ஒரு நாள் கடந்து இருக்க, கொஞ்சம் நிதானமாக இருந்தாள் தாமரை. நேற்றைய இரவில் இருந்து வயிற்று போக்கு நின்று விட்டது, காலையில் தான் சிறிது கஞ்சி தண்ணியை புகட்டி பார்த்தார்கள். உடல் ஏற்று கொண்டதும், தற்போது இளநிர் சேர்த்து கொடுக்க ஆரம்பித்தனர்.
இன்னும் அவசர வார்ட் விட்டு வெளி வர வில்லை. ஆனால், மருத்துவர் நம்பிக்கை அளித்திருக்க, ஓரளவுக்கு தெம்பாக உணர்ந்தார்கள் சொந்தமும், சுற்றமும். குழந்தையை தன் கண் பார்வையிலே வைத்து கொண்டாள் தாமரை. குழந்தையின் கன்னத்து காயமும் ஆறி இருக்க, தன்னால் தானோ? என்ற குற்ற உணர்வும், குழந்தைக்கு என்னவோ? என்ற பயத்தில் இருந்தும் மெல்ல வெளி வர ஆரம்பித்தாள். நடமாட்டம் இல்லை என்றாலும், ஓரளவு எழுந்து உட்கார முடிந்தது. அடிக்கடி குழந்தையை மடியில் தூக்கி வைத்து கொள்வாள். “ நீயே முடியாதவா! செத்து பொழச்சி வந்துருக்க, நாங்க எம்புட்டு பேரு இருக்கோம், பார்த்துக்க மாட்டோமா உம் புள்ளைய கூடுவே”… என்று பூமணி கேட்டாலும் தர மாட்டாள். மூன்று நாள் தாயை காணாத எக்கம் போல, குழந்தையும் தாயிடம் ஒட்டி கொண்டது.
சொந்ததிற்க்கு பேச மேலும் ஒரு விசயம் கிடைத்தது போலானது தாமரையின் செயல். “ குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்று தானே இவ்வளவு பிரச்சனையும், இப்ப பிள்ளைய நொடி பிரியாம தாய் நிக்காலே”…. “ சாக கிடந்தவ பிள்ளைய பார்த்து தானே எந்துருச்சா”…… “தாமரை மனசு பிள்ளை கிட்ட தான் கெதியா கிடந்துறுக்கு போலவே”….. “குளுக்கோஸ் எருன கையோட பிள்ளைய அணைச்சு பிடிக்குற, இவளுக்க பிள்ளை பாசம் இல்லனு அந்த வேலு பய அடிச்சான்” என்று ஊர் மக்கள் அவர்கள் பங்கிற்கு பேசி செல்ல,
பூமணியும், “ நல்லா சொல்லுங்க அக்கா, அந்த மனுஷன் காதுல விலுராப்புல, எங்க தாமரைக்கு எம்புட்டு கவர்மெண்ட் மாப்பிள்ளை, என்ஜினியர் மாப்பிளை வந்துச்சு தெரியுமா! , அத்தனையும் இந்த பாவி மனுஷன் தட்டி களிச்சாக, என் அக்கா மகன் இருக்க, யாரும் தகுதியாக முடியாதுன்னு மதுரை வீரங்கனக்கா ஒத்த காலுல நின்னு முடிச்சாங்க, அந்த அக்கா மகன் பவுச பாரும், ஊரே மெச்சுது” என்று வசை பாடியவரிடம்,
“அப்படி இல்லவே! சொந்தம்னாலும் இது எல்லாம் பார்க்கணும். கிரகம் சரி இல்லையோ என்னவோ?, யாருக்கு தெரியும். உயிர் போற அளவுக்கு வந்துருக்கே?,” என்று மணி மதினி சொல்லி முடிக்க,
அவரின் அக்கா, “ ஆமா மணி! என்னனு பார்க்கணும். உன் மருமகனுக்கு என்ன! பொண்டாட்டி செத்த புது மாப்பிள்ளை! , ஆன புள்ளையா இழந்ததுட்டு நிக்கிறது யாரு? நாம தானே. எனக்கு என்னவோ உன் பேத்தி பொறந்த நேரம் சரியில்லைன்னு தான் தோணுது. அதுக்கு முன்னாடி நல்லா தான இருந்துச்சுங்க ரெண்டும்”… என்று முடிக்க,
“அட, அமாக்கா முன்னலாம் தாமரை கிழிச்ச கோட்ட தாண்டாத பையன் தான், இன்னிக்கு சலம்பிக்கிட்டு திரியுறான்” என்று புலம்ப
“ ஏட்டி! ஒத்த புள்ளை பெத்த பொண்டாட்டி மேல ஆம்பிளைக்கு இருக்குற பவுசு அம்புட்டுதான். பொம்பிளை தான் சூதானமா புருசன கையில புடிக்கனும். அப்பன் செத்து ஆத்தா தனியா நிக்க! பொண்டாட்டி பக்கம் மனசு சாயுமா? எந்த ஆம்பிளைக்கும். சும்மாவே அந்த அரசி தன்னை தாண்டி யாரையும் விட மாட்டா. இப்ப தனியா நிக்கா, மகன தன் கைக்குள் வளைக்க பாக்குற”… என பூமணி பெரியம்மா எல்லாவற்றிற்கும் அரசி தான் காரணம் என்பது போல் பேச. அதற்கு ஒத்து ஓதினால் அவர் மருமகள்.
