிடாமல் இருக்கும் போதும் அவளை மிரட்டி உருட்டி சாப்பிட வைத்திருக்கிறான்.
“வேலை செஞ்சிட்டே இருக்காத மல்லி. ரெஸ்ட் எடு..இன்னிக்கி ஹோட்டலில் இருந்து வாங்கிட்டு வந்திட்டேன்..” என்று உட்கார வைத்து கடையில் இருந்து வாங்கி வந்த உணவு வகைகளை உரிமையாக ஊட்டி இருக்கிறான்.
“என்னடி இது நைட்டி இப்படி கிழிஞ்சு இருக்கு. இதெல்லாம் சொல்ல மாட்டியா?” என்று அவன் கஷ்டப்பட்ட காலத்தில் மல்லி தானும் செலவு வைக்க வேண்டாம் என்று தன் தேவைகளை சொல்லாத போது கோபித்து இருக்கிறான்.
இப்படி பல சம்பவங்கள். ஆனால் அவை எல்லாவற்றிலும் அவன் அன்பும் அக்கறையும் இருந்தது. ஆனால் இப்போது சண்டைக்கு காரணமே அவள் மேல் இருந்த வெறுப்பு தானே? ஆனால் அன்பு ஏன் வெறுப்பானது என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராய்!
பழைய காலம் மாதிரியே மல்லி சுந்தரின் நினைவில் மூழ்கி இருப்பதை பார்த்து பல்லைக் கடித்த சாவித்திரி “ஆத்தா! கொஞ்சம் மலையிறங்கி கீழ வா! முதல்ல இந்த ரசம் சாதத்தை சாப்பிடு. மாத்திரை போடணும்…கொஞ்சம் கூட மீதி வைக்கக்கூடாது…சொல்லிட்டேன்..” என்று அதட்ட மல்லி மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
மல்லி மருத்துவமனையில் இருந்த வரை இருவரும் கவனமாக மல்லியின் வீட்டைப்பற்றி பேசாமல் தவிர்த்தனர்.
அதுவும் மல்லி விழித்ததும் அழுத அழுகையில் சாவித்திரிக்கு அதைக் கேட்கவே தைரியம் இல்லை. முதலில் மல்லி தேறட்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
மல்லியும் கொஞ்சம் தேறியதும் இனி தன் வாழ்க்கை எப்படி போகுமோ என்ற பயமும் மகளைப்பற்றி கவலையும் உள்ளே அரித்தாலும் இன்னும் உடம்பு முடியாமல் போய் தோழிக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
அன்றோடு வீட்டுக்குப் போகலாம் என்று டாக்டர் அனுமதி கொடுக்க இரண்டு வாரத்தில் எலும்புக்கூடாக ஆன தோழியை அழைத்துக்கொண்டு சாவித்திரி வீட்டுக்கு கிளம்பினாள்.
மல்லி ஒரு வேளை தன் வீட்டுக்கு போக கேட்பாளோ என்று சாவித்திரி யோசிக்க மல்லியோ எதுவும் பேசாமல் அமைதியாக காரில் உட்கார சாவித்திரி காரை தங்கள் வீட்டுக்கு செலுத்தினாள்.
இத்தனை நாட்களில் மல்லி அடிக்கடி எதோ சிந்தனையில் இருப்பதை பார்த்தவளுக்கு அந்த சிந்தனையின் விளைவாக மல்லி இன்னும் ஒடுங்குவதையும் கவனித்து அவளை யோசிக்கவே விடக்கூடாது என்று பேச்சு கொடுத்துக்கொண்டே இருப்பாள்.
தங்கள் பள்ளிக்கால நினைவுகள், இப்போதைய அவள் வேலை அவள் குடும்பம் என்று நகைச்சுவையாக ஏதாவது பேசுவாள்.
ராஜன் பற்றி சாவித்திரி சொல்வதை கேட்ட மல்லிக்கு அவளுக்கு அவன் மேல் ஆர்வமோ என்று இருவரும் பேசும் போது கவனிக்க ராஜன் அவளை ஆர்வமாக பார்ப்பதும் சாவித்திரி அவனிடம் நட்பாக மட்டுமே பழகுவதும் அவளுக்கு புரிந்தது.
இப்போது காரில் போகும் போதும் சாவித்திரி அவனைப் பற்றி தான் சொல்லிக் கொண்டு போனாள்.
“வல்லி! ரெண்டு வாரமா ஆபிஸ் பக்கமே போகல. ராஜன் தான் எல்லாம் பார்த்துக் கிட்டான்டி. இன்னிக்கி மத்தியானம் நீ சாப்பிட்டு தூங்கும்போது கொஞ்ச நேரம் ஆபிஸ் போயிட்டு வரேன். என்ன?
அம்மா அப்பா இருந்தா உன்னை அவங்களை பார்க்க சொல்லி விட்டுட்டு போவேன். பெரிய அக்கா இன்னும் அவங்க கிட்ட வேலை வாங்கி முடிக்கல போல. அடுத்த வாரம் தான் வருவாங்க. நீ கொஞ்ச நேரம் தனியா இருந்துப்பே தானே? அது அபார்ட்மெண்ட் தான். ஒண்ணும பயமா இருக்காது… “
மல்லி அவள் தன்னிடம் கேட்ட விதத்தில் எட்டி அவள் கையைப்பிடித்து கொண்டாள்.
“இதுவரைக்கும் நீ பாத்ததே பெரிய விஷயம் சாவி! ஒண்ணும யோசிக்காதே…நீ போயிட்டு வா! நான் தனியா இருந்துப்பேன்…” என்று அவளுக்கு சமாதானம் சொன்னாள்.
