தாமரை என்ன முயன்றும் தன் குழந்தையோடு ஒட்ட முடியவில்லை. ஆசையாக அள்ளி அணைப்பது, தூக்கி கொஞ்சுவது, குழந்தையை ரசிப்பது என்று எதுவும் இருக்காது. எப்போதும் ஒரே சிந்தனை தான், தனக்கு ஏன் கடவுள் இப்படி ஒரு குழந்தையை கொடுக்கணும், தன் அளவுக்கு இல்லா விட்டாலும் மற்றவர்கள் சொல்வது போல் மாநிறம், புது நிறம் என்று கூட இல்லாமல் சுத்த கருப்பாக பிறந்து விட்டதே.
அதுவும் இந்த மச்சம், பிறவி மச்சம் மறையாது. அத்தோடு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு தொன்றுதொட்டு வர, மறைவதற்கு வாய்ப்பு இல்லை. தான் பெற்ற பிள்ளையை வெறுத்து விடுவோமோ என்று பயம் வந்தது. தன்னை குறித்தே சிறிது அவமானமாக உணர்ந்தாள்.
தனக்கு ஏன் குழந்தையிடம் இயல்பானதொரு பாசம் எழவில்லை, எவ்வளவு காலத்திற்கு குழந்தையை தள்ளி வைக்க முடியும்.
குழந்தையுடன் ஒட்டுதல் இல்லாமல் அவள் இருப்பதை, யாரும் இன்னும் கவனிக்க வில்லை. குழந்தையை பார்க்க என்று எந்நேரமும் ஆட்கள் வந்த வண்ணம் இருக்க, தனிப்பட்டு குழந்தையுடன் அவளுக்கு நேரம் இல்லை, முதல் வாரிசு யாரேனும் ஒருவர் தூக்கி வைத்து கொண்டு தான் இருந்தனர்.
அத்தோடு, ஆபரேசன் பண்ணிய உடம்பு தேறட்டும், இன்னும் தூக்கி பழகவில்லை, எசகு பிசகாக தூக்கி உறை விழுந்து விட்டால் என்ற பயமும் வர பொருத்து தூக்கட்டும் என்று விட்டு விட்டனர்.
தாமரையும் முழுதாக ஒதுக்க வில்லை. பால் கொடுப்பது, அருகில் கிடத்தி தூங்க வைப்பது எல்லாம் செய்வாள் தான். சில நேரம் கை, கால்களை வருடுபவள், மறந்தும் முகத்தை தொட மாட்டாள். அதை தாண்ட முடியும் என்று அவளுக்கு தோண வில்லை.
ஆண் பிள்ளை பிறக்க வில்லை என்ற கவலை போய், பெண் பிள்ளை இப்படி பிறந்து விட்டதே என்ற கவலை அரிக்க ஆரம்பித்துவிட்டது.
குழந்தைக்கு முப்பது முடிய, வழக்கப்படி குல தெய்வம் கோவிலில் பேர் வைக்க ஏற்பாடு செய்தார்கள். வேலு தான் பவித்ரா என்ற பெயரை தேர்வு செய்தான். “பவித்ரமானவள்” அனைவருக்கும் திருப்தி தான். தாமரை ஏதேனும் சொல்ல கூடும் என்று அவள் முகம் பார்க்க, மறு பேச்சில்லாமல் அங்கீகரித்து விட்டாள்.
அவளை அதிசயமாக பார்த்தான் வேலு. குழந்தை பற்றி அவளுடைய கனவு தான் அவனுக்கு தெரியுமே! , அப்படி ஒன்றும் விட்டு கொடுக்கும் ரகம் அல்ல அவள். தான் சொல்வது தான் கடைசி என்று தன் முடிவில் நிற்பவள். பின் ஏன் இந்த அமைதி, பேர் அவளுக்கும் பிடித்து விட்டாதா?, அல்லது தாய்மை அவளை மாற்றி விட்டது, யோசனையாக அவளை பார்த்தான் வேலு.
