அதி காலை நாலு மணிக்கே, வேலுவின் வேலை நாள் தொடங்கி விடும். ஆனால், அன்று ஏனோ எதுவும் செய்ய தோன்றாமல், பார்வை எங்கோ வைத்து அமர்ந்திருந்தான். அவனின் வாட்டம் கண்டாலும் எதுவும் துருவாமல் தன் போக்கில் வேலையை முடித்து உள்ளே சென்று விட்டாள் பூர்ணா.
அன்றைய சுறுசுறுப்பு ஏதுமின்றி தாமதமாகவே தன் வேலைகளை எல்லாம் முடித்து வெளியேறினான். எப்போதும் இருக்கும் மகளை பற்றிய அவனின் அக்கறை கூட இரண்டாம் பட்சமாக போனது. பார்த்த அனைவருக்கும் அவனின் மனநிலை புரிந்தாலும், தாங்கள் இதில் என்ன செய்ய இயலும். இந்த மாதிரியான தர்மசங்கட நிலைகளை தாண்டி தானே வர வேண்டும். இன்று, இப்படி மறுகுபவன் அன்று ஏன் அமைதியாக ஒதுங்கி கொண்டான். இவன் முன்னெடுத்திருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்குமே என்று எண்ணம் எல்லார் மனதிலும் இருக்க தான் செய்தது.
இப்போது இதை எல்லாம் விவாதித்து ஒன்னும் ஆகப்போவது இல்லையே. மாற்றான் தோட்டத்து மல்லிகை வாடை புடிப்பது கூட அசிங்கம் தான், அப்படி இருக்க அவளை நினைத்து மகன் மறுகி நிற்பது பெரியாத்தாவிற்கு மனம் ஒப்பவில்லை. பஞ்சாயத்தில் அத்து விட்ட பின்பும், உறவை ஒட்ட வைக்க பெரியாத்தா எவ்வளவு முயற்சித்தும் பிடி கொடுக்காமல் நழுவியது வேலு தான். தற்போது திடம் இன்றி திணறுவது ஏன்? பத்தில் ஒன்றாக கடந்து செல்ல தானே வேண்டும். மகனின் மன நிலை என்னவென பிடிபட வில்லை. எதுவாகிலும் தாமரைக்காக வேலு தன் சுயம் தொலைப்பது ஒப்பவில்லை.
அதே மன நிலை தான் வேலுக்கும். கடந்து போனது, மறந்து போனது என்று எண்ணி இருக்க. இது என்ன புது உணர்வும், படபடப்பும். நினைக்கவே அசிங்கமாக, குன்றலாக இருந்தது. பத்து வருடம் கடந்தும் இது சாத்தியமா! மனதை மட்டும் கட்டு படுத்த முடியவில்லை. அவளின் நிலை அறிய துடிக்கும் மனதை எதை கொண்டு சாத்த? வெறும் சாம்பல் தான் ஊதி விட்டால் பறந்து விடும் என்றிருக்க, சாம்பல் அடியில் இருக்கும் கங்கு போல் அவனை பற்றி விடுமோ! மனம் கதறி துடித்தது.
நேற்று மாலை வீடு வரும் வழியில் பவித்ராக்கு பிடித்த பால் பண்ணை வாங்க, பேக்கரி பக்கம் ஒதுங்கி நின்றான் வேலு. அங்கு சூடாக போலியும் போட சேர்த்து வாங்கி கொண்டு செல்வோம், மழைக்கு நன்றாக இருக்கும் என்று தோன்ற கொஞ்ச நேரம் காத்திருக்க ஆரம்பித்தான். வானமும் சிறு தூறல் போட, கண்ணன் ஒரு ஆறு வயது பையனோட அப்போது தான் கடைக்குள் நுழைந்தவன், எதிர்ப்பட்ட வேலுவை பார்த்து தலை குனிந்து கொண்டான்.
