“பிள்ளை பூச்சி மாதிரி இருக்கா. ஆனா என்ன போடு போடுறா? இவ கிட்ட கொஞ்சம் உசாரா தான் இருக்கணும்”, என்று எண்ணியவனின் மனது “அவ எதுக்கு கோப படுறான்னு யோசி”, என்று எடுத்துக் கொடுத்தது.
“ஒரு வேளை என் மேல உள்ள அன்பு அதிகமாகி நான் அவளுக்கு மட்டும் தான் சொந்தம்னு நினைச்சு பொறாமைல தான் இவ்வளவு கோப படுறாளோ?”, என்று எண்ணினான்.
சிறிது நேரத்தில் இரவு உடையில் அறைக்குள் வந்தவள் ஏற்கனவே கட்டியிருந்த சேலையை அங்கிருந்த சேரில் போட்டு விட்டு அவனுக்கு அந்த பக்கம் வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும் “தெரிஞ்சோ தெரியாமலோ, உன்னோட கையோ காலோ என் பக்கம் வந்துச்சு, நான் என்ன செய்வேன்னே தெரியாது. சொல்லிட்டேன்”, என்று மிரட்டி விட்டு படுத்து விட்டாள்.
அவன் உதடுகளில் இப்போது புன்னகை மலர்ந்தது. தன்னைக் கணவனாக ஏற்றுக் கொண்டதால் தான் அவனுடைய படுக்கையில் அவள் படுத்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. அவளது சந்தேகத்தை விரட்டி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று புரிந்து கொண்டான்.
“தெரிஞ்சோ தெரியாமலோ கையோ காலோ உன் மேல பட்டுச்சுன்னா உன் மாமனார் கிட்ட போய் சொல்லிக் கொடுத்துரு சரியா?”, என்று கேட்டு அவளிடம் வம்பிழுத்தான்.
அவள் திரும்பி அவனை முறைத்துப் பார்க்கவும் “என்ன முறைக்கிற? உன் மாமனார் கிட்ட தானே எல்லாத்தையும் வத்தி வைக்கப் போறேன்னு சொன்ன? நைட் என் புருஷன் என் மேல கையைப் போட்டான், காலைப் போட்டான்னு போய் சொல்லு சரியா?”, என்று சொன்னான் ஸ்ரீராம்.
அவன் சொன்னதைக் கேட்டு மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தவள் “நான் தூங்கிட்டேன்”, என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டாள். அவன் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.
அன்றைய அலுப்பில் இருவருமே உறங்க ஆரம்பித்தார்கள். தூங்கி சற்று நேரம் ஆனதும் தூக்கத்திலே அவன் அருகே உருண்டு வந்த ஜானகி அவன் மேல் கையையும் காலையும் போட்டுக் கொண்டு படுத்தாள்.
அவள் செய்கையில் விழித்த ஸ்ரீராம் அவள் படுத்திருந்த கோலத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான். அவள் மேல் இன்னும் அவனுக்கு காதல் அதிகமானது. தன் நெஞ்சில் முகம் புதைத்திருந்த அவளை அனைத்த படி அவனும் தூங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை முந்தைய நாளின் நினைவுகளுடன் கண் விழித்தான் ஸ்ரீராம். அப்போதும் அவள் அவன் மீது ஒட்டிக் கொண்டு தான் படுத்திருந்தாள். இப்போது அவள் கண் விழித்தால் இருக்கும் நிலை கண்டு தேவையில்லாத வாக்குவாதம் தான் வரும் என்று எண்ணியவன் அவள் தூக்கம் கலையாதவாறு எழுந்து கொண்டான்.
சிறிது நேரம் அறைக்குள் உலாவியவன் பின் குளிக்க போகலாம் என்று எண்ணி பீரோவில் தன்னுடைய உடைய எடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவளது போன் அடித்தது. “இவ்வளவு காலைல இவளுக்கு போனா? யாரா இருக்கும்?”, என்ற யோசனையுடன் அவன் அதை எடுக்கப் போகும் போது அவள் கண் விழித்து விட்டாள். இவனும் பீரோ புறம் திரும்பி மாற்றுடையை எடுக்க ஆரம்பித்தான், ஆனாலும் அவன் காது அவள் பேசுவதிலே தான் இருந்தது.
தூக்கத்திலே போனை எடுத்த ஜானகி “சொல்லுப்பா”, என்றாள்.
“மாமா எதுக்கு இந்நேரம் அவளை எழுப்புராறு?”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது “சரிப்பா, எனக்கு தெரியாதா? நம்ம வீட்ல மாதிரி இங்கயும் தூங்குவேணா? நான் அப்பவே எழுந்துட்டேன். போதுமா?”, என்று சொல்லி போனை வைத்தாள்.