அவளுக்குமே தனியாக இருந்து யோசிக்க வேண்டி இருந்தது.
கார் சாவித்திரி அபார்ட்மெண்ட் இருந்த வளாகத்தில் நிற்க அந்த சூழலைப் பார்த்தே சாவித்திரியின் பொருளாதார செழுமை புரிய தோழியின் வளர்ச்சியில் அத்தனை பூரிப்பு அவளுக்கு.
மலர்ச்சியாகவே காரை விட்டு இறங்க அவர்கள் பைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைப்பற்றி சொல்லியபடி சாவித்திரி அவளை லிப்ட் அருகே கூட்டி சென்றாள்.
“நம்ப வீடு அஞ்சாவது ப்ளோர்ல இருக்குடி. ஒரு ப்ளோர்ல நாலு வீடு தான். முதல் தடவை இங்க வந்த போது அம்மாவ இதுல கூட்டிட்டு போனேனா? லிப்ட் கதவு மூடி கிர்ருன்னு மேலே போகவும் அம்மா பயந்து போய் அலற ஆரம்பிச்சிட்டாங்க. லிப்ட் நின்னு கதவு திறந்ததும் தான் மூச்சே வந்தது. டப்புன்னு நம்ப வீடு வந்திருச்சுன்னு சொல்லி ஆச்சரியபட்டாங்க. ஆனா இப்பவும் நான் இல்லாம தனியா இதுக்குள்ள போக ரொம்ப பயம். படி வழியா தான் போய் வருவாங்க….”
சாவித்திரி பேசியபடியே ஐந்தாவது தளம் வந்து தங்கள் வீட்டுக் கதவைத் திறக்க மல்லியின் கண்கள் சந்தோஷமாக விரிந்தன.
“வீடு ரொம்ப நல்லா இருக்குடி! சாவி ! நீ இப்படி வசதியா இருக்கறதை பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? பெருமையாவும் இருக்குடி….”
என்று சந்தோஷமாக சாவித்திரியை மல்லி அணைத்துக் கொள்ள சாவித்திரியுமே நெகிழ்ந்து போனாள்.
இந்த நிலைக்கு வர அவள் உழைத்த உழைப்பு …?இத்தனைக்கும் அவள் வீட்டில் யாரும் அவளுக்கு பெரிதாக ஊக்கமோ ஆதரவோ கொடுத்ததில்லை. அவளுக்கு இருந்த ஒரே ஆதரவு அவள் வல்லி தான்.
அந்த வல்லி அவளைப் பார்த்து பெருமைப் படுவது அவளுக்கு மிகவும் பெருமையான விஷயம்.
“உள்ள வாடி! வீட்டை சுத்திக் காட்டறேன். பார்த்து எப்படி இருக்கு என்று சொல்லு…!” என்று ஆர்வமாக அவளை வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு போனாள்.
மூன்று படுக்கை அறைகள், பெரிய சமையல் அறை, கூடம் என்று கிரானைட் இழைத்து சோபாக்கள் டிவி என்று அங்கங்கே பொருத்தமான இடத்தில் எல்லா பொருட்களும் இருப்பதை பார்த்து மல்லிக்கு அளவிட முடியாத சந்தோஷம்.
பத்துக்கு பத்து ஓட்டை குடிசையில் ஐந்து அக்காள்கள் அப்பா அம்மாவோடு அவள் ஒண்டிக் கொண்டு இருந்ததை பார்த்தவளுக்கு தோழியின் வளர்ச்சி ரொம்பவே பெருமையாக இருந்தது.
“வல்லி! இது வீட்டு லோன் போட்டு தான் வாங்கினேன். இது வரைக்கும் சம்பாரிச்சதேல்லாம் பெரும்பங்கு அக்காங்க கல்யாணம் பிள்ளைபேறு இப்படி போய்டுச்சு. இந்த கடன் அடைய இன்னும் ஆறு ஏழு வருசமாவது ஆகும். ஆனா அடைச்சிடலாம் என்ற நம்பிக்கை இருக்குடி…அதுக்கு அப்புறம் என்னடி? ஜாலியாக இருக்கலாம்…”
சாவித்திரி மனம் விட்டு தோழியிடம் தன் எதிர்கால திட்டம் பற்றி சொல்ல மல்லி சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“அதெல்லாம் சரி தாண்டி…! ஆனா இப்படி தனியாவே இருக்கப்போறியா? எப்படி கல்யாணம் செஞ்சிக்கப் போறே..?”
சாவித்திரி அவளின் கேள்வியை கேட்டு திரும்பி அவளைப் பார்த்தாள்.
“இப்படி நீ நிக்க காரணமே அந்த பாழாப்போன கல்யாணம் தான். அப்படி இருந்தும் என்னைப் பார்த்து ஏண்டி இந்த கேள்வி கேக்கறே…?”
சாவித்திரி மல்லியின் மனநிலையை பற்றி யோசிக்காமல் கேட்ட அந்த கேள்வியில் மல்லியின் சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போல மறைந்தது.
அவளின் கேள்வியில் மல்லியின் முகம் வாட “நீ கேக்கறதும் சரி தாண்டி! உன்னை கேட்க எனக்கு என்ன தகுதி இருக்கு…?” என்று தலை குனித்து கொண்டாள்.
அவள் வருந்தவும் நாக்கை கடித்துக்கொண்ட சாவித்திரி “ அடியே! நான் தாண்டி நடிகையர் திலகம் பேர் வெச்சிருக்கேன். நீ ஓவரா சோக சீன போடாதே….” என்று அவள் தோளைப் அணைத்துக் கொண்டு சமாதானம் செய்தாள்.