Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 33

வீடு வரை காரை தேர் போல நகர்த்திக் கொண்டு போனான் வாத்சல்யன்..!

தாய் தந்தையிடம் இந்த இனிப்பு செய்தியை சொன்ன கணம்.. மங்கை சந்தோஷத்தில் அழுது விட்டார்..

பூஜை அறைக்கு லஷ்மியை அழைத்துக்கொண்டு போய் மனமுருக பிரார்த்தித்து.. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென மஞ்சள் துணியில் காசு முடிந்து வேண்டுதல் வைத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

செல்வவிநாயகத்திற்கு மகிழ்ச்சியை முகத்தில் காட்ட தெரியவில்லை.. “மங்கை.. ஏதாவது ஸ்வீட் பண்ணு.. வேண்டாம்.. நான் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு அப்படியே ஸ்வீட் வாங்கிட்டு வந்துடறேன்..” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டவர் மகனிடம் முகம் காட்டாமல் செருப்பை போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.



Advertisement

புவனாவிற்கு முகத்தில் ஈயாட வில்லை.. ஆனால் முரளி அப்படியில்லை..! மெய்யாகவே அண்ணனுக்காக சந்தோஷப்பட்டான்..

“நல்லபடியா குழந்தை பிறக்கற வரை வாயை மூடிட்டு அமைதியா இருந்திரு.. ஏதாவது சண்டையை இழுத்து வைச்சன்னு வை.. சரிதான் போடின்னு உங்கம்மா வீட்டுக்கு துரத்தி விட்டுருவேன்..!” என்று பற்களை கடித்துக் கொண்டு மிரட்டியவன் தன் கணவன்தானா? என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் புவனா!

கீர்த்தனா பிரசவத்துக்காக வந்த சமயத்தில் புவனாவால் வெடித்தெழுந்த பிரச்சனையிலேயே நொந்து போயிருந்தான் முரளி. அண்ணனுக்காக பரிந்து பேசி புவனாவிடம் சண்டை போட்டு நிம்மதியை இழக்க மனமில்லாமல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தவனால் இப்போதும் அப்படி இருக்க முடியவில்லை.. ரத்த பாசம் அவ்வப்போது உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுமோ என்னவோ!

Advertisement

எது எப்படியோ..! தேவையில்லாமல் பேசி மற்றவர்களிடம் வில்லியென பேர்வாங்க புவனா விரும்பவில்லை.. வீட்டிலிருக்கும் அத்தனை பேரின் ஆதரவும் பெரிய மருமகளுக்குத்தான் எனும்போது விட்டுக் கொடுத்து அமைதியாக போவது.. அல்லது அப்படி‌ இருப்பதாக காட்டிக் கொள்வது புத்திசாலித்தமென நினைக்கிறாள்.

Advertisement

மீனாட்சி வீட்டில் திருவிழா தொடங்கியதைப் போல் ஒரே கொண்டாட்டம்தான்.. இனிப்பும்.. பழரசமும்.. கர்ப்பஸ்தீரிக்கான உணவுமாக அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக பாத்திரங்கள் பறக்கின்றன..

வாத்சல்யனின் மடியிலோ அல்லது லஷ்மியின் நெஞ்சிலோ என தீப்திக்கான‌ இடமும் முக்கியத்துவமும் எப்போதும் மாறுவதில்லை.

ஆனால் சில விஷயங்கள் இப்போதும் கூட புதிர்தான்..

Advertisement

ஆரம்பத்திலிருந்து வெறுத்து வந்த தீப்தி திடீரென தன்னை அம்மாவென அழைக்க காரணம் என்ன..?

அசரீரி வாக்கு சொன்னபடி ஏன் எதுவும் நடக்கவில்லை.

கனவில் தீப்தியை காட்டி.. தலையில் கைவைத்து இருவரும் ஒருமித்து வரம் கேட்டால்.. குழந்தை பிறக்கும் என்று சொன்னதெல்லாம் என்ன கணக்கு..!

குழந்தையின் தலையில் கை வைத்து வரம் கேட்ட ஐந்தாவது மாதத்திலேயே லஷ்மி கருவுற்றது எப்படி.. அதுவும் தீப்தி உயிரோடு இருக்கும்போதே..!

