வேலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே மறந்த மாதிரி மகளை பார்த்து நின்றான். தன் செல்ல மகள் பார்த்ததும் சிரிப்போடு அப்பா என்று கட்டி கொள்பவள் , இன்று ஒதுங்கி நின்று மருண்ட விழிகளில் பயத்துடன் பார்ப்பதை தாங்க வில்லை தந்தைக்கு.
மகள் அருகே சென்ற வேலு “ஆயி ! என்ன பெத்த ஆத்தா , ஏஞ்சாமி! என்னாவே? மருகாதிய நான் உன் அப்பன்லே வாசாமி வா வா நாம போய் குளிப்போம்” என்று மெதுவாக மகள் அருகே சென்று பேசி கை பிடிக்க,
வேலு கையை தட்டி விட்டு கட்டிலின் பின் சென்று மறைந்து நின்றாள் பவி. அவளுக்கு எல்லாமே பயத்தையும் , நடுக்கத்தையும் கொடுத்தது. ஏதோ ஒரு அசௌகரியம் இதை ஏற்க முடியவில்லை, குழப்பம் , பயம் , தனக்கு ஏதோ என்று பதட்டம் , இப்படியே எவ்வாறு தான் பள்ளி செல்வது , தோழிகளை பார்ப்பது , விளையாடுவது , தந்தை முன் கூட நிற்க முடியவில்லையே தன்னை ஒளிந்து கொள்ள சொல்லும் உள்ளுணர்வு என்று வயதுக்கு மீறிய மன போராட்டம் அவளுள்.
வேலுக்கு இது எதுவும் கண்ணில் படவில்லை. தன் பிள்ளை தன்னை விட்டு தள்ளி சென்றதே அவனை வீழ்த்தியது. “எங்கம்மால்ல வா சாமி , இது ஒண்ணுமே இல்லசாமி குளிச்ச சரியா போவும் ,நான் கூட வரல நீங்க மட்டும் போய் குளிங்க, இப்ப உங்க பெரியம்மா வந்துடுவாங்க”… என்று அவளிடம் பேசி கொண்டே கை பிடிக்க ,
“ஆஆஆ” என்று சத்தமாக அலறி வேலுவை தள்ளி விட்டு , கட்டிலில் கிடந்த போர்வை கொண்டு தன்னை மறைத்து அறையின் மூலைக்கு ஒதுங்கிய தன் மகளை அதிர்ந்து பார்த்தான் வேலு . மீண்டும் தான் நெருங்கினால் அலறி தன்னை ஒதுக்குவது நிச்சயம்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவும் , மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பவியோ பயமும் , கை கால்கள் நடுங்க , கண்ணில் நீரோடு தந்தையை பார்க்க, அவனோ அதிர்ச்சியில் நிலை குலைந்து , இதுவரை காணாத ஒரு வித நிலையில், தன்னை கண்டு அஞ்சும் மகளை அதிர்ந்து பார்த்தான்.
“ஐயோ”! நான் என்ன செய்வேன்! என் பிள்ளை என்னிடம் வர மறுக்குதே, பிறந்த பொழுது இரத்த வாடை மாறாமல் இருந்த பிஞ்சை தன் மார்போடு அள்ளி அணைத்வன், இப்போதா அருவருப்பாக பார்ப்பேன், செல்லம் கொஞ்சி அணைக்கும் போது கோழி குஞ்சாக மார்பில் ஒன்றிய மகள் இன்று ஒதுங்கி நிக்குதே , தவித்து போனான் வேலு.
“ பவிக்கு தந்தையின் தவிப்பு ஏதும் புரியவில்லை. தன்னை சுற்றி என்ன நடக்குது, அடிபடாமலே எவ்வாறு இப்படி ? அதுவும் தந்தை முன் தன் கட்டுப்பாடு இன்றி சிறுநீர் கழிப்பது போல்!” யோசிக்க முடியவில்லை எல்லாமே பயமாக இருந்தது, எங்காவது சென்று ஒடுங்கி கொள்ளவே மனம் உந்தியது.
வேலு நொடியும் யோசிக்க வில்லை , விரைந்தான் பூர்ணா வீட்டிற்கு , பெரியத்தாவும் மகளை காண திருச்சி சென்றிருக்க , இங்கு இப்படி ஆகிவிட்டது.
வெளித்தின்னையில் அமர்ந்து கட்டங்காபி குடித்து கொண்டிருந்த பூர்ணா வேகமாக வந்த வேலுவை அதிர்ந்து பார்த்தாள். அவனின் பயமும் , பதற்றமும், கண்ணில் கட்டி நின்ற நீரும் விவரத்தை சொல்ல “ ஏலே! வேலு”? …… என்று கண்ணால் கேட்டவளிடம் தலையசைத்து வெரசா வாவே என்க .
பூர்ணா அடுத்து நிற்க வில்லை , வேகமாக அவன் வண்டியில் ஏறி கொள்ள , வண்டி வீடு நோக்கி விரட்ட பட்டது.
சத்தம் கேட்டு வந்து பார்த்த வள்ளி அதிர்ந்தார். அப்படி ஒன்றும் பூர்ணா யார் வண்டியிலும் ஏறி போக மாட்டாள். இவ்வளவு பழக்கம் உள்ள வேலுவிடம் இதுவரை ஒரு நாளும் வண்டியில் சென்றதில்லை , இப்போது செல்வதானால் விவகாரம் பெருசோ,? …. என்று யோசனையாக திண்ணையில் அமர்ந்தார் .
