”என்ன டி யா? டின்னா சொன்னீங்க? ஏங்க டின்னா சொன்னீங்க? உங்களைத் தான் கேக்குறேன். நீங்க எப்படி என்னை டின்னு சொல்லலாம்?”, என்று அவள் கோபமாக கேட்க வேகமாக அவளை நெருங்கிய தமிழ் அவள் வாயை பொத்திய படியே “உனக்கு என்ன தான் டி பிரச்சனை? இத்தனை நாள் ஏதாவது பேசுனியா? இன்னைக்கு மட்டும் தூங்க விடாம படுத்துற? உன்னை என்ன செய்றேன் பாரு?”, என்று கேட்டான்.
தன் மேல் கவிழ்ந்திருந்த அவனை விழி விரித்துப் பார்த்தாள் பாரதி. அவனுடைய அருகாமையில் அவளுக்கு மூச்சடைத்தது. அவள் கண்கள் அங்கும் இங்கும் நகர்ந்து அவனையே பார்த்தது. அவள் விழிகளில் இருந்த தடுமாற்றத்தைப் பார்த்தவனுக்கு அவளுடைய நெருக்கம் அவன் உணர்வுகளை மெதுவாக தீண்ட ஆரம்பித்தது.
குடை போல கவிழ்ந்த அவளுடைய இமைகள் அவனை வாவென அழைக்க அவளுடைய வாயை மூடி இருந்த கைகளை மெதுவாக எடுத்தான்.
கையை எடுத்ததும் அவள் தன்னை விலக்குவாள் என்று எதிர் பார்க்க அவள் கண்களோ மயக்கத்தை பிரதிபலித்தது.
“பாரதி”, என்று அவன் உதடுகள் முணுமுணுக்க அவள் எச்சில் விழுங்கினாள். அவள் இதயம் எம்பிக் குதித்தது. அவளது பேச்சுகள் அனைத்தும் தொண்டைக்குள் அடங்கிப் போனது. அவனுடைய அருகாமை அவளுக்கு வெறுப்பை உண்டாக்காமல் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் கிளர்ந்து எழுந்ததில் அவள் தான் திகைத்துப் போனாள்.
“நான் இவனை விரும்ப ஆரம்பிச்சிட்டேனா? ரிஷியை மறந்துட்டேனா?”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க அவனோ அவள் முகம் நோக்கி குனிந்து விட்டான்.
அவளுடைய இதழ்களை அவன் இதழ்கள் சிறை பிடிக்க அவன் முத்தத்தில் அதிர்ந்து போய் இருந்தாள். அவன் முத்தமிட்டதும் அவள் மனதில் ரிஷியைப் பற்றிய எண்ணம் எல்லாம் மறைந்து போக அவன் முத்தத்தை அவள் மனது ரசிக்க ஆரம்பித்து விட்டது.
கையை எடுத்து அவன் கழுத்தைச் சுற்றி வளைக்க அவள் மனம் நினைக்க கையை எடுக்கப் பார்த்தாள். ஆனால் அவன் கால்கள் அவள் கைகளை சிறை பிடித்திருந்தது. அதை அவள் எடுக்க போராட அந்த செய்கையில் அவளிடம் இருந்து விலகி எழுந்து கொண்ட தமிழ் “சாரி பாரதி”, என்று சொல்லி விட்டு அறையை விட்டே வெளியே சென்று விட்டான்.
சுகமான நிகழ்வு தடை பட்டதில் ஏமாற்றமாக இருந்தது பாரதிக்கு. அவனைக் கட்டிப் பிடிக்க தான் அவள் கையை நகற்றினாள். ஆனால் அவனோ அவளுக்கு விருப்பம் இல்லை போல என்று எண்ணி விலகிச் சென்று விட்டான்.
அவள் மனதை வார்த்தையால் உணர்த்தினால் அவன் சரியாகியிருப்பான். ஆனால் அதைச் சொல்ல அவளுக்கு தைரியம் இல்லை. அப்படி அவள் மனதை சொல்ல வேண்டுமானால் அவள் ரிஷியைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஏற்கனவே பெண் பார்க்க வந்த நாள் அன்று அவன் அவளை தவறாக பேசினான்.
