மாலை நேர காபியோடு , பவித்ராக்கு உளுந்த கஞ்சியும் தயாராக , வந்து விட்டார் பெரியாத்த.
வேலு எழுந்து வந்து வரவேற்றாலும், பெரியாத்தா கண்கள் தேடியதென்னவோ தன் பேத்திய தான். பூர்ணா ஊட்டி விட சமத்தாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் பவித்ரா.
அவளை பார்த்ததும் அழுகை பொங்கி கொண்டு வந்தது , கட்டி அணைத்து கதறி விட்டார். “ தங்கமா பெத்து வளத்த என் சாமி இன்னிக்கு நாதியத்து நிக்குதே, அய்யா! ராசா உன் பிள்ளைய பாரும் , இவ பிறந்து ஊர் மெச்ச கறி விருந்து போட்டோமே ! இன்னிக்கு மூலையில முடங்கி போனோமே “ என்று ஒரு பாடு தலையில் அடித்து அழுக,
பூர்ணா விழிகள் அரண்டு நிக்கும் பவித்ராவையே பார்த்து நின்றது. இவள் அரட்டல், உருட்டல் எல்லாம் வேலுவிடம் மட்டும் தான், அவன் வீட்டு ஆட்களிடம் தள்ளியே நிற்பாள்.
வள்ளியும் அமைதியாகவே நின்றார். பெரியத்தாவிடம் நெருங்கி சமாதானம் எல்லாம் பேசவில்லை. அவருக்கு தெரியும் ஊரிலே பெரிய வீடு சுகவாசிகள், எல்லாம் சரியாக இருந்தால் பெரிய விழா எடுத்து செய்வார்கள். பணம் , அந்தஸ்து என்று மரியாதையாக வாழ்ந்தவர்கள், இன்று எடுத்து செய்ய ஆள் இல்லாமல் தனியாக நிப்பது கஷ்டம் தான் , அதைக்கொண்டே இந்த புலம்பலும் , அழுகையும்.
பெரியாத்தா அழுகை குறையவில்லை. தன் தங்கை கொடியரசி படம் கூடத்தில் இருக்க அழுகை இன்னும் கூடியது. “ ஆத்தா கொடி , உம் பவுசு என்ன? நீ இருந்த இருப்பு என்ன? அடுத்தாளுக்கு சீர் செஞ்சாலும் குறையாம செய்வா, இன்னிக்கு உன் பேத்திக்கு ஆளு இல்லாம போச்சே” என்று புலம்பியவர் ,
வேலுவின் தந்தை படம் முன் நின்று கை கூப்பி “ அய்யா ராசா! நீரு ஊருக்கு எம்புட்டு நல்லது செஞ்சீக, மக்க மனுசர ஆதரிச்சு நின்னிகளே , உம்ம மவனே பாரும் ஒத்தையில நிக்குரத , இப்படி தனியா நிக்க வச்சுதிங்களே , நம்ம சாமி கூட துணை நிக்கலயே” என சொல்லி சொல்லி அழுதவரை கண்டு மனம் பொறுக்காமல் வள்ளி அருகே சென்று ஆட்ரு படுத்த, சமாதானம் ஆகாமல் மேலும் அழுதவரை வேலுவின் அரட்டலே சரி கட்டியது.
வெறும் விம்மலோடு அமர்ந்தவருக்கு பூர்ணா காபிய நீட்ட , கொஞ்சம் தனிந்தார்.
வேலு பூர்ணாவிடம் கண்ணை காட்ட , என்னவோ என்று அரண்டு நின்ற பவித்ராவை உள்ளே அழைத்து சென்றாள். பவித்ராவை அமைதிப்படுத்தி வெளி வந்த பூர்ணா கண்டது சடங்கிற்கு நாள் குறிக்கும் பெரியத்தாவை தான்.
