வடித்து வைத்த சிலை போல பார்த்து நின்ற மகனை கணக்கில் கொள்ளாமல், பேத்தியை கை பிடித்து பூர்ணா வீடு நோக்கி நடையை கட்டினார் பெரியாத்தா.
பவித்ரா பெரிய பெண் ஆவதற்கு முன்பே மனதில் தோன்றியது தான். அதை செயல்படுத்துவதில் இருந்த தயக்கம், ஒத்து வருமா என்ற சிந்தனை எல்லாம் பவித்ரா வயதுக்கு வந்த பின்பு உறுதியாக செயல்படுத்துவது என்று முடிவு கண்டார். பெண்மையின் முதல் படியில் இருந்த பேத்திக்கு தாயின் வழிகாட்டுதல் அவசியம் என்பதை உணர்ந்து, பவித்ராவின் விருப்பத்தை கொண்டே பூர்ணாவை பெண் கேட்டு செல்கிறார். வேலு மற்றும் பூர்ணாவின் வாழ்க்கையை மனதில் கொண்டும் தான் இந்த முடிவு. இந்த திருமணம் பல தீராத மன வேதனைக்கு மருந்து என்று யோசித்து தான் வள்ளியை கண்டு பேச சென்றார்.
பூர்ணா காட்டு வேலைக்கு சென்ற பின்பே, அப்பத்தாவும், பேத்தியும் அவள் வீடு சென்றனர். வேலுவை கூட சரிகட்டி விடலாம். ஆனால், பூர்ணாவிடம் கதையே நடக்காது. அது தெரிந்து தான் அவள் சென்ற பின்பு வீட்டிற்கு பேச செல்கிறார். நால பக்கமும் அழுத்தம் கொடுத்து அடிக்கும் போது இரும்பு வளைய தானே வேண்டும். அதற்கு, முதல் வள்ளியின் சம்மதம் வேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு. இனி, நடக்கும் நிகழ்வுகளை பற்றி வேலுவிடம் குறிப்பு காட்டியாச்சு. அவன் தான் எல்லாவற்றுக்கும் தயாராக வேண்டும். மனதளவில் மற்றும் உடலளவிலும் பூர்ணாவிடம் அடி வாங்க . பெரியவர்கள் தங்களிடம் கோபத்தை காட்டாமல் வேலுவிடம் தான் இறக்கி வைப்பாள்.
காலை பதினோரு மணியளவில் வீடு வந்தவர்களை பார்த்து அதிர்ந்த வள்ளி. “ என்ன மதினி எதுவும் முக்கிய சேதியா, சொல்லிருந்த மயில அனுப்பிருப்பேன்ல? இம்புட்டு தொலைவு நடையை கூட்டனுமா?” என்று கேட்டுக்கொண்டே அவர் வைத்திருந்த பையை வாங்கினார்.
“ஏட்டி! சோழின்னா தான் தலைய காட்டுவன! நான் என் நாத்துனா வீட்டுக்கு விருந்தாளியா வந்துருக்கேன்லே!” என்க.
அவரை அதிசயமாக பார்த்த வள்ளி, “ ஒரு ஊருக்குள்ள விருந்தாளியா?”
“ஒரு ஊரா? நான் அந்த திருநெல்வேலிகாரி வீட்டுக்குள்ள வந்துருக்கேன்! எம் தம்பி ஊரு திருநெல்வேலி தானே?”
அவரின் பேச்சில் சிரிப்பு வர, “ ஆமா ஆமா! இது உங்க தம்பி வீடு தான். உங்களுக்கு இல்லாத உரிமையா? செத்த இருங்க, உங்க மருமகளும் வந்துடட்டும், வெடகோழி கை பக்குவம் உம்மா மருமகளுக்கு தான் தோது” என்று சந்தோசமாக கூறினாலும், மனதில் ஒரு கணக்கீடு தான். காரியமில்லாமல் தலை காட்டும் ரகம் அல்லவே பெரியாத்தா. அதுவும் வந்த தோரணையும் உரிமை சாடலும் எதுவோ உணர்த்தியது. அதை ஆராயாமல் பையில் அவர் கொண்டு வந்ததை ஆராய,
“ என்ன மதினி இது! பூ, பழம், காரம், இனிப்புன்னு ஏதோ பொண்ணு கேட்டு வராப்ல” என்று வினவிய வள்ளியின் வார்த்தையை பிடித்து கொண்ட பெரியாத்தா.