“ஆமா மதினி! செத்து பிழைச்ச பிள்ளைய ஒரு எட்டு வந்து பார்த்தாங்கள. பெருசு கூட வந்து பார்த்துச்சு, ஆன தாமரை மாமியா ஆளவே காங்கள! எம்புட்டு நெஞ்சழுத்தம். தம்பி மவ, மவன் பொண்டாட்டி எதுவும் நினைக்கல பாரும்!. தைரியம் தான், தன்னை யாரு என்ன சொல்ல முடியும்னு?. இப்படி அடங்கி போவீங்கனு தான் சொந்தத்தில் சம்மந்தம் பண்ணினாங்களோ? யாருக்கு தெரியும். ஆனாலும், நீங்க இவ்வளவு இடம் குடுக்க கூடாது. அவனவன் பொண்ணு கிடைக்காம அலையுறான். நீங்க கிளி மாதிரி பொண்ணை கட்டி குடுத்து, வலிய புண்ணு வாங்கிடீங்க” என்று சொந்தமும் ஆளாளுக்கு மணிக்கு அறிவுரையை வாரி வழங்க,
ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த பூமணிக்கு. மற்றவர்கள் பேச்சில் இருந்து மனம் ஏதோதோ கணக்கீட்டு கொண்டது.
கலைவாணன் எவ்வளவு எடுத்து கூறியும், கேஸ் வாபஸ் வாங்க சிவம் ஒத்து கொள்ள வில்லை. தாமரையும் சாவு வரை சென்று மீண்டு வந்து இருக்க, கேஸ் அவ்வளவு சீக்கிரம் முடியாது. சட்டமும் பெண்கள் பக்கம் நிற்கிறது. நிலைமையும் தாமரைக்கு சாதகமாகவே இருக்க, வேற வழி இல்லாமல் தான் சிவத்தை மிரட்டினான் கலை.
“சரிங்க சித்தப்பா, நீங்க கேஸ வாபஸ் வாங்க வேண்டாம். ஆன, நாங்களும் கேஸ் போடுவோம் தாமரை மேல” ….. என்க.
அதிர்ந்து நின்ற சிவம், “ என்னாவே சொல்ற, என் புள்ளை மேல கேஸ் போடுவியா?, தாமரை என்னாலே பண்ணுச்சு”….
“என்ன சித்தப்பா மறந்துடீங்கல, பிரச்சனை ஆரம்பமே உங்க பொண்ணு தான. குழந்தைக்கு மச்சதை மறைக்கிரேன்னு கண்டதையும் பாப்பா கன்னத்துல தடவி, அது குழந்தைக்கு ஒத்துக்காம காயம் ஏற்பட்டு, அந்த கோபத்தில தான வேலு தாமரையை அடிச்சது” என்று பொறுமையாக கேட்டவன்.
“ வேலு அடிச்சனால தான் தாமரை சாக போச்சுன்னு பேசுறீங்களா, ஏன் அடிச்சான், என்ன நடந்துச்சு, குழந்தை நிலை, அன்றைய சூழ்நிலை எல்லாம் யோச்சு தான் நீங்க வேலு மேல கேஸ் போடனும். அதை விட்டு, பயத்திலும், குற்ற உணர்ச்சியிலையும் உங்க பொண்ணு மருந்த குடிச்சா அதுக்கு காரணம் வேலுன்னு எப்படி! நீங்க நம்பலாம். உங்க கோபத்தையும், ஆதங்கத்தையும் இறக்கி வைக்க அவன் தான் கிடைச்சானா?” என்று கோபம் எட்டி பார்க்கும் தொணியில் கலை கேட்க.
