“ஏய், அழுது கிழுது வச்சிராத டி. நான் சும்மா விளையாட்டுக்கு தான் வம்பிழுத்தேன். எனக்கு அண்ணி நீ தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் என் அண்ணன் உன்னை விட மாட்டான் போல? எனக்கு அவன் மனசு கொஞ்சம் புரியுது. ஆனா உன் மனசு தான் சுத்தமா புரிய மாட்டிக்கு”
“ஏன் அப்படிச் சொல்ற?”
“அண்ணனைப் பத்தி பேசினதும் உன் முகத்துல வெட்கம் வரும்னு நினைச்சேன். ஆனா வரலை. சரி என் அண்ணனுக்கு வேற பொண்ணைப் பாக்குறேன்னு சொன்னப்ப சரி பாத்துக்கோன்னு சொல்லுவன்னு பாத்தேன். ஆனா நீ கண்ணுல கண்ணீர் விடுற? நீ அவனை விரும்புறியா இல்லையா பாரதி? எனக்கு சத்தியமா புரியலை. உன் மனசுல என் அண்ணன் இருக்கானா இல்லையா?”
“எனக்கு தெரியலை டி சஹி”
“இது என்ன டி பதில்?”
“எனக்கு உண்மைலே தெரியலை டி. எனக்கு உங்க அண்ணனைப் பிடிக்கும். அவங்களை மாதிரி ஒரு லைப் பார்ட்னர் வரும்னு எனக்கு தோணும். ஆனா இது லவ்வான்னு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை”
“நீ என்னடான்னா இப்படி உளறுற? அவன் என்னடான்னா உன் பேரைச் சொன்னாலே ரொம்ப ஆர்வமா ஆகுறான்? எனக்கு எதுவும் புரியலை. ரெண்டு பேரும் புரியாத புதிரா இருக்கீங்க”
“என்ன சொல்ற சஹி? அவங்க என்னைக் கேட்டாங்களா?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள் பாரதி.
அவள் கண்களில் வந்த சந்தோசத்தை எப்போதும் போல் புரியாமல் பார்த்த சஹானா “அவன் உன்னைக் கேக்காம இருப்பானா? தினமும் நான் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் உன்னை பத்தி தான் முதலில் கேப்பான். நீங்க ரெண்டு பேரும் ஒரு ரெண்டு மூணு தடவை பாத்துருப்பீங்களா? அதுக்குள்ள எப்படி டி இவ்வளவு அன்பு? நீ எப்படி கிளாஸ்க்கு வந்ததும் என் அண்ணனைப் பத்தி விசாரிக்கியோ, அதே மாதிரி நான் வீட்டுக்கு போனதும் அவன் உன்னைப் பத்தி தான் விசாரிப்பான். அவன் என் கிட்ட உன்னைப் பத்தி விசாரிக்கிறதுக்கு அப்படியே அசடு வழிய வந்து நிப்பான் பாரு, பாக்க அவ்வளவு அழகா இருக்கும்”
“ஏய் அவங்களை கிண்டல் பண்ணாத டி”
“பார் டா என் அண்ணனுக்கு என் கிட்டயே சப்போர்ட்டா? . சரி சரி பேச்சு மாத்தாத? உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன ஓடுதுன்னு சொல்லு”
“ஒரு வேளை கடவுள் எனக்கும் உன் அண்ணனுக்கும் தான் முடிச்சு போட்டுருக்காரோ என்னவோ? இது என்னோட ஆசை மட்டும் தான். நடக்காம கூட போகலாம். ஏன்னா இது பேராசைன்னு எனக்கே நல்லா தெரியுது சஹி”, என்று கலங்கிய குரலில் சொன்னாள் பாரதி.
“அப்படி எல்லாம் இல்லை பாரதி”, என்று ஆறுதலாக சொன்னாள் சஹானா.
“நீ இல்லைன்னு சொன்னாலும் அது தான் உண்மை. நான் உன் அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சா அது என் தகுதிக்கு மீறின ஆசை தான் சஹி”, என்று பாரதி சோகமாக சொன்னதும் அவள் மனநிலையை மாற்ற “சரி அதை விடு, காலைல சாப்பிட்டு வந்தியா? இல்லை வெறும் வயித்தோட வந்தியா?”, என்று கேட்டாள் சஹானா.
