“ஏய் என் போனைத் தா டி. போர் அடிக்குது”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
“நான் கொடுத்தா நீ அவ கிட்ட பேசுவ. அதனால தர மாட்டேன்”, என்று சொல்லி அவனை சோதித்தாள் அவனுடைய மனைவி.
“அப்படின்னா நீயும் உன் போனை யூஸ் பண்ணாத. எனக்கு போர் அடிக்கு. அப்பா கம்பெனிக்கு போற வரைக்கு டிவியும் பாக்க முடியாது. அதனால நாம ஏதாவது பேசலாம், வா”
“எனக்கு பேச பிடிக்கும் தான். ஆனா உன்னைப் பாத்தா எனக்கு அந்த நூடுல்ஸ் தலை தான் நினைவுக்கு வாரா. என்ன செய்ய? நான் சாதாரணமா பேச நினைச்சாலும் கண்டிப்பா சண்டை தான் போடுவேன்”, என்று சொன்னாள் ஜானகி.
“அம்மா தாயே, நீ பேசவும் வேண்டாம். சண்டையும் போட வேண்டாம். நான் தூங்கவாது செய்றேன்”, என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் படுத்து விட்டான் ஸ்ரீராம்.
அவன் தூங்க ஆரம்பித்ததும் வெளியே வந்தாள் ஜானகி. ஞாபகார்த்தமாக அவனுடைய போனையும் கையில் எடுத்துக் கொண்டாள். பின் யமுனா மற்றும் ஜெயாவுடன் சேர்ந்து சமையல் கட்டில் அமர்ந்து விட்டாள். மூன்று பெண்களும் அங்கே இருக்க., அம்பிகாவும் அங்கே வந்து அமர்ந்தாள். அதன் பின் ஒவ்வொரு கதையாக பேச ஜானகிக்கு நேரம் நன்கு சென்றது.
கிரியும் ரகுவும் கம்பெனிக்கு சென்று விட்டதால் அன்று முழுவதும் தூங்கியே நேரத்தைக் கழித்தான் ஸ்ரீராம். சிறிது நேரம் டிவி பாக்கலாம் என்று எண்ணி அவன் அமர அங்கேயும் வந்து “இந்நேரம் அது போடுவான். அந்த டிவி வைங்க, இந்த டிவி வைங்க”, என்று வெறுப்பேற்றி அவனை அறைக்குள் விரட்டினாள் அவனது மனைவி.
அன்று இரவு உணவின் போது “மாமா இது நான் செஞ்சது. சாப்பிட்டுப் பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க”, என்று சொல்லி ரகுவுக்கு ஒரு தட்டில் கேசரியை வைத்த ஜானகி ஸ்ரீராமுக்கும் வைத்தாள்.
அதை எடுத்து உண்டவனுக்கு அதன் சுவை பிடித்திருந்தாலும் அதை அவளிடம் காட்ட மனதில்லாமல் “து, எப்படி தான் இருக்கு. இதை மனுஷன் திம்பானா? எனக்கு வேண்டாம் பா”, என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் யமுனாவுக்கே ஒரு மாதிரி இருந்தது. எல்லாரும் ஜானகியை தர்மசங்கடமாக பார்க்க ரகு அவனை எதுவோ திட்டப் போனார். அவரை கண்களால் தடுத்து நிறுத்திய ஜானகி “அப்பாடி உங்களுக்கு பிடிக்கலையா? எல்லாருக்கும் பங்கு வச்சதுல எனக்கு இல்லாம போச்சேன்னு ரொம்ப வருத்தப் பட்டேன். நல்லதா போச்சு. உங்களுக்கு பிடிக்கலை. அதை நான் சாப்பிட்டுக்குறேன்”, என்று சொல்லி அவன் தட்டில் இருந்த கேசரியை ஒரு துளி கூட மிச்சம் இல்லாத படி வழித்து அங்கிருந்த மற்றொரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டாள். அவன் அவளை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நன்றாக இல்லை என்று சொன்னதை எல்லாரும் ஆசையாக சாப்பிட அவனுக்கு தான் பல்ப் வாங்கியது போல இருந்தது. அவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார் ரகு.