திடீரென ஆள் அரவமற்ற பகுதிக்கு டாக்டர் தம்பதி வந்ததும் தான் கர்ப்பமாக இருப்பதாக தகவலை சொன்னதும்..?

“நடக்கற ஒவ்வொரு நிகழ்வுக்கு காரணம் தேடறதை நிறுத்து சந்தா..!”

அவள் பாதத்தை தன் தொடையில் வைத்து விரல்களுக்கு சொடுக்கெடுத்துக் கொண்டே வாத்சல்யன் சொன்னதைக் கேட்டு.. இதமான சுகத்தோடு கண்களை மூடியிருந்த சந்தா விழி திறக்கிறாள்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்..

ஆராய்ச்சி பண்றதை நிறுத்திட்டு நடக்கறதை ஆழ்ந்நு அனுபவிச்சுக்கோ..! நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு.. அது நடத்தற திருவிளையாடல்களை புரிஞ்சுக்கற அளவுக்கு நமக்கு அறிவில்லை.. விளக்கை சுத்தற வீட்டில் பூச்சிகளுக்கு.. உலகத்துக்கே ஒளி கொடுக்கற சூரிய ஆற்றலை பத்தி தெரிஞ்சுக்கற அளவு ஞானம் இருப்பதில்லை! நாமளும் அப்படித்தான்..! கருப்பு படத்துல ஒரு டயலாக் வருமே! இட்ஸ் எ காட் திங்..! அப்படி நினைச்சுக்கோ!” என்றான் அவன்.

கடவுளை நேரில் கண்டு வந்தது போல் நொடிக்கு நொடி தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரும் அதிசயமாக சிலாகித்து பேறுகாலத்தை சந்தோஷமாக அனுபவித்தார்கள் அவர்கள்..!

வெகு விமரிசையாய் நடந்த லஷ்மியின் வளைகாப்புக்கு வந்திருந்த அவளின் உடன் பிறந்த சகோதரிகள் தன் தங்கையை உள்ளங்கையில் வைத்து தாங்கியதை கண்டு புவனாவிற்கு காது மூக்கில் புகை வராத குறை..!

போதாக்குறைக்கு.. ஆங்காங்கே நின்று மையமிட்டு தாக்கிய கணவனின் காந்த பார்வையிலே குளிர் நிலவாகிப்போன சந்தான லஷ்மியைக் கண்டு பொறாமையில் பொசுங்கிப் போனாள் புவனா.

பிறந்த வீட்டில்தானே பிரசவம் நடக்க வேண்டும்.. சந்தாவை எங்களோடு அழைத்துச் செல்கிறோம் என அக்காக்களோடு சேர்த்து பெற்றவளும் பிடிவாதமாய் நிற்க, எல்லா வசதிகளும் நிறைந்த நல்ல மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும்.. அதெல்லாம் அங்கே நடக்கும் காரியமில்லை என அவர்களோடு அம்மாவும் மகனுமாய் வாக்குவாதம் செய்து இறுதியில் லஷ்மியை தங்களோடு நிறுத்திக் கொண்டார்கள்.

பிரசவ நேரத்திலும் கூட கணவனாகப்பட்டவன் கையை பிசைந்து கொண்டு கலவரத்தோடு நின்றிருக்க வழக்கத்துக்கு மாறாக கலகலவென சிரித்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.

“பிரசவம் உனக்குடி..!”

“அதுக்கு..?”

“வலியில கொஞ்சமாச்சும் கத்துடி.. ஆஆ.. ஊஊஊ.. இப்படி!”

“எனக்கு வலிக்கவே இல்லையே..!”

“டாக்டர் வந்து என்னன்னு பாருங்க..!” என நூறாவது முறையாக ஓடிப் போனான்.

டாக்டரும் அவன் இம்சையில் பொறுமையிழந்து ஓய்ந்து போன நேரத்தில்.. பனிக்குடம் உடைந்து அடுத்த ஒரு மணி நேரத்தில்.. ஆணும் பெண்ணுமாய் இரண்டு ரோஜாக்களை பெற்றெடுத்தாள் லஷ்மி..