“இல்லை… இன்னைக்கு காலைல ஹாஸ்ட்டல்ல இடியாப்பம் டி”
“நினைச்சேன். அப்ப பட்னியா தான் வந்திருப்ப. சரி சரி இன்னும் கிளாஸ் ஆரம்பிக்க டைம் இருக்கு. உனக்கு ரெண்டு தோசை எடுத்துட்டு வந்தேன். ஒழுங்கா சாப்பிடு”, என்று சொல்லி அவள் கையில் கொடுத்ததும் கண்ணீருடன் அதைப் பெற்றுக் கொண்டாள் பாரதி. அன்னமிடுவதில் சஹானா எப்போதும் அவளுக்கு அன்னை தான். தினமும் அவளுக்கு உணவு எடுத்து வந்து விடுவாள். ஒரு வேளை காலையில் ஹாஸ்டலில் பாரதி சாப்பிட்டு விட்டால் பிரேக் டைமில் அவள் கொண்டு வந்ததை சாப்பிடுவாள். சில நேரம் சஹானா வீட்டில் நான்வெஜ் சமைத்தார்கள் என்றால் பாரதிக்கு மதிய உணவும் எடுத்து வருவாள்.
அவளது அன்பை எண்ணி பாரதி மனம் விம்மியது. பாரதி அன்புக்காக ஏங்கும் ஒரு சராசரிப் பெண் தான். அந்த அன்பு தான் சஹானாவின் அண்ணன் மீது ஒரு ஈர்ப்பை அவளுக்கு ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அவன் மீது அவளுக்கு இருப்பது காதலா ஈர்ப்பா என்று தெரியாமல் குழம்பி தவிக்கிறாள்.
பாரதி இப்போது படிப்பது மதுரையில் என்றாலும் அவளது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த மானூர் என்ற கிராமம் தான்.
அவளது தந்தை கேசவன் பஞ்சாயத்து போர்டில் கிளார்க்காக வேலை செய்கிறார். பாரதி பிறந்ததும் அவளது அன்னை இறந்து விட்டாள். சின்னக் குழந்தையை வைத்து கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த கேசவனுக்கு உறவினர்கள் சேர்ந்து மறுமணம் செய்து வைத்தார்கள்.
குழந்தையை வளர்க்க என்று சொல்லி கேசவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவள் தான் அமுதா. முதலில் மற்றவர்களுக்காக குழந்தையை ஆசையாக பாசமாக பார்த்துக் கொண்டவள் அதன் பின் பாரதியை கண்டு கொள்ளவே இல்லை.
கேசவனை தன்னுடைய கைக்குள் போட்டுக் கொள்ள ஆரம்பித்தாள். அந்த இளம் வயதின் தாபமும் புது மனைவியின் மோகமும் கேசவனுக்கு அதிகமானதால் பாரதி அவரின் சந்தோசத்துக்கு இடைஞ்சலாக இருந்தாள். அதனால் குழந்தையை அடிக்கடி அவருடைய பெற்றோரிடம் கொடுத்து விடுவார் கேசவன்.
தாயின் அரவணைப்பு இல்லாமல் தந்தையின் ஆறுதல் இல்லாமல் பாரதிக்கு நினைவு தெரியும் வரை அவளது தாத்தா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தாள் பாரதி. பாரதியின் தாத்தா பாட்டிக்கு வயசானதால் அவர்களும் ஒருவர் பின் ஒருவர் என வரிசையாக இறந்து விட்டனர். அதன் பின் அவள் அப்பா மற்றும் சித்தியுடன் இருக்க வேண்டிய நிலைமை. சரியாக விவரம் தெரியும் வயதில் தான் அவர்கள் வீட்டுக்கு வந்தாள் பாரதி.
இங்கே வந்ததும் அவள் அடைந்த இன்னல்கள் பல. “அப்பா”, என்று பாசமாக கேசவனை அவள் நெருங்கினால் அவரிடம் அதற்கான எதிர் வினை எதுவும் இருக்காது.