மறுநாள் அங்காள ஐய்யன் புது பட்டும், மாலையும் என்று ஜெக ஜோதியாக நிற்க, மறுபக்கம் கிடா கறி விருந்து ஊரே மணத்தது. பங்காளி, மாமன், மச்சான் என்று சுற்றம் சூழ வேலு வீட்டு புது வரவிற்க்கு வெகு விமர்சையாக பெயர் சூட்ட பட்டது.
பூர்ணாவும் வந்திருந்தாள், விருந்துக்கு என்று இல்லாமல், திருமணம் வேண்டி நேத்தி கடன் காரணமாக வந்திருந்ததாள் தன் தாயோடு.
அவளை பார்த்ததும் தெரிந்தது. திருமணம் முடிக்க போகும் புது பெண் என்று, “ வானம் நீல கலரில் பட்டு சேலையும், தலை நிறைய பூவோடு கைகளில் கண்ணாடி வளையல், கழுத்தில் அட்டியல் மற்றும் காதில் குடை ஜிமிக்கி” என்று பார்ப்பதற்கு லட்சணமா இருந்தாள்.
தாமரைக்கு தோன்றியது ஒன்றே, அழகில்லாதவர்கள் என்று யாருமே இல்லை, தன்னை அழகு படுத்த தெரியாதவர்கள் தான் இருக்கிறார்கள் போல. தானே எத்தனை முறை பூர்ணாவை தோற்றம் வைத்து கேலி செய்திருக்க, இன்று மனம் ஒத்து கொண்டது அழகான பெண் என்று. ஆனால், வெளியில் சொல்ல வில்லை. அத்தோடு பூர்ணாவின் தோற்றம் பவித்ராவோடு ஒப்பிட்டு யோசிக்க வைத்தது. தன் குழந்தையையும் மாற்ற முடியும் என நம்பிக்கை வந்தது.
வேலுக்கும், பெரியாத்தவுக்கும் நிரம்ப மகிழ்ச்சி. பூர்ணாவின் திருமணம் குறித்து. ஆம், பூர்ணாவிற்கு திருமணம் குறித்தாகி விட்டது. பரிசம் போட்டதற்கு தங்களுக்கு சொல்ல வில்லை என்று பெரியாத்தா உரிமை கோபம் கொண்ட போதும், சிறு சிரிப்போடு வீட்டளவில் நடந்ததாகவும், கல்யாணத்திற்கு அழைப்பதாக வள்ளி சொல்லி விட்டார்.
அழைக்காததன் காரணம் அனைவருக்கும் தெரியும். அரசி வாய் சும்மா இருக்குமா, விருந்தில் சாணி வைப்பது போல் எதற்கு! காலம் கடந்து கை கூடி வந்த வரன் நன்றாக அமைய வேண்டும்.
பெரிய தாம்பாளத்தில் பழம், தேங்காயில் பட்டு வைத்து பூசாரியிடம் பூர்ணா கொடுக்க. வேலு பவித்ராவை பூர்ணாவிடம் நீட்டினான்.
அவள் திரும்பி குடும்பத்தார் முகம் பார்க்க, அரசி தவிர்த்து யாரின் முகமும் வெறுப்பு இல்லை. குறிப்பாக தாமரையின் முகத்திலும்.
முகம் நிறைந்த புன்னகையோடு, தம் இரு கைகளில் குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தவள், ஐய்யன் பாதம் வைத்து வணங்கினாள். அவளின் அசைவுகளை குடும்பத்தார் கவனித்து தான் இருந்தனர்.
பவித்ராவை மடியில் கிடத்தி தட்டி கொடுத்து. பேர் சொல்லி அழைத்து அவள் முடி வருடி என்று அவளின் அசைவுகள் தாமரையை தான் பலமாக தாக்கியது. தான் அவ்வாறு ஒரு நாளும் குழந்தையிடம் நடந்தது இல்லையே. பூர்ணா முகத்தில் தென்பட்ட தாய்மை அவளுக்கு குற்ற உணர்வை தோற்றுவிக்க அமைதியாக நின்று பார்த்தாள்.
