ஒரு மாதம் கடந்த நிலையில் வேலு தினமும் பூர்ணா வீடு சென்று , சிறிது நேரம் வள்ளி அத்தையுடன் பேசுவதை வழக்கமாக்கி கொண்டான். தன் பொருட்டு அவர் குற்ற உணர்ச்சியில் வாழ்வதை அவன் விரும்ப வில்லை.
தன் தாய்க்கு சம்முவை பிடிக்காது என தெரியும், ஆனால் இந்த அளவிற்கு வெறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை , ஒருவர் அழிய வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு கொடூர எண்ணம் கொண்டுவரா தன் தாய் , இருக்காது இருவருமே கோபத்தில் வார்த்தை விட்டு விட்டனர் , கோபத்தில் விடும் சாபம் அர்த்தமில்லாதது. அதன் பொருட்டே தினமும் வள்ளி அத்தையை பார்த்து அவரை சகஜமாக்க முயல்கிறான்.
தன் எண்ணத்தில் இருந்து வெளி வந்த வேலு, மகளின் சீருடை எடுத்து கொண்டு பின் பக்கம் வந்தான் துவைப்பதற்கு. மற்ற துணிகளை கூட துவைக்காமல் தள்ளி போடலாம். ஆனால் , சீருடை இரு நாள்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக துவைக்க வேண்டும்.
சிறு வயதில் வேலுக்கும் , சம்முக்கும் பள்ளி இலவச சீருடைதான். ஒரு வாரம் கூட தாங்காது வேலுக்கு அவ்வளவு ஆட்டம் , சம்மு மறுநாளே பட்டன் எல்லாம் பிய்த்து விடுவாள் அத்தையிடம் அடி வாங்காமல் தப்பிக்க அவன் சட்டையை வங்கி போட்டு கொள்வாள் , இது மாதிரி எவ்வளவோ , வேறுபாடே கிடையாது இருவரிடமும் .
சிறு வயது நினைவில் முகம் புன்னகை பூச ,காலம் தான் எவ்வளவு மாறி விட்டது என்று யோசனையில் மகளின் உள்ளாடை எடுத்தான் கையில் துவைக்க , ஏதோ வித்தியாசம் பவி ஜட்டியில் வெள்ளையில் திட்டாக , மனம் படபடக்க என்ன உணர்வென்று தெரியாமல் ஒரு பயம் , விவரம் தெரியாத அளவிற்கு சின்ன பையன் கிடையாது தான், ஆனால் இது கணிக்க முடியவில்லை.
அடுத்து அவன் போய் நின்ற இடம் சம்மு தான். சங்கடம் பார்க்காமல் மனதில் தோன்றுவதை கேட்க அவனுக்கு இருக்கும் ஒரே ஆள் சம்மு தானே.
அப்போது தான் வெளியே வந்து வாசல் தெளித்து கொண்டிருந்தாள் பூர்ணா. அங்கு வந்த வேலுவை பார்த்தவள் “ ஏலே ! வேலு இன்னும் பொழுது மங்க தானே வருவ , வேலை வெள்ளென முடிந்ததாலே” ? என்க.
வேலு அவள் அருகில் சென்று “ ஏட்டி ! என்னமோ சரியில்லவே , மனசு அடிக்குது , என்னானு நான் சொல்ல”?…என்று புலம்பியவனை,
பூர்ணா நிமிர்ந்து பார்க்க , அவன் வேதனை முகம் கண்டு அங்கமெல்லாம் பதறியது . “ ஏலே! வேலு என்னாலே விவரம் , யாருக்கு என்னாவே ? உன் முகம் ஏன் செத்து கிடக்கு , நான் என்னத்த யோசனை பண்ண , என்னதாம்ல ஆச்சு வாய தொராவே “? என்று முதுகில் ரெண்டு போட….
பின்புதான் வேலு விவரத்தை சொல்லி தன் பயத்தையும் சொல்ல யோசனையாகி போனது பூர்ணாக்கு.
அவனின் கலக்கம் போக்கும் வகையில் “ஏலே! வேலு இந்த விவரமெல்லம் உனக்கு எண்ணாவே தெரியும்? உனக்கு சரியா கணிக்க தெரியாது , பவிய பொழுசாய இங்கன கூட்டி வா , நான் என்னனு காங்குறேன்”… என்க.