“பொண்ணு கேட்டு தாம்ல வந்துருக்கேன்” என்க.
அதிர்ந்து நிமிர்ந்த வள்ளி, “மதினி” என்று உடல் நடுங்க எழுந்து நின்றார்.
வள்ளியை ஒரு பார்வை பார்த்து தானும் எழுந்து கொண்ட பெரியாத்தா, முந்தானை எடுத்து தோளில் போர்த்தி கொண்டு, “ தங்கதுரை வீட்டு வாரிசு, நெல்லையப்பர் மகன் தங்க வேலுக்கு, நல்ல பெருமாள் மவ சம்பூர்ணத்தை தாய் மாமன் முறைக்கு பொண்ணு கேட்டு வந்துருக்கேன், உங்க பதில சொல்லுங்க, முறை பொண்ண மறிச்சு தான் பேசுறேன்”
இதுவரை, தேங்கி நின்ற கண்ணீர் சலசலவென இறங்கியது. இப்படி ஒன்றை அவர் எதிர்பார்க்கவே இல்லை. என்றோ பல வருடம் முந்தி மனதின் ஓரத்தில் இருந்த நினைப்பு, காலங்கடந்து முற்று பெற வந்து நிக்குதே. முறையாக பெண் கேட்டு நிற்பவரிடம் என்ன மறுமொழி சொல்வதென்று புரியாமல் முழிக்க,
வள்ளி மனநிலை புரிந்து கொண்ட பெரியாத்தா, சற்று தள்ளி நின்று நடப்பதை பார்த்து கொண்டிருந்த பேத்தியை அருகில் அழைத்து, ஒரு பெரிய தாம்பள தட்டில் அரக்கு சிவப்பு வண்ண சேலை, பூ, மஞ்சள், குங்குமம் வைத்து பவித்ராவிடம் கொடுத்தவர். மற்றொரு பெரிய தட்டில் பழம் தேங்காயில் புது மஞ்சள் தாலி சரடும், பதினைந்து பவுனில் தாலி கொடியும் வைத்து, பவித்ராவை முன் விட்டு பின் நின்று, தட்டை வள்ளி நோக்கி நீட்டினர் இருவரும்.
பேச்சே மறந்து விட்டது வள்ளிக்கு. நெஞ்செல்லாம் ஒரே படபடப்பு, சொந்தத்தில் யாரேனும் இப்படி கேட்டு வர மாட்டார்களா என்று பூர்ணாவின் பருவ வயதில் ஏங்கியது. அப்படி ஒருவரும் வராமல் சொந்தமும் ஒதுக்கி தள்ள, வயதும் தள்ளி செல்ல, வேற வழி இல்லாமல் மூப்பு தட்டும் முன் திருமணம் முடிக்க எண்ணி, வந்த வரணுக்கு தலையாட்டி கட்டி கொடுத்தது வள்ளி தான். ஆனால், தன்னை போல தாய் வீடு பாதியில் வந்ததோடு, நடுத்தர வயதையும் எட்டி விட. தன் மகளுக்கு வாழ்வு மலராத என்று தனக்குள்ளே முடங்கிய போது, சாமி தேடி வந்து வரம் தருவது போல் மகளை மட்டுமே தேடி வாழ்வு வந்து விட்டதே.
