இப்போது அவன் மேல் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் தன்னுடைய கணவன் என்ற உணர்வு மட்டும் அவளுக்கு இருந்தது. அதனால் அவனது உரிமையான தொடுகையை எந்த தடையும் இல்லாமல் அங்கீகரித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீராமின் உணர்வுகள் தலை தூக்க ஆரம்பிக்கும் போது “என்ன செய்ற ஸ்ரீராம்? அவ டைம் கேட்டது நினைவு இல்லையா?”, என்று அவனுக்கு மனசாட்சி எடுத்துரைத்தது. படக்கென்று அவளை விட்டு விலகியவன் “குளிச்சிட்டு வரேன் ஜானு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவளோ மனம் மயங்கி உடல் நடுங்க நின்றிருந்தாள். அவன் விலகியதும் அவளது எதிர்பார்ப்புகள் பொசுங்கிப் போனது போல ஒரு உணர்வு எழுந்தது. அவனை முழு மனதாக தான் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று அவளுக்கு புரிந்தது.
பாத்ரூமுக்குள் சென்ற ஸ்ரீராமோ தன்னை மீட்டுக் கொள்ள வெகுவாக போராடினான். “எப்பா சாமி என்ன பீலிங்க் டா இது? முடியலை. விலகி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
அதில் இருந்து அவன் வெளியே வர நினைத்தாலும், தன்னுடைய கைக்குள் அவள் மயங்கி இருந்த தோற்றமே நினைவில் வந்து அவனை பலவீனமாக்கியது. அவளுடைய முகத்தில் வந்து போன உணர்வுகள் பொய்யில்லை என்று அவனுக்கு புரிந்தது. அவள் மனமாற்றம் அவனுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. ஆனால் இப்போது அதிக உரிமை எடுத்தால் அவள் தன்னை ஏதாவது நினைத்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது. கூடவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள டைம் கேட்டவள் அவளாகவே தான் அவள் மனதை உணர்த்த வேண்டும் என்றும் எதிர் பார்த்தான். அதனால் தான் விலகினான்.
அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது ஜானகி அதே இடத்தில் தான் நின்றாள்.
“ஜானு”, என்று அவன் அழைத்ததும் கனவில் இருந்து விழிப்பவள் போல அவனைத் திரும்பி பார்த்தாள்.
“எவ்வளவு நேரம் இப்படியே ஈரத்துல நிப்ப? போய் குளிச்சிட்டு வா. நான் டிரஸ் மாத்திட்டு அத்தை மாமா கிட்ட பேசிட்டு இருக்கேன்”, என்றான்.
வெறும் துண்டுடன் நின்றவனின் கோலம் எப்போதும் போல் அவளை மயக்க தான் செய்தது. “கள்ளன்”, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் அவனிடம் சரி என்று சொல்லி விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டிச் சென்றாள். பின் திரும்பி வந்தவள் அவன் உயர்த்துக்கு நின்று அவன் கன்னத்தில் தன்னுடைய இதழைப் பதித்தாள். அவன் அதிர்ந்து விழிக்கும் போதே “ஐ லவ் யு ராம்”, என்று சொல்லி விட்டு துள்ளலாக குளிக்க சென்றாள்.
உறைந்த புன்னகையுடன் உடை மாற்ற ஆரம்பித்தான். மனைவியை எண்ணி அவன் மனது பூரித்தது. உடை மாற்றி விட்டு கீழே வந்தவன் சரவணன் மற்றும் அரசியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
குளித்து முடித்து வந்த ஜானகி அவனைப் பார்த்து கண் சிமிட்டி அவனையே வெட்கப் பட வைத்தாள். அருகில் சரவணன் இருப்பதால் அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவளது அசைவுகளை அவன் கண்கள் விடாமல் படம் எடுத்துக் கொண்டு தான் இருந்தது.
அப்பா அம்மா இருந்தாலும் வேண்டும் என்றே ஸ்ரீராமை இடித்துக் கொண்டு அமர்ந்தவள் ரகுவுக்கு அழைத்து இங்கே தங்கும் விஷயத்தை சொன்னாள்.
மகள் பொறுப்பாக மாமனாரிடம் பேசுவதைக் கண்டு சரவணன் மற்றும் அரசி இருவரும் பெருமையாக எண்ணிக் கொண்டனர். ஸ்ரீராமோ அவளது அருகாமையை ரசிக்க சொல்லு தூண்டும் மனதை அடக்கிய படி மாமனாரிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.
அன்றைய இரவு அறைக்குள் வந்ததும் அவள் எதுவோ சொல்ல வர அவளை இழுத்து தன்னருகே படுக்க வைத்துக் கொண்டவன் “எதையும் யோசிக்காம தூங்கு. நமக்கு முன்னாடி காலம் விரிஞ்சு கிடக்கு”, என்று சொல்லி அவளை தன்னுடைய கை அணைப்பிலே வைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே அவளும் தூங்கி விட்டாள். சேயைத் தாங்கும் தாயைப் போல அவளை அணைத்துக் கொண்ட ஸ்ரீராமும் நல்ல படியாக உறக்கத்தை தழுவினான்.