அவனை வெறுப்பேற்ற “கேசரின்னா இது தான். ஜெயா உன் கேசரியும் சூப்பரா தான் இருக்கும். ஆனா இதுல ஏதோ ஸ்பெஷலா தெரியுதுள்ள?”, என்று கேட்டார் ரகு.
“ஆமாங்க. ஏம்மா ஜானகி. இதை எப்படி செஞ்சேன்னு எனக்கு சொல்லி தா சரியா? ரொம்ப டேஸ்ட்டா இருக்கு. அப்படித் தானே அத்தை?”, என்று அம்பிகாவிடம் சொன்னாள் ஜெயா.
அனைவரும் சுற்றி சுற்றி அதை பற்றியே பேச “எனக்கு சாப்பாடே வேண்டாம்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றான் ஸ்ரீராம்.
அவன் சென்றதும் “அவன் பேசியதை பெருசா எடுத்துக்காத மா”, என்றார் ரகு.
“இதை எல்லாம் பெருசா எடுக்க மாட்டேன் மாமா. நீங்க சாப்பிடுங்க”, என்று சொல்ல அம்பிகா மட்டும் பேரனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்.
“அவன் தானே இவளைக் கட்டிக்கணும்னு சொன்னான்? அப்புறம் ஏன் ஜானகியை பிடிக்காத மாதிரியே பண்ணுறான்?”, என்று அம்பிகாவுக்கு குழப்பமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து வேண்டும் என்றே ஒரு கிண்ணத்தில் கேசரியை எடுத்து வந்து தங்களின் அறையில் அமர்ந்து சப்பு கொட்டி சாப்பிட்ட ஜானகியைக் கண்டு எரிச்சல் வந்தது ஸ்ரீராமுக்கு. சரியாக சாப்பிடாததால் அவனுக்கு பசி வேறு உயிர் போனது. கூடவே அந்த கேசரியின் இனிப்பும் அவன் நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் நாக்கை நீட்டி ரசித்து ருசித்து சாப்பிட இவனுக்கு எச்சில் ஊறியது.
“ஏய் அறிவிருக்கா டி? பெட்ரூம்ல உக்காந்து சாப்பிட்டுட்டு இருக்க? வெளியவே தின்னு தொலைக்க வேண்டியது தானே?”, என்று எரிந்து விழுந்தான்.
“என்னோட ரூம், நான் எங்க உக்காந்தும் சாப்பிடுவேன். படுத்துக்கிட்டும் சாப்பிடுவேன். உனக்கு என்ன?”
“உன் ரூமா? ஹலோ மேடம், இது என்னோட ரூம்”
“அப்படியா? சரி இப்பவே நான் மாமா கிட்ட சொல்றேன். மாமா மாமா இது உங்க பையன் ரூமாம். அதுல நான் இருக்க கூடாதுன்னு சொல்றான்னு”
“ஏய் ஏய், நான் எங்க அடி அப்படி சொன்னேன். தயவு செஞ்சு அவர் கிட்ட போய் வத்தி வைக்காத”
“அது.. அந்த பயம் இருக்கட்டும். சரி சரி என்னை கேசரியை சாப்பிட விடு. எங்க வீட்ல வச்சு செஞ்சப்ப கூட இவ்வளவு டேஸ்ட்டா வரலை. இன்னைக்கு செம டேஸ்ட்”, என்று சொல்லி ஒரு வாய் எடுத்து வைத்தவள் “நீ எதுக்கு என்னையே பாத்துட்டு இருக்க? உனக்கு கேசரி வேணுமா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.
அதற்கு மேல் மானம் ரோஷம் எல்லாம் பார்க்காமல் கட்டிலில் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் “ஒரே ஒரு வாய் மட்டும் போதும்”, என்றான்.