“என்ன? போய் படி போ. மனுஷன் வீட்டுக்கு வந்ததும் அப்பான்னு வந்து மேல பாயுறது?”, என்று அவளை அரட்டுவாள் அமுதா. அப்படியே கண்கள் கலங்க நிற்கும் பாரதியை கேசவனும் கண்டு கொள்ள மாட்டார். “போய் படி போ”, என்று விரட்டி விடுவார் கேசவன். இருவரையும் திரும்பி பார்த்த படி போகும் பாரதியை யார் கண்டாலும் அவர்களுக்கு பரிதாபம் வரும். ஆனால் இவர்கள் நெஞ்சில் மட்டும் எந்த ஈரமும் இருக்காது போல?
இரவு காலில் தனியே படுக்க பயமாக இருக்கும் போது “அப்பா உங்க கூட படுக்குறேன். வெளிய பயமா இருக்கு”, என்று அவள் அழ “ஒழுங்கா வெளிய போய் படு டி. பொம்பளைப் பிள்ளைக்கு என்ன அப்பா கூட படுக்க வேண்டியது இருக்கு?”, என்று அமுதா அவளை வெளியே விரட்டி விடுவாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கேசவன் எதுவும் சொல்ல மாட்டார்.
அவர்கள் வீட்டில் ஒரு பெட்ரூம் மட்டும் தான் உண்டு என்பதால் அதை அமுதா மற்றும் கேசவன் எடுத்துக் கொள்ள பாரதி ஹாலில் தனியாக தான் உறங்குவாள்.
பாரதி ஹாலிலே இருக்க எப்பவுமே அப்பா மற்றும் சித்தி இருக்கும் அறை அடைத்தே தான் இருக்கும். சில நேரம் அவள் தூங்க முடியாமல் தவிக்கும் போது அறைக்குள் இருந்து கேட்கும் இருவரின் கொஞ்ச சத்தங்கள் எல்லாம் அவளுக்கு வெறுப்பை தான் கொடுத்தன. பாரதி அப்போதில் இருந்தே தனிமை உணர்வை அனுபவிக்க ஆரம்பித்தாள். தனக்கு யாருமே இல்லை என்ற எண்ணம் அவளுக்கு அப்போதே வந்திருந்தது. அவள் மனமே அவள் மட்டும் தனி என்று நம்ப ஆரம்பித்திருந்தது. அதன் பின் அவள் அதிகம் கேசவனை தேடியதில்லை. அப்பா என்று அவரை அழைப்பதையும் குறைத்துக் கொண்டாள். அமுதாவை ஏற்கனவே அவள் அம்மா என்று அழைத்து அதற்கு அமுதா திட்டி சித்தி என்று அழைக்கச் சொன்னதால் தேவையான போது அவளை சித்தி என்று அழைத்தாலும் அதிகமாக எல்லாம் அழைக்க மாட்டாள்.
அமுதா பார்க்கச் சொன்ன வேலைகளை செய்வாள். அமுதா கொடுக்கும் உணவை உண்பாள். பள்ளிக்கு போவாள் வருவாள். வீட்டு வேலை அதிகம் இருக்கும் என்பதால் விளையாடக் கூடச் வெளியே செல்ல மாட்டாள். சில நேரம் ஆசையாக அவள் விளையாடச் சென்றாலும் அமுதா கேசவனிடம் எதையாவது போட்டுக் கொடுத்து அவரிடம் அடி வாங்க வைப்பாள். அதனால் எங்கேயும் செல்ல மாட்டாள். கெட்டதிலும் நல்லதாக ஒரே ஒரு விஷயம் உண்டென்றால் அது அமுதா அவளை அடிக்க மாட்டாள். எக்காரணம் இருந்தாலும், எதையாவது பொருளை கீழே போட்டு பாரதி உடைத்தால் கூட அவள் மீது அமுதா கை வைக்க மாட்டாள். ஆனால் அவளுக்கு பதில் கேசவன் அவளை அடி பின்னி விடுவார். அவர் அடிக்கும் போது அன்னை மடி தேடும் அந்த கன்றை பூமி மாதா மட்டும் தான் அனைத்துக் கொள்வாள்.