இதில் ரிஷியை பற்றி சொன்னால் அவன் புரிந்து கொள்வானா என்பது கேள்விக் குறி தான். கூட ரிஷியைப் பற்றி என்ன சொல்ல என்றும் அவளுக்கு தெரியவில்லை. அவனைக் காதலிச்சேன் என்றும் சொல்ல முடியாது. காதலிக்கலை ஆனா கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன் என்று எப்படி சொல்ல முடியும்?
அவள் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க மொட்டை மாடிக்குச் சென்ற தமிழோ ஆழ்ந்து மூச்சை இழுத்து இழுத்து வெளியேற்றினான். இன்று அவனால் வெறும் முத்தத்தோடு அவளை விலகி வர முடியவே இல்லை. ஆனால் அவள் அசையவும் தான் அவளது விருப்பமின்மையை உணர்ந்து விட்டுவிட்டான். ஆனாலும் அவனுக்கு அவஸ்தையாக இருந்தது.
அவளது அழகு அவன் சித்தம் முழுவதையும் குலைத்தது. அவளது சிவந்த முகம் கண் முன்னே வந்து அவனுக்குள் கனலை மூட்டியது. நீண்ட இமைகள் கொண்ட அகன்ற விழிகள் அவனை எப்போதுமே வேறு ஒரு உலகத்துக்கு அழைத்தது.
வெகு நேரம் நடை பயின்றவன் பாதி ராத்திரிக்கு மேல் தான் அறைக்குள் வந்து படுத்தான். அந்நேரம் அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளையே பார்த்த படி தூங்கிப் போனான்.
அடுத்த நாள் சீக்கிரமே கண் விழித்து விட்டாள் பாரதி. அருகில் தூங்கிக் கொண்டிருந்த தமிழைப் பார்த்தாள். நேற்றைய சம்பவம் எல்லாம் நினைவில் வந்து அவள் கண்களை கலங்க வைத்தது. திடீரென்று சஹானா நினைவும் ரிஷியின் நினைவும் வந்தது.
“எனக்கு கல்யாணமாகிருச்சுன்னு தெரிஞ்சா ரெண்டு பேரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? சஹானா என்னை துரோகின்னு சொல்லுவாளே? ரிஷி என்னைப் பத்தி எவ்வளவு கீழா நினைப்பான்? ரிஷியைப் பத்தி தமிழுக்கு தெரிஞ்சா இவனும் என்னை துரோகின்னு தானே நினைப்பான்? கடவுளே நான் யார்க்கும் உண்மையா இல்லாத மாதிரியே இருக்கே? நான் ரிஷியை விரும்பினது உண்மைன்னா அப்ப தமிழ் மேல எனக்கு எழுற உணர்வுக்கு என்ன பேர்? என் மனசு எனக்கே உண்மையா இல்லாம இருக்கே?”, என்று எண்ணினாள்.
ரிஷியைப் பத்தின உண்மையை சொன்னால் தமிழை விட்டு பிரிய வேண்டி வருமோ என்ற பயம் வந்தது பாரதிக்கு. அப்படி ஒரு எண்ணம் வந்ததும் தான் தமிழ் அவள் மனதை எவ்வளவு ஆக்ரமித்திருக்கிறான் என்று பயம் வந்தது.
ரிஷியை பிரிய அவள் இவ்வளவு கவலைப் பட்டதில்லை. ஆனால் இன்று தமிழை பிரிந்தால் அவளது மொத்த வாழ்வும் அவளுக்கு இல்லை. இத்தனை நாள் அவளுக்கு கிடைத்த சந்தோஷமும் அவளை விட்டுச் சென்று விடும் என்று எண்ணி வெகுவாக வலித்தது.
என்ன ஆனாலும் என்னால தமிழை விட்டு பிரிய முடியாது என்று மனதில் முடிவு எடுத்த பின்னர் தான் அவன் மீது அவளுக்கு இருக்கும் காதலை உணரவே செய்தாள்.