பூர்ணாக்கு வெடித்து கிளம்பியது. “ என்ன செய்ரீக அயித்த?” என்று வினவியளிடம்,
“ சடங்கிற்கு நாள் குறிக்கணும், மண்டபம் பார்க்கணும் , பத்திரிக்கை அடிக்கணும் , ஆட்டுக்கு சொல்லணும் , எம் பேத்தி விசேசத்த ஊரே மெச்சனும், கொடி இருந்த என்ன செய்வளோ அதா செய்யணும்” சற்று முன் அழுததை மறந்து அடுக்கி கொண்டே போனவரிடம் கொலை வெறி உண்டானது பூர்ணாக்கு.
“ உங்க பணம் , பகட்ட காட்டத்தான் விசேசமா, நாங்க நல்ல இருக்கோம் , எங்கள எதுவும் பாதிக்கல , இன்னும் நாங்க பெரிய தலக்கட்டுன்னு உங்க பவுச காமிக்க இந்த பச்ச மண்ணு தான் கேடச்சுசா?” என்று விளாசியவளின் பேச்சில் அதிர்ந்து நின்றனர் வேலும் , பெரியாத்தாவும்.
“எட்டி! கூறு இல்லாம பேசாத, உன் வாபெட்டிய சாத்து, இது எல்லாம் நடந்த தான் தீட்டு கழியும் , உனக்கு ஒரு மண்ணும் தெரியாது பெரியவா சொன்ன கேளுடி! இப்ப நாங்க பகுமானம் பண்ற நிலையில இருக்கோம் என் பேத்திக்கு ஒரு குறையும் வைக்க கூடாதுலே”…. என்று அவளை சாடி மற்றவை பேச,
“இப்படி பண்ண தீட்டு கழியாது , அவ தீட்டுனு ஊர கூட்டி நீங்களே ஒதுக்குறின்க” என்று மேலும் வார்த்தைகளை வீச,
வாதம் விவாதமாக மாறுவதை கண்ட வள்ளி , “மயிலு, வம்சத்துக்கு ஒத்த புள்ள, அவகளுக்கும் ஆச இருக்கும்லே”.. என்று மகளை சரி கட்ட பார்க்க,
“ எம்மோ ! நீ செத்த சும்ம இரும் , அவக ஆசையா நிறைக்க காலம் இது தானாக்கும்?, காத தாண்டி இன்னும் முடி வளரல , தனியா துணி மாத்த கூட வரல இந்த பச்ச மண்ண சீலைய கட்டி ஊர் அறிய பெரிய மனுசின்னு காட்ட போறிகலோ , இதுவரை சின்ன புள்ளன்னு பார்த்தவங்க இனிமேட்டும் அப்புடி பார்ப்பாங்கல” என்று ஆவேசமாக கேட்டவள்,
“இவ வயசு பிள்ளைக யாரும் பெரிய மனுசி ஆவல , நம்ம புள்ளைக்கு விதி வேற என்ன சொல்ல! அதுக்கு ஊர கூட்டி தள்ளி வைக்கணுமா? உங்க திருப்திக்கு விசேஷம் வச்சு , நாளைக்கு இந்த ஊர யாரு பாக்குறது, ஆம்பள பசங்க கூட விளையாடாத, இந்த உடுப்பு போடாத, கோவில் மரம் ஏறாத, அடுத்த வீட்டுக்கு போகாத, வயசு புள்ள மாதிரி வீட்டிலேயே இரு வெளிய சுத்தாத , இப்படி ஆயிரத்தெட்டு இருக்க, சமாளிக்கற வயசா அவளுக்கு” என்று சொல்லி கொண்டே வந்தவள்.
வேலுவை அழுத்தமாக பார்த்து “ வயசுக்கு வந்த புள்ளைய அடுத்த வீட்டுக்குள்ள கூட விட மாட்டங்க” என இளக்காரமாக சொல்லி முடித்தவளை , வேலு நிமிர்ந்து பார்த்தான் இல்லை.
