“ஹலோ, லைன்ல இருக்கியா இல்லையா? என் அண்ணனை ஏமாத்த உனக்கு எப்படி பாரதி மனசு வந்துச்சு? நீ அவனுக்காக வெயிட் பண்ணுவேன்னு சொன்னதுனால தான டி அவன் பாரின் கிளம்பி போனான். இப்ப அவன் கேட்டா நான் என்ன சொல்வேன்? பாரதி ஒரு துரோகின்னா? கடவுளே நீ மட்டும் தானே எனக்கு பிரண்டுன்னு உன் மேல அவ்வளவு அன்பை வச்சேனே? ஆனா நீ சுயநலப் பிசாசா இருந்துருக்கியே?”, என்றாள் சஹானா.
“நான் பாரதியோட ஹஸ்பண்ட் பேசுறேன்”, என்றான் தமிழ். இப்போது அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். என்ன தான் பாரதி மேல் கோபமும் வெறுப்பும் இருந்தாலும் “கடவுளே அவ புருஷன் கிட்ட எல்லாத்தையும் உளறிட்டேனே? இதால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கே?”, என்று எண்ணினாள் அந்த உண்மையான தோழி.
அந்த பக்கம் பதில் வர வில்லை என்றதும் “ஹலோ லைன்ல இருக்கீங்களா?”, என்று கேட்டான் தமிழ்.
“ஆன் இருக்கேன் சார். நான் வந்து… ஏதோ தெரியாம… உளறிட்டேன்.. நீங்க அதை பெருசா எடுத்துக்க வேண்டாம்”
“நீங்க தெரியாம எதுவும் உளரலை. நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன். உங்க பிரண்டு மேல உண்மையான அன்பு இருந்தா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. நீங்க உண்மையைச் சொன்னா பாரதி வாழ்க்கைக்கு இடையூறு வரும்னு எல்லாம் நினைக்க வேண்டாம். என்னால யாருக்காகவும் எப்பவும் பாரதியை விட்டுக் கொடுக்க முடியாது அவ தப்பானவளாவே இருந்தாலும்”, என்று தமிழ் சொன்னதும் தான் நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள் சஹானா.
அந்த நிலைமையிலும் தோழி வாழ்க்கை கெடாது என்று எண்ணி சந்தோஷப் பட்ட சஹானா ரிஷியைப் பற்றி எல்லாம் சொன்னாள்.
எல்லாவற்றையும் கேட்ட தமிழ் பாரதி மற்ற பெண்கள் போல ரிஷியுடன் ஊர் சுற்றியதில்லை, காதல் என்று வழிந்ததில்லை, அவனுடன் போன் பேசிக் கொண்டு திரிந்தது இல்லை என்று நிம்மதியாக இருந்தது.
ரிஷி கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டதுக்கு சரி என்றிருக்கிறாள். ஆனால் அவளது வீட்டில் என்னை மாப்பிள்ளையாக பார்த்ததும் திருமணம் வேண்டாம் என்று மறுத்ததை பாரதியே சொல்லியிருக்கிறாள். பாரதி தவறான பெண் இல்லை என்று நிம்மதி அடைந்தான் தமிழ்.
அவன் அமைதியாக இருக்கவும் “சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன் சார். என்னால பாரதியை மன்னிக்க முடியலை. ஏன்னா அவ என் அண்ணன் வாழ்க்கையோட விளையாடிட்டா. அவன் கிட்ட எப்படி சொல்லன்னு எனக்கு பயமா இருக்கு”, என்றாள் சஹானா.
“நீங்க உங்க ஃபிரண்ட் மேல கோப பட வேண்டிய அவசியமே இல்லை மிஸ்…..”, என்று அவள் பெயர் தெரியாததால் அவன் கேள்வியாக நிறுத்த “என் பேர் சஹானா, என் அண்ணன் பேர் ரிஷி”, என்று சொன்ன சஹானா “எதுக்கு அவ மேல கோபம் வரக் கூடாது? அவ பண்ணது சரின்னு நீங்களே சொல்றீங்களா?”, என்று கேட்டாள்.
“அவ ஒண்ணுமே பண்ணலைன்னு சொல்றேன்”
“வாட், என்ன சார் சொல்றீங்க? அவ என்னோட அண்ணனை ஏமாத்தினது நிஜம்”
“என்ன ஏமாத்தினா? கண்ணாளா காதலா நீ இல்லாம நான் இல்லைன்னு உன் அண்ணன் கிட்ட டயலாக் பேசி ஏமாத்தினாளா?”