“இந்தா”, என்று சொல்லிக் கொண்டே ஒரு வாய் எடுத்து ஸ்பூனை அவன் வாய் அருகே கொண்டு சென்றாள். அவனும் சாப்பிடுவதற்காக வாயைத் திறக்க “மனுஷன் தின்பானான்னு கேட்டுட்டு இப்ப வாயை திறந்துட்டு இருக்க? போடா, உனக்கு ஒண்ணும் கிடையாது”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வாயில் அதைப் போட்டுக் கொண்டாள்.
அவள் ஏமாற்றியதில் கடுப்பானவன் அடுத்த நொடி அவள் முகம் நோக்கி குனிந்து விட்டான். அவள் திகைத்து விழிக்கும் போதே அவன் இதழ்கள் அவளுடைய இதழ்களை முற்றுகையிட்டது.
அந்த கேசரி அவனுடைய இதழ்களுக்கும் பயணம் போக, இந்த திடீர் செய்கையில் அவளுடைய கையில் இருந்த கிண்ணம் நழுவி கீழே விழுந்தது. முதலில் திகைத்தாலும் பின் அவனிடம் இருந்து அவள் விலக முயல அவனோ அவளை விலக விட வில்லை.
அவள் கேசரியைத் தராததால் எழுந்த கோபத்தில் தான் அவளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஆனால் அவள் இதழ்களில் புதைந்த பிறகு அவனால் அதில் இருந்து மீளத் தான் முடியவில்லை. அவனுடைய வலிமையான கரங்கள் அவளை வளைத்து அணைத்துக் கொண்டது. அவனுடைய சூடான இதழ்கள் அவள் இதழ்களில் மேலும் மேலும் அழுந்தியது. மென்மையாக ஆரம்பித்த முத்தம் வன்மையாக மாறிப் போனது.
அவளுடைய இதழ்களில் இருந்த குளுமையில் அவன் தேகம் கொஞ்சம் கொஞ்சமாக சூடேற ஆரம்பித்தது.
அவளோ இந்த உலகத்திலே இல்லை. உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். நியாயப் படி பார்த்தால் அவன் செய்கையில் அவள் கோபத்தோடு அவனை விலக்கித் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் கோபம் என்ற உணர்வு அவள் மனதில் எழவே இல்லை. அவன் தோளில் கை வைத்து அசையாமல் அமர்ந்திருந்தாள் ஜானகி.
அவனது மூச்சுக் காற்றின் வெம்மையில் ஏதோ காற்றில் பறப்பது போல அவளுக்கு தோன்றி வைத்தது. அந்த நேரம் அவர்களுக்குள் இருந்த பிரச்சனைகள் எல்லாம் அவள் மனதில் தோன்றவே இல்லை. அவன் தன்னுடைய கணவன் என்ற உரிமையான உணர்வே அவள் மனதில் மையம் கொண்டது.
அவர்களது முதல் அணைப்பு இது. அதனால் இருவருக்குமே அந்த வயதின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. அவனுக்கு அவள் இல்லாமல் இனி இருக்க முடியாது என்ற நிலை. தன்னுடைய இளமையின் தேடலை வாழ்வின் முதல் முறையாக அவள் அருகாமையில் உணர்ந்தான்.
அவளுக்கும் அப்படியே. வாழ்க்கையில் முதல் முறையாக புது விதமான உணர்வு எழுந்து அவளை அவனுடைய கைக்குள் கட்டிப் போட்டது. ஒரு கட்டத்தில் அவளுடைய கை உயர்ந்து அவனுடைய சட்டைக் காலரைக் கூட இறுக பற்றியது.
ஸ்ரீராமோ அவளுடைய இடையில் இருந்த கையை அவள் மேனியில் பயணிக்க விட்டான். முத்தத்தில் மெய் மறந்திருந்தாலும் அவனுடைய இந்த செய்கையை உணர்ந்தவள் தடுமாற்றத்துடன் அவன் கையை தடுக்க முயன்றாள்.
