சிறிது நேரம் யோசித்த ஸ்ரீராம் ஜானகியைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான். எல்லாரும் தூங்கச் சென்றிருந்ததால் வீடே நிசப்தமாக இருந்தது.
“இந்த அரை லூசு எங்க போச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டே மொட்டை மாடிக்கு சென்றான்.
மொட்டை மாடியில் கைகளைக் காட்டிக் கொண்டு நிலாவை வெறித்துப் பார்த்த படி நின்றாள் ஜானகி. அவளின் இயல்பான அந்த தோற்றம் கூட அவனை ஈர்த்தது.
“அழகான ராட்சசி”, என்று எண்ணிக் கொண்டு அவள் அருகே சென்றவன் “ஜானு”, என்று அழைத்தான்.
“ப்ச், என்ன?”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.
“பிளீஸ் நான் சொல்றதைக் கேளு ஜானு. நீ நினைக்கிற அளவுக்கு எந்த பிரச்சனையுமே இல்லை மா”
“இல்லை, நீ பொய் சொல்ற? நடிக்கிற?”
“சரி உன்னை நம்ப வைக்க நான் என்ன பண்ணனும்?”
“நானே அதை நம்பிக்கிறேன். இப்ப நீ என்ன செஞ்சாலும் அது நடிக்கிற மாதிரி தான் எனக்கு தோணும். நீ ஒழுங்கா இருந்தா நானே மனசு மாறிருவேன்”
“சரி, நீ என்னை நம்புற வரைக்கு நான் உனக்காக காத்துட்டு இருப்பேன் போதுமா? இனி ஒரு தடவை இன்னைக்கு நடந்த மாதிரி நடக்காது. சாரி ஜானு, வா தூங்கப் போகலாம்”
“இல்லை நான் வரலை, நீ போ”, என்று சொன்னவளுக்கு அவனை எதிர்க் கொள்ளவே சங்கடமாக இருந்தது. சற்று முன் நிகழ்ந்த நிகழ்வில் வெட்கம் வந்தது. என்ன தான் ஆரம்பித்தது அவனாக இருந்தாலும் அதை நீடிக்க வைத்தது அவளும் தானே?
அதனால் தான் அவனுடன் செல்ல தயங்கினாள். ஆனால் அவள் முகத்தில் இருந்த வெட்கத்தை அவன் கவனிக்க வில்லை.
அதனால் கோபமாக சொல்கிறாள் என்று எண்ணி “ஜானு, நீ என்னை வெறுத்துற மாட்ட தானே? என்னை உனக்கு பிடிக்குமா?”, என்று தவிப்பாக கேட்டான்.
அவனுடைய குரல் அவளை பாதித்தது. “பிடிச்சதுனால தான் ராம் இங்க பிரச்சனையே. உன்னோட பாஸ்ட்டை என்னால மறக்க முடியாதுன்னாலும் இப்ப நீ எனக்கு மட்டும் வேணும்னு தான் நான் இப்படி எல்லாம் பண்ணுறேன். எனக்கே தெரியலை, உன்னை எப்ப பிடிக்க ஆரம்பிச்சதுன்னு”, என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டு முகம் மலர்ந்தவன் “நிஜமாவா ஜானு?”, என்று கேட்டான்.
“ஆமா ராம், எனக்கு உன்னை பிடிக்கும் தான். அதையும் மீறி உன் மேல கோபமா வருது. நீ ஏன் நல்லவனா இல்லாம போன?”
“நான் நல்லவனா தான் இருக்கேன். அது ஒரு நாள் உனக்கு புரியும், எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ ஒரு நாள் உண்மையை உணர்ந்துக்குவ. சரி இப்ப கீழே வா, தூங்கப் போகலாம்”, என்று அவன் சொன்னதும் அவள் அவனை தயக்கமாக பார்க்க “சத்தியமா உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது போதுமா? வா”, என்றான்.
சரி என்று சொல்லி அவளும் அவனுடன் நடந்தாள். போகும் போது “எங்க அப்பா கிட்ட ஏதாவது எக்குத்தப்பா உளறி வச்சிராத ஜானு. அவர் கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சவர்”, என்றான்.
“மாமாவும் என் கிட்ட உன்னை பத்தி அப்படி தான் சொல்றாங்க. அது உண்மையும் கூட. நீ தான் வில்லங்கம் பிடிச்சவன்”, என்று சொல்லி சிரித்தாள்.
ஒரு நொடி அவளை முறைத்தவன் பின் சிரித்து விட்டு “ஜானு நானா ஒண்ணு கேக்கவா?”, என்று கேட்டான்.
“கேளு”
“உன்னோட கணவனா தானே உனக்கு என்னைப் பிடிக்கலை. உன் மனசு மாறுற வரைக்கும் நாம பிரண்ட்ஸா இருக்கலாமே?”
“எப்படி உன் கூட பிரண்டா இருக்க? நீ என்னை வெளிய கூட கூட்டிட்டு போக மாட்டேனு சொன்ன?”
