அவள் கலங்கியதில் அவன் மனைவியை சமாதானப் படுத்த மறந்து போனான். ஜானகியின் கலக்கத்தையும் அவன் கண்டு கொள்ள வில்லை.
“அப்படி எல்லாம் இல்லை ரம்ஸ். உன்னை எப்படி நான் அவாய்ட் பண்ணுவேன் சொல்லு? நான் அண்ணா கூட ஆபீஸ் போறேன். அதனால தான் ஹெவி வொர்க்”, என்று சமாளித்தான். “ஜானகி என் கிட்ட நீ கால் பண்ணினதை சொல்லலை ரம்யா”, என்று ரம்யாவிடம் சொல்ல அவனுக்கு மனதில்லை. மனைவியைப் பற்றி அவளிடம் தவறாக சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் இப்படி சமாதானம் செய்தான்.
ஜானகியோ ஸ்ரீராமையும் அவனுடைய கையை உரிமையாய் பற்றிய படி பேசும் ரம்யாவையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
இப்போது நான் அவனுக்கு யார் என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது. அவளை அவர்கள் ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு ஜானகி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதை ஓரக் கண்ணால் கண்டு திருப்தி அடைந்த ரம்யா ஸ்ரீராமிடம் உருக்கமாக பேசிக் கொண்டே இருக்க அவன் அவளை தீவிரமாக சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்.
ஜானகியோ அவர்களைக் கண்டு கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டிருந்தாள். ஸ்ரீராமும் “ரம்ஸ் நீ என்ன சின்ன குழந்தை மாதிரி கண்ணு கலங்கிட்டு இருக்க?”, என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்து விட அடுத்த நொடி அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள் ஜானகி.
“ஜானு ஜானு”, என்று ஸ்ரீராம் அழைக்க அழைக்க திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டே இருந்தாள். எதுவோ துரத்துவது போல அங்கிருந்து வேகமாக சென்றாள். அவள் அப்படி முகத்தில் அடித்தது போல சென்றது ஸ்ரீராமுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.
“ஏன் இப்படி இண்டீசண்டா நடந்துக்குறா?”, என்று மனதுக்குள் கோப பட்டவன் அவளுடைய மனநிலையைப் பற்றி யோசிக்க தவறினான்.
“என்ன ஸ்ரீ இது? உன் வொய்ப்க்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா? நான் பேசுறதுக்குள்ள கிளம்பிட்டாங்க?’, என்று கேட்டாள் ரம்யா.
“சாரி ரம்யா. அப்ப இருந்தே அவ ஏதோ ஒரு டென்சன்ல இருந்தா. அதான் கிளம்பிட்டா. நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன். நான் இப்ப கிளம்புறேன், பை”, என்று அவளிடம் சொல்லி விட்டு ஜானகியின் பின்னே சென்றான். அவளோ பஸ் ஸ்டாண்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
ரம்யாவோ “நீ எதுக்கு ஸ்ரீ அவளைத் தாங்கிட்டு பின்னாடி போற? போனா போகட்டும்னு விட வேண்டியது தானே? எனக்கு தெரியும் ஸ்ரீ. அவ தான் உன்னை என் கிட்ட பேச விடலைன்னு. உன்னை அவ கூட சேத்துப் பாக்கும் போது எனக்கு கொலை வெறியே வருது ஸ்ரீ. எப்படியாவது நீ என் கிட்ட வந்து சேந்துறேன்”, என்று எண்ணிய படி அமர்ந்திருந்தாள்.
அப்போது அங்கே வந்த பேரர் என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்க ஒரு காபி சொல்லி விட்டு ஸ்ரீராம் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.
வெளியே வந்த ஸ்ரீராம் மனைவியைத் தான் தேடினான். அவள் கொஞ்சம் தள்ளி நடந்து கொண்டிருக்க இவன் தன்னுடைய வண்டியை நிறுத்தியிருந்த இடம் நோக்கி சென்றான். பின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் முன் வந்து நின்றான்.
அவள் அவனைத் தாண்டிக் கொண்டு செல்ல நீ நினைக்க “ஜானு பிளீஸ் நில்லு”, என்றான்.
அவள் அவன் முகத்தைப் பார்க்க “உன் கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பாக்கலை ஜானு. ஏன் இப்படி கொஞ்சம் கூட மேனஸ் இல்லாம நடந்துக்குற? படிச்சவ தானே நீ? ரம்ஸ் வந்த உடனே முகத்துல அடிக்கிற மாதிரி எழுந்து வர? அவ கிட்ட என்னை பேச தான் விடலை. அட்லீஸ்ட் இப்படி அவளை ஹர்ட் பண்ணாம இருந்துருக்கலாம்ல? என் கிட்ட தான் உன் திமிர் தனத்தை காட்டுறேன்னா என் ஃபிரண்ட் கிட்டயும் நீ இப்படி நடந்துக்குறது எனக்கு பிடிக்கலை”, என்றான்.