சிவப்பு வண்ண பாவாடை, சாட்டையில், தலையில் பூவும், முகத்தில் சிரிப்புமாக கையில் மஞ்சள், குங்குமத்தோடு தட்டு ஏந்தி வாங்க சொல்லி வாயில் வந்து தெய்வம் நிற்பது போல் சின்ன சிட்டு நிற்க, யாருக்கு மறுக்க தோன்றும். வரம் தரும் சாமியை உதாசீன படுத்த தோன்றுமா? இருந்தும் ஒரு தயக்கம். ஏற்கனவே, இவர் எடுத்த முடிவால் தானே பூர்ணா வாழ்வு முடிந்தது. அப்படி இருக்க மீண்டும் ஒரு திடமான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினார் வள்ளி, அத்தோடு வயது பெண்ணாக இருக்கும் போது வராத சொந்தம், தற்போது வந்து நிர்ப்பதென்ன!
பெரியாத்தா தான், “ஏட்டி வள்ளி! உம் அண்ணன் மவனுக்கு எம் தம்பி மவள குடுவே! உரிமையா கேக்குறேன். தட்டி தூக்குறதுக்கும் உறுத்துள்ள சொந்தம் தான் அவன்” என்று தோரணையாக சொல்ல,
விரக்தி சிரிப்பு தான் வந்தது வள்ளிக்கு. அதை புரிந்து கொண்ட பெரியாத்தா, “சுடு கம்பில காயம் பட்டாத்தான சொரணை வருது. பணம், பகட்ட பெருசா நினைச்சு, வலிக்க அடி பெத்த பின்னாடி தான் சொந்தம் புரியுது” என ஆற்றாமையாக சொன்னார்.
உறவு முறையில் தேடி பார்த்தால் ஒரு வீட்டு சொந்தமாக தான் தோன்றும். பங்காளி வீட்டு மக்கள் தான். சொத்தும், நிலமும் உள்ளே வர ஆடம்பரமும், பகட்டும் பிரித்து விட்டது. வெறும் பெயரளவில் மட்டுமேகோ உறவு முறையாக நின்று விட்டனர். முறைப்பெண்ணில் பூர்ணாவும் ஒருவள் தான். ஆனால், பேச்சு வார்த்தையாக கூட சேர்க்க வில்லை. தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் கூலிகார மக்கள் என்றளவில் நிறுத்தி விட்டார்கள்.
இவ்வளவு எடுத்து சொன்ன பின்பும் தயங்குவது மரியாதை இல்லை. அவருக்கும் அசை தான் மகள் நிறைவாக வாழ. ஆனால், பூர்ணாவை நினைத்து தான் பயமாக இருந்தது. கோபம் வந்து விட்டால் மரியாதை என்ன விலை என்று கேட்பாள். ஊர் கூட்டி செய்யாமல், மூவர் மட்டுமே என்றாலும் தட்டு மாத்தி விட்டால் உறுதி செய்த உறவு தான் மாற்ற முடியாது. மகளின்றி தான் மட்டும் எவ்வாறு முடிவு எடுக்க,
பெரியவர்கள் இருவரும் தங்கள் எண்ணத்தில் இருக்க, நீண்ட நேரம் பிடித்திருந்த தாம்பள தட்டின் கணம் தாங்காமல் விட போன பவித்ராவின் தடுமாற்றம் கண்டு, நொடி தாமதிக்காது தன் கைகளில் தட்டை ஏந்தி கொண்டார் வள்ளி. தட்டை வாங்குகையில் அப்படி ஒரு நிறைவு மனதில், உள்ளம் பூறிக்க கணவனின் புகைப்படம் முன்பு வைத்தவர்.
தன் சேலை முந்தியை தோளில் போர்த்தி இரு கை கூப்பி, “ எம் அண்ணன் மவன் தங்கவேலுக்கு, எம் மவ சம்பூர்ணத்தை கட்டி கொடுக்க சம்மதம் மதினி” என்க.