காலம் மாறி பத்து வருடமும் கடந்து விட்டது. கண்ணனுக்கும் திருமணம், இரு குழந்தை என்று பருவம் மாறி போனாலும், எதிர்படும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் நேர் கொண்டு காண முடியவில்லை. விட்ட வார்த்தையும், செய்த செயலும் காலம் கடந்தும் மாற்றம் இல்லாமல் மனதிலிருக்குதே! அதுவும் வேலுவின் ஒரு பக்க வளைந்த கையை பார்க்கையில் மனம் குற்ற உணர்வில் குறுக செய்யும். அதே போல் இன்றும் தலை நிமிராமல் கண்ணன் தள்ளி நின்று கொண்டான். வேலுவும் புரிந்து கொண்டு பார்சல் கட்ட சொல்லி அவசரபடுத்தி, முகம் காணாமல் இருவரும் இரு பக்கம் பார்த்து நின்றார்கள். கண்ணன் உடன் வந்த சிறுவன் வேலுவின் அருகில் வந்து “பெரியப்பா” என்று அழைக்க,
அந்த ஒற்றை அழைப்பில் வேலுக்கு சர்வமும் ஒடுங்கி போனது. அந்த சிறுவனின் முகத்தை பார்த்தவுடனே புரிந்தது யாரின் அச்சு என்று, தாமரையின் மறு பதிவு. அழகான வட்ட முகம், முட்டை கண், மஞ்சள் நிறம் என்று கொழு கொழுவென இருந்தான். தன்னையே நோக்கும் அந்த சிறு முகத்தை கண்டு, மனம் பதறி துடிக்க ஆரம்பித்தது. என்ன மாதிரியான உறவு நிலை இது! என்ன சொல்லி ஆற்று படுத்த, நெருங்கவும் முடியாது, தள்ளி நிறுத்தவும் மனம் கேட்க வில்லை. பிஞ்சு முகம் புண்படுத்த யாருக்கு தோன்றும். அவனை நோக்கி கை நீட்ட, மன கண்ணில் மகளின் முகம் தோன்றி தடுமாற செய்தது. எல்லாம் அலங்கோலமாக மாறிய பின் யாரை சொல்லி நோவ? தடுமாறிய கணத்தில் பார்சல் வந்து சேர, நொடி நேரத்தில் பார்சலை சிறுவன் கைக்கு கை மாற்றியவன். எதிலிருந்தோ தப்பிப்பது போல் ஓடி வந்து விட்டான் களத்து மேட்டிற்கு.
அவன் வந்து அமர்ந்து இடமோ! அவன் தந்தையை எரித்த சுடுகாட்டிற்கு நேர் களத்து மேடு தான். சலனமில்லாமல் தந்தையின் சிதை மூண்ட இடத்தை பார்த்து அமார்ந்தவன், அதன் அருகில் இருக்கும் மஞ்சனத்தி மரத்தையும் ஒரு பார்வை பார்க்க, கண்களில் நீர் சுரந்தது. அன்று தாமரை கொண்டு அவன் எடுத்த முடிவு சரிதான் என்று இன்றும் நினைக்கிறான் தான். ஆனால், இந்த மானம் கெட்ட மனம் தான், தாமரையை நோக்கி செல்கிறது.
தற்போது கூட வரும் போது நேர்பாதை இல்லாமல், சுற்றி கொண்டு தாமரை வீடு இருக்கும் வழியில் அல்லவா வந்தான். தப்பு என்று தெரிந்த போதும், அவள் வீட்டு திசை பக்கமே வண்டி சென்றது, பாதகம் என்று தெரிந்த போதும் கண்கள் அவளை தான் நோக்கியது. சோக சித்திரமாக தன் வீட்டு தூணில் சாய்ந்து அமர்ந்தவளை கண்டு மனதில் அவ்வளவு துடிப்பு. ஒரு காலத்தில் தன் காதலி, மனைவி என்ற நிலை எல்லாம் மறந்து, உடன் வளர்ந்த பாசம் முன் நின்றது. சொந்தமாக கூட போய் துணை நிற்க முடியாதே! கண் பார்த்தாலும் கை நேர் கொண்டு களத்து மேடு வந்து சேர்ந்து விட்டது.
