பெரியாத்தா தெளிவாக சொல்லிவிட்டார். உன் குடும்பத்தை கட்டு படுத்த முடியவில்லையென்றால் பூர்ணாவோட உன் பழக்கத்தை நிப்பாட்டு, உங்கள் பணமும், பவுசும் உங்களோட, அதற்காக அடுத்த வீட்டு பெண்ணை அவமதிக்க கூடாது என்று.
அவருக்கு ஆற்றாமை இன்னும் அடங்க வில்லை. சொத்தும் , சொந்தமும் இருந்தும் தனி ஒருத்தியாக பெண் பிள்ளை வளர்த்து ஆளக்க பட்டபாடு அவருக்கு தானே தெரியும். வள்ளியும் தன் போல் தானே, ஆளாளுக்கு கொத்தி விரட்ட நினைக்க காரணம் வேலு. அதனால் தான் வேலுவை ஒதுங்கி கொள்ள சொன்னார். பூர்ணா எனக்கு அப்படி, இப்படி என்று பாட்டு பாடுபவன், தன் தாயையும், மனைவியையும் அடக்க துப்பு இல்லையே, கோட்டி பையன் என்று மனதில் வேலுக்கு வசை பாடினார்.
வேலுவும் பூர்ணா வீடு தேடி சென்று மன்னிப்பு கேட்டு கொண்டான். சரி என்று பூர்ணாவும் தலையசைத்து ஏற்று கொண்டாள் தான். வேற மறுமொழி ஒன்றும் சொல்ல வில்லை. இருவருக்கும் இடையில் இடைவெளி விழுந்ததை இருவரும் உணர்ந்தாலும் சரி செய்யவோ அல்லது சமாதானம் செய்யவோ நினைக்கவில்லை. நிதர்சனம் உணர்ந்து அவரவர் பாதையில் செல்லவே விரும்பினர்.
பூர்ணா இனி யாருக்காகவும் தன் தன்மானத்தையும், சுய கௌரவத்தையும் விட்டு தர தயாராக இல்லை. வேலுவின் சகஜமற்ற பேச்சும், ஒட்டாத தன்மையும் அவனின் முடிவை கூற மனமுவந்து அதை ஏற்று கொண்டாள்.
வேலுவும் பலவாறாக யோசித்து பார்த்தான். தோன்றியது ஒன்றே தங்களது தோழமை இனி நகர வேண்டாம் என்பதே! தன் குடும்பத்தின் அமைதியும், பூர்ணாவின் வாழ்வும் சிறக்க, அவரவர் வழியில் செல்வதே மேல். நாளை அவளுக்கும் திருமணம் ஆகிவிட்டால் தன்னை போலத்தான் நினைப்பாள். அத்தோடு ஆண், பெண் நட்பு என்பது ஒரு வரையறைக்குள் மட்டுமே. தன் குடும்பம் என்ற அமைப்பு மனைவியும், அம்மாவும் சார்ந்தே என்று தன்னை தான் சமாளித்து முற்று முழுதாக ஒதுங்கி கொண்டான் பூர்ணாவிடமிருந்து.
அவளும் அதையே விரும்ப, தன் போக்கில் சென்று விட்டான் வேலு.
தாமரையின் சிறு, சிறு குறைகளை தவிர, அவளுடனான வாழ்க்கை நிரம்ப பிடித்தது வேலுக்கு. தேன் நிலவுக்கு ஊட்டி அழைத்து சென்றான், இனிக்க இனிக்க தங்களது இளமை பரிமாணத்தை ரசித்து வாழ்ந்தனர்.
வேலு எந்நேரமும் தன் மனைவியையே சுற்றி வந்தான், தாமரையும் தன் கணவன் தன் கண்களை தாண்டி செல்லாதவாறு பார்த்து கொண்டாள். எப்போதும் ஒட்டியே திரிந்தனர் இருவரும்.
திருமணம் முடிந்த அடுத்த ஒரு மாதத்தில் தாமரை கருவுற அவனை கையில் பிடிக்க முடியவில்லை. தன் வாழ்வு முழுமை அடைந்து விட்ட உணர்வு தான் வேலுக்கு, அன்பான பெற்றோர், வளமான வாழ்வு, காதல் மனைவி தற்போது குழந்தையும் வர நிறைவாக உணர்ந்தான்.
ஆனால், வாழ்வு எப்போதும் நிறைவாக மட்டுமே இருக்காதே. அதற்கேற்ப சிறு சிறு உரசல் குடும்பத்தில் வர தொடங்கியது. தாமரைக்கு வேலு எப்போதும் தன்னருகிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால், சம்பாத்தியம் இல்லாமல் அவள் ஆடம்பர செலவுகளை எவ்வாறு சமாளிக்க, தற்போது மசக்கையும் படுத்த, வேலு இம்மி நகர முடியவில்லை.
கர்ப்பகால உபாதை எது இருந்தாலும், தன்னுடைய சௌகரியத்தை விட விரும்பவில்லை தாமரை, எதிலும் நேர்த்தியாக இருப்பாள். ஆடை, அணிகலன் எல்லாவற்றிலும் மனம் திருப்தியாகும் வரை ஓயமாடாள். கண்ணில் பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிக்கும் ரகம். அவ்வாறே அவள் பார்ப்பதை எல்லாம் வாங்கி தான் குவித்தான் வேலு. ஆனால் எல்லாம் திருமணத்திற்கு முன், தற்போது அவ்வாறு செய்வதில் நிறைய சங்கடம் நேர்ந்தது வேலுக்கு.