“அடப்பாவி”, என்று எண்ணி அவளையே பார்த்தான். அவனுடைய பார்வையைக் கண்டதும் “என்ன?”, என்று கண்களால் கேள்வி கேட்டாள்.
“நீ இன்னும் எந்திக்கவே இல்லை? ஆனா மாமா கிட்ட அப்பவே எழுந்தேன்னு சொல்ற?”
“அப்படிச் சொல்லலைன்னா அந்த ஹிட்லர் கிட்ட யாரு அரை மணி நேரம் அட்வைஸ் கேக்குறது? சரி சரி நீ முதல்ல போய் குளிச்சிட்டு வா. நான் அது வரைக்கும் தூங்குறேன். வந்து என்னை எழுப்பு என்ன?”, என்று சொல்லி மீண்டும் படுத்து விட்டாள்.
அவனும் புன்னகையுடன் குளிக்கச் சென்றான். அதன் பின் அவள் குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து ஒரு சுடிதார் அணிந்து வர புது மலர் போல வந்தவளைப் பார்த்தவன் “இம்சை, எந்த டிரஸ் போட்டாலும் பார்பி டால் மாதிரி அழகா இருந்து தொலைக்குது”, என்று எண்ணிக் கொண்டான்.
அப்போது அவனது போனில் ஏதோ மெஸ்ஸேஜ் வந்தது போல சத்தம் வரவும் அவன் கவனம் அங்கு சென்றது. அவன் அதை எடுக்க நினைத்து அருகில் செல்ல அதை ஜானகி கை பற்றியிருந்தாள்.
“ஏய் என்னோடா போனை கொடு டி”, என்றான் ஸ்ரீராம்.
“இதைப் பாத்தா தானே உன்னோட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும்”, என்று சொல்லி மெஸ்ஸேஜ் பார்க்க “இன்னைக்கு நீ பிரின்னா மீட் பண்ணலாமா ஸ்ரீ?”, என்று கேட்டிருந்தாள் ரம்யா.
அதைக் கண்டு அவனை முறைத்துப் பார்த்தாள் ஜானகி.
அவள் எதற்கு முறைக்கிறாள் என்று புரியாமல் “என்ன ஜானு?”, என்று கேட்டான்.
“அவ எதுக்கு உன்னை மீட் பண்ணலாமானு கேட்டுருக்கா?”
“எங்க பிரண்ட்ஸ் குள்ள இது வழக்கம் டி. யாருக்காவது நேரம் போகலைன்னா மத்தவங்களுக்கு இப்படி அனுப்புவோம். அவங்களும் பிரியா இருந்தா ஜாலியா எங்கயாவது வெளிய போவோம்”
“அப்படியே முத்தமும் கொடுப்பீங்க? அப்படித் தானே?”
“ஐயோ, அதை நீ விடவே மாட்டியா? முதல்ல போனைக் கொடு. அவ கிட்ட பிரி இல்லைன்னு அனுப்புறேன்”
“எப்படி எப்படி? அவளுக்கு மெஸ்ஸேஜ் அனுப்ப போறேன்னு என் கிட்டயே நீ சொல்லுவியா? இனி உன் போன் உனக்கு சொந்தம் கிடையாது தம்பி. இனி இது என் கிட்ட தான் இருக்கும். முக்கியமான கால் வந்தா உன் கிட்ட கொடுக்குறேன். உனக்கு எங்க முக்கியமான கால் வரப் போகுது?”, என்று சொல்லிக் கொண்டே போனை தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.
“ஏய் அதை கொடு டி”, என்று எரிச்சலுடன் சொன்னான் ஸ்ரீராம்.
“முடியாது டா”
‘’இங்க பாரு, அதை நீ தரலைன்னா இதோ இருக்குற உன் போனை உனக்கு தர மாட்டேன்”
“அதை நீயே வச்சிக்கோ. உன்னை மாதிரி எனக்கு இன்னொரு காதலன் எல்லாம் இல்லை. அதனால நீ அதை பாத்தா எனக்கு பயமும் இல்லை”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். மனதில் மூண்ட எரிச்சலுடன் அவனும் அவள் பின்னே சென்றான்.
அவர்கள் வெளியே செல்லும் போது மற்றவர்கள் உணவு மேஜையில் தான் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைக் கண்டதும் எல்லாரும் புன்னகைக்க ஜானகி சிரித்த படி யமுனா அருகில் சென்று அமர்ந்தாள். ஸ்ரீராமும் எரிச்சலை மறைத்துக் கொண்டு கிரி அருகில் அமர்ந்தான். ஜெயா அனைவருக்கும் பரிமாறினாள்.