வேலுவின் கண்கள் சுடுகாட்டையே வெறித்து பார்த்தாலும், எண்ணம் முழுசும் பின்னோக்கி தான் சென்றது. அன்று, வேலு ஜெயிலில் இருந்து வெளி வந்த போது, அவனின் கால்கள் நேராக சென்றதென்னவோ தாமரையை காண தான். அவள் பிழைத்து வர வேண்டும் என்ற வேண்டுதலோடு மருத்துவமனை நோக்கி ஓடி சென்றவனை, உள்ளே செல்ல விடாமல் தடுத்தது கண்ணனின் கையில் இருந்த பொருள் தாம். ஆம்! அவன் கையில் இருந்தது எண்ணெய்யும், விறகும் தான் அவனோடு அவன் நண்பர்கள் வைத்து நின்றிருந்தனர். பார்த்ததும் சர்வமும் ஆடி போனது வேலுக்கு. கொஞ்ச மாததிற்க்கு முன்பு ஒரு நாள், இத்தகைய பொருட்களோடு அவனும் நின்றிருந்தானே! உடம்பில் இரத்தம் உறைய கிடைத்த சேதியில் உடைந்து விட்டான்.
தாமரை பிழைப்பது இயலாது என்றிறுக்க, போலீஸ் கேஸ், உடலும் நொந்து போய் கிடக்க காரியத்தை அங்கேயே முடிக்க எண்ணி தான் இவ்வளவு செயல்பாடும். கடவுள் சித்தத்தில் தாமரை பிழைத்தாலும் அதை கண்ணார கண்டு மனதால் மடிந்தது வேலு தான். இனியொரு இழப்பை தாங்க முடியாமல் தானே ஓடி வந்தது.
இவ்வாறு, இதேபோல் தானே தன் தந்தைக்கு எண்ணெய், விறகும் கையில் ஏந்தியது. அத்தருணத்தை, இப்போது நினைத்தாலும் மனம் தீயாக எரியுமே! தன் சொந்தத்தில், நண்பர்கள் கூட்டத்தில் என்று இறப்பை, சிதைக்கு தீ மூட்டுவதை ஒரு ஆண் பிள்ளையாக பார்த்து பழகியவன் தான். அவ்வளவு ஏன்! மணிமாறன் தந்தைக்கு எண்ணெய்யும் , விறகும் வாங்கியதே இவன் தானே. நண்பன் உடன் நின்று செய்யும் போது சாதாரண நிகழ்வாக தோன்றியது.அதுவே, தன் தந்தைக்கு எனும் போது தாங்க முடியவில்லை தானே. மார்பில் போட்டு வளர்த்த தந்தைக்கு, அதே மார்பில் தீ வைக்கும் போது உண்டான வேதனை எக்காலத்திலும் மறக்குமோ!
அதே போல் வேதனை மீண்டுமா! மாமன் மகளாக உடன் வளர்ந்து, பருவ வயதில் காதிலியாக, மனைவியாக மனதில் கொண்டாடி தீர்த்தவளை தீயில் வார்ப்பதா! அதுவும் தன் பொருட்டு! போதும் இந்த வாழ்க்கை, இனி எல்லாம் தாமரை கையில் தான் என்று முற்று முழுதாக ஒதுங்கி கொண்டவன் தான் இந்த நிலையில் நிற்கிறான்.
பெரியாத்தா எத்தனை தரம் வற்புறுத்தியும், பஞ்சாயத்தின் பின் தாமரையை சென்று வேலு காணவில்லை. அவன் மனதில் தெளிவாக தெரிந்த ஒன்று தாமரையின் மணாளன் தகுதிகளில் தான் எள்ளளவும் இல்லை என்று. திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்ற பின், தான் இவனை திருமணம் செய்தது தவறோ என்று யோசிக்கும் பெண்ணவளை என்ன சொல்லி? எப்படி சரிகட்ட!