கையைக் கட்டிக் கொண்டு நிதானமாக அவனைப் பார்த்தாள் ஜானகி. உள்ளுக்குள் எரிமலையே வெடித்தது. சுற்றி இருந்த மக்களின் நினைவால் அமைதியாக நின்றாள். எங்கே பேசினால் வெடித்து சிதறி விடுவோம் என்று புரிந்து தான் அமைதி காத்தாள்.
அவளுடைய நிதானம் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது போலும். “உன் கிட்ட தான் பேசுறேன். இப்படி பாத்தா என்ன அர்த்தம்?”, என்று கேட்டான்.
“பேச வேண்டியது எல்லாம் பேசிட்டியா ராம்?”, என்று ஆழ்கடலின் அமைதியுடன் ஒலித்தது அவள் குரல்.
“ப்ச், எதுக்கு இப்படி பண்ணின?”
“சொல்றேன், உனக்கு ஏதாவது சொல்லனும்னா சொல்லிரு. எல்லாத்துக்கும் சேத்து பதில் சொல்றேன். இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? இப்ப நான் என்ன பண்ணிருக்கணும்னு நீ சொல்ல வர ராம்? நீ உன்னோட காதலி கூட உக்காந்து பல்லைக் காட்டி கடலை போடுறதை அங்க உக்காந்து வேடிக்கை பாக்கணும்னு சொல்றியா? நீ அவளுக்கு ஆறுதல் சொல்றேன்னு பேர்ல கொஞ்சிட்டு இருந்ததை அங்க உக்காந்து வேடிக்கை பாக்கணும்னு சொல்ல வரியா?”, என்று கேட்டாள்.
“ஏய் என்ன டி இப்படி சொல்ற? அவ பீல் பண்ணினா டி”
“ஓஹோ அப்ப நான் என்ன மன நிலைல உக்காந்துருந்தேன்?”
“அது….”
“எனக்கா மேனஸ் இல்லைன்னு சொன்ன? என்னோட புருஷனை அவனோட காதலி கிட்ட பேசிட்டு இருக்குறதைப் பாத்துட்டு விலகி வந்தேன்ல? எனக்கு மேனஸ் இல்லை தான். நான் மேனசோட இருக்குறதுனால தான் அங்க இருந்து எழுந்து வந்தேன். இல்லைனா ரெண்டு பேரையும் அங்கேயே அசிங்கப் படுத்திருப்பேன்”
“நீ தேவையில்லாம யோசிக்கிற ஜானு. ஒண்ணும் இல்லாத விஷயத்தை பெருசா ஆக்குற? முதல்ல இருந்து இப்ப வரை என்னைப் பத்தி நீ தப்பா தான் பேசுற”
“நானா? நானா டா தப்பா பேசுறேன்? நீயும் அவளும் நடந்துக்குறது தான் சகிக்கலை. அவளுக்கு அங்க உக்காந்துருந்த நான் கண்ணுக்கு தெரியலை. என் கிட்ட ஒரு ஹாய் கூட அவ சொல்லலை. நீயும் அவ வந்த உடனே அவ கிட்ட பல்லைக் காட்டி பேசுற? அதுக்கு மேல உங்களுக்கு இடைஞ்சலா நான் ஏன் அங்க இருக்கணும்? அப்படி எழுந்து வந்தா எனக்கு மேனஸ் இல்லைன்னு சொல்வியோ?”
“அப்படி எல்லாம் இல்லை ஜானு”
“எப்படி எல்லாம் இல்லை? கல்யாணம் முடிஞ்ச பிறகாவது நீ மாறுவேன்னு நினைச்சேன். நீ இப்ப வரை மாறவே இல்லை ராம். உனக்கு அவளைத் தான் பிடிச்சிருக்கு. அவ கூடவே வாழ்ந்துக்கோ. தயவு செஞ்சு என்னை விட்டுரு. என்னால இந்த அசிங்கத்தை எல்லாம் பாக்க முடியலை. எனக்கு மனசு ரொம்ப வலிக்குது”
“எனக்கு உன்னை மட்டும் தான் டி பிடிக்கும்”
“இல்லை ராம், உனக்கு என்னைப் பிடிக்கலை. உனக்கு அவளைத் தான் பிடிச்சிருக்கு. இந்தா உன்னோட போன். இனி உனக்கு இடைஞ்சலா இருக்க மாட்டேன். அவ நம்ம கல்யாணத்தன்னைக்கே தெளிவா என் கிட்ட சொன்னா. நான் தான் உன்னை தப்பா எடை போட்டுட்டேன்”, என்று அவள் சொன்னதும் புருவம் உயர்த்தியவன் “கல்யாணத்தன்னைக்கா? ரம்யா என்ன சொன்னா ஜானு?”, என்று கேட்டான்.