பூர்ணாவோடு குழந்தையின் தோற்றம் பாந்தமாக பொருந்தியது. தன் கையில் இருந்த சிறு பையை திறந்து, அதில் இருந்த ஒரு சின்ன தங்க தாயத்தை வெளியே எடுத்தாள் பூர்ணா. சாமியின் காலடியில் இருந்த சிவப்பு கயிறை எடுத்து, தாயத்தில் கோர்த்து குழந்தை கழுத்தில் மாட்டி விட்டாள்.
அனைவரும் அவளையே அதிர்ந்து பார்த்தனர். இதுவரை பவித்ராக்கு தாயத்து போடவில்லை. தாங்களும் பவுன் கணக்கில் நகை எடுத்தனர், சொந்தமும் அப்படியே, அவ்வளவு நகை வந்தது குழந்தைக்கு. ஆனால், எல்லாம் பவுன் கணக்கு தான். செய்முறை வேற எப்படி வரும். பெருமைக்கு செய்பவர்கள் கிராமில் செய்ய மாட்டார்களே!..
ஒரு ஆடை எடுத்து கொடுத்தாலும், செய்முறை கணக்கில் தான் வரும். சொந்தத்தில் செய்வார்கள் தான் ஆனால் சும்மா இல்லை. பூர்ணா செய்திருப்பது சொந்தம் என்று அல்ல, வேலுவை சொந்தமாக எண்ணியதால் வந்த வரவு. அவர்களின் நிலை தெரியும், அதுவும் தலை மேல் கல்யாணம் நிக்க, யாருக்கு இப்படி செய்ய மனசு வரும்.
தாமரைக்கு தற்போது விகல்பமாக எதுவும் தோன்ற வில்லை. அவர்கள் நட்பை குறித்து ஆச்சர்யம் தான் வந்தது. கொஞ்சம் பொறாமையும் கூட தான்.
வேலுக்கு அவ்வளவு நிறைவு. எங்கும் விட்டு கொடுக்காத தோழமை எண்ணி.
பவித்ராவின் இரண்டாம் மாத முடிவில், நெல்லையப்பன் மாரடைப்பால் காலமானார். குடும்பமே நிலை குலைந்து போனது. குடும்பத்தின் ஆணி வேர், இதுவரை நிழலாக தாங்கி நின்றவர், இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை யாராலும்.
அரசி முழுதாக உடைந்து விட்டார். கணவன் மட்டுமே அவரின் ஆணி வேர், அவரை கொண்டே அரசியின் தோரணை எல்லாம். வயதானாலும் துணை இழப்பது தாங்க முடியாது தானே. தன் சொந்த அக்காவையே எவ்வளவு எள்ளாக எண்ணினார். இன்று, சுற்றம் மறந்து முடங்கி விட்டார்.
காரியத்திற்கு வள்ளி, பூர்ணா வரவில்லை. கல்யாண வீடு எழவு வீடு செல்ல கூடாது என்பதால் போக வில்லை. மற்றபடி அவர்களுக்கும் வருத்தம் தான். காரியம் முடிய பெரியாத்தாவும் மகளுடன் சென்று விட்டார். வாணிக்கு முடியாமல் போக, அவள் குழந்தைகளை கவனிக்க வேண்டி திருச்சி சென்று விட்டார்.
வேலு தான் முற்றிலும் உடைந்து விட்டான். அவனுக்கு தெரியும், திடகாத்தரமான தந்தை மாரடைப்பால் இறக்க காரணம் அதிக வேலை பளு என்று. வருசம் ஏற, வயதும் ஏற தானே செய்யும். வீட்டின் ஆடம்பர செலவோடு, மகனின் வேலையும் தனி ஒருவராக செய்ய, உடல் சீர் குலைந்து விட்டது.