தான் ஒரு சாதாரண மனுசன். எப்போதும் நேர்கோட்டிலே செல்ல முடியாது, தவறும் செய்பவன் தான். இயல்பானவன், எதார்த்தவாதி, கோபம், முசுட்டு குணம் உள்ளவன் தான். தலை மகன், பொறுப்பும், கடமையும் கொண்டவன். சில நேரங்களில் தவறியும் போவான் தான். கதாநாயகர்களில் வரையறுக்க முடியாதவன். நேரமும், சூழலும் தக்க மனமும், செயலும் மாறும் சாதாரண மனுச குணம் கொண்டவன் தான் வேலு.
அப்படி இருக்க தாமரையின் நாயகனாக மட்டுமே தான் இருக்க முடியாது. புரிதலும், பக்குவமும் அவளிடமிருந்தே வரட்டும் என்று தான் ஒதுங்கி கொண்டான். ஆனால், நடந்த பஞ்சாயத்து பிரிவை வழி வகுக்க, அதை தாண்ட முடியவில்லை இருவராலும். கால சுழற்சியில் வேலு தேங்கி நிற்க, தாமரை நீரோடையாக தன் வாழ்வை துவங்கி விட்டாள்.
எல்லாவற்றையும் ஏற்று கொண்டு நிர்மலமாக மகள் மட்டுமே துணை என்று வாழ்ந்து வந்தவன் தான். பத்து வருடம் சென்று தாமரையை காணும் போது கொஞ்சம் தடுமாறி தான் விட்டான். உறவு நிலை முற்று பெற்றாலும், கொண்ட பாசம் அவனை உறங்க விடவில்லை. மாறனின் மூலம் தாமரை வாழ்வை அறிந்தவனுக்கு வேதனை தான் மிச்சம்.
ஏனோ தானோ என்று வீட்டில் நடமாடி கொண்டிருந்தவனை கண்டு பெரியாத்தா தான் புலம்புவார். பூர்ணாவோ, வள்ளியோ வாய் திறக்க மாட்டார்கள். பவித்ராவுக்கு இதை எல்லாம் கவனிக்கும் அளவிற்கு விவரம் கிடையாது. அவளுக்கு தன் அம்மாவோடு நன்றாகவே நேரம் சென்றது. ஆம், தற்போது பெரியம்மாவை மாற்றி அம்மா என்றே அழைக்க தொடங்கி விட்டாள். அவளுக்கு அதுதான் சௌகரியம் என்று கன்னம் கொஞ்சி முத்தம் வைத்து கேட்பவளை எங்கனம் மறுக்க. பிள்ளை இல்லாமல் ஒரு பிள்ளை வரம் வேண்டி தவம் கிடந்தவளுக்கு “அம்மா” என்ற வார்த்தை என்றேனும் அழுக்குமா!
ஆனால், வள்ளிக்கு தான் உறுத்த தொடங்கியது. உதவிக்கு வந்து விட்டு உபகாரமாக மாறி விட கூடாதே. அரசி இல்லையென்றாலும் இது அரசி வீடு தான் என்பதை மனதில் இருத்திக்கொண்டார். இதன் அழுத்தம் பெரியாத்தாவையும் தாக்கியது, திடமான முடிவு எடுத்து செயல்படுத்த காத்திருந்தார்.
