“ஒரு அழகான ஆம்பளையை பாத்தா போதும் அலையுவாளுங்களே”, என்று எண்ணிக் கொள்வான். பெண்களுக்கு அவன் மேல் மயக்கம் என்றால் பலருக்கு அவன் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு. பாண்டியனுக்கு கொடுக்கும் மரியாதையை இவனுக்கும் கொடுப்பார்கள். அந்த மரியாதைக்கு தகுதியானவன் தான் தமிழ்.
தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் வேலைக்கு அதிகமான கூலியும் தருவான். அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்வான். அதனால் அவன் மீது அவனிடம் வேலை செய்பவர்கள் பக்தியாக இருந்தார்கள்.
கஞ்சி போட்ட வெள்ளைச் சட்டை, பூப்போட்ட சாரம் இது தான் அவனது உடை. வெளி ஊருக்கு சென்றால் வெள்ளைச் சட்டையும் கருப்பு பேண்ட்டும் தான் அவனது உடை. வீட்டில் இரண்டு கார் இருந்தும் எப்போதும் புல்லட்டில் தான் வலம் வருவான். அவன் கழுத்தை ஒட்டி இருந்த தங்கச் செயினும் ஓம் என்று போட்ட டாலரும், கையில் இருந்த தங்கக் காப்பும் அவனுக்கு தனிக் கவர்ச்சியைக் கொடுத்தது.
ரைஸ் மில்லில் இருந்த தமிழ் தன்னுடைய கையில் கட்டியிருந்த வாட்சில் மணியைப் பார்த்தான். மணி ஏழு என்று காட்டியது.
வீட்டுக்கு போகவே அவனுக்கு சலிப்பாக இருந்தது. பாண்டியனும் கோகிலாவும் அவனுக்கு தீவிரமாக பெண் தேடுவதால் அவன் வீட்டுக்கு சென்றாலே இந்த பொண்ணைப் பாத்தோம் அந்த பொண்ணைப் பாத்தோம் என்று அதைப் பற்றி தான் பேசுவார்கள். அதைக் கேட்டு அவனுக்கு எரிச்சலாக வரும். அதை அவர்களிடம் காட்ட முடியாமல் தடுமாறிப் போவான். அதனால் இப்போது வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்.
அப்போது அவனது மொபைல் ஒலித்தது. யாரென்று எடுத்துப் பார்த்தான். அவனது அன்னை கோகிலா தான் அழைத்தாள். அதை எடுத்து காதில் வைத்த தமிழ் “சொல்லு மா”, என்றான்.
“எங்க தம்பி இருக்க? இன்னும் வீட்டுக்கு வரலையா?”, என்று கேட்ட கோகிலாவின் குரலில் பாசம் ததும்பியது.
“நம்ம மில்ல தான் மா இருக்கேன்”
“ஏன் தம்பி குரல் ஒரு மாதிரி இருக்கு?”
“இந்த அம்மாவுக்கு எப்படி தான் என் குரல்ல உள்ள வித்தியாசம் கூட தெரியுமோ?”, என்று எண்ணிக் கொண்டு “ஒண்ணும் இல்லை மா”, என்றான்.
“சரி சீக்கிரம் வீட்டுக்கு வா. உங்க அப்பா என்ன உன்னை இன்னும் காணும்னு வாசலை பாத்துட்டு உக்காந்துருக்கார். பனில ரொம்ப நேரம் நிக்காம வீட்டுக்கு வா டா”
“சரி மா வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.
“என்ன சொல்றான் உன் மவன்?”, என்று கேட்டார் பாண்டியன்.
“இப்ப வறேன்னு சொன்னான்”, என்று கோகிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கல்யாண தரகர் அங்கே வந்தார்.
“வாயா தரகரே, என்ன இந்த நேரம்? ஏதாவது ஜாதகம் அமைஞ்சதா? இல்லை ஏதாவது தேருமான்னு வசூல் பண்ண வந்தியா?”, என்று கேட்டார் பாண்டியன்.
“என்னங்கையா கோபமா பேசுறீங்க?”
“பின்ன உன்னைக் கொஞ்ச சொல்றியா? ரெண்டு வருஷமா என் மகனுக்கு ஒரு பொண்ணை தேடிட்டு இருக்க நீ. தேடுற தேடுற தேடிக்கிட்டே இருக்க”
“நம்ம தம்பிக்கு சரியான ஜாதகம் அமையலைன்னா நான் என்னங்க செய்ய?”
“சரி சரி ராகம் பாடாம வந்த விஷயத்தை சொல்லு”
“நம்ம தம்பிக்கு ஒரு ஜாதகம் வந்துருக்குங்க. பேர் பாரதி. இப்ப தான் காலேஜ் முடிச்சிருக்கா. அவங்க அப்பா தான் ஒரு வரன் பாக்கச் சொன்னார். நம்ம இனம் தான். ஆனா பாருங்க. உங்களை மாதிரி பணக்காரங்க இல்லைங்க”
“யார் பொண்ணு யா?”
“நம்ம பஞ்சாயத்து கிளார்க் மக தானுங்க”
“யாரு கேசவன் பொண்ணா?”
“ஆமாங்க”
“அவனே இளவட்டம் மாதிரி அவன் ரெண்டாவது பொண்டாட்டியைக் கூட்டிட்டு ஜாலியா வெளிய சுத்திட்டு இருக்கான். அவனுக்கு கல்யாண வயசுல பொண்ணு இருக்கா?”
