“அம்மா அவங்களை உக்கார வச்சு டீ கொடுங்க. நாங்க இப்ப வந்துறோம்”, என்று சொல்லி விட்டு பாரதியின் கை பற்றி தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்கு வந்ததும் “இப்ப சொல்லு, யார் அவங்க?”, என்று நிதானமாக அதே நேரம் கூர்மையாக கேட்டான் தமிழ்.
அவள் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அதிர்ந்து விழிக்க “உன்னைத் தான் கேக்குறேன் பாரதி. உன் கூட படிச்ச பொண்ணு உன்னைப் பாக்க வந்தா நீ இவ்வளவு அதிர்ந்து போக வேண்டிய அவசியமே இல்லையே? யாருன்னு சொல்லுவியா? இல்லை முடியாதுன்னாலும் தெளிவா சொல்லிரு”, என்று கோபமாக கேட்பது போல கேட்டான்
“ஓ, சரி இப்ப சொல்லு. இன்னைக்கு தான் நல்ல நேரம் போல”, என்று நக்கலாக சொன்னான்.
அவனுடைய நக்கல் குரல் அவளை பாதிக்க “நான் சொன்னா என்னை விட்டு விலகிற மாட்டீங்க தானே? எனக்கு நீங்க வேணுங்க”, என்று கலங்கிய குரலில் சொன்னாள்.
“அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பாரதி. சீக்கிரம் என்ன விசயம்னு சொல்லு”
“ரிஷியை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டேன்”, என்று பயத்துடன் சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். இப்போது அவன் அதிர்ச்சியாக அவளை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீ அவனை விரும்புனியா? ரெண்டு பேரும் லவ் பண்ணுனீங்களா?”, என்று தெரியாதது போல கேட்டான்.
“இதுக்கு என்ன பதில் சொல்லன்னு எனக்கு தெரியலைங்க. இதை நீங்க எப்படி புரிஞ்சிப்பீங்கன்னும் தெரியலை. நான் எல்லாத்தையும் சொல்றேன். அப்புறம் நீங்களே முடிவுய் பண்ணிக்கொங்க ஏன்னா இந்த விசயத்துல எனக்குள்ள பல குழப்பம்”
“கதை சொல்ல நல்ல நேரம் பாத்த போ. ஆனா இப்ப இவங்க வரலைன்னா இந்த உண்மையை சொல்லிருக்கவே மாட்ட தானே பாரதி?”, என்று கூர்மையாக கேட்டான்.
அவன் கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்தவள் “இந்த உண்மையை உங்க கிட்ட கண்டிப்பா சொல்லிருப்பேன்னு என்னால உறுதியா சொல்ல முடியலை. ஆனா இந்த குழப்பத்தோட நான் உங்க கூட வாழ்ந்துருக்க மாட்டேன்”, என்றாள்.
“அப்ப நீ என்னை இத்தனை நாள் அவாய்ட் பண்ணினதுக்கு காரணம் இந்த ரிஷி தானே?”
“ஆமா ஆனா அது அவங்க மேல உள்ள காதல் எல்லாம் கிடையாது. அவங்களைக் கல்யாணம் பண்ண நினைச்சிட்டு உங்க மேல ஆசை வந்தது எப்படின்னு தெரியாம குழப்பத்துல தான் ஒதுங்கிப் போனேன்”
“ஆசையா?”, என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான் தமிழ். அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க “நம்ம பஞ்சாயத்தை அப்புறம் பாக்கலாம். இப்ப டென்ஷன் ஆகாம ரிலாக்சா கீழ வா. அம்மா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியக் கூடாது புரியுதா?”, என்று சொல்லி அவளை கீழே அழைத்துச் சென்றான். பயத்தில் அவன் கையைப் பற்றிய படியே தான் கீழே வந்தாள்.
சஹானா மற்றும் ரிஷியை அமர வைத்து அவர்களுக்கு டீ கொடுத்துக் கொண்டிருந்தாள் கோகிலா. பாண்டியன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். தமிழும் பாரதியும் அங்கே வந்ததும் பாண்டியன் “நீங்க பேசிட்டு இருங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
“நான் உங்களுக்கு டிபன் செய்றேன்”, என்று சொல்லி விட்டு கோகிலாவும் சென்று விட்டாள்.