பவித்ராவின் பதினைந்தாவது நாளில், வீட்டை துடைத்து, மற்றவற்றை ஒதுங்க வைத்து, மகளின் சிறு உணவுக்கு முறுக்கு, அதிரசம், தட்டை, தேன் மிட்டாய், கடலை புட்டு, முந்தரி கொத்து என்று அனைத்து வகைகளையும் சம்படத்தில் அடைத்து விட்டு தன் தாயோடு தங்கள் வீடு செல்ல தயாரானாள் பூர்ணா. கண்களில் நீர் பெருக நின்ற பவித்ராவை கண்டு மனம் துடித்தாலும், அவளுடன் சேர்ந்து இருக்கவ முடியும். வந்த வேலை முடிந்தால் கூடு செல்ல தானே வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு அடுத்தவர் வாயிக்கு ஏன் அவுல் ஆக வேண்டும். அத்தோடு பவித்ராவும் தன்னை சார்ந்தே நிற்பது கொஞ்சம் குடைந்தது, மகளா மனதில் நினைத்தாலும், உடன் இருந்து வாழ முடியாதே, நிதர்சனம் அவளுக்கும் புரிய வேண்டும் அல்லவா! தள்ளி நின்று வழிகாட்டினால் மட்டுமே போதும் என்று தாங்கள் இடம் நோக்கி சென்று விட்டாள்.
பெரியாத்தாவும், பவித்ராவும் கலங்கி நின்ற அளவு வேலு கலங்க வில்லை. பூர்ணாவின் குணம் அவனுக்கு தான் நன்றாக தெரியுமே. அது மட்டுமல்ல தற்போது தாமரை நிலை தான் முன் நின்றது. அவளின் வாழ்வை எப்படி சிர்படுத்துவது, முன்னின்று எதுவும் செய்ய முடியாதே. மாறன் மூலமாக தான் ஏதேனும் செய்ய வேண்டும். தாமரை தான் சரியில்லை போல, அனுசரித்து வாழும் பக்குவம் இல்லை, ரெண்டு தடவை கல்யாணம் செய்தும் கெடுத்து கொண்டு வந்து நிற்குதே! போன்ற பரவலான பேச்சுக்கள் ஊரில் பரவ, வேலுக்கு தான் கவலையாக போனது. எங்காவது நன்றாக வாழட்டும் என்று நினைக்க, இப்படியாகி போனதே எஎன்று
தன்னை நீங்கி வேறொரு திருமணம் செய்து கொண்டாள் என்ற கோபம் வேலுக்கு கிஞ்சித்தும் இல்லை. பிரிவு என்பது இருவருமே நேர் கொண்டு எடுத்த முடிவு தான். தங்களின் உறவை முறித்து கிட்டத்தட்ட மூன்று வருடம் கழித்து தான், தாமரை தனக்கென ஒரு வாழ்வில் நுழைந்தது. அதில் அவள் தவறு எதுமில்லையே! தான் தனியாக ஒரு பிள்ளையோடு நிற்க, தாமரையின் மறுதிருமணம் தான் பிழையாகி போனது இரு தாய்மார்களுக்கும். விவாகரத்து பெற்ற பின் யாராக இருந்தாலும் தனித்தே நிற்க வேண்டுமா என்ன! மூன்று வருட கால அவகாசம் இருந்தும் சேர்ந்து வாழ இருவரும் முன் வராத போது, அவரவர் பாதையில் சென்றும் விட்டார்கள்.
பெரியாத்தாவுக்கு மிகுந்த வேதனையாகி போனது மகனின் நடவடிக்கையில். திடமாக தாங்குவான் என்றிருக்க, இப்படி கூறு இல்லாமல் போனனே என்று! மாறனின் மூலம் அனைத்தையும் அறிந்தவர், மகனுடன் நேரடியாகவே கேட்டுவிட முடிவு செய்தார்.
அன்றிரவு, தாமதமாகவே வீடு வந்த வேலு. பெரியாத்தா உறங்காமல் பூண்டு உரிப்பதை கண்டு, “ ஆத்தா, இன்னும் படுக்கைய நீட்டலையா! வேலை செய்ரீக!”
“எந்திருச்சு நிக்க வக்கில்லாத பயலுக்கு! எட்டு குட்டி கரணம் எதுங்குறேன்!” என நக்கலாக சாடை பேசினார் பெரியாத்தா.