முதலாவது, ஒற்றை வாரிசாக இருந்த போதும், தனிப்பட்ட வேலை என்ற ஒன்று வேலுக்கு இல்லை. அவர்களது விவசாய குடும்பம் பணம் செழிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவன் திருமணத்திற்கே பல லட்சம் செலவு, ஒரே குடும்பமாக போக பெண் வீட்டு செலவு என்று எல்லாம் கணக்கு பார்க்க வில்லை. நெல்லையும், அரசியும் தங்களது கடமையை சந்தோசமாக தான் மகனின் திருமணத்தை ஆடம்பரமாக செய்தனர்.
அதுவரை சரியே! ஆனால் தாமரையின் தேவைக்கும், செலவுக்கும் தந்தையிடம் நிற்க வேலுக்கு விருப்பமில்லை. தற்போது தான் அவள் கர்ப்பத்தை காரணமாக்கி, வேலுவுடன் பைக்கில் செல்வது பாதுகாப்பில்லை என்று புது கார் ஒன்று வாங்கியிருக்கிறார்கள். அதுவும் தந்தை செலவில். இனி மற்ற செலவுகளையாவது தாங்களே பார்க்க வேண்டும் எந்நேரமும் அவளுடனே இருந்தால் வருமானத்திற்கு ஏது வழி?, யோசித்த வேலு மெதுவாக தாமரையிடம் பேசி பார்க்க,
“ நீங்கள் ஒருவர் தானே அனைத்திற்கும் வாரிசு, வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்று என்ன அவசியம். மாமவே மேற்பார்வை தான் பார்க்கிறார், வேலைக்கு ஆட்கள் இருக்க அங்கு போய் என்ன பண்ண போறீங்க, குழந்தை பிறக்கும் வரையாவது என்னோடு இருங்க, வேற யாரோடும் எனக்கு சௌகரியம் வரல”… என்று வேலைக்கு செல்லும் வேலுவின் முடிவை தள்ளி போட்டாள்.
அவளின் யோசனை வேலுக்கு ஏற்புடையதாக இல்லை. வயதான தந்தை, அவரை உட்கார வைத்து தான் எல்லாவற்றையும் பார்ப்பது போக, அவர் உழைப்பில் தானும், தன் மனைவியும் ஆடம்பர செலவு செய்யது வாழ்வதா? ,
தாமரையின் செலவுகளை கட்டுபடுத்த முடியாது, அதை அவள் ஏற்க மாட்டாள். அவள் வாங்கி குவிக்கும் எல்லாம் தேவையானதே ஆனால் அவசியமற்றது.
இப்படித்தான் ஒருநாள் வீட்டை அலங்கரிக்க என்று டவுனுக்கு அவனையும் அழைத்து கொண்டு இஷ்டத்திற்கு வாங்கி குவித்தாள. எல்லாம் ஆடம்பரமிக்க விலையுயர்ந்த பொருட்கள். அவ்வளவு அழகு! , வேலுவும் ஆசைப்பட்டு தான் வாங்கினான். எல்லாவற்றையும் வீட்டில் பொருத்தி பார்க்க அரண்மனை போல் காட்சி அளித்தது. நெல்லையப்பன், அரசிக்கும் மகிழ்ச்சி தான் வீட்டின் நேர்த்தி பார்த்து. வேலுக்கு அவ்வளவு பெருமை வீணாக செலவு செய்ய வில்லை என்று!.
எல்லாம் ஒரு வாரம் தான். அந்த ஒரு வாரமும் வீட்டை தொட்டு தொட்டு பார்க்க, தன் தோழிகளுக்கு அழைத்து காட்ட, வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பெருமை பேச, போனில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் பதிவேற்ற என்று வாரம் சென்ற பின், அதை திரும்பியும் பார்க்க வில்லை. வீட்டில் சமையல் வேலை, காட்டு வேலை, அத்தோடு கறவை மாடு, ஆடு, கோழி என்று பெரியாத்தவிர்க்கும், அரசிக்கும் வேலை இழுக்கும். வீட்டு பராமரிப்புக்கு என்று நேரம் இருக்காது. அதனால் வீடு பழமை கொண்டே இருந்தது, அதை புதுமையாக மாற்றிய தாமரைக்கு பராமரிக்க ஆர்வம் இல்லை.
நெல்லையப்பன் கவனித்து அரசியை கேட்க, அவர் வேலுவை பார்க்க, வேலு புரிந்து கொண்டு தாமரையிடம் வந்து கேட்டான். அவள் ஒரே வார்த்தையில் எனக்கு வேலை செய்து பழக்கமில்லை என்று முடித்து விட்டாள்.
மாசமா இருக்கும் பொண்ணை கடிந்து கொள்ள முடியாமல், வீட்டை பராமரிக்க ஆள் போட வேண்டியதானது. வேலுவின் தந்தைக்கு துளி விருப்பம் இல்லை. வீட்டில் மூன்று பெண்கள் இருக்க வீட்டு பராமரிப்புக்கு என்று வேலைக்கு ஒரு பெண்ணா?…. என்று கோபத்தை காட்ட முடியாமல் நின்றார்.
வேலுக்கும் தந்தை மனம் புரிந்தது. இனி அவரை கோபம் கொள்ள செய்ய கூடாது என்று நினைத்தவன் அரசியின் கோபத்திற்கு ஆளானன்.