“அப்படி எல்லாம் இல்லை, எனக்கு தெரிஞ்சு அவங்க அதிகம் பேசிக் கிட்டதே இல்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா”
“அப்படி சொல்லிய பாரதி உங்க அண்ணனை கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு அவ பக்கம் ஏதாவது காரணம் இருந்துருக்கும்னு ஏன் உங்களுக்கு தோணலை? ஏன்னா உங்க மனசு உங்க அண்ணன் பக்கம் மட்டும் தான் பாத்துருக்கு. உங்க தோழி பக்கம் பாக்கலை”
“நீங்க என்னைக் குழப்புறீங்க சார்”
“சொல்றேன், நான் உங்க அண்ணன் கிட்ட பேசலாமா? நானே எங்க கல்யாணத்தைப் பத்தி அவர் கிட்ட சொல்றேன். கான்பரன்ஸ் போட முடிஞ்சா போடுங்களேன்”
“இதோ போடுறேன் சார். ஆனா கொஞ்சம் கவனமா பேசுங்க. ஏன்னா அவன் ரொம்ப சென்ஸிட்டிவ்”, என்று சொல்லி விட்டு தான் ரிஷிக்கு லைன் போட்டாள்.
“என்ன சஹானா இந்நேரம் கால் பண்ணிருக்க? பாரதி கிட்ட இருந்து தகவல் ஏதாச்சும் வந்துச்சா?”, என்று கேட்டான் ரிஷி.
அவன் கேட்டதைப் பார்த்த தமிழுக்கு வருத்தமாக இருந்தாலும் இப்போதைக்கு தான் அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது அல்ல என்பதால் “ஹலோ ரிஷி, நான் தான் உங்க தங்கை கிட்ட இப்ப பேசணும்னு சொன்னேன். எனக்காக தான் அவங்க கால் பண்ணினாங்க. என் பேர் தமிழ். நான் பாரதியோட கணவன்”, என்றான்.
“என்ன? பாரதிக்கு கல்யாணம் ஆகிருச்சா?”, என்று ரிஷி அதிர்ச்சியாக கேட்க “ஆமாண்ணா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணி கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னா. நான் கோபத்துல திட்டிட்டு போனை வச்சிட்டேன். அப்புறம் அதே நம்பர்ல இருந்து திரும்ப திரும்ப போன் வரவும் கோபத்துல நீ என்னோட அண்ணனை ஏமாத்தின துரோகின்னு எல்லாம் கத்திட்டேன். ஆனா எல்லாத்தையும் அவளோட ஹஸ்பண்ட் கேட்டுட்டார். அதான் எல்லாமே சொன்னேன். அவர் தான் உன் கிட்ட கால் பேசணும்னு சொன்னார்”, என்றாள் சஹானா.
தங்கையின் அதிகப் பிரசங்கித்தனம் புரிந்த ரிஷி ஒரு நொடி திகைத்து “சார், என் தங்கை பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. நான் பாரதியைக் கல்யாணம் பண்ண நினைச்சேன் தான். ஆனா அவ… சாரி அவங்க என்னை லவ் பண்ணி எல்லாம் ஏமாத்தலை. அவங்க துரோகி எல்லாம் இல்லை”, என்றான். மனது வலித்தாலும் அதை மறைத்துக் கொண்டு தமிழிடம் பேசினான் ரிஷி.
அவன் பேசியதைக் கேட்டு புன்னகைத்த தமிழ் “உங்க தங்கை உங்களை ரொம்ப சென்ஸிட்டிவ்ன்னு சொன்னாங்க. ஆனா நீங்க பிராக்டிகலா இருக்கீங்க?”, என்றான்.
“அம்மா அப்பா கிட்ட அழுது அடம் பிடிச்சு நினைச்சதை சாதிச்சுக்குவேன் சார். ஆனா வெளிய போல்ட் தான். அதான் அவ அப்படி சொல்லிருக்கா. டாக்டரா இருந்துட்டு சென்ஸிட்டிவா எப்படி இருக்க முடியும்? சார் நீங்க பாரதியை தப்பா எதுவும் நினைக்கலை தானே? அவங்க ரொம்ப நல்ல பொண்ணு”, என்று தயக்கத்துடன் கேட்டான் ரிஷி.