இரண்டு குழந்தைகளையும் முதன் முதலில் தான் கையிலேந்தப் போகும் தருணத்தை.. வேணுவை வீடியோ எடுக்கச் சொன்னதையே மறந்து போய்.. உணர்ச்சி குவியலாய் கண்ணீர் பூக்கள் சிதற குட்டி குட்டி பொம்மைகளாய் தன் கைகளுக்குள் அடக்கமாயிருந்த பிள்ளைகளை கண்ணிறைந்து பார்த்திருந்த வாத்சல்யனின் எக்ஸ்பிரஷன்களையும் எமோஷன்களையும் சொட்டு விடாது போன் கேமராவில் பதிவு செய்து கொண்டான் வேணு.

கை, கால் உதைத்து கண் சிமிட்டி செப்பு வாய் திறக்கும் இரண்டு ரோஜாக்களை கண்ட நொடி மகிழ்ச்சி பெருக்கை எப்படி வெளிப்படுத்துவதென தெரியாமல்.. “கொஞ்சமா அழுதுக்கட்டுமா..?” என்று கேட்ட மனைவியை முத்தமிட்டு முத்தமிட்டு.. சமன்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான் வாத்சல்யன்.

நீண்ட இடைவெளிகளில் என்ன பேசுவதென தெரியாமல்..
“ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..” என்ற பேத்தலோடு கண்ணீர் சிந்தி அழ மட்டும்தான் தெரிந்தது அவனுக்கும்!

இரண்டு வருடங்கள் கழித்து..!

அரவிந்தன்.. மித்ரா நந்தினி வினோத்.. தீப்தி வாத்சல்யன் சந்தான லஷ்மியின் பிள்ளைகள் நவநீதன்.. நர்த்தனா.. என வீடெங்கும் சின்னதும் பெருசுமாய் குழந்தைகளாய் ஓடிக் கொண்டிருந்தன..

பள்ளிக்கூடத்து கண்டிப்பிலும் முரளியின் வளர்ப்பிலும் அரவிந்தன் பக்குவப்பட்டு மாறி கொண்டு வருகிறான். சிறுவயதில் அண்ணந்தம்பிகள் தானே.. வளர்ந்த பிறகுதான் பங்காளிகள்..

இந்த ரெட்டை வாண்டுகளை தங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு கவனிப்பதாகட்டும் அவர்களோடு விளையாடுவதாகட்டும்.. நந்தினி வினோத்தும் சரி.. அரவிந்தனும் மித்ராவும் சரி.. குழந்தைகள் மீது அன்பை பொழிவதில் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை..! தீப்தி அதற்கும் ஒரு படி மேல்.. உணவு உறக்கம் எல்லாம் இவர்களோடுதான்.. பள்ளிக் கூடத்திற்கு போக ஆரம்பித்துவிட்ட போதும்.. மாலை நேரத்தில் ஸ்கூல் வேனிலிருந்து இறங்கிய கையோடு நேராக அவள் வந்து சேரும் இடம் வாத்சல்யனின் வீடு!

“வாத்சா சார்..! வீட்டை விலைக்கு வாங்கறதா ஒரு ஐடியா இருக்கு..!” வேணு சொல்லவும் கண்கள் விரித்து பரவசப்பட்டான் வாத்சல்யன்.

“ரொம்ப நல்ல விஷயம்.. தாராளமா செய்யுங்க..!” தன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த தீப்தியை தட்டிக் கொடுத்தபடியே சொன்னான் அவன்.

இருவரும் தெரு விளக்கின் வெளிச்சத்தில் வீட்டு வாசலில் நின்று காத்தாட இந்த கதையை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

“ஹவுஸ் ஓனருக்கு வீட்டை விக்கிறதுல பெருசா விருப்பம் இல்லைன்னு நினைக்கறேன் நீங்க கொஞ்சம் பேசினா அவர் ஒத்துக்க வாய்ப்பிருக்கு..! உங்க வார்த்தைக்கு நிச்சயம் மதிப்பிருக்கும்..”

“சரி! நான் ஒரு முறை பேசி பார்க்கறேன்..” என்றவன் தீப்தியின் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையை வேணுவிடம் ஒப்படைத்துவிட்டு தன்னறைக்கு வந்தான்.