“உன் கூட பொறக்கலைனாலும் தாமரையும் உனக்கு தங்கச்சி மாதிரி தான கலை! எம்புட்டு பாசமா அண்ணேன்னு சொல்லும். அது மேல போய் கேஸ் போடுறேன்னு சொல்றியே, மனசாட்சி இருக்க உனக்கு. மச்சான்ன அம்புட்டு உசத்தியாவே” என்று மறுகளாக கேட்டவரை பார்த்து தலையில் அடித்து கொள்ளலாம் என்று தோன்றியது கலைவாணனுக்கு.
“ஐயோ! சித்தப்பா உங்களுக்கு நான் சொல்றது புரியுதா என்ன?. உங்க பொண்ணுக்கு நீங்க துடிச்ச மாதிரி தான் வேலும் அன்னிக்கு அவன் குழந்தைய பார்த்து துடிச்சான். குழந்தையோட வேதனையை கண்ட கோபத்தில் தான் அவன் அடிச்சது. நீங்க கூட தாமரையை கேட்டு பாருங்க. உண்மை தெரியும். சூழ்நிலை தான் சித்தப்பா தப்பா போச்சு, ஆசை ஆசையா கட்டினான் மாமா பொண்ணுன்னு, சாக குடுக்க நினைப்பான. கொஞ்சம் யோசித்து பாருங்க சித்தப்பா” என்று தன்மையாக விளக்கியும்.
ஏலே! சாதாரண அலர்ஜியும், உயிர் போற வலி கண்ட என் பொண்ணு வேதனையும் ஒன்னாவே, எத எதுகூட இணை கூட்டுறவன்” என்று ஆவேசமாக பேசியவர்,
தொண்டை அடைக்க, “ மூணு நாளா எம் புள்ளை மரண வேதனையா கண்ணார கண்டவன்லே! தாங்க முடியல நெஞ்சு எரியுது. பெத்தவன் நிக்க சாக கிடந்துச்சே எம் புள்ள, என்னிக்காவது இந்த நினைப்பு மனச விட்டு அழியுமா! முடியாதுவே! நீயி தல்கீழ நின்னாளும், நான் வாபஸ் வாங்க மாட்டேன். உமக்கு தெரிஞ்சது பாரும்” என்று கோபமாக சொன்னவரை பொறுமை போனது கலைக்கு.
என்ன சொல்லியும் புரிந்து கொள்ள மறுப்பவரிடம், எப்படி விளக்க. நியாயம் எல்லாம் பின்னாடி போய், பெற்ற பெண்ணின் அழுகையும், வேதனையும் தான் பெற்றவர்களுக்கு முக்கியம் போல. தாமரையும் வாய் திறப்பதாக காணோம். இனியும் தாமதித்தால் கேஸ் கோர்ட், நியூஸ், பேப்பர் என்று நாரி போகும்.கழகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும் என்றால், அதையே செய்வோம்.
நீங்க செய்றத சொல்லிட்டீங்க, நான் செய்ய போறதையும் கேளுங்க. நீங்க கேஸ் வாபஸ் வாங்கலைன, தாமரை மேல நாங்க கேஸ் போடுவோம். ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு, ஆன்லைன் வாங்குன கீரீம், பில் டிரன்சர் பண்ணது, குழந்தைய அட்மிட் பண்ணுன ஹாஸ்பிடல் ரிப்போர்ட், இரண்டு நாள் சீரியஸ் சொல்லி எமர்ஜென்சி வார்ட்ல வச்சுருக்காங்க. எல்லாம் ரெடியா இருக்கு, வாங்க பார்த்துக்கலாம்” என அவனும் ஒரு காட்டு காட்ட, ஆடி போய் நின்று விட்டார் மனுசர்.
தாமரையின் மரண வேதனை முன் குழந்தையின் காயம் பெரிதாக படவில்லை. அவர் கண்டது ஓரளவு குணமான குழந்தையை தானே. தாயோடு ஒட்டியே நிற்கும் குழந்தையை கண்டவர்களுக்கு வேலுவே தப்பாக தோன்றினான்.
இன்னும் ஏதேதோ பேசி கலை, பிரச்சனையை சரி செய்ய பார்க்க. ஆவேசமாக கத்தி கொண்டு வந்து விட்டார் கொடியரசி. ஊரே பேச்சாக இருக்கும் விசயத்தை எவ்வளவு நேரம் தான் மறைப்பது.
எட்டு கட்டை தொண்டை சத்தத்தில் கலை திரும்பி பார்க்க, ஆங்காரமாக வரும் அரசியும், பின்னோடு பதட்டமாக வரும் மனைவியையும் பார்த்தவன். இனி அவ்வளவு தான்! என்று தோன்றி விட்டது.
