மற்ற அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். யமுனா மட்டும் இரட்டிப்பு சந்தோசத்தில் இருந்தாள். அவள் காதருகே குனிந்த கிரி “என்ன மேடம், இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்கீங்க?”, என்று கேட்டான்.
“ஜானகியும் நம்ம வீட்டுக்கே வந்துருவால்ல? அதான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க”
“அப்படின்னா இன்னைக்கு எனக்கு செமையான கவனிப்பு இருக்கு போல?”, என்று சொல்லி அவன் கண்களைச் சிமிட்ட அவன் சொல்லும் விசயம் எது என்று புரிந்ததால் “சீ”, என்று சிணுங்கினாள் யமுனா.
வீட்டுக்கு வந்ததும் அவர்களை சந்தோஷமாக வரவேற்று அமர வைத்தார்கள் சரவணனும் அரசியும். அம்மா அப்பாவை நலம் விசாரித்த யமுனா மாடிக்கு தங்கையைக் காணச் சென்றாள்.
ஸ்ரீராமோ “இந்த லூசு ஏதாவது சொதப்பிரக் கூடாதே. கடவுளே இவ எனக்கு வேணும். இந்த கல்யாணம் நல்ல படியா நடக்க நீ தான் ஹெல்ப் பண்ணனும்”, என்ற வேண்டுதலுடன் கலக்கத்துடன் அமர்ந்திருந்தான். அதே நேரம் இந்த திருமணம் எப்படியாவது நின்று விடாதா என்று எண்ணிய படியே உம்மென்று கிளம்பி அமர்ந்திருந்தாள் ஜானகி.
“ஏய் ஜானகி”, என்று ஆர்பாட்டமாக அழைத்த படி உள்ளே வந்த யமுனாவின் குரலில் கலைந்த ஜானகி “வாக்கா, எப்படி இருக்க?”, என்று சுரத்தின்றி கேட்டாள்.
“எனக்கென்ன? நல்லா இருக்கேன் டி. இன்னைக்கு சேலை கட்டி, பூ வச்சு, ரொம்ப அழகா இருக்க ஜானகி”, என்று சொல்லி அவளைக் கட்டிக் கொண்டாள் யமுனா.
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் ஜானகி அமைதியாக இருக்கவும் “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜானகி. ஸ்ரீராம் கிட்ட பேசுனியா? தம்பி என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாள் யமுனா.
அந்த தம்பி பேசியதை நினைத்துப் பார்த்தவளுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. அக்கா தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பது புரிய “நான் அவங்க கிட்ட பேசலை. கூச்சமா இருந்துச்சு. அதான் பேசலை”, என்று சொல்லி சமாளித்தாள்.
“உனக்கு கூச்சமா? நம்ப முடியலையே? உன்னை வெக்கப் பட வச்சதுக்கே ஸ்ரீராமை பாராட்டணும்”, என்று சொல்லி யமுனா சிரிக்க ஜானகியோ பல்லைக் கடித்தாள் மனதுக்குள்.
“யமுனா ஜானகியை அழைச்சிட்டு வா”, என்று அரசி அழைத்ததும் யமுனா அவளை கீழே அழைத்து வந்தாள்.
விலை உயர்ந்த காட்டன் புடவை அணிந்து மிதமான அணிகலன்களுடன் மல்லிகைப்பூ சூடி தேவதை போல வந்தவளைக் கண்டு ஸ்ரீராம் கண்கள் விரிந்தது. “இந்த குள்ள வாத்து இவ்வளவு அழகா இருந்து மனுசனைக் கொல்லுறாளே?”, என்று எண்ணி அவளையே ஆசையாக பார்த்தான்.
பேரனின் பார்வையைக் கண்டு கொண்ட அம்பிகாவுக்கு அவனது மனம் தெளிவாக புரிந்தது. அங்கே வந்த ஜானகி யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்த படி நின்றாள்.
“நாம என்ன அன்னியமா? எதுக்கு இப்படி தயங்கி தயங்கி வர? இனி நீயும் எங்க வீட்டு பொண்ணு தான். இங்க வா டா”, என்று சொல்லி அவளை அழைத்து தன்னருகே அமர வைத்துக் கொண்டாள் ஜெயா. ஜெயா ஒரு புறமும் அம்பிகா ஒரு புறமும் அமர்ந்திருக்க அவர்களுக்கு நடுவில் ஜானகி அமர்ந்திருந்தாள்.
மற்றவர்கள் அனைவரும் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க ஸ்ரீராமோ அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான். பேரனின் பார்வையைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த ஜானகியைக் கண்ட அம்பிகா “கொஞ்சம் என் பேரனை நிமிந்து பாத்தா உன் கிரிடமா இறங்கிரும்? நீ எப்ப பாப்பேன்னு என் பேரன் ஏங்கிப் போய் உக்காந்திருக்கான். அவனைக் கொஞ்சம் திரும்பிப் பாரு”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னாள்..