ரகு அங்கே இருந்ததால் உணவு நேரம் அமைதியாக கழிந்தது. சாப்பிட்டு முடித்ததும் ஸ்ரீராமிடம் “ஜானகியைக் கூட்டிட்டு எங்கயாவது வெளிய போயிட்டு வா ஸ்ரீ. மறுவீட்டுக்கு ரெண்டு நாள் கழிச்சு போகலாம். நான் சம்பந்தி கிட்ட சொல்லிட்டேன்”, என்று சொன்னார் ரகு.
ஜானகி மேல் இருந்த எரிச்சலில் “நான் என் பிரண்ட்ஸ் பாக்க போறேன்”, என்று கோபத்துடன் சொன்னான் ஸ்ரீராம். அவன் அப்படிச் சொன்னதும் அங்கே அமைதி நிலவியது.
அவன் அப்படி சொன்னது ஜானகியை காயப் படுத்தும் என்றும் அவன் பேசியதை ஜானகி தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று எண்ணி அனைவரும் ஜானகியைப் பார்த்தார்கள்.
அவளோ புன்னகையுடன் இட்லியை விழுங்கிக் கொண்டிருந்தாள். பின் அனைவரும் ஸ்ரீராமை முறைக்க அவனும் “நாம கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டோமோ?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
அப்போது ரகு அவனை ஏதோ திட்ட வர, தன்னுடைய காலை எட்டி நீட்டி ஸ்ரீராம் காலில் ஒரு மிதி மிதித்தாள் ஜானகி.
“ஆ”, என்று அலறினான் ஸ்ரீராம்.
அவன் எதற்கு கத்துகிறான் என்று தெரியாமல் இருந்த ஜெயாவும் அம்பிகாவும் “என்ன ஆச்சு ஸ்ரீ?”, என்று பதற மற்ற மூவருக்கும் அது ஜானகியின் வேலை என்று புரிந்தது. யமுனா கிரியைப் பார்த்து சிரிக்க ரகுவோ ரகுவோ வாய் விட்டே சிரித்தார். அவரைக் கடுப்புடன் பார்த்த ஸ்ரீராம் அவளையும் முறைத்துப் பார்த்தான்.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்ததும் “எதுக்கு டி என்னை மிதிச்ச?”, என்று கேட்டான்.
“பின்ன, நீ எப்படி அந்த ரம்யா கூட வெளிய போவேன்னு சொல்லலாம்?”
“நான் எங்க டி அப்படிச் சொன்னேன்? பிரண்ட்ஸ் கூட தானே போறேன்னு சொன்னேன்”
“பொய் நீ அவ கூட தான் போவ? ஒழுங்கு மரியாதையா என்னைக் வெளிய கூட்டிட்டு போ, சொல்லிட்டேன்”
“உன் கூட மனுஷன் வெளிய போவானா? நீ சரியான சந்தேகப் பேய்”, என்று அவன் சொன்னதும் அவள் முகம் சுருங்கியது.
அவன் சொன்னது போல் தான் இருக்கிறோமோ என்று எண்ணியவளின் கண்கள் கூட கலங்கி விட்டது.
தன்னுடைய இயல்புக்கு மாறாக தான் இருப்பதற்கு இவன் தானே காரணம் என்று எண்ணி கண்களில் நீருடன் அவனை முறைத்துப் பார்த்தவள் “ஆமா டா, நான் பேய் தான். உன்னைப் பாக்காத வரைக்கும் நான் தேவதை மாதிரி தான் டா இருந்தேன். எப்ப உன்னைப் பாத்தேனோ அப்ப இருந்து தானா நான் இப்படி ஆகிட்டேன். நீ ஏண்டா நல்லவனா இல்லாம போன?”, என்று அவனிடமே கேட்டு விட்டு அதற்கு அவன் பதில் சொல்வதற்கு முன் குளியல் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அவளது கண்ணீரும் பேச்சும் அவனை பாதிக்க இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய போகிறோம் என்று அவனுக்கு மலைப்பாக இருந்தக்து.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவளை சமாதானப் படுத்துவதற்காக “வா எங்கயாவது வெளிய போகலாம்”, என்று சொன்னான்.
“உன் கூட வெளிய வர எனக்கு மூட் இல்லை. நான் எங்கயும் வரலை. நீயும் போகக் கூடாது”, என்று சொன்னவள் தன்னுடைய போனை எடுத்துக் குடைய ஆரம்பித்து விட்டாள்.