அடுத்த பத்து நிமிடத்தில் வேலுவுடன் வந்திறங்கிய பூர்ணா, வேகமாக வீட்டின் உள்ளே சென்று விட்டாள். அவனை திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால், வேலு அவளைத்தான் பார்த்து நின்றான், அவன் திருமண விருந்திற்கு பின் பூர்ணா வேலு வீடு வந்ததேயில்லை , இன்று தான் வருகிறாள். அவ்வளவு ரோசம் பார்ப்பாள். ஆனால், இன்று? , அவள் வைராக்கியத்தையும் விட்டு வருவது என்றால்? அவன் ஒருவனுக்காக , அவன்பால் கொண்ட நடப்பிற் க்காக மட்டுமே!
வேலு அளவிற்கு பூர்ணா யோசிக்கவே இல்லை. தாய் உடன் இல்லா தனியாக கலங்கி நிற்கும் பச்சை மண்ணுக்கு பார்ப்பதை விட , ஒண்ணுமில்லாத ரோசம், வைராக்கியமும் தான் பெரிதா?,…. அதையும் விட வேலும் , பவியும் தனக்கு மிகவும் முக்கியம்.
பவியின் அறைக்கு சென்ற பூர்ணா பார்த்தது , அழுது சோர்ந்து போய் மூலையிலே முடங்கி போன பவியை தான். பதினொரு வயது தொடக்கத்தில் இருக்கும் பெண் , திட்டு திட்டாக கறை படிந்த உடையுடன் நிராதரவு தோற்றம் . பார்க்கும் போதே நெஞ்சை கசக்கியது , “ஐயோ என் மகளே” என வாரி அனைத்து கொண்டாள் பூர்ணா.
கண் விழித்த பவி , “ பெரியம்மா” என தானும் அனைத்து கொண்டாள். பார்த்து நின்றான் வேலு அருகில் எல்லாம் செல்ல வில்லை. மீண்டும் ஒரு புறகணிப்பு தாங்காது , ஆனால் ஒன்று புரிந்தது “தாய்” எவ்வளவு முக்கியமானவள் என்று.
பூர்ணாவே எடுத்து செய்தாள், வேலு சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்பெல்லாம் இல்லை. அழும் மகளை அசுவாச படுத்தி , தேற்றி குளியலறை கூட்டி சென்று , சிறு முக சுளிப்பும் இல்லாமல் கை குழந்தை போல தேய்த்து குளிக்க வைத்து , மெதுவாக எடுத்து சொல்ல ஆரம்பித்தாள் பூர்ணா. வேலு தேவைக்கு கடைக்கு சென்றான் பூர்ணா சொல்லி.
புதியதாக இருந்த உள்ளாடை, உடை அணிவித்து, தலை உணர்த்தி ,ஒவ்வொன்றாக எப்படி இருக்கணும் , எவ்வாறு நடக்கணும் என்று சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள் பூர்ணா , வேலு வந்துவிட பேச்சு நின்றது.
வேலு உள்ளே எல்லாம் வர வில்லை கூடத்தில் அமர்ந்து கொண்டான். பவியின் தேவை கவனித்த பின் அடுப்படி வந்த பூர்ணா காலை உணவு ஆக்க வில்லை என்று கண்டு , பசும்பாலை சுண்ட காய்ச்சி நாட்டு சக்கரை கலந்து , கை பொறுக்கும் சூட்டில் பவிக்கு கொடுத்து , அவள் கொஞ்சம் தெம்பாக உணர்ந்த பின்பே வெளியே கூட்டி வந்தாள்.
பவிக்கு ஏதோ சங்கடம் தந்தையை பார்க்க , தயக்கமாக உணர்ந்தாள். இன்னும் சூழலை ஏற்கும் பக்குவம் வரவில்லை. தந்தையின் முகம் பார்க்காமல் பெரியம்மாவின் பின் மறைந்து நிற்கும் மகளை தான் பார்த்தான் வேலு.
வேலுவின் முகம் பார்த்து பூர்ணாக்கு நிலைமை புரிந்தாலும் , தற்போது பவியை கவனிப்பதே அவசியம் என்று அறிந்து, மகளை தூங்க வைக்க உள்ளே அழைத்து சென்றாள்.
வேலு தான் மொத்தமாக நொடிந்து போனான். தன் செல்ல மகள் தன்னை விட்டு நீங்குவது போல் ஒரு தோற்றம். மனம் பாராமாக உணர்ந்தான். தானும் மகளிடம் தள்ளி நிற்க வேண்டுமோ?… எவ்வாறு? ….
இரவில் உறங்கும் போது மகளை நெஞ்சில் போட்டு தான் தட்டி குடுப்பான், வெயில் காலத்தில் ஜட்டியோடு தான் உறக்கம், மகளை மடியில் அமர்த்தி தான் சோறு ஊட்டுவான், இன்னும் இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் பவியிடம் உண்டு, வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெயில் இவன் தான் குளிக்க வைப்பான் . இனி எல்லாம் தள்ளி நிற்க வேண்டுமா! நினைக்க நினைக்க கண் கலங்கும் போல் இருந்தது வேலுக்கு.