அடுத்து வந்த நாட்களில் அவளை விட்டு ஒரெடியாக விலகி இருக்காமலும் அதே நேரம் அவளிடம் அதிகம் ஒட்டாமலும் இருந்தான் ஸ்ரீராம். எங்கே அவளை நெருங்கினால் அவனுக்கே தீப்பற்றிக் கொள்ளும் உணர்வு வந்து விடுமோ என்று பயந்து போனான்.
அடுத்த பத்து நாட்கள் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நகர்ந்தது. இருவருக்கும் இடையே மனதளவில் நெருக்கம் அதிகமானாலும் உடல் அளவில் கொஞ்சம் பயத்துடன் விலகியே தான் இருந்தார்கள்.
அன்று அனைவருக்கும் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். மதிய உணவு வேளை வரை சமையல், அரட்டை என்று நேரம் சென்றது. மதிய உணவு முடிந்ததும் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்கள்.
தங்களின் அறையில் அமர்ந்து போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள் ஜானகி. அப்போது உள்ளே வந்த ஸ்ரீராம் அவள் பின்னே அமர்ந்து அவள் கழுத்தின் வழியாக குனிந்து “என்ன செய்ற ஜானு?”, என்று கேட்டான்.
“பாத்தா தெரியலையா ராம்? கேம் விளையாடுறேன்”, என்று சொல்லி விட்டு விளையாட்டில் கவனம் செலுத்திய ஜானகிக்கு சிறிது நேரம் கழித்து தான் அவனுடைய அருகாமை உரைத்தது.
குனிந்திருந்த அவனது தாடை அவளது தோளில் அழுந்தி பதிந்திருந்தது. ஸ்ரீராமின் கன்னம் அவளது கன்னத்தை தொட்டுத் தழுவிக் கொண்டிருந்தது. ஷேவ் செய்திருந்தாலும் அவன் கன்னத்தில் லேசாக முளைத்திருந்த சின்ன சின்ன முடிகள் அவள் கன்னத்தில் உராய்ந்து கொண்டிருந்தது.
அவனுடைய அருகாமையில் உடல் எங்கும் மின்சாரம் பாயும் உணர்வை அடைந்தாள் ஜானகி. அதனால் கேமில் கவனம் செலுத்த முடியாமல் அவள் மனம் தடுமாற அவள் கை விளையாடாமல் அப்படியே நின்றது. அவனது அருகாமையில் இருந்து விலகவும் முடியாமல் அவன் கைக்குள் சரண் புகவும் முடியாமல் ஒரு வித அவஸ்தையில் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அவனுமே தடுமாறித் தான் போனான். அவளிடம் இருந்து வாசனையில் அவன் மனம் மயங்கித் தான் போனது. “இப்படி இவ கிட்ட வந்ததே தப்பு?”, என்று எண்ணிக் கொண்டு அவள் கழுத்தில் இருந்து விலகி எழுந்தவன் அவள் முன்னே சென்று அமர்ந்தான்.
சட்டென்று அவள் முகம் பார்க்க முடியாமல் தடுமாறி பின் தான் அவளைப் பார்த்தான். அவள் விளையாடாமல் அப்படியே இருக்கவும் “ஏய் என்ன விளையாடாம அப்படியே வச்சிருக்க?”, என்று கேட்டான்.
அவளிடம் இருந்து பதில் வராததால் அவளது முகம் பார்த்தான். அவளது முகம் வெட்கத்தில் சிவந்து அழகாக இருந்தது. அவளது மாற்றம் புரிய அவள் தாடையை நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தவன் அவளுடைய கண்களோடு கவிதை பேச துவங்கினான்.
அவளை அணைத்து அவளுடைய சிவந்த அதரங்களில் தொலைய வேண்டும் போல இருந்தது. ஆனால் தயக்கமாகவும் இருந்தது. அவளோ எதிர்பார்ப்புடன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரின் கண்களும் எந்த சங்கோஜமும் இல்லாமல் மற்றவரை ரசித்தது. “ஜானு”, என்று கிறக்கமாக அழைத்தான் ஸ்ரீராம்.
“ம்ம்”, என்ற படி அவள் முணுமுணுத்ததும் அவள் முகம் நோக்கி குணிந்தான். அவனுடைய இதழ்கள் அவளுடைய இதழ்களை தழுவிக் கொள்ள சந்தோசமாகவே அவனைக் கட்டிக் கொண்டாள் ஜானகி. அவன் முத்தத்தில் உடல் எல்லாம் குறுகுறுப்பு அடைந்தது போல ஒரு உணர்வை அடைந்தாள்.