வேலு சரியென்று தலையசைத்தாலும் மனமெல்லாம் பாரமாகி போனது , தாயில்ல பெண் எதுக்கும் ஏங்க விட்டதில்லை. யாரும் இன்றி தனித்து நின்ற போதும் தன் துணை மகள் என நின்றவன். இன்று கலங்கி போனான் இனி வரும் காலங்களை எவ்வாறு சமாளிப்போம் என்று.
மாலை பள்ளி விட்டு பவியை, வேலு கூட்டி வந்த இடம் பூர்ணா வீடு தான். பவி குட்டிக்கு ஒரே சந்தோசம் , பெரியம்மா என்று ஆசையாக கட்டி கொண்டாள். பவிக்கு பூர்ணா வீடு நிரம்ப பிடிக்கும் , சொந்தம் என்று எங்கும் செல்லதாவளை அன்போடு அரவணைக்கும் பூர்ணா , வள்ளி அம்மத்தாவை பவிக்கும் பிடிக்க விடுமுறை நாட்களில் பூர்ணா வீடு தான் பவிக்கு.
இன்றும் ஆசையாக கட்டி கொண்டவளை தானும் அனைத்து கொஞ்சி மகிழ்ந்த பூர்ணா , “ஆயி ! பள்ளியொடம் விட்டு வந்த உடுப்பு மாத்தனும்ல , உம்ம அப்பன் வேற உடுப்பு கொண்டாந்துருக்கான் போய் மாத்திட்டு வாங்க , பெரியம்மா பால் பணியாரம் செஞ்சு தாரேன்”… என்று சொல்லி வேலுவை பார்த்து கண் காட்ட,
வேலு போய் தன் வண்டியில் இருந்து மாற்றுடை பை எடுத்து வந்து பவி கையில் தர சிரிப்போடு வாங்கி உள்ளே உடை மாற்ற சென்றாள் பவி , பூர்ணா பால் பணியார வேலை பார்க்க வேலு வெளி திண்ணையில்.
உடை மாற்றி வந்த பவி , வள்ளி அம்மத்தாவின் கழுத்தை கட்டி கொண்டு செல்லம் கொஞ்ச, பூர்ணா சிறு சிரிப்போடு ஆளுக்கொரு கிண்ணத்தில் பால்பணியாரம் வைத்து கொடுத்து விட்டு வெளியே சென்றால் பவியின் துணியை அலசி போட.
பூர்ணாவும் , பவி உடையை ஆராய்ந்து பார்க்க வெள்ளை படுதலை கண்டு யோசனையானாள் , திண்ணையில் இருந்த வேலுவிடம் வந்து எதையும் காண்பித்து கொள்ளாமல் “ ஏலே! அது ஒன்னும் இல்லவே, சிலருக்கு வெயில் சேராம சூட்டுக்கு இப்படி இருக்கும் மாசி முடிய போவுதுல, அதான் உன் மவளுக்கும் வெயில் காத்து ஒத்துகலவே”! என வேலுவின் பயம் போக்க ,
முகம் தெளியாத வேலு “ ஏட்டி! சம்மு வேற ஒன்னும் இல்லவே , பார்த்ததும் எனக்கு கையும் ஓடலை , காலும் ஓடலை ஒரே படபடப்பு ஆகி போச்சுலே , இப்பத்தான் நெஞ்சு அடங்குது”… என்று சொல்லி நெஞ்சை நீவ
அவனை அழுத்தமாக பார்த்த பூர்ணா “ ஏலே! வேலு பொண்ண பெத்த எல்லாரும் இத தாண்ட தான் வேணும் , இப்போ இல்லான ஆறு மாசமா , ஒரு வருசமா சாமி விட்டதுலே, நான் எதுக்கு இருக்கேன் பவியா வளத்து விடத்தானே , மனசு வெம்பதலே” என்று தைரியம் சொல்லி அனுப்பிய போதும், அவளுக்கு ஒரு அனுமானம் இருந்தது.
பூர்ணா அனுமானம் சரியேன்பது போல அடுத்த ஒரு வாரத்தில் பவி பெரிய பொண்ணானள்.
தன் காலை நேர தோட்ட வேலை முடிந்த பின் வீடு வந்த வேலு, மகளை காண அறைக்கு செல்ல அங்கு அவன் கண்ட கோலம் நெஞ்சை உலுக்கியது.
படுக்கை விரிப்பு எல்லாம் கரையாக இருக்க , உடை நனைந்து கை , கால் நடுங்க தனக்கு என்ன நடக்கிறது என்று அறியாமல் மலங்க மலங்க விளித்தபடி அமர்ந்திருக்கும் மகளை தான் கலங்கும் கண்களில் பார்த்திருந்தான் வேலு.