அவரின் சொல்வாடையில் ஒன்றும் புரியாமல் முழித்த வேலு, அடுப்படி சென்று பார்க்க. அங்க ஒன்றும் ஆக்கவில்லை என்று கண்டு, “ என்ன ஆத்தா! உண்டீகள, ஒன்னும் காங்கல”
“நீரு சாமத்துக்கும் ஏமத்துக்கும் வந்த காத்திருந்து கஞ்சி ஊத்தனுமோ! வயசான காலத்துல ஒன்னும் முடியலப்பு” என மறுபடி ஒரு சாடை பேச்சு தான்.
மறுசொல் சொல்லாமல் மகளின் அறை சென்று பார்த்தவன். அவள் உறங்குவது கண்டு தலை கோதி வெளியே வர. பெரியாத்தா ஜாதக கட்டை எடுப்பது கண்டு என்னவென விசாரித்தான்.
“உமக்கு தான் சின்னவனே! பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்” என்க.
“ஆத்தா! புத்தி பிசக்கி போச்சா உங்களுக்கு. வயசு முப்பத்தாறு தொட்டாச்சு, இப்ப போய் மறு கல்யாணமா! மதியா புடிச்சிருக்கு” என்று அதிர்ந்து போய் வேகமாக பேசியவனை நிதானமாக பார்த்தவர்.
“மதி கெட்டு போனது எனக்கில்லை மவனே உமக்கு தான். இல்லைனா பத்து வருசத்துக்கு முந்தி விட்டத, முந்திக்கிட்டு தொடர நினைப்பிகளா!” என்க.
அதிர்ந்து போன வேலு, “ஆத்தா என்ன பேச்சு பேசுறீக! எட்டு கட்டி என்னத்தா பேச்சு இது. நல்லாயில்லா! யாரு? என்னத்த தொடருறாக!”
“ நீயி தான் சின்னவனே! நான் சொல்றது பொருக்கலையா! நாளைக்கு ஊரு இத தான் சொல்லும் மகனே! பேச்சு தப்பா போய் சேர்ந்துச்சுன்ன, எடுத்து கூட்டி அள்ள முடியாது! உம் பொழப்ப நீயி பாரும், அவ பொழப்ப அவ பார்க்கட்டும். இல்லையா அப்பன், ஆத்தா, கூட பிறந்தவன், சொந்தம்ன்னு முச்சூடும் நிக்கே அவக பார்க்கட்டும். உம் சோழிய நீயி பாரும்” என்று முடிக்க
ஆத்தாவின் கோபம் புரிந்து கொண்ட வேலு. கொஞ்சம் தணிந்தே, “ ஆத்தா! சொந்த மாமா மக, மருகி நிக்க காங்கமுடியல! ஊர் பேச்சும் காது கொடுக்க முடியல்ல. தூக்கி வளத்த புள்ளை வேத்தாள ஒதுங்க மனசு என்ன கல்லா சொல்லும். ஒத்த குடும்பம் துண்டா போச்சு, ஒன்னாவது போய் கரை சேராட்டுமே” என குரல் கமர வேலு பேச,
தாங்க முடியவில்லை அவன் ஆத்தாவிற்க்கு, “ அய்யா! எம் ராசா! எம் புள்ளை மனசு தங்கம்வே, நீங்க நல்லது நினைச்சாலும் அது தப்பா தான் போய் முடியும் சாமி! நமக்கு எங்கையும் ஒட்டாதுவே! நம்ம ராசி அப்படி, எண்ணெய் தேச்சு உருண்டாலும் பிடி மண்ணு ஒட்டாதுவே நமக்கு. நீங்க நல்லதுன்னு செய்ய, உம் மாமன் அறுவாள தூக்க, திரும்ப ஒரு ஆட்டத்த காண உசுரு இல்லவே! யோசனைய விடு சின்னவனே! உம் ஆத்தா சொல்றத கேளும்! ரெண்டு பேரும் வாழனும்பு, யாருக்கும் பாதகம் இல்லாம ஒதுங்கி பூருவோம்லே! அவக பஞ்சாயத்து அவக பேசி தீர்க்கட்டும். மாமா மவண்ணு நீயி நினைச்சா மட்டும் போதுமா! ஊரும் சனமும் என்ன சொல்லும்ன்னு யோசிலே, அடுத்த இடத்துக்கு வாழ போன பொண்ணு! வெட்டியா கெடுத்து பிடாதீக!” என்று குமுறலோடு சொன்னவர் உள் சென்று விட்டார்.