வேகமாக வந்து தடுக்க முனைந்த கலையை ஒரே கையில் நகற்றி, “ ஏலே சிவம்! உமக்கு எம்புட்டு நெஞ்சழுத்தம் எம் மவன ஜெயில வைப்ப. எங்க அந்த பசப்பி, ஓடி ஒளிஞ்சுட்டாளா! பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மள சும்மா விடமாட்டாங்கன்னு நடிச்சுக்கு வந்து படுத்துட்டா! உனக்கு என்ன அம்புட்டு வீம்புன்னு செவுல சேர்த்து நாலு அப்பு விடாம. எம் புள்ளையா தூக்கி ஜெயில்ல போடுறீகளோ !” என சிவத்தை அடித்து விடும் வேகத்தில் கேட்டவரிடம்.
“நேத்து இன்னியாரம் வர இப்பவோ, அப்பவோன்னு கிடந்த உசுர, எந்த சாமி புண்ணியமோ எழுந்து வந்துருக்கு. நீங்க நடிச்சிக்கு கேடக்குறான்னு பேசுறீக, பார்த்து பேசுங்க அக்கான்னு எல்லாம் பார்க்க மாட்டேன்”…..
என்னாவே பண்ணுவ! என்னையும் புடிச்சு ஜெயில்ல போடுவியோ! உன் சலசலப்புகெல்லாம் அஞ்சுற ஆள் நான் இல்லவே. ஆத்தா, அப்பன் இல்லாம நின்ன உன்ன அநாதையா விடாம ஆதரிச்ச பாவத்துக்கு, அந்த மனுசனோட மவன உள்ள தள்ளிட்டியே, கொஞ்சமாவது நன்றி இருக்க” என்று கூறி பார்த்து அரசி அடிக்க.
முகம் செத்து போனது சிவத்திற்க்கு, கணவரின் விழுந்த முகம் கண்டு கொதித்து போன பூமணி. தன் பேச்சை ஆரம்பித்தார்.
“நன்றி இருக்குறதால தான் மதினி, நீங்க ஒரு சொல்லு சொல்லு முன்ன எங்க மவள உம் வீட்டு மருமகள அனுப்புனோம். எம்புட்டு பெரிய வரன் வந்தும், எங்கக்கா மவன்னு நின்னு கட்டி குடுத்தாரே. அதுக்கு நீங்க காட்டுற நன்றி இது தான?” என அவரும் பேச்சில் விளாச
வாடி என் சீம சித்ராங்கி, உம் மவள கட்டி கொடுத்ததுக்கு நான் நன்றியோடு இருக்கணுமாக்கும். ஏன் சொல்ல மாட்ட சொல்லுவ ஏன்னா நீயி வந்த வழி அப்படி. காதுல போட்டதோட வாக்க பட்டு வந்த சிறிக்கி, உன் மகளையும் அப்படி கட்டி கொடுக்க எண்ணி தான எம் மவனே புடிச்ச. பேச்சை பாரு பெரிய இடம் வந்துச்சாம். குடுக்க வேண்டி தான யாரு தடுத்த. வக்கு வேனும்ல செய்றதுக்கு, ஒண்ணுக்கும் வழி இல்லாமல் தான சொந்தமுன்னு என் பிள்ளைய பிடிச்சாளுக ஆத்தாலும், மவளும்”…..
அவரின் பேச்சில் கொதித்து போன சிவம். “ அக்கா பார்த்து பேசு, இனி ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை எம் புள்ளைய பத்து வந்தாலும் கூட பொறந்த பொறப்பு எல்லாம் பார்க்க மாட்டேன். வெட்டி வீசிடுவென்” என மரியாதை பண்மையை கை விட்டு, கை நீட்டி பேச.
பூமணி வீட்டு சொந்தமும் சூழ்ந்து கொண்டது. நாங்களும் இருக்கோம் என்று. இனி ஒரு வார்த்தை பேசி பார் அப்போது தெரியும் சேதி. இப்போது நிமிர்ந்து நின்றாள் பூமணி தன்மானத்தோடு. பார் பார் யார் வக்கத்து நிற்கிறது என்று கர்வமாக.
இதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை அரசி. ஆனால், அரணாக நின்று விட்டான் அவர் மருமகன். சரியோ, தப்போ ஒரு பெண்மணியை அதுவும் தன் சின்ன மாமியாரை இத்தனை பேர் வளைப்பதா. பார்த்துவிடலாம் வாங்கடா! என்று கலைவாணனும் சட்டையின் கையை மடித்து விட்டு, அரசி பின் நிற்க. அப்படியொரு பெருமை அரசி முகத்தில். உடன்பிறப்பு எதிரியாக நிக்க, மருமகன் தனியாக தாங்கி நிற்க வந்து விட்டானே. சொந்தம் எந்நாளும் விட்டு போகாது தான் போல.