புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 17.1
இரவு உணவையும் கொடுத்தே தான் பெரியாத்தாவையும், பவித்ராவையும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பினாள் பூர்ணா. பின்பு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பிரித்து அடுக்க ஆரம்பித்தவள், அதில் இருந்த மல்லிகை பந்தை கண்டு யோசனையாக தாயை பார்த்தாள். வள்ளியோ, அவள் பார்வையின் பொருள் உணர்ந்து திரும்பி பார்க்க கூட இல்லை, அப்படியே சாய்ந்து அமர்ந்து படுத்து விட்டார். தாய் உறங்கி விட்டார் என்று நினைத்த பூர்ணா, மீண்டும் அந்த பூ பந்தைத்தான் பார்த்தாள்.
பூர்ணா கணவன் கதிரவனுடன் வாழ மாட்டேன் என்று சொல்லி தாய் வீடு வந்து ஒரு வருடத்திற்கு பின்பு தான் நோய் வாய்ப்பட்டு கதிரவன் இறந்தது. என்ன தான் அத்து விட்டு ஒதுங்கி கொண்டாலும், கட்டிய கணவன் இறந்த பின் பூ வைப்பதில் உடன்பாடு இல்லாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பூ வைப்பது இல்லை. சாட்ட ரீதியாக பிரிந்த பின்பு தன்னை அலங்கரித்து கொள்வதில் அவள் ஈடுபாடு காட்டவில்லை. கல்யாணம் கட்ட வில்லை என்பது வேறு, கட்டிய கணவனை அத்து விட்டு தன்னை அலங்கரித்து கொண்டு கிராம புறங்களில் ஒரு பெண் வாழத்தான் முடியுமா என்ன?.
தாய் வீடு வந்த பின்பு ஒரு சாதாரண பூனம் சேலையும், கருப்பு பொட்டும், கழுத்தோடு அவள் காது குத்தில் தந்தை எடுத்து போட்ட ஒன்னராபவுன் தங்க சங்கிலியும், காதோடு ஒட்டிய விசிறி தோடும், பின்னி இறுக்கிய கொண்டையுமாக தான் இருப்பாள். சாதாரண அலங்காரம் கூட கிடையாது, அப்படி இருக்க இது என்ன பூ, வளையல், பொட்டு எல்லாம். உணவு பண்டங்களை பற்றிய சந்தேகம் இல்லை ஆனால் அதோடு வந்த மற்றவை மேல் அவளுக்கு சிறு சந்தேகம் தோன்றியது உண்மை தான். அதன் வழியே யோசித்தால் யோசனை தப்பான அர்த்தம் கொடுக்க, அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தன்னையே தேற்றி தானும் உறங்க ஆயத்தமானாள் பூர்ணா.
அமைதியாக படுத்தபடி மகளின் செயல்களை தான் அவதானித்து கொண்டிருந்தார் வள்ளி. எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தவள், ஏனோ அந்த பூ பந்தை மட்டும் தொட வில்லை. கதவை பூட்டி தாயிற்க்கு சற்று தள்ளி படுக்கையை போட்டவள், உறங்க கண் மூட இரவில் மல்லிகை மனம் வீடெங்கும் வீசியது. தள்ளி வைக்க நினைத்தாலும், மல்லிகை மணம் இழுக்க, மெதுவாக எழுந்தவள் நடுங்கும் கை கொண்டு மெதுவாக மல்லிகை பூவை தொட்டாள். கைம்பெண் கை கூட பூவில் விழ கூடாத என்ன!
பூவை தொட்ட நொடி கண்கள் நீரால் நிறைந்தது. பூவையும் விரும்பாத பெண் மனம் தான் உண்டோ! சிறு வயதிலேயே பூ என்றால் பூர்ணாக்கு அவ்வளவு பிடித்தம். அதுவும் வயது பெண்ணாக இருக்கும் போது துள்ளி திரியும் மான் குட்டி தான் பூர்ணா. தங்கள் பொருளாதார நிலை என்னவென தெரிந்ததாலே படிக்க வில்லை என்ற கவலையெல்லாம் அவளுக்கு இல்லை. பதினாலு வயதில் வேலைக்கு சென்ற சிறு பெண், பதினேழு வயதில் ஸ்திரம் பெற்று நிலை நின்றாள். கடந்த காலம் கண்ணாடி போல் கண் முன் விரிய, சிறு சிரிப்பு குடி கொண்டது அவள் முகத்தில்.
பருவ வயதில் எல்லா பெண்களை போல பூர்ணாவும் தன்னை அலங்கரிப்பதில் ஆர்வம் காட்டுவாள். தங்களின் நிலைக்கு தக்க, லக்ஸ் சோப்பும், சந்தன பவுடரும், சிவப்பு சாந்து பொட்டும், கலர் கலரான கண்ணாடி வளையல் என்று வீட்டிலிருந்த சிறு கண்ணாடியில் தன்னை பார்த்து அலங்கரித்து கொள்வாள். இந்த அலங்காரம் எல்லாம் மாலை ஆறு மணிக்கு மேல் தான், காலையில் காட்டு வேலையே பிரதானம் என்பதால் இதற்கெல்லாம் அவசியமில்லயே.