வேலுக்கு குற்ற உணர்ச்சி கொன்றது. தந்தையின் சுமையை தான் சுமக்காமல். தன்னோடு, தன் மனைவியின் சுமையையும் தந்தை தோளில் இறக்கி வைத்து. அவரை கொன்று விட்டோமோ என்ற எண்ணமே அவனை வாட்டியது.
அவர் இல்லை, இனியாவது அவரின் சுமையை சுமக்க வேண்டும் என்று முடிவு செய்தவன். முழு மூச்சாக விவசாயத்தில் இறங்கி விட்டான். அவனின் கவனத்தில் மனைவி, மகள் என்று யாரும் நிற்க வில்லை. தந்தையின் இறப்பே நினைவில் நின்று வருத்தியது.
தாமரைக்கும் கணவன் தன்னை தேட வில்லை என்ற எண்ணமே இல்லாமல், அவன் என்ன செய்கிறான் என்றும் நோக்காமல், பெரிய இழப்பு அதில் இருந்து அவன் மீண்டான என்றும் பாராமல் தன் யோசனையிலே மூழ்கினால். பலவாறு யோசித்து ஒரு முடிவு எடுத்தாள்.
அது என்னவெனில், நம்மில் பலரும் உள்ள கருத்து தான். அதாவது, குழந்தையை கலராக்கும் முயற்சியில் இறங்கி விட்டாள். அவளுக்கு தற்போதைய பிரச்சனை அது மட்டும் தானே, வேறெதுவும் கருத்தில் இல்லை.
அதற்கேற்ப போனில் ஆயிரம், ஆயிரம் கருத்துகள். மூணு மாத குழந்தையில் இருந்து பதினைந்து வயது பெண் வரை கலராக்கும் வித்தை நிறைய இருந்தது. வீடியோவின் கீழ் நிறைய பெண்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு கலராக்க என்று கேட்டு நிற்க! தன் செயல் தவறாக தோன்ற வில்லை தாமரைக்கு.
அவளும் அதற்கேற்ப பல பல வீடியோ பார்த்து, குழந்தையை பாடு படுத்த ஆரம்பித்து விட்டாள். யார் சொல்லியும் நிற்க வில்லை, மூன்று மாத கை குழந்தை வேண்டாம் என்று தடுத்தாலும் கேட்க வில்லை.
வேலுவின் கருத்தை அவள் காதிலே ஏற்ற வில்லை, “ நீங்களும் நான் அழகான பெண் என்பதால் தானே, திருமணம் செய்து கொண்டிருக்கள்” என்று அவன் வாய் அடைத்து விடுவாள்.
குழந்தையை பார்க்க வரும் ஒ்வொருவரும் தவறாமல் சொல்வது, “ பவி அப்படியே அவங்க தாத்தா மாதிரி”… “ “கொஞ்சம் கலரா பிறந்திருக்களாம், இப்ப பசங்க எல்லாம் பிள்ளை அழகா இருந்தா போதும் சீரே வேண்டாம்னு சொல்றாங்க”… “ தாமரை உன் அழகு என்ன! கலர் என்ன! உனக்கு இப்படி ஒரு பிள்ளைய”… “ அந்த சோப் போடுங்க கலர் கொடுக்கும்”.. “ உன் மக கலருக்கு சொத்த தான் எழுதி வைக்கணும் வர மாப்பிளைக்கு”… போன்ற கேலி, அனுதாப, கிண்டல் எல்லாம் அவளை உந்த, எப்படியாகிலும் பவித்ராவை கலராக்குவது என்று நினைத்து விட்டாள்.
போனில் இல்லை தோழிகள் இல்லையென்றால் எங்காவது, யாராவது ஒன்று சொல்லி விட்டாள் போதும். அதையே பிடித்து கொண்டு கண்ட கிரீம் வாங்கி பவிக்கு போடுபவள், ஒரு வாரம் கூட நிற்க மாட்டாள், குழந்தைக்கு மாற்றம் தெரிய வில்லை என்று வேற கிரீம்.