ரிஷி பாரதியை தான் பார்த்தான். இப்போது அவனுக்கு அவளுடைய அழகு எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. தமிழின் மனைவி என்ற எண்ணத்தில் தான் அவளைப் பார்த்தான்.
ஒரு நொடி அங்கே யார் என்ன பேசுவது என்று தெரியாத மௌனம் நிலவ பாரதியோ அவர்களை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பற்றி இருந்த தமிழ் கையை விடவும் இல்லை.
தமிழ் தான் அங்கிருந்த நிசப்தத்தைக் கலைத்தான். “வாங்க ரிஷி, வாங்க சஹானா. நான் தமிழ், பாரதியோட கணவன்”, என்றான் தமிழ்.
“ஹலோ சார், உங்க கல்யாணத்துக்கு வர முடியலை. அதான் இப்ப பாக்கலாம்னு வந்தோம். ரெண்டு பேரும் பொருத்தமா அழகா இருக்கீங்க”, என்று சொன்னான் ரிஷி.
அவன் அப்படி சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி. அவள் கண்களில் பயம் மட்டுமே இருந்தது. இத்தனை நாள் ஆவலாக அவனைப் பார்க்கும் விழிகள் இன்று பயத்துடன் பார்ப்பதைக் கண்ட ரிஷிக்கு அவள் நிலைமை நன்கு புரிந்தது.
“எப்படி இருக்க பாரதி?”, என்று கேட்டாள் சஹானா. அடுத்த நொடி பாரதி அழுது விட்டாள். அவளை அனைத்துக் கொண்ட சஹானா “என்ன இது சின்னக் குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க? என்னோட பாரதி இப்படி எதுக்கு எடுத்தாலும் அழ மாட்டாளே?”, என்று சொல்லி அவளை சமாதானம் செய்தாள்.
“சஹி நான் வேணும்னு எதுவுமே செய்யலை டி. சத்தியமா நான் யாரையும் ஏமாத்தணும்னு நினைக்கலை. ஆனா மனசு முழுக்க குற்ற உணர்ச்சியா இருக்கு. உனக்கு மாமா என்னை எப்படி பாத்துகிட்டார்னு தெரியும்ல? அவர் ஆசையை நிறைவேத்த தான் இந்த கல்யாணம் நடந்துச்சு. ஆனா தமிழ் அவர் ரொம்ப நல்லவர். அவர் கிட்டயும் என்னால எதையும் சொல்ல முடியலை. ரிஷி கிட்டயும் நான் வெயிட் பண்ணுவேன்னு சொன்னேன். எனக்கு நான் எப்படி பட்டவன்னே தெரியலை டி”, என்று அழுது கொண்டே பேசினாள்.
“உன்னை எங்க எல்லாராலயும் புரிஞ்சிக்க முடியுது பாரதி. முதல்ல அழுகையை நிறுத்து. உன் மாமனார் மாமியார் எப்பனாலும் இங்க வரலாம்”, என்று சொன்னதும் தான் அவளிடம் இருந்து விலகினாள். பின் ரிஷி புறம் திரும்பி “சாரி”, என்று சொன்ன பாரதி கடைசியாக தமிழ் புறம் திரும்பி “நீங்க என்னை வெறுத்துற மாட்டீங்க தானே? என் மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க”, என்றாள்.
“ஏய் லூசு அவர் உன்னை அவ்வளவு லவ் பண்ணுறார். உன் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சியைப் போக்க தான் எங்களை இங்க வரவே சொன்னார். அவராவது உன்னை விடுறதாவது”, என்று சொன்னாள் சஹானா.
அதைக் கேட்டு அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். அதன் பின் சஹானா தான் அனைத்து விவரத்தையும் சொன்னாள்.