நவநீதமும் நர்த்தனாவும் உறங்கிப் போயிருக்க.. கணவன் உள்ளே வந்த சத்தத்தில் படுக்கையிலிருந்து
எழுந்து அமர்ந்தாள் லஷ்மி.

“தீப்தி குட்டியை கொண்டு போய் கொடுத்தே ஆகணுமா..? இன்னைக்கு ஒரு நாள் இங்க தூங்கினாத்தான் என்ன..?” உதட்டை சுழித்தாள்..

“ஏய்.. கேட்கும் போது என்ன பண்ண சொல்ற..? முடியாதுன்னா சொல்ல முடியும்.. வாரம் முழுக்க பாப்பா இங்கதானே இருக்கா..? பாவம் அவங்களுக்கும் ஆசை இருக்குமில்ல..!” என்றபடியே உறங்கிக் கொண்டிருந்த தனது மகனையும் மகளையும் உதட்டுச் சிரிப்புடன் ரசித்துப் பார்க்க.. அவன் தோளில் சுளீரென அடி வைத்தாள் லஷ்மி.

“தூங்கற குழந்தைகளை ரசிக்கிறது என்ன பழக்கம்..! திருஷ்டி பட்டுடும்.”

“அப்ப நீ வா..! உன்னை ரசிக்கறேன்..”

“ஆசைதான்.. பேசாம‌ படுங்க..!” என திரும்பி படுத்துக்கொள்ள அவள் தோளை சுரண்டினான் வாத்சல்யன்.

“ஏய்.. இந்த பக்கம் வாடி..!”

“மாட்டேன்..”

“ஒன்னும் பண்ண மாட்டேன்..! ஜஸ்ட் ஹக் அன்ட் கிஸ்..! குழந்தைங்க தூங்கும்போதுதான் உன்னை கட்டி பிடிக்க முடியும்.. பிளீஸ்டி..!”

“வாத்து..!”

“அந்தப் பக்கம் குழந்தைகளுக்கு பில்லோ வைச்சுட்டு இப்படி வா..! முரண்டு பிடிக்க வழியில்லாமல் அவன் குரல் லஷ்மியை கட்டியிழுத்துக் கொண்டு வந்து விட.. பிள்ளைகளை வசதியாக படுக்க வைத்துவிட்டு.. அவன் பக்கத்தில் படுத்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் லஷ்மி..!”

“என்னங்க.. அந்த கனவு..!”

“ப்ளீஸ் போதும்டி..! இந்த ரெண்டு வருஷத்துல இதைப் பத்தி விதவிதமா கேள்வி கேட்டுட்ட.. நானும் வகை வகையா பதில் சொல்லிட்டேன். இத்தோட விட்டுடு.”

“ஆனா..!”

“நீ அடங்க மாட்ட..! நான் நல்ல பையனா இருக்கணும்னு பார்த்தேன்.. உனக்கு பிடிக்கல..!” என்றவன் அவள் இதழோடு இதழ் பொருத்தி வார்த்தைகளையும் சேர்த்து விழுங்கிக் கொண்டான்.

‘ஒரு உயிரை காக்க தன் இன்னுயிரை தரவந்த உங்கள் உன்னதமான குணத்திற்கு இந்த பிரபஞ்சத்தால் வேறு என்ன பரிசளித்து விட முடியும்.

கருணை பொங்கும் இடத்தில் கடவுளின் வாசம் இருக்கும்.

இரு கரங்கள் நீட்டி உங்களை அணைத்துக் கொண்ட நொடி இரு உயிர்கள் உருவாகின..!

வாழ்க பல்லாண்டு..!’

ஜாஜ்வல்யமாய் பிரவாகமெடுத்து அகண்டு விரிந்த ஜொலிப்பு.. சட்டென சுருங்கி தன்னை ஒரு துளைக்குள் இழுத்துக்கொண்டு மறைகிறது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் கேள்விகளுக்கு முடிவாய் பதிலாய் இந்த கனவு..!

ஆனால் இம்முறை வாத்சல்யனும் லஷ்மியும் அடித்துப் பதறிக் கொண்டு எழுந்து உட்காரவில்லை.. மாறாக தன் இரட்டை குழந்தைகளை அணைத்துக் கொண்டு சுகமாக உறக்கத்தை தொடர்கிறார்கள்.

சுபம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!