அடிக்கடி ஏதேதோ செய்து குழந்தையை குளிப்பாட்டுவாள். பின் தன் கையோடு குழந்தையின் கன்னத்தில் வைத்து மாற்றம் தெரிகிறதா என்று பார்ப்பாள். ஒன்றும் தெரிய வில்லை என்றால் அன்று முழுவதும் கோபா முகம் தான்.
எங்கும் விசேசதிற்க்கு செல்ல வேண்டும் என்றால், அவள் போடும் மேக்கப்பை குழந்தைக்கு போட்டு மச்சம் தெரியாமல் பார்த்து கொள்வாள். இரு நாளில் குழந்தைக்கு அலர்ஜி வந்து மருத்துவமனை சென்று அலையும் போது, வேலு அவளை ஒரு வழி ஆக்க விடுவான்.
தாமரைக்கும் அவ்வளவு கோபம் வரும். முன் போல் தன்னை தாங்குவதில்லை என்பதோடு தற்போது எல்லாம் அவனை பிடிக்க வில்லை. எந்நேரமும் தோட்டத்திலே இருப்பவன் மேல் வெறுப்பு தான் வந்தது.
நாளொரு சண்டையும், போர்களமுமாக நாட்கள் சென்றது. என்னத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற அளவிற்கு தாமரை வந்து விட்டாள். எவ்வளவு முயன்றும் பவியின் நிறமும், மச்சமும் மாற வில்லை.
தன் தோழியின் அறிவுரை படி கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினால். இது குழந்தைக்கு ஏற்றது அல்ல, பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே தான் எடுத்தாள். முதல் வாரம் ஒன்றும் தெரிய வில்லை, கொஞ்சம் மினுமினுப்பு மட்டுமே கூடியது. அதற்கே அவ்வளவு சந்தோசம் தாமரைக்கு.
பலன் கொடுக்க, அதிலே வீரியம் மிக்க கிரீம் ஒன்றை வாங்கினாள். தோழியின் பலத்த எச்சரிக்கையை மீறி, உறங்கும் பவி குட்டிக்கு மச்சம் இருந்த ஒரு பக்க கன்னம் முழுவதும், அதிக படியான கிரீம் பூசி தொட்டியில் போட்டு ஆட்டி தூங்க வைத்தாள் தாமரை.
பவிக்கு ஒரு பக்க கன்னம் எரிய, கத்தி அழுத குழந்தையை தொட்டி விலக்கி கவனிக்காமல், தொட்டியை ஆட்டி ஆட்டி மறுபடி உறங்க வைத்தாள்.
காய்ந்த துணிகளை எடுக்க மாடி சென்றவள், நேரம் மறந்து தன் தோழிகளுடன் போனில் உரையாட, நேரம் சென்றது தெரிய வில்லை.
எரிச்சல், காந்தள் அதிகமாகி கை, கால் அசைத்து அழுத குழந்தை, தொட்டிலில் இருந்து இறங்கும் முயற்சியாக காலை எட்டி தலையை நீட்ட, வெளி வர முடியவில்லை. குழந்தையின் கதறல் தாமரைக்கும் கேட்க வில்லை. அதிக வலி, வேதனையில் தொட்டிலில் தலை தொங்க மயக்க நிலைக்கு சென்றது குழந்தை.
பவிக்கு ஜாதகம் கணிக்க வெளியே சென்று வந்த வேலுவும், அரசியும் பார்த்தது.
தொட்டிலில் ஒரு பக்கம் தலை தொங்கி, குழந்தையின் ஒரு பக்க கன்னம் தீ காயம் பட்டது போல வெந்து புண்ணாகி மயங்கி கிடந்த குழந்தையை தான்.