ஏதேதோ தாக்கத்தில் வேலு தான் அமைதியின்றி அமர்ந்திருந்தான். ஒரு வாரம் ஒதுங்கி நின்றவன், தாமரை வேலை கேட்டு அலைவது தெரிந்து. தனக்கு வேண்டிய ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்த்து விட்டான். மறைமுகமாக தான், தாமரைக்கு கூட வேலு தான் காரணம் என்று தெரியாது. ஆனால், மாறன் மூலம் தெரிந்து கொண்ட பெரியாத்தா, தான் அவ்வளவு எடுத்து சொல்லியும் மகன் கேட்காமல் போனானே என்று நினைத்தவர் மனதில் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.
வெள்ளி கிழமை காலையில் பரபரப்பாக அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்தார் பெரியாத்தா. பவித்ராவும் சிவப்பு வண்ண பட்டு பாவாடையில் தயாராகி நிற்க, பார்த்த வேலு. மகள் பள்ளி செல்லாமல், வெளியே எங்கவோ கிளம்புவது கண்டு என்னவென வினவ,
பவித்ரா எதுவும் பேசாமல் தன் அப்பத்தாவை பார்க்க. அவரும் கட்டை பையில் உருட்டி கட்டிய மல்லிகை பந்தோடு, அதிரசம், முறுக்கு என எல்லாவற்றையும் தனித்தனியாக கவரில் போட்டு பையில் வைத்த படி, வேலுக்கு பெண் பார்க்க போவதை அறிவித்தார்.
அரண்டு போய், “ ஆத்தா! தாமரை வேலைக்கு ரொம்பவும் அலையவும் தான், மனசு கேட்காம வேலைக்கு ஏற்பாடு செஞ்சென்” என எங்கப்பன் புதருக்குள் இல்லை என்று தானாகவே வந்து வாக்கு மூலம் கொடுக்க,
அவனை அழுத்தமாக பார்த்த பெரியாத்தா, ஒன்றும் பேசாமல் பவித்ராவை அழைத்து கொண்டு வாயில் நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
பதறி போன வேலு, “ அத்தா ஆத்தா! என்ன விவரம் ஒன்னும் சொல்லாம போறீக! திடுதிப்புண்ணு ஒன்னும் முடிக்காதீக! இனி உம்மா பேச்சு தாண்ட மாட்டேன். எங்க போறீங்க! யார பொண்ணு பாக்க! என்ன சோழி, ஆத்தா! நான் மாப்பு கேக்குறேன் வாங்க வீட்டுக்கு” என்று போக விடாமல் பையை பிடித்து கொண்டு தடுத்த நிறுத்த,
“பொண்ணு மட்டும் பார்க்கல சின்னவனே! நேர பருசம் தான். அடுத்த பத்து நாள் தள்ளி புதன் கிழமை நெல்லையப்பர் மவன் தங்கவேலுக்கும், நல்ல பெருமாள் மவ சம்பூர்ணாவுக்கும் கோவில்ல கல்யாணதேன்” என்று உறுதியாக சொல்லி நடையை கட்ட,
“எதே” என நெஞ்சில் கை வைத்து அரண்டு போய் நின்றான் வேலு.
அம்மாவை பார்க்கும் ஆவலில் துள்ளலோடு அப்பத்தாவின் பின்னே சென்றாள் பவித்ரா.