அனைத்தையும் கேட்ட பாரதி தமிழ் புறம் திரும்பி “சாரிங்க உங்க கிட்ட மறைக்கணும்னு நினைச்சது நீங்க என்னை வெறுத்துற கூடாதுன்னு தான். மத்த படி வேற எதுவும் இல்லை. உங்களை பிரிய முடியாதுன்னு நினைச்சப்ப தான் உங்களை நான் எவ்வளவு விரும்புறேன்னே எனக்கு புரிஞ்சது”, என்று மீண்டும் மன்னிப்பை வேண்டினாள்.
அவன் அவளை ஆதரவாக தன்னுடைய தோள் சாய்த்துக் கொண்டான்.
“சாப்பிட வாங்க”, என்று அழைக்க வந்த கோகிலா அங்கே பேசப் பட்ட அனைத்தையும் கேட்டு “இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்டாள்.
“அப்புறம் பாரதி வர பதினாளாம் தேதி கல்யாணம். அதுக்கு நீங்களும் தமிழும் கண்டிப்பா வரணும்”, என்று பத்திரிக்கையை நீட்டினான் ரிஷி.
“அவர் கிட்டயே கொடுத்துருங்க”, என்று புன்னகையுடன் சொன்னாள் பாரதி.
அவள் தன்னை பார்க்க முடியாமல் குற்ற உணர்வில் இப்போதும் தடுமாற அதை உணர்ந்து கொண்ட ரிஷி “அப்புறம் இன்னொரு விஷயம் பாரதி, சஹானாவுக்கு பாத்திருக்க மாப்பிள்ளை வருணுக்கு ஒரு தங்கை இருக்கா. அவ பேர் வனிதா. அவளுக்கும் எனக்கும் நான் படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் இருக்கும்”, என்று சொன்னான்.
அவன் அப்படிச் சொன்னதும் அவனை அதிர்ச்சியாக சஹானா பார்த்தாள் என்றால் தமிழோ இது என்ன புதுக் கதை என்னும் விதமாய் பார்த்தான்.
“நிஜமாவா சொல்றீங்க? ரொம்ப ரொம்ப சந்தோசம்”, என்று புன்னகையுடன் அவன் கண்களை பார்த்து சொன்னாள் பாரதி. அவன் வேறு பொண்ணைக் கல்யாணம் செய்ய போறேன் என்று சொன்னது அவள் மனதில் இருந்த குற்ற உணர்ச்சியை எல்லாம் விரட்டியது.
அதன் பின் சஹானாவும் ரிஷியும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். பாரதியும் சஹானாவும் பேசிக் கொண்டிருக்க “ரிஷி நீங்க சொன்னது உண்மையா? வருண் தங்கச்சியை நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?”, என்று ரகசியமாக கேட்டான் தமிழ்.
“பாஸ் சத்தம் போட்டுச் சொல்லாதீங்க. உங்க மனைவிக்காக தான் அப்படி சொன்னேன். நான் அப்படிச் சொன்ன அப்புறம் தான் அவங்க முகத்துல சிரிப்பே வந்துருக்கு. அப்புறம் ஒரு விஷயம் தெரியுமா? வருணுக்கு கூடப் பிறந்தவங்களே இல்லை. அதனால சஹானா கல்யாணத்துக்கு பாரதியை கூட்டிட்டு எல்லாம் வர வேண்டாம். எங்கயாவது ஹனிமூன் கூட்டிட்டு போங்க”, என்று சிரித்தான் ரிஷி.
“யு ஆர் கிரேட் ரிஷி. நான் இடைல வராம இருந்திருந்தா நீங்க பாரதியை கல்யாணம் பண்ணிருந்துருப்பீங்கல்ல?”
“ஆனா நான் அவளைக் கல்யாணம் பண்ணிருந்தா கண்டிப்பா உங்க கூட இருக்குற மாதிரி என் கூட சந்தோஷமா இருக்க மாட்டா”, என்று ரிஷி சொன்னதும் “எதுக்கு அப்படிச் சொல்றீங்க? என்னை சமாதானப் படுத்தச் சொல்றீங்களா?”, என்று கேட்டான் தமிழ்.