தன்னைச் சுற்றி இதமான தென்றல் சுழன்றடிப்பது போலவும் மனம் லேசாகி காற்றில் பறப்பது போலவும் அவளுக்கு தோன்றி வைத்தது
சிறிது நேரம் கழித்து அவளுடைய இதழ்களில் இருந்து விலகியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவளது வாசனையை அவன் நாசி நுகர்ந்தது. அப்படியே அவளை படுக்கையில் சரித்து அவள் மேல் அவன் சரியா ஆரம்பித்தான்.
அடுத்து என்ன நடந்திருக்குமோ? வெளியே இருந்து அம்பிகா அழைக்கவும் தான் கலைந்தார்கள்.
“சரியான கரடி”, என்று முணுமுணுத்த ஸ்ரீராம் “என்ன அன்பு?”, என்று கேட்டுக் கொண்டே வெளியே சென்றான். அவனுடைய செய்கையிலும் இப்போதைய அவனுடைய முணுமுணுப்பிலும் அப்படியே சிலை போல அமர்ந்திருந்தாள் ஜானகி.
அடுத்து வந்த நாட்கள் அப்படியே கழிய ஒரு நாள் யமுனா ஆசைப் பட்டாள் என்று கிரி அவளை படத்துக்கு அழைத்துச் செல்ல எண்ணினான். வீட்டில் இருந்த மற்றவர்களையும் அழைக்க பெரியவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அதனால் இரண்டு ஜோடிகள் மட்டும் சென்றார்கள்.
இடைவேளை வரை அனைவரும் படத்தில் மூழ்கி விட்டனர். அதன் பின் கொஞ்சம் காதல் காட்சிகள் வர ஸ்ரீராம் மனது மட்டும் கொஞ்சம் தடுமாறியது. அந்த காதல் காட்சிகள் அவனுக்கு அருகில் இருந்த புத்தம் புது மனைவியை நினைவு படுத்த அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ படத்தில் மூழ்கியிருந்தாள்.
அந்த அரங்கமே இருட்டாக இருந்ததால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக அவள் பக்கம் சரிந்து அமர்ந்தவன் அவள் இடையில் கை வைத்தான். அவள் அதிர்ந்து போய் அவனைத் திரும்பிப் பார்க்க மெல்லிய வெளிச்சத்தில் அவன் முகத்தில் இருந்த தாபம் அப்பட்டமாக அவளுக்கு தெரிந்தது.
அவன் உணர்வுகள் புரிந்தது என்னும் விதமாக புன்னகையுடன் அவன் தோள் சாய்ந்தாள் ஜானகி. அவன் கைகளும் அவளை அணைத்துக் கொண்டது.
முன்பு ஒரு நாள் இதே தியேட்டரில் வைத்து ரம்யா அவன் கன்னத்தில் முத்தமிட்ட போது பொது இடத்தில் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று எண்ணி அவர்கள் மீது கோப பட்ட ஜானகி இன்று அவன் மீது கொண்ட அளவில்லாத நேசத்தில் தாங்கள் இருப்பது பொது இடம் என்பதையே மறந்தாள். அவன் மீதான காதல் அதை மறக்கடித்தது. அவன் மட்டுமே அவள் நினைவில் இருந்தான்.
அவன் இதழ்கள் அவளுடைய நெற்றியில் முத்தத்தை பதிக்க அவள் கண்கள் மூடிக் கொண்டது. உடல் முழுவதும் ஒரு வித இதமான பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருவருக்குள்ளும் போட்டி போட்டு உருவானது.
கடைசியாக அவள் முகம் நோக்கிக் குனிந்து அவளுடைய இதழ்களை கவ்விக் கொண்டான் ஸ்ரீராம். அவளுடைய கரம் அவனுடைய டீஷர்ட் காலரை இறுக்கிப் பிடித்தது. இருவரும் மெய் மறந்து முத்தத்தில் மூழ்கி இருக்க மற்றவர்கள் ஏதோ காட்சியைக் கண்டு கை தட்டினார்கள்.
அந்த சத்தத்தில் தான் இருவரும் கலைந்தார்கள். அதன் பின் இருவரும் நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொள்ள வில்லை என்றாலும் இருவர் மனதிலும் நடந்த இந்த நிகழ்வில் சந்தோஷம் மட்டுமே இருந்தது. படம் முடியும் வரை அவன் கை அவள் கையை பற்றிய படியே தான் இருந்தது.
படம் முடிந்து வெளியே வந்ததும் யமுனா மற்றும் கிரி இருவரும் படத்தின் காட்சிகளை சிலாகித்துப் பேச இருவரும் பெபே என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்கள் படத்தை கவனித்திருந்தால் தானே?
வீட்டுக்கு சென்றதும் ஸ்ரீராம் மற்றும் ஜானகி இடையே உணர்வுகள் அலையலையாய் பரவின. அவர்களின் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சொல்ல இருவருக்குமே எதிர்பார்ப்பு இருந்தது தான். ஆனால் கூடவே தயக்கமும் இருந்தது. யார் அந்த தயக்கத்தை முறியடிக்க என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.