“பாரதியை கல்யாணம் பண்ண நினைச்ச நீங்களே அவ தப்பான பொண்ணு இல்லைன்னு சொல்லும் போது ஒரு மாசம் அவ கூட ஒரே வீட்ல இருந்துருக்கோம். அவ எப்படின்னு என்னால சொல்ல முடியாதா? பாரதி மேல எந்த தப்பும் இல்லை ரிஷி. ஏன்னா உங்களை நினைச்சு தான் அவ வீட்ல இந்த கல்யாணம் வேண்டாம்னு பேசிருக்கா. ஆனா அவங்க என்ன சொல்லி அவளை சம்மதிக்க வச்சங்கான்னு தெரியலை. ஆனா கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாள்ல அவ என் கூட வாழவே ஆரம்பிக்கலை”
“சார்”, என்று ரிஷி அலற சஹானாவுக்கும் திகைப்பு தான்.
“ஆமா ரிஷி, நானும் அவளும் இப்ப வரை தனித் தனியா தான் இருக்கோம். ஆனா அவ உங்க மேல உள்ள காதல்னால என்னை விலக்கி வைக்கலை. உங்களை ஏமாத்திட்டோமேன்னு குற்ற உணர்ச்சில தான் விலகி இருக்கா. நீங்க அதை சரியா புரிஞ்சிக்கணும்”
“எனக்கு புரியுது சார். உங்களை கல்யாணம் பண்ணிட்டு என்னை லவ் பண்ணுற அளவுக்கு பாரதி தப்பான பொண்ணு கிடையாது. இந்நேரம் அவ உங்களை தான் மனசார விரும்பிருப்பா. ஆனா நான் என்ன நினைப்பேன்னு தான் அவ சிந்தனையா இருக்கும்”
“ஆமா நீங்க சொல்றது தான் உண்மை. அவ கூட சேந்து வாழாம போனாலும் அவ கண்ணுல எனக்கான காதலை நான் பாத்துருக்கேன். நம்ம ரெண்டு பேருக்கும் இடைல போராட முடியாம தான் இத்தனை நாள் அமைதியா இருந்தவ இன்னைக்கு என் போன்ல இருந்து கால் பண்ணிட்டா”
“ஆமா அப்படி தான் சார் இருக்கும்”
“இந்த சார் எல்லாம் வேண்டாம். தமிழ்னு கூப்பிடுங்க”
“சரி தமிழ். அப்புறம் இன்னொரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும். ஏன்னா இது தான் முக்கியமானது. ஏன்னா அவ அப்ப அந்த கேள்வி கேட்டப்ப எனக்கு புரியலை. ஆனா இப்ப புரியுது”
“என்ன ரிஷி?”
“நான் கல்யாணத்தைப் பத்தி அவ கிட்ட பேசும் போது அவ என் கிட்ட என்ன கேட்டா தெரியுமா? நீங்க சஹானா மாதிரி என்னையும் பாத்துக்குவீங்களான்னு தான் கேட்டா”
“வாட்?”, என்று தமிழ் அதிர “ஆமா சார் என் கிட்டயும் அப்படி தான் சொல்லுவா. என் அண்ணனை உனக்கு எதுக்கு டி பிடிச்சதுன்னு கேட்டா அவர் உன்னை செல்லமா பாத்துக்குறார்ல? அதனால தான் பிடிக்கும்னு சொல்லுவா”, என்று சொன்ன சஹானாவுக்கும் ரிஷியை அவள் என்ன மன நிலையில் பார்த்திருக்கிறாள் என்று புரிந்து போனது.
“உங்களுக்கு புரியுதா தமிழ்? பாரதி என்னை லவ் பண்ணலை. நான் சஹானா மேல அன்பு வச்சிருக்குறதை பாத்து தான் என்னைக் கல்யாணம் பண்ண நினைச்சிருக்கா”, என்றான் ரிஷி.
“அவ மனசு எனக்கு அப்பவே கொஞ்சம் புரிஞ்சது ரிஷி. இப்ப நீங்க சொன்னப்புறம் அவ மனசு தெளிவா புரிஞ்சிட்டு. அவ மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். ஆனா அவ உங்களை விரும்பலைன்னா கூட நீங்க உண்மையா அவளை விரும்புனீங்க தானே ரிஷி?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் தமிழ்.
“இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை தமிழ். நாம எத்தனையோ பேரைக் கல்யாணம் பண்ண நினைச்சிருப்போம்ல? அது மாதிரி தான் பாரதியும். ஏன்னா நானும் அவ கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமானு தான் கேட்டேன். எங்க ரெண்டு பேருக்குள்ள காதல் அப்படிங்குற வார்த்தையே வரலை. உங்களுக்கு என் பேச்சுல நம்பிக்கை வரலைன்னா நான் வேற பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டப்ப நம்புங்க ஓகே வா?”, என்று புன்னகையுடன் கேட்டான் ரிஷி.