கண்களில் நீரும், உதட்டில் சிரிப்புமாக, “ ஐயனார்ரையும், கொப்பு நாச்சியும் மனசுல நெனச்சு தட்ட வாங்குலே! சம்பூர்ணம் தங்கவேலுக்கு பேசி முடிச்சாச்சு” என கூறி தட்டை நீட்ட, வள்ளி கை கூப்பி வாங்கி கொண்டார்.
பழம் தேங்காய் நடுவில் புது மஞ்சள் தாலி கயிற்றில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோர்த்து இருக்க வாங்கும் போதே சிலிர்த்து போனார் வள்ளி. தன் மகள் பாடையில் போகும் வரை நெஞ்சில் உறவாட வேண்டும் என்ற வேண்டுதலோடு சாமி முன் தட்டை வைத்தார்.
அதன் பிறகு தான் பெரியாத்தா, “ ஆயி! உங்க அம்மத்தாட்ட சொம்பு தண்ணி வாங்குவவே! தொண்டை கிறங்கி போச்சு” என்க.
“அம்மாயி! தண்ணி குடுங்க அப்பத்தாக்கு தாகம்” என பவி கேட்டவுடன். வள்ளிக்கு அப்படி ஒரு சந்தோசம் சொம்பு நிறைய தண்ணி மோண்டு தன் மதினி கையில் கொடுத்தவர், பவியை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டார்.
நாங்கள் உன் சொந்தம் என்று சொல்வது வேறு! சொந்தமாக உணர்த்துவது வேறு அல்லவா! தம் மகளின் மகள் என்ற உணர்வு பொங்கி வழிந்தது. ஒற்றை பிள்ளைகளுக்காக மகள் ஏங்கிய ஏக்கத்தை போக்கிய மகராசி அல்லவா! தாய் என்ற அந்தஸ்தை மகளுக்கு வழங்கும் செல்வம் இவள் தானே.
பார்த்திருந்த பெரியாத்தாவிற்க்கு தோன்றியது, உண்மையில் ஏங்கியது பவித்ரா தான். தாய்க்காக, தாயின் அன்பிற்காக, தாயாக தாங்கிய பூர்ணாவின் அரவணைப்பிற்கு உண்மையில் தவித்தது பவித்ரா தான்.
தனக்கு தாய் இல்லை. தான், அப்பா, அப்பத்தா இது தான் கூடு என்ற அளவில் பவித்ராக்கு பிரச்சனை இல்லை. ஆனால், என்று பூர்ணா மூலம் தாயின் அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு என அவள் கைக்குள் பவித்ரா வந்த பின் முற்று முழுதாக மாறி விட்டது நிலைமை. பூர்ணாவின் வளர்ப்பு முறையில் வேலு, பெரியாத்தா என்று யாரின் தலையீடும் இல்லாமல் இருக்க. பூர்ணா, பவித்ரா இருவரும் தங்களுக்கான உலகில் வலம் வர தொடங்கினர். பிள்ளை இல்லாத ஏக்கத்தை, பிள்ளையை கொண்டு பூர்ணா கண்ட கனவுகளை எல்லாம், பவித்ராவிடம் நினைவாக்க. தாயின் அரவணைப்பு உணராத பவித்ராவும் செல்லம் கொஞ்சி அவளோடு ஒட்டி கொண்டாள்.
தன் பள்ளியில், தோழி வட்டத்தில் என்று அம்மா புராணத்தை கேட்டு, பார்த்தவள், தனக்கு தான் அம்மா இல்லையே என்று ஒரு வார்த்தையில் ஏக்கமாக இருந்தது பூர்ணாவின் வருகை பின் ஏமாற்றமாக மாறி போனது. தன்னை விட்டு செல்லும் பூர்ணாவை தடுக்கும் வழி தெரியாமல், படுக்கையில் கண்ணீராக மட்டுமே வெளி வர தொடங்கியது.