“அது நீ போனைப் பிடுங்கின கோபத்துல சொல்லிட்டேன். சாரி, நாளைக்கு வெளிய போகலாமா?”
“நாளைக்கு நாம எங்க வீட்டுக்கு போகணும்”
“ஆமால்ல, சரி அங்க போயிட்டு வந்து எங்க போகலாம்னு பிளான் பண்ணலாம் சரியா? இனிமே நாம பிரண்ட்ஸ்”
“சரி, ஆனா நீ இனி ரம்யா கூட பேச கூடாது”
“எனக்கு உன்னை விட வேற யாரும் முக்கியம் இல்லை ஜானு”
“நம்பலாமா?”
“கண்டிப்பா “
“சரி பாக்கலாம்”, என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தவள் அங்கே கிடந்த கேசரி கிண்ணத்தை எடுத்தாள். பின் கீழே கொட்டியிருந்த கேசரியையும் அந்த கிண்ணத்தில் எடுத்து வைத்தாள்.
அந்த கேசரியைக் கண்டு இருவருக்குமே சற்று முன் நடந்த நிகழ்வு நினைவில் வந்தது. அவன் முகத்தைக் கூட பார்க்காமல் “குட் நைட் ராம்”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள்.
அவனும் “குட் நைட்”, என்று சொல்லி விட்டு அவள் அருகில் படுத்தான்.
சற்று முன் நடந்த நிகழ்வை எண்ணிய படி இருவரும் தூங்க முடியாமல் தவித்து பின் தூங்கா ஆரம்பித்தார்கள். சற்று நேரத்தில் அவள் அவன் பக்கம் உருண்டு வர இந்த முறை அவனாகவே அவள் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் போட்டுக் கொண்டு அவளை கட்டி அனைத்த படியே தூங்க ஆரம்பித்தான். அவளுடைய அருகாமையில் அவனுக்கு எல்லையில்லாத நிம்மதி வந்தது.
அடுத்த மூன்று நாட்கள் மறுவீடு, சொந்தக்காரர்கள் விருந்து என்று கழிய அதற்கு அடுத்த நாள் அவனுடைய வீட்டுக்கு வந்தார்கள்.
அங்கே வந்ததும் அனைவரும் அவர்களை ஹனிமூன் போக சொல்ல “கொஞ்ச நாள் போகட்டும்”, என்று இரண்டு பேரும் சேர்ந்து சொல்லியதால் மற்றவர்கள் அவர்கள் விருப்பம் போல விட்டு விட்டார்கள்.
சராசரி வாழ்க்கைக்கு இருவரும் பழக இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லாமல் இருந்தது. கூடவே அம்பிகா வேறு ஜானகியிடம் “உன்னைத் தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிச்சவன் திடீர்னு கோப படுறான்னு நினைச்சேன். ஆனா இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்குறது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. உன்னை ஸ்ரீராம்க்கு ரொம்ப பிடிக்கும் ஜானகி. நானே அவன் கேட்டு உடனே உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிட்டேனோன்னு நினைச்சேன். ஆனா இப்ப எனக்கு நிம்மதியா இருக்கு”, என்றாள். அதைக் கேட்டு ஜானகிக்கு குழப்பம் வந்தாலும் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
“நீயும் உன் பேரனும் நிம்மதியா இருக்கீங்களா? அப்படி இருக்க விட கூடாதே”, என்று கிண்டலாக சொல்லி அம்பிகாவை சீண்டினாள் ஜானகி.
அதை அம்பிகா ஸ்ரீராமிடம் சொல்ல அவனோ “என் பொண்டாட்டி அப்படி எல்லாம் செய்ய மாட்டா பாட்டி. அவ ரொம்ப நல்லவ”, என்று சொன்னான். அதைக் கேட்டு அம்பிகா அவனை முறைக்க ஜானகியின் உதடுகள் மலர்ந்தது.
அதற்கு அடுத்த நாள் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீராமை எழுப்பினாள் ஜானகி.
“என்ன ஜானு? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே?”, என்று சிணுங்கினான்.
“இவ்வளவு நேரம் தூங்கினது போதும். நான் ஒரு முக்கியமான விஷயம் கேக்க தான் உன்னை எழுப்பினேன்”
“என்ன ஜானு?”
“நீ ஏன் எந்நேரமும் வீட்லே இருக்க?”
“நீ தான் என்னை வெளியவே விட மாட்டுக்கியே? அப்புறம் நான் எங்க போக?”
“எப்ப பாத்தாலும் ஊர் சுத்துற ஞாபகம் தானா? நான் வேலைக்கு போறதைப் பத்தி கேட்டேன். நீ வேலைக்கு போகலையா?”
“என்ன வேலைக்கு?”
“என்ன கேள்வி இது? கிரி மச்சான் மாமா ரெண்டு பேரும் கம்பேனிக்கு போறாங்க . நீ மட்டும் வீட்லே இருக்க?”
“அதான் அவங்க போறாங்கல்ல? அப்புறம் நான் எதுக்கு? வீட்லே இருக்க போர் அடிக்கு ஜானு. நாம ரெண்டு பேரும் எங்கயாவது போகலாமா?”