இருந்த எரிச்சலை யாரிடம் காட்ட என்று தெரியாமல் அமர்ந்திருந்த ஜானகி அம்பிகா அப்படிச் சொல்லவும் “ஏய் கிழவி, உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன். இதுக்கெல்லாம் காரணம் நீ தான். நீ இப்ப தனியா என் கிட்ட சிக்கிருந்த உன்னை உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருப்பேன். நீ தான் உன் பேரனுக்கு தூது போன புறா வா? நானே அவனை கல்யாணம் பண்ணுறதுல இருந்து எப்படி எஸ் ஆகலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்? இதுல வேற நான் அவன் முகத்தை பாக்கணுமா? ஒழுங்கு மரியாதையா இந்த கல்யாணத்தை நிறுத்து. அப்படி இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறம் உன் உயிருக்கும் உன் பேரன் உயிருக்கும் உத்திரவாதம் இருக்காது சொல்லிட்டேன்”, என்று அடி குரலில் மிரட்டினாள்.
அவள் பேச்சைக் கேட்டு திகைத்துப் போனாள் அம்பிகா. அவள் மரியாதை இல்லாமல் பேசியதைக் கூட கண்டு கொள்ளாமல் “ஏமா ஜானகி உனக்கு என் பேரனைப் பிடிக்கலையா?”, என்று கவலையாக கேட்டாள்.
“சத்தியமா பிடிக்கலை போதுமா? அத்தை மாமாக்காக தான் மரியாதையா உக்காந்துருக்கேன். நீ தான் இந்த கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சேன்னு உன் பேரன் சொன்னான். பிளீஸ் நீயே நிறுத்திரு”
“ஆமா உனக்கு ஏன் என் பேரனைப் பிடிக்கலை? அவன் உன்னை ரொம்ப விரும்புறான் தெரியுமா? அவனுக்கு என்ன குறைச்சல்ன்னு அவனை வேண்டாம்னு சொல்ற?”
“உன் பேரன் என்னை விரும்புறானா? மண்ணாங்கட்டி. எங்களுக்குள்ள ஒரு சண்டை. அதுக்கு பழி வாங்க தான் அவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான். உனக்கு உன் பேரன் வாழ்க்கை முக்கியம்னா ஒழுங்கா இதை நிறுத்திரு”, என்றாள் ஜானகி. அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து ஸ்ரீராமுக்கு வியப்பாக இருந்தது. கூடவே அம்பிகா முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டவனுக்கு “இந்த குள்ள வாத்து பாட்டி கிட்ட எதையோ சொல்லி குழப்பிட்டா போலயே?”, என்று புரிந்தது.
“இதை இப்படியே விட்டா சரி கிடையாது”, என்று எண்ணியவன் தனக்கு அருகில் அமர்ந்திருந்த கிரி புறம் குனிந்து “எனக்கு ஜானு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். ஏற்பாடு பண்ணுண்ணா. நான் சொன்னா அப்பா திட்டுவார்”, என்றான்.
“சரி சரி நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன கிரி “அப்பா நீங்க கல்யாண விஷயம் பேசுங்க. நாங்க நாலு பேரும் கொஞ்ச நேரம் தோட்டத்துல இருக்குறோம்”, என்று ரகுவிடம் சொல்லி விட்டு “ஜானகி, யமுனா ரெண்டு பேரும் வாங்க. வெளிய போகலாம். நீயும் வா டா ஸ்ரீ”, என்று அவனையும் அழைத்தான்.
நால்வரும் வெளியே எழுந்து வந்ததும் ஸ்ரீராம் மற்றும் ஜானகி புறம் திரும்பி “இப்ப போய் தனியா பேசுங்க”, என்று சொன்னான் கிரி.
ஜானகி கிரியை குழப்பமாக பார்க்க “உன் கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வா”, என்று சொன்ன ஸ்ரீராம் ஜானகியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வீட்டின் பின் பக்கம் சென்றான்.
அவனை தடுக்க முடியாமல் இழுத்த இழுப்புக்கு சென்ற ஜானகி வீட்டின் பின் பக்கம் சென்றதும் அவனுடைய கையில் இருந்து தன்னுடைய கையை உருவிக் கொண்டாள்.
“ஏய் என் பாட்டிக் கிட்ட என்ன டி சொன்ன? அது முகமே மாறிருச்சு”, என்று கலக்கமாக கேட்டான் ஸ்ரீராம்.
அவனுடைய டென்சனை ரசித்துப் பார்த்தவள் ரஜினி ஸ்டைலில் “உண்மையைச் சொன்னேன்”, என்று சொல்லி சிரித்தாள்.
அவள் சிரிப்பில் கொலை வெறியானவன் “நம்ம பிரச்சனையை அது கிட்ட சொல்லிட்டியா?”, என்று கேட்டான்.