“ஆமாங்க. கேசவனோட ரெண்டாவது சம்சாரம் தான் சீக்கிரம் அந்த பொண்ணைக் கட்டிக் கொடுக்கணும்னு சொல்லுச்சாம். அவர் வந்து ஜாதகத்தை கொடுத்து வரன் பாக்கச் சொன்னார்”
“பரவால்லயே, ரெண்டாவது சம்ஸாரமா இருந்தாலும் மூத்த தாரம் மக மேல பாசமா இருக்குதே”
“உண்மையை பேசிறது நல்லது தாணுங்களே. நாள பின்ன முழிக்க கூடாது பாருங்க”
“இப்ப என்ன சொல்ல வர?”
“அவங்க எப்படியும் இருந்துட்டு போகட்டும். நமக்கு பொண்ணு தாங்க ஐயா முக்கியம். பொண்ணு ரொம்ப அழகா இருக்கும். நம்ம மூர்த்தியோட அக்கா மக தாங்க. உங்களை வந்து பாக்குறதுக்கு முன்னாடி நானே நம்ம தம்பிக்கும் அந்த பொண்ணுக்கும் ஜாதகம் பாத்தேன். நல்லா பொருந்தி இருக்குங்க. நீங்களும் வேணும்னா பாத்துக்கோங்க. முதல்ல பொண்ணைப் பாருங்க”, என்று சொல்லி அவர்களிடம் பாரதியின் புகைப்படத்தைக் கொடுத்தார்.
அந்த போட்டோவைப் பார்த்தார் பொண்ணுரங்கம். மஞ்சள் நிற பட்டுச் சேலையில் அழகாக இருந்தாள் பாரதி. காலண்டரில் பார்க்கும் மகாலட்சுமி போல இருந்தவளைக் கண்டதும் இவள் தான் தங்களின் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது அவருக்கு.
“கோகிலா, இங்க பாரு டி. இந்த புள்ள எவ்வளவு அம்ஸமா இருக்குன்னு”, என்று சொல்லி அவளிடம் கொடுத்தார் பாண்டியன்.
பாரதியைப் பார்த்த கோகிலா திகைத்து தான் போனாள். அந்த ஊரிலே அப்படி ஒரு அழகியை அவள் பார்த்ததே இல்லை. கண்கள் மின்ன அவள் கணவனைப் பார்க்க அவர் தலையும் சம்மதமாக ஆடியது.
“சரி தரகரே, நாங்களும் ஜாதகம் பாத்துட்டு அப்புறம் உனக்கு சொல்றோம். அதுக்கப்புறம் நீ அவங்க வீட்ல பேசு”, என்று பாண்டியன் சொன்னதும் அவர் கிளம்பிச் சென்றார்.
இருவரும் அதன் பின் தமிழ் வருவது வரை பாரதியின் அழகைப் பற்றி தான் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
“வா தம்பி, உனக்கு ஒரு ஜாதகம் வந்துருக்கு டா”, என்று கோகிலா ஆரம்பித்ததும் “அம்மா எப்பவும் இதே பேச்சு தானா? இதுக்கு தான் வீட்டுக்கு வரவான்னு யோசிச்சேன். நான் குளிச்சிட்டு வரேன். சாப்பாடு எடுத்து வைங்க”, என்று சொல்லி விட்டு தமிழ் அவனுடைய அறைக்குள் சென்று விட்டான்.
“என்னங்க இப்படி சொல்லிட்டு போறான்?”, என்று கணவனிடம் புலம்பினாள் கோகிலா.
“பின்ன, அவன் கிட்ட பக்குவமா பேசாம இப்படி வந்த உடனே சொன்னா? சரி சரி நீ அவனுக்கு சாப்பாடு கொடு. போ. சாப்பிடும் போது அவன் கிட்ட எதையும் பேசி வைக்காத”, என்று பாண்டியன் சொன்னதும் உள்ளே சென்றாள் கோகிலா.
குளித்து முடித்து வந்த தமிழ் சாப்பிட அமர்ந்தான். அவனுக்கு உணவு பரிமாறினாள் கோகிலா. அவன் சாப்பிட்டு முடித்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய தாயின் முகம் புன்னகையை வர வைக்க “அம்மா, என் மேல கோபமா?”, என்று கேட்டான் தமிழ்.
“உன் மேல நான் எதுக்குப்பா கோப பட போறேன்? நீங்க எல்லாம் பெரிய ஆளா ஆகிட்டீங்க தம்பி”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.
தாயும் மகனும் உரையாடுவதை தள்ளி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.
“இன்னைக்கு நிறைய வேலை மா. பசி வேற. அதனால உங்க கிட்ட கத்திட்டேன். சரி. இப்ப பொண்ணைப் பத்தி சொல்லுங்க”, என்று இறங்கி வந்தான் தமிழ். அவனுக்கு பெற்றவர்களை கலங்க வைக்க என்றுமே பிடிக்காது.
“நிஜமாவா டா தம்பி சொல்ற?”, என்று சந்தோஷமாக கேட்டாள் கோகிலா.
“ஆமா மா சொல்லுங்க. என்னைக்கு இருந்தாலும் கல்யாணம் பண்ணித் தானே ஆகணும்?”
“பொண்ணு பேர் பாரதி. இப்ப தான் காலேஜ் முடிச்சிருக்கா. நம்ம பஞ்சாயத்து கிளார்க் மக தான் டா பொண்ணு. கொஞ்சம் கஷ்டப் பட்ட குடும்பம் தான்”
“உள்ளூரா மா?”
“ஆமா டா, ஆனா அவ படிச்சது எல்லாம் வெளியூர்ல தங்கித் தான் போல?”
“வெளியூர்லன்னா கண்டிப்பா காதல் கீதல்னு பண்ணிருப்பாளே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான் தமிழ்.