இவ்வாறு பூர்ணா வை தள்ளி வைத்தது வேலு தான். அந்த மூன்று நாட்களில் வேலுவை காண பூர்ணா வந்தால் , வீட்டிற்குள் எல்லாம் செல்ல கூடாது வெளிய நின்றே அழைப்பாள். வேலு தான் “ஏட்டி! எங்க அப்பா தினக்கி சாமி கும்புடுவாக , நீ உள்ள வராத வெளிய நில்லு நான் வாரேன்”… என்று அவன் சொல்லும் போது யோசனையாக பார்ப்பாள் பூர்ணா. இந்த மாதிரி நேரத்தில் வீட்டின் உள்ளே போக கூடாது , அவர்கள் சேரில், திண்ணையில் உட்கார கூடாது. வள்ளி சாமி அறை மட்டுமே செல்ல கூடாது என்பார். அவரவர் தக்க சட்ட திட்டங்கள்.
பூர்ணா பருவ வயதில் நிறைய பார்த்தாள். சம வயதில் பெண்கள் யாரும் பூ பெய்துவது இல்லையே , பூர்ணாவும் சீக்கிரம் பெரிய பெண்ணாகி விட சம வயது உள்ளவர்கலோடு கலந்தாட முடிய வில்லை.
“வள்ளி மவ வயசுக்கு வந்தும் ஆம்பள பசங்க கூட தான் சுத்துறா, பெரிய பொண்ணாகிட கண்மாயில் குளிக்கலாமா ?, கோவில் மந்தை மேல ஏறி விளையாட கூடாது தெரியாத? , வயசுக்கு வந்து பாவாடை சாட்டையோட சுத்துறவ தாவணி போட பழகு, கண்ட நேரத்திலும் பசங்க கூட காடு மலை சுத்தி திரியுற அப்பா இருந்து அடிச்சு வளத்த தான் தெரியும் , வயசு பொண்ணு அடக்கம் இல்லாம வாயடிக்கிற அப்பா இல்லாத புள்ளன்னு காட்டிட” …..
இப்படியான கடும் சொற்களை கடந்து வந்தவள் தான் பூர்ணா. தன் நிலை பவித்ராக்கு வர கூடாது என்பதில் திண்ணமாக இருந்தாள். தாய் உடன் இல்லா பெண் எளிதாக பேச கூடும் , தூசு போல தட்டி கடந்து வரும் பக்குவம் வரவில்லை பவித்ராக்கு.
பல கட்ட வாக்கு வாதத்திற்கு பின் ஒரு மனதாக பவி பதினாறு வயதில் பெரிய சடங்கு செய்வதாகவும் , தற்போது யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பெரியாத்தாவுக்கு மனசுணக்கம் தான் தன் பேச்சு எடுபடாமல் மகன் பூர்ணா பக்கம் நின்றதில். வந்ததும் பவியை தொட்டு அழுதவர் தான் குளித்த பின் அருகில் கூட செல்ல வில்லை. தன் பேத்தியே என்றாலும் முப்பது முடியட்டும் என்று விட்டார்.
பவி முழுவதும் பூர்ணா வசம் தான். உணவு ஊட்டுவதில் இருந்து இரவு சாம்பல் கோடு கிலித்து உறங்க வைப்பதாகட்டும், பவி சாமத்தில் எழுந்தாலும் உடன் கழிவறை அழைத்து சென்று தேவையை கவனிப்பதில் தாயகவே உடன் நின்றாள்.
பவிக்கு, இன்னும் பழக வில்லை அசௌகரியம் இருந்தது. சலசலவென வேர்க்கும் உடலும் , அதிக அசதியும் அவளை வாட்டியது துணை நின்று தாயாக தாங்கியதது பூர்ணாவே. பாசம் இருந்தாலும் வேலுக்கு ஒன்றும் தெரியவில்லை தள்ளியே நின்றான்.
பிள்ளை இல்ல சம்பூர்ணாவும் , தாய் இல்ல பவித்ராவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக , அரவணைப்பாக இனைந்தனர்.