“ஆமா ஆமா. எனக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது. அதான் அப்படி பேசினேன்”
“ஓஹோ அப்ப அண்ணன் அண்ணி சந்தோஷம், உன் அம்மா அப்பா, என் அம்மா அப்பா எல்லாரோட சந்தோஷத்தை விட உன்னோட சந்தோஷம் தான் உனக்கு முக்கியம்? அப்படி தானே?”
“என்ன சொல்ற நீ?”
“நம்ம கல்யாண விஷயம் தெரிஞ்சதுல இருந்து அண்ணி அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. நம்ம வீட்டுப் பெரியவங்க எப்படி சந்தோஷமா பேசிட்டு இருந்தாங்கன்னு பாத்த தானே? போ, இப்பவே உள்ள போய் என் பாட்டி கிட்ட சொன்னதை எல்லார்க் கிட்டயும் சொல்லு. எங்க குடும்பம் அசிங்கப் பட்டு போகட்டும். அதுக்கு அப்புறம் என் அம்மா அப்பா உங்க வீட்டுக்கு வர யோசிப்பாங்க. ரெண்டு பேர் அம்மா அப்பாவும் நம்மலாள முகம் பாக்க முடியாம பிரிஞ்சிருவாங்க. அது தானே உனக்கு வேணும். போ, போய் என்னைப் பிடிக்கலைன்னு சொல்லு”, என்று அவன் சொன்னதும் அவள் திகைத்துப் போனாள்.
சரவணனும் அவளிடம் இதை தான் சொல்லியிருந்தார். அப்போது கூட அதன் வீரியம் அவளுக்கு புரிய வில்லை. ஆனால் இப்போது தான் இந்த திருமணம் பிடிக்க வில்லை என்று சொன்னால் ரகுவும் ஜெயாவும் இனி தங்கள் வீட்டுப் பக்கமே வர மாட்டார்கள் என்ற உண்மை புரிந்தது.
அவள் யோசித்துக் கொண்டே இருக்கவும் “போய் சொல்லு ஜானகி”, என்றான்.
“என்னால முடியாது. என்னால பெரியவங்களை அவமானப் படுத்த முடியாது”, என்று தீர்க்கமாக சொன்னாள்.
“அப்ப என் பாட்டி பெரியவங்க இல்லையா?”
“ஆன்.. அது உன் கூட கூட்டு சேந்த கிழவி தானே? அதான். அப்படி பேசினேன். ஆனா என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது”, என்று அவள் சொன்னதும் நிம்மதியானான்.
“தேங்க்ஸ் ஜானு. எனக்கு இப்ப தான் சந்தோஷமா இருக்கு”
“ஆனா எனக்கு சந்தோஷம் எல்லாம் இல்லவே இல்லை. செத்து போகலாம்னு இருக்கு”
“ஜானு..”
“என்னை அப்படிக் கூப்பிடாத. நீ எங்க இருந்து டா வந்த? உன்னை ஏன் நான் சந்திச்சேன்னு இருக்கு? உன்னைப் பாக்குறதுக்கு முன்னாடி நான் என் வாழ்க்கைல நிம்மதியா இருந்தேன். அன்னைக்கு பப்ளிக்ல இன்னொரு பொண்ணு கூட அப்படி நடந்துகிட்ட? அக்கா கல்யாணத்துல அத்தனை பேர் முன்னாடி என் கிட்டயும் அப்படி நடந்துகிட்ட? எனக்கு என்னை மட்டுமே காதலிக்கிற ஆள் தான் புருசனா வரணும்னு ஆசை இருந்துச்சு. ஆனால் நீ பொறுக்கியா இருக்க? இதுல எங்க இருந்து சந்தோஷம் வரும்? இங்க பாரு. கல்யாணம் முடிஞ்சதும் லைசன்ஸ் கிடைச்சிட்டுன்னு என் கிட்ட நெருங்கினா விளைவுகள் வேற மாதிரி இருக்கும் சொல்லிட்டேன். அன்னைக்கு அத்தனை பேரோட மனசை கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். ஆனா கல்யாணம் அப்புறம் தனி ரூம்ல இருக்குறோம்னு கிட்ட வந்தா செத்து போயிருவேன் நான்”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிச் சிவந்தது. எப்போதும் போல் இப்போதும் அவள் கண்ணீர் அவனை அதிகம் பாதித்தது.
“உன் அனுமதி இல்லாம எதுவுமே நடக்காது ஜானு. என்னை நம்பு”, என்று அவளுடைய கண்களைப் பார்த்துக் கொண்டே உரைக்க அவளோ அவனையே பார்த்தாள். அவன் கண்கள் சொல்லும் செய்தியை அவள் படிக்க முயன்று கொண்டிருந்தாள்.
அப்போது யமுனா அவர்களை அழைக்கும் சத்தம் கேட்டதும் இருவரும் அங்கே சென்றார்கள். இவர்களிடம் அனுமதி என்ற ஒன்றைக் கேட்காமலே அங்கே நிச்சயத் தேதியும் திருமணத் தேதியும் குறிக்கப் பட்டது.