அவன் தன்னை அழைத்தது அவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அதை மறைத்தவள் “இப்படி நீ வீட்லே இருந்தா எப்படி சாப்பிடுறது?”, என்று கேட்டாள்.
“என்ன சொல்ற நீ?”
“நீ வேலைக்கு போகாம வீட்லே இருந்தா எனக்கு யாரு சோறு போடுவா?”
“ஏன் இப்படி கேக்குற? என் அம்மா அப்பா தான் சாப்பாடு போடுவாங்க“
“இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்லை”
“ஜானு”
“அத்தை மாமா உனக்கு சோறு போடுறாங்கன்னா அதுக்கு காரணம் ந அவங்க பெத்த பிள்ளை. ஆனா எனக்கு படி அளக்கணும்னு அவங்களுக்கு என்ன அவசியம்? எனக்கு சோறு போடு கூட வக்கில்லைன்னா என்னை எதுக்கு நீ கட்டிக்கணும்?”
“என்ன டி இப்படி எல்லாம் பேசுற? நான் என்ன போகவே மாட்டேனா சொல்றேன்? கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு தான்….”
“ரெஸ்ட் எடுத்தது போதும். இப்ப நீ வேலைக்கு போ. அப்படி இல்லைன்னா இனி நான் வேலைக்கு போறேன். உனக்கும் சேத்து நான் சோறு போடுறேன்”, என்று அவள் சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தான்.
அவள் பதிலுக்கு முறைகவும் “போறேன் போதுமா? நீ எங்க அப்பாவை விட சரியான இம்சை டி”, என்று சொன்னவன் ரகுவிடம் சென்று “நானும் கம்பெனிக்கு வரேன் பா. அண்ணா கூட சேந்து எல்லாம் பாத்துக்குறேன்”, என்று சொன்னான். அவன் அப்படிச் சொன்னதும் அவனை எட்டாவது அதிசயம் போல் பார்த்தார் ரகு.
அவன் பின்னால் நின்ற ஜானகியைப் பார்க்க அவள் கட்டை விரலை உயர்த்தி அவரிடம் காட்டினாள். அதைக் கண்டு புன்னகைத்த ரகு “ரொம்ப சந்தோஷம் டா. நீயும் கம்பெனிக்கு போறேன்னா இன்னும் எனக்கு அங்க என்ன வேலை. இனி எனக்கு ரெஸ்ட் தான். அங்க எல்லாத்தையும் நீயும் கிரியும் பாத்துக்கோங்க”, என்று சொன்னார்.
அவனும் அறைக்குள் சென்று கிளம்ப ஆரம்பித்தான். அவன் சென்றதும் “எப்படி ஜானகி அவனை சரி செஞ்ச? நான் எத்தனை நாள் சொல்லிருப்பேன் தெரியுமா? என் பேச்சை அவன் கேக்கவே இல்லை. நீ எப்படி மாத்தின?”, என்று கேட்டார் ரகு.
“உங்களுக்கு பதிலா வேலைக்கு போய் உங்களுக்கும் சேத்து நான் கஞ்சி ஊத்துறேன்னு சொன்னேன் மாமா. அடுத்த நிமிஷம் கிளம்பிட்டார்”, என்று சொல்லி சிரித்தாள் ஜானகி.
“ரொம்ப சந்தோஷம் மா. அப்புறம் ஜானகி….”
“என்ன மாமா? சொல்லுங்க”
“உன் வாழ்க்கையை நான் ஒண்ணும் கெடுத்துறலையே? அவன் கூட நீ சந்தோஷமா தானே இருக்க? கிரி யமுனா வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு. ஆனா இவன் கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சவன் அதான் கொஞ்சம் பயமா இருக்கு”
“சே சே உங்க மகனைத் தவிர வேற யாரைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேனான்னு தெரியலை மாமா. நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்”, என்று சொன்னாள். எதனால் இப்படிச் சொன்னாள் என்று அவளே அறியாள்.
பின் அவள் அறைக்குள் சென்ற போது அவன் கண்ணாடி முன்பு அமர்ந்து தலை வாரிக் கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் “என்ன மேடம்? மாமனார் கிட்ட இருந்து ஒரே பாராட்டு மழை போல?”, என்று புன்னகையுடன் கேட்டான்.
“கண்டு பிடிச்சிட்டியா?”, என்று கேட்டு அவள் சிரிக்க அவனும் புன்னகைத்தான். “இத்தனை நாள் யார் சொன்னதையும் கேக்கணும்னு தோணினது இல்லை ஜானு. ஆனா இன்னைக்கு உன் பேச்சை மட்டும் கேக்கணும்னு தோணுது. நீ என்னோட மனைவி. நாளைக்கு உன்னை யாரும் ஒரு சொல் தவறா சொல்லிறக் கூடாது. இனி உனக்கு என்ன வேணும்னாலும் நீ என் கிட்ட தான் கேக்கணும். சரி நான் கிளம்புறேன்”, என்றான்.