அவன் மீது இருக்கும் காதலை உணர்ந்தாலும் ரிஷியை பற்றிய குற்ற உணர்வோடு தமிழுடன் வாழ முடியாது என்றும் அவளுக்கு தோன்றியது. சீக்கிரம் சஹானாவிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் பாரதி.
அருகில் தூங்கிக் கொண்டிருந்த தமிழை திரும்பி பார்த்தாள். அவன் தலையை வருடிக் கொடுக்க அவள் கைகள் பரபரத்தது. ஆனாலும் பயம் வந்தது.
“எதுக்கு பயப்படுற? அவன் உன் புருஷன் தான்”, என்று மனசாட்சி தைரியம் கொடுக்க கையை நீட்டி அவன் தலை முடியை வருடிக் கொடுத்தாள் பாரதி. அவன் சற்று அசைய ஆரம்பித்ததும் உடனே அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
அவனோ கண் விழித்ததும் “சே கனவா? நான் கூட இவ தான் தலையைக் கோதிக் கொடுத்தான்னு நினைச்சிட்டேனே? இவளாவது செய்றதாவது?”, என்று எண்ணிக் கொண்டான்.
அதே போல குளித்து முடித்து வந்த பாரதியும் அவனை கண்டு கொள்ளாமல் நட மாட “எப்படி இருக்கா பாரு? கொஞ்சமாவது என் பக்கம் இவ பார்வை திரும்புதா? அழகா இருக்கேன்னு திமிரு. நானும் தான டி அழகா இருக்கேன்? அப்புறம் ஏன் என்னை பாக்க மாட்டிக்க?”, என்று எண்ணிய தமிழுக்கு ஒரு வேளை அவளுக்கு தன்னை பிடிக்க வில்லையோ? அதனால் தான் தன்னை விட்டு ஒதுங்கி இருக்கிறாளோ என்ற கேள்வி எழுந்து அவன் நிம்மதியைக் குலைத்தது. அவளே சரியானால் தான் உண்டு என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதன் பின் ஒரு நாள் மூர்த்தி வீட்டுக்கு கிளம்பினார்கள். எப்போதும் போல அவன் காரை எடுப்பான் என்று அவள் நினைக்க அவனோ அவனுடைய புல்லட்டை எடுத்து நிறுத்தினான்.
“என்னங்க, எதுக்கு வண்டி?”, என்று அவள் திணறிய படி கேட்க “இகே ஊர்ல தானே உன் மாமா வீடு இருக்கு. இதுக்கு எதுக்கு கார்? ஏறு பாரதி”, என்று அவன் சொல்ல அவள் ஏறாமல் நின்றாள்.
“என்ன அப்படியே நின்னுட்ட? என் கூட பைக்ல ஒட்டிட்டு வந்தா உனக்கு தோஷம் வந்துருமா? அந்த அளவுக்கு நான் தீண்டத் தகாதவனா?”, என்று அவன் கேட்டதும் அவனை முறைத்துப் பார்த்த பாரதி “இது வரைக்கும் நீங்க என்னை ஒட்டிக்கிட்டதே இல்லையா? அப்ப எல்லாம் எந்த தோஷம் பிடிச்சதாம்? நீங்க வண்டில போனா அவ்வளவு கம்பீரமா இருக்குமாம். ஊர்ல இருக்குற அத்தனை பொம்பளைங்களும் உங்களை தான் ரசிப்பாங்களாம். அதனால தான் வேண்டாம்னு சொன்னேன்”, என்றாள்.
“பாரு டா, எனக்கு யாரு இவ்வளவு விளம்பரம் கொடுத்தது?”, என்று சிரித்தான்.
“வேற யாரு அத்தை தான். பைக் வேண்டாமே பிளீஸ்”
“இத்தனை நாள் என்னை ரசிச்ச எல்லாரும் எனக்கு எப்படிப் பட்ட பேரழகி மனைவியா அமைஞ்சிருக்கான்னு பொறாமையா பாக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. அதனால வாயேன். பைக்ல போகலாம்”, என்றான் அவன்.
“ஐயே நான் என்ன அழகா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்”, என்று சிறு குழந்தை போல கேட்டாள் பாரதி.