அவளை முழுதாக உணரத் துடித்துக் கொண்டிருந்தவன் அவளுடைய மறுப்பை லட்சியமே செய்ய வில்லை. அவனுடைய இதழ் முத்தமும் அவனுடைய கரத்தின் ஆளுமையும் ஜானகியை ஒரு வழி ஆக்கியது.
அவள் மூச்சுக் காற்றுக்காக ஏங்க ஆரம்பித்ததும் தான் அவளுடைய இதழை விட்டு விலகினான். அவள் முகத்தை வெகு அருகில் பார்த்தான். கண்களை மூடி இதழ்கள் துடிக்க இருந்த அவளின் கோலம் அவனை மீண்டும் பைத்தியமாக்க அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“இப்ப நம்புறேன், நீ செஞ்ச கேசரி மாதிரி யாராலயும் செய்ய முடியாது., அவ்வளவு ஸ்வீட்”, என்று அவளுடைய காதில் உதடு பட அவன் உரைக்க அடுத்த நொடி மயக்கம் தெளிந்தாள் ஜானகி.
அவனுடைய உதடுகள் அவள் சங்கு கழுத்தில் பயணம் போக ஆரம்பிக்க அடுத்த நொடி அவனை கட்டிலில் தள்ளி விட்டுவிட்டு துள்ளி எழுந்து நின்றாள்.
அவளுடைய விலகலை அந்த நிலைமையில் தாங்க முடியாமல் “ஜானு”, என்று ஆசையாக அழைத்தான். அவனுடைய உணர்வுகள் வடிவேனா என்று அடம் பிடித்தது.
அவளோ அவனை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் முறைக்கவும் அவன் திகைத்து தான் போனான். அவனால் அவளை புரிந்து கொள்ள முடியாவில்லை.
சிறிது நேரத்துக்கு முன் தன்னுடைய கைக்குள் மயக்கத்துடன் குழைந்தவள், அவனுடைய தேடலையும் அனுமதித்தவள் இப்போது முறைத்துப் பார்க்கவும் அவளை குழப்பமாக பார்த்தவன் “என்ன ஆச்சு ஜானு? பிளீஸ் இங்க வா”, என்றான்.
“இனிமேல் என் கிட்ட வந்த பாத்துக்கோ?”, என்று தன்னுடைய உணர்வுகளை மறைத்து அவனிடம் எரிந்து விழுந்தாள் ஜானகி. அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பானவன் “ஏன்?”, என்று கேட்டான்..
“ஏன்னா? நீ தொடுறது எனக்கு பிடிக்கலை போதுமா?”
“இது நம்புற மாதிரி இல்லையே? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பிடிக்காத மாதிரி நீ நடந்துக்கலை”
“என்ன? அப்ப உன் கிட்ட உருகி வழிஞ்சேன், இப்ப பிடிக்கலைன்னு சொல்றேன்னு கேக்க வரியா? நீ என்னோட ஹஸ்பண்ட். அதனால என்னால உன்னோட தொடுகையை வெறுக்கவோ மறுக்கவோ முடியலை. ஆனா நீ அப்படி இல்லையே? நீ அந்த ரம்யாவை தான் விரும்புற? அப்படி இருக்க நீ என் கிட்ட வரது எனக்கு பிடிக்கலை. அவளை நினைச்சு, எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை”, என்று சொன்னவள் அறையை விட்டு வெளியே சென்று விட்டாள். தலையை பிடித்த படி அமர்ந்து விட்டான் ஸ்ரீராம்.
அவனைப் பொறுத்த வரை ரம்யா விஷயம் பெரிய விஷயமே இல்லை. அதனால் தான் அவன் சாதாரணமாக ஜானகியை சமாதானம் செய்து விடலாம் என்று நம்பினான். ஆனால் அவன் மனைவியோ ரம்யாவைத் தான் பெரிய பிரச்சனையாக எண்ணினாள்.
இதை எப்படி அவளிடம் புரிய வைக்க என்று தெரியாமல் குழம்பிப் போனான்.