தாமரையின் வரவு, அதை தொடர்ந்த மன அழுத்ததில் வேலு இருக்க, பவித்ராவின் மேல் தனிப்பட்டு கவனம் செலுத்த ஆள் இல்லாமல் போனது. பவித்ராவும் தன்னை தனிமை படுத்தி கொண்டாள். அவளுக்கு ஏனோ யாரோடும் ஒட்ட வில்லை. பூர்ணா சென்ற பின்னும், முன்பு இருந்த அறையிலே தனியே இருந்து கொண்டாள்.
ஆரம்பத்தில் கவனிக்காத பெரியாத்தாவும் பின் கவனிக்க, கடனே என்று இருக்கும் பேத்தியை பார்த்து துடித்து போனார். அவருக்கு புரிந்து விட்டது பேத்தி மனம் யாரை தேடுகிறது என்று. இதுவரை, சரி வருமா என்ற யோசனையில் இருந்தவர், பேத்திகாகவே முடித்து விடும் முனைப்பில் இருந்தார். அதற்கேற்ப, வேலுவின் நடவடிக்கைகள் இருக்க, அதிரடியாக தட்டை மாற்றி பரிசம் போட்டு விட்டார்.
வள்ளி தொட்டு தொட்டு பேத்தியை கவனிக்க, அப்படி ஒரு நிறைவு பெரியாத்தாவுக்கு. இந்த அரவணைப்பு தானே பவித்ராவும் விரும்பியது.
தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் இருந்து லட்ச ரூபாய் எடுத்தவர், “ வள்ளி இந்தாத்தா” என்க.
கேள்வியாக நோக்கிய வள்ளியிடம், “ பரிச பணம் தான். எம்ம கல்யாணத்துக்கு நூத்தி ஒன்னு தான் பெரிய காசு, இப்ப லட்சம் தான் எல்லாம்” என கூறிய படி கொடுக்க,
“இதெல்லாம் எதுக்கு மதினி, கூடி வரும் போது தாரும். இப்பவே என்னத்துக்கு” என தொகை அதிகம் என்பதால் தயங்கியவரிடம்.
“ ம்ம்கூம், கல்லு வச்ச முகப்பு மூணு சர சங்கலியொட தான் வரணும்னு இருந்தேன். அந்த சிறுக்கி கண்ட வேப்பிலையை கையில பிடிச்சு ஆடிருவாள. அதான், முறைக்கு இது, மறுக்காம வாங்கி உள்ளாரா வை. தங்கதுரை மருமவ வரதுகுள்ள உள்ளாரா எடுத்து வைச்சுறு. கொஞ்ச நாளைக்கு மறைக்க தான் வேண்டும்” என்று சொன்னவுடன், சிரிப்புடன் தலையாட்டி எல்லாவற்றையும் உள்ளே வைத்து பூட்டினார்.
மத்தியானம் வெயில் ஏற வந்து விட்டாள் பூர்ணா. அலைச்சலில் உள்ளே நுழைந்தவளுக்கு அங்கு இருந்த பவித்ராவை பார்த்து உள்ளம் துள்ளியது. “ ஏலே பவி! என்னாலே திடீர்னு. லீவுக்கு நானே வரணும்னு இருந்தேன் “ என்க.
வேர்த்து நனைந்து வந்திருந்தவளை ஓடி சென்று அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு கட்டி கொள்ள. அதிசயமாக பார்த்தார் பெரியாத்தா, “ அவள் அப்பன கூட இப்படி முத்தம் கொஞ்சாதே இந்த சின்ன கழுதை. எங்கிருந்து இம்புட்டு பாசம்?”
“ஏட்டி ஒரே சேறுலே! இரு அம்மா குளிச்சுட்டு வாரேன்” என்று உள்ளே சென்றவள். குளித்து வந்த பின் பரபரவென வேலையை பார்க்க தொடங்கினாள்.