காலையில் அரக்க பரக்க எழுந்து உடம்பு முடியாத தாயை கவனித்து, அவசரமாக ஒரு காக்கா குளியல் போட்டு பின் என்ன இருக்கு என்று பார்த்து. நேற்று வைத்த பழைய சோற்றில், குழம்பில் மீந்து போன கத்தரி தக்காளியை அரித்து துணைக்கு வைத்து உண்டு கொள்பவள், மதிய உணவிற்கும் அது தான். உச்சி வெயிலுக்கு பழைய புளிச்ச தண்ணி சோறு இதமாக இருக்கும். ஒரு பழைய சேலையை ஏற்றி கட்டி கொண்டு வேலைக்கு ஓடுபவள், காலை ஐந்து மணியில் இருந்து மாலை மூன்று மணி வரை நிக்காமல் ஓடுவாள்.
அவளின் ஆஸ்தான பொழுது என்றால் மாலை ஆறு மணிக்கு மேல் தான். விறகு அடுப்பில் சுடு சோறும், கருவாட்டு குழம்பும் வைத்து ஒரு பிடி பிடித்து விட்டு. பின்பு நிதானமான குளியல் போட்டு, தலை பின்னி அவர்கள் வீட்டு மல்லிகை பூவை தலை நிறைக்க வைத்து தான் வெளியேறுவாள்.
வெள்ளி கிழமையில் இன்னும் ஸ்பெஷல், அன்று தான் ஊர் பொது மந்தையில் படம் ஓட்டுவார்கள். அன்று தொலைக்காட்சி என்பது அனைத்து வீட்டிலும் இருக்காது. விரைவிலே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு படம் பார்க்க சென்று விடுவாள். வேலு நடு வரிசையில் துண்டு போட்டு இடம் பிடித்திருக்க, ஜம்பமாக அமர்வாள். வெள்ளை கலர் தாவணி தான், அவள் ஆஸ்தான தாவணி. எந்த பாவாடை சட்டைக்கும் பொருந்தி போகுமே! தியேட்டரில் படம் பார்ப்பது போல் சிரித்து பேசி மகிழ்ந்ததெல்லாம் ஒரு காலம்.
அந்த பருவ வயதிற்கே உரிய மாமன், மச்சான்களை கேலி கிண்டல் எல்லாம் உண்டு. ஒரு வரையறைக்குட்பாட்டு தான். அந்த வரையறையில் கூட வேலு கிடையாது, மாமன் முறையில் இருந்தும் அவனோடு வெறும் நட்பு மட்டும் தான்.
எதிர்காலத்தை பற்றி பயம் இன்றி பல கனவுகளோடு தன் வாழ்வை எதிர் நோக்கி கொண்டிருந்த காலம் அது. நேர்மறை சிந்தனை மட்டும் தான் கனவுகளில். ஆனால், வாழ்க்கை அதன் எதிர்மறையும் காட்டி தானே செல்லும். நெருக்க தொடுத்து தலை நிறைய பூ வைப்பவள் தான் இன்று பூவை தொட தயங்கி நிற்கிறாள்.
மகளையே பார்த்து கொண்டிருந்த வள்ளிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவரே பல முறை சொல்லிருக்கிறார், “ முடி முதுக தாண்டல, இப்படி சரமா பூ வைக்காட்டி தான் என்ன?” என்று.
சலங்கை கொலுசு என்றால் பூர்ணாக்கு அவ்வளவு விருப்பம். வகையாக நகை எடுக்க முடியாமல் போனாலும், அவள் விருப்ப படி கொலுசு மாற்றி கொடுத்து விடுவார் வள்ளி. ஆசையாக போட்டு கொண்டு ஜல் ஜல் என்று தான் நடப்பாள். வேலு கூட, “ ஏட்டி சொம்பு! என்னாலே இது கோவில் மாடு மாதிரி?” என்று கேலி செய்தாலும் அவள் நடையில் மாற்றம் இருக்காது.
எப்படியெல்லாமோ வாழ்க்கை அமையும் என்று கனவோடு இருக்க, எல்லாம் அலங்கோலமாக மாறி தாயை போலவே கைம்பெண்ணாக நின்று விட்டாள். மகளின் ஏக்கம் சுமந்த முகத்தையும், கண்களில் நீரையும் கண்ட வள்ளிக்கு, எப்படியேனும் வேலுவோடு அவளை சேர்த்து விடுவது என்ற முடிவுக்கு ஸ்திரமாகி விட்டார்.
வேலுக்கு தான் பூர்ணாவுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயம் இருந்தது. ஆனால், அந்த பயமின்றி பெரியாத்தா கல்யாணத்திற்கு என்று சிறு சிறு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, பரணில் இருக்கும் பொருட்களை எல்லாம் பிரித்து அடுக்குவது, அடுப்படி பாத்திரங்களை புதுசு செய்வதை எல்லாம் பார்த்து வேலுவால் பல்லை கடிக்க மட்டும் தான் முடிந்தது.
அத்தோடு விடாமல் கலைவாணன், வாணி தம்பதியும் நாத்துனார் முறைக்கு தாலி செய்வதற்கு ஊருக்கு வந்து விட, வேலு தான் நொந்தே போனான். ஆளாளுக்கு நால பக்கமும் நெருக்குவது போல் இருந்தது. மாறனும் இதையே வலியுறுத்த மனம் விட்டு புலம்ப கூட ஆளில்லாமல் தவித்து விட்டான்.
அன்று காலை பூர்ணா தான் அடகு