“அவளும் நீயும் சேந்து வாழ்ந்த கதையை சொன்னா. இனி வாழப் போற கதையை சொன்னா. நான் ரெண்டாந்தரம்னும் என்னை பேருக்கு தான் பொண்டாட்டின்னு நீ வச்சிக்க போறதாவும் சொன்னா. கடைசி வரை உன்னோட வாழ்க்கைல இடம் இல்லைன்னு அவ தெளிவா சொன்னா. கடைசில என் நிலைமை அப்படி தான் ஆகிருச்சு”, என்று கண்களில் நீருடன் அவள் சொன்னதும் “ஜானு…”, என்று அதிர்ந்து போனான். அவன் மனதில் பயங்கர குழப்பம் வந்தது. கூடவே அவள் பொய் சொல்ல வில்லை என்பதும் புரிந்தது.
ரம்யாவா அப்படி பேசினாள் என்று எண்ணி மனதுக்குள் துடித்துப் போனான்.
“ஆமா அது தான் உண்மை. நான் உனக்கு ரெண்டாந்தரம் தான். அதனால தான் நான் உனக்கு கண்ணுக்கு தெரியலை. என்னை நீ பொண்டாட்டியா என்ன மனுசியா கூட நினைக்கலை. என்னால மனசுல அன்பு காதல் இல்லாம ஊருக்காக மட்டும் பொண்டாட்டியா வாழ முடியாது ராம். நீ அவ கூடவே போய் வாழ்ந்துக்கோ. இனி நீ எனக்கு வேண்டாம். நான் என் வீட்டுக்கு போறேன். என்னால இதுக்கு மேல குடும்பத்துக்காக கூட நடிக்க முடியாது. என்னை ஆளை விடு. அவ கிட்ட போய் என்னை விரட்டி விட்டுட்டேன்னு சந்தோஷமா சொல்லு. அவளுக்கு அது தான் வேணும். உன்னைப் பொறுக்கின்னு சொன்னதுக்கு நீ எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்திருக்க வேண்டாம் ராம். பிளீஸ் என்னை இதுக்கு மேலயாவது நிம்மதியா இருக்க விடு”, என்று சொல்லி இரு கை எடுத்துக் கும்பிட்டவள் விடுவிடுவென்று பஸ் இருக்குமிடத்தை நோக்கிச் சென்றாள்.
“நான் வீட்ல கொண்டு வந்து விடுறேன் ஜானு. எல்லாம் அப்புறம் பேசலாம்”, என்றான்.
“இனி வாழ்க்கை முழுக்க நான் தனியா தான் டிராவல் பண்ணனும் ராம். இப்ப இருந்தே அது ஆரம்பமாகட்டும். குட் பை”, என்று சொன்னவள் அப்போது ஒரு பஸ் வர அதில் ஏறிச் சென்று விட்டாள்.
ஸ்ரீராமோ அதே இடத்தில் சிலை என நின்றிருந்தான். அவனால் அவள் சொன்ன அனைத்தையும் நம்ப முடியவில்லை. அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ரம்யாவா அப்படி எல்லாம் சொன்னாள் என்பதை அவனுக்கு ஜீரணிக்கவே ஐந்து நிமிடம் பிடித்தது. ஜானகி சொன்னது எல்லாம் உண்மை என்பது அவளது கண்ணீரிலே தெரிந்தது. ஜானகியை சமாதானப் படுத்த மனது துடித்தாலும் இந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் அவளை சமாதானம் செய்வது சரி கிடையது என்பதால் வண்டியை திருப்பியவன் நேராக சென்றது ரம்யா வந்திருந்த ரெஸ்டாரண்ட்க்கு தான். வண்டியை ஸ்டாண்டில் விட்டுவிட்டு நிமிர அப்போது தான் அங்கே வந்தாள் ரம்யா.
அங்கே நின்ற ஸ்ரீராமைப் பார்த்ததும் “என்ன ஸ்ரீ வந்துட்ட? நீ இன்னும் போகலையா?”, என்று புன்னகையோடு கேட்க அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தான்.
அவர்கள் நின்றது வண்டி நிறுத்தும் இடம் என்பதால் அங்கே யாரும் இல்லை. அவன் அடித்ததில் கன்னத்தில் கை வைத்த படி அதிர்ந்து போய் நின்றாள் ரம்யா.
“ஸ்ரீ”, என்று அதிர்வாக அழைக்க “எங்க கல்யாணத்தன்னைக்கு என் பொண்டாட்டிக் கிட்ட என்ன சொன்ன?”, என்று சீற்றத்துடன் கேட்டான்.
அவனுடைய கோபக் குரலில் ஒரு அடி பின்னே வந்த ரம்யா “அது வந்து ஸ்ரீ”, என்றாள்.
“நம்ம ரெண்டு பேருக்கும் தப்பான அஃப்ஃபைர் இருக்குற மாதிரி அவ கிட்ட பேசிருக்க அப்படி தானே?”, என்று அவன் கேட்டதும் அவள் தலை குனிந்தாள்.