வீட்டை கூட்டி ஒதுங்க வைத்து, சமையலுக்கு என்ன இருக்கு என்று பார்க்க. வள்ளி தான் கோழி அடிக்க சொல்லி சொன்னார். அவளோ, “ எம்மா! மத்தியான வெயிலுக்கு கோழி எங்கிருந்து பிடிக்க, ஏலே பவி! அந்த அரிசி அள்ளி போடுவே! எந்த கோழி சிக்குனாலும் குழம்பு தான்” என கோழி பிடிக்கும் வேலையில் இறங்கினர் தாய், மகள் இருவரும்.
வேலுக்கு இருப்பு கொள்ள வில்லை. என்ன நடக்குமோ என்று பதைபதைப்பாக இருந்தது. கல்யாண பேச்சுக்கு நிச்சயம் பூர்ணா ஒப்பு கொள்ள மாட்டாள் என்று வேலுக்கு தெரியும். ஆனால், அதை அவள் வெளிப்படுத்தும் விதம் தான் வேறு. தன்னை போல தன் ஆத்தாவிடமும், மகளிடமும் நடந்து விடுவாளோ! அவர்கள் தாங்க மாட்டார்களே! போய் ஒரு முறை பார்த்து வருவோமா என்று எண்ணம் தோன்ற, தன்னை கண்டாள் இன்னும் கோபம் அதிகமாகுமே என்று தோன்றிய போதும். சும்மா இருக்க மனம் இல்லாமல் பூர்ணா வீடு இருக்கும் தெரு நோக்கி வண்டியில் சென்றான்.
கோழி குழம்பில் நல்லெண்ணை மிதக்க எடுத்து வைத்தவள், “ அயித்த! உள்ளாரா கமறும், வெளி திண்ணையில் தட்டு வைக்கிறேன். வாங்க!” என்று வெளியே சென்றாள்.
பூர்ணாவின் ஓட்டு வீடு சுற்றியும் இடம் விட்டு. ஆவரங்குச்சியில் வேலி போட்டு, வேப்ப மர நிழலில் அமர்ந்திருக்கும். உச்சி வெயில் தவிர, எப்போதும் நிழல் தான். அவள் வீட்டு அருகில் நின்று எட்டி பார்த்த வேலு, சத்தம் ஒன்றுமில்லாமல் இருப்பது கண்டு குழம்பி, இன்னும் கிட்ட செல்ல. கையில் அறுவாமனை கொண்டு வெளியே வந்த பூர்ணாவை கண்டு அரண்டு போனவன். வேகமாக வண்டியை திருப்பி செல்ல பார்க்க, வேலு என்று சத்தம்.
நெஞ்சம் படபடக்க திரும்பி பார்த்தவன், அருகில் வந்த பூர்ணாவை கண்டு “ ஏட்டி சம்மு! எனக்கு ஒன்னும் தெரியாதுலே! எல்லாம் அத்தா தான். நான் ரொம்ப நல்லவன்லே, என்னிய ஒன்னும் பண்ணிப்பிடாதவே!” என்று கெஞ்சுவது போல் கேட்க.
அவனின் பேச்சில் குழப்பமாக பார்த்த பூர்ணா, “என்னாலே சொல்ற, ஒரு மண்ணும் புரியல. அயித்தையும், பவியும் வந்துருக்காங்களே, கோழி அடிச்சேன்! நியும் வந்து ஒரு வாய் சாப்பிடு, தேடி வந்து தரமுடியாது, வா வா!” என்று உள்ளே செல்ல,
இன்னும் ஏதும் பேசப்படவில்லை என்பதில் நிம்மதியானவன், இவ குணம் தெரியாம ஆத்தா வேற இறங்கிடுச்சே! அப்படியே நைசா பேசி வீட்டுக்கு கூட்டி போயிடுவோம் என்ற நினைப்பில் உள்ளே வர,
வெளி திண்ணையில் பெரியவர்கள் இருவரும் சாப்பிடு அமர்ந்தனர். வேலு வந்து வேப்பமர நிழலில் கயிற்று கட்டிலை போட்டு உட்கார்ந்து கொண்டான். அவனின் வருகை கண்டு எழுந்து நின்ற வள்ளிக்கு சாப்பிட மனதில்லை, முன்ன எப்படியோ தற்போது மருமகன் என்ற நிலையில் கண்ணெதிரே உட்காருவது கூட மரியதையின்மையாக தெரிந்தது. அவர் சாப்பிடாமல் நின்றே இருக்க, பெரியாத்தாவும் நேரம் செல்லட்டும் என்று விட்டார்.
காலையில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் சாப்பிடாமல் இருந்தவனுக்கு நல்ல பசி இருக்க, கோழி குழம்பின் வாசமும் இழுத்தது. வேலு அமர்ந்த இடத்திலேயே தட்டு வைத்து பரிமாற, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் ஒரு புடி தான் கூடவே இருந்து கவனித்து கொண்ட பூர்ணாவை கண்டு பெரியவர்கள் மனம் நிறைந்து போனது.
பவித்ராக்கு தண்ணி குழம்பாக, எலும்பு போட்டு உண்ண பிடிக்காது என்பதால், அவளுக்கு மட்டும் கொஞ்சம் வறுவல் செய்து ஊட்டி விட, சமத்தாக அமர்ந்து இனிக்க இனிக்க உண்ண ஆரம்பித்தாள்.
வேலுக்கு தான் பயமாக இருந்தது இவர்கள் நெருக்கத்தை கண்டு. முன்பு எல்லாம் இப்படி தோன்றியதில்லை, கல்யாண பேச்சு வந்த பின் அவர்கள் நெருக்கம் இவனுக்கு ரசிக்க வில்லை.
ஆனால், பெரியவர்கள் இருவருக்கும் இவர்கள் நெருக்கம் இனிக்க தான் செய்தது. வேலு அமைதியாக பார்த்திருக்க, பூர்ணா தான் “ ஏட்டி பவி இது என்னாலே! ஆட்டுக்கு கொளை கட்டுன மாதிரி இழுத்து பிடிச்சு பூ வச்சு விட்டது, இங்க வா! தலைய பாரு எண்ணெய் கண்டு நாலான மாதிரி செம்பட்டையா? முடி வளக்கனும் அதான் பொம்பள பிள்ளைக்கு அழகு. ஏலே வேலு! தினக்கி ராத்திரி எண்ணெய் வச்சு தூங்கவைலே!” என கூறி கொண்டே பவியின் தலையில் எண்ணெய் வைத்து புது பின்னால் போட்டாள்.
“இது என்னாலே! கால் முழுக்க நகம், வாரத்துக்கு ஒரு நாள் வெட்டனும்னு சொன்னேன்ல! பின் கழுத்துல என்னது அலர்ஜி மாதிரி சோப்பு மாத்தி போட்டியா!” என பேசி கொண்டே உள்ளே சென்றவள் ஏதோ எடுத்து வந்து கழுத்தில் தடவினாள்,
மேலும், “ பவியின் கையில் சுள்ளேன ஒரு அடி போட்டு, கை என்னாலே வெள்ளை வெள்ளையா குளிச்சு முடிச்சதும் எண்ணெய் வைக்க மாட்டியா, ஏலே வேலு! விட்டு வந்த ஒரு வாரத்திலே பிள்ளைய கெடுத்து வச்சிருக்க” என்று அவனையும் சாட,
பதில் பேசவே முடிய வில்லை வேலுக்கு. நடப்பது எல்லாம் பெரியாத்தாவுக்கு சாதகமாக இருக்க, பூர்ணாவின் கண்டிப்பில் மகளும் அடங்கி போக, இவனுக்கு தான் வேதனையாக இருந்தது.
“ பவியை உத்து பாக்காதலே! உன் சௌகரியத்துக்கு பழகுன, பின்னாடி புள்ளை கஷ்டப்படும்லே!” என வேலு மெதுவாக எடுத்து கூறி அவர்கள் உறவை விலக்க பார்க்க, அவன் சொல் அவளை தாக்கியது.
“அவள பார்க்காம வேற யாரை பாக்குறதாம்! எனக்கும் தான் யாரு இருக்கா, கண்டிக்கிறதுக்கும், பாசம் காட்டவும் உங்களை விட்டா? பிள்ளை இல்லன்னு தான் வாழவெட்டியா வந்தேன். இப்ப உம் மவள தான் எம் புள்ளையா பாக்குறேன்! உமக்கு பிடிக்கலையா வேலு!” என்று பாவமாக கேட்டவள பார்த்து தன்னையே நொந்து கொண்டான் வேலு.
“ஏட்டி என்னாலே பேச்சு இது? பவி உம் மவ தான், உமக்கு இல்லாத உரிமையா? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வரமாட்டேன்” என்று அவன் வாயாலே சொல் வந்து விட,
அவ்வளவு மகிழ்ச்சி பெரியாத்தா முகத்தில். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பை வைத்து தானே அவ்வளவு திட்டமும். அது சரியாக வேலை செய்யும் நிறைவு அவருக்கு.
வேறு பேசாமல் வேலு எழுந்து விட்டான். ஆத்தாவை பார்த்து வீட்டிற்கு வருமாறு அழைக்க, “வந்த சோழி முடிஞ்சதுலே! கொஞ்சம் கட்டைய சாச்சுட்டு, பொழுசாய பொடி நடையா வீடு வந்து சேந்துருவோம்! நீயி போற சோழிக்கு போவே” என்க.
அவர் காட்டிய குறிப்பில் பேசாமல் எழுந்து விட்டான். வள்ளியை நிமிர்ந்தும் பார்க்க வில்லை, அவரின் அதிக படியான மரியாதையே நிலையை உணர்த்தி விட, தர்ம சங்கடமாகி போனது வேலுக்கு.
பூர்ணா தான், “ ஏலே வேலு! புள்ளைக்கு புது உடுப்பு எடுக்கணும்லே! முட்டிக்கு கீழ வர மாதிரி பார்த்து எடு! அப்புறம் பனியன் துணி வேணாம்லே, உடம்போட ஒட்டி தெரியும். காட்டன் துணியாவே எடுல! சாந்து பொட்டு ஒன்னு வாங்கி வா! பொட்டே வைக்குறது இல்ல கழுதை!” என்று ஏதேதோ சொல்லி அனுப்ப,
வேலுவின் நிலை தான் சொல்ல முடியவில்லை. தன் பிள்ளை மேல் இத்தனை பாசம் வைத்திருக்கும் இவளுக்கு தான் என்ன செய்ய இயலும்! மனம் கணக்க பூர்ணா தலையில் கை வைத்து தட்டி கொடுத்த படி வெளியேறி விட்டான் வேலு.
நடப்பது நடக்கட்டும். நேரடியாக தங்களிடம் கேட்கும் போது பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வேலு வந்து விட்டான். தாங்கள் இருவரும் சம்மதம் சொல்லாத போது, மேற்படி காரியம் எப்படி நடக்கும். பார்த்து கொள்ளலாம் என்று அவன் இருக்க.
அவனுக்கு எங்கே தெரியும்? பரிசம் போட்டு கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள் என்று. வேலுவின் அக்கா, மாமா என்று அனைவருக்கும் தகவல் சொல்லி, அடுத்த நிலைக்கு தயார் படுத்தி விட்டார் பெரியாத்தா.
தன்னை சுற்றி நடக்கும் எதுவுமே தெரியாமல் இருந்த பூர்ணா, எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும். விவரம் தெரிந்த உடன் கொதித்து போனாள். எப்பவும் போல அவளின் கோபம் எல்லாம் வேலு மீது தான் திரும்பியது. வேலு களத்து மேட்டில் இருப்பது அறிந்து, கூட இருந்தே காலை வாரி விட்டானே என்று உக்கிரமாக கையில் அறுவாளுடன் களத்து மேடு நோக்கி வேக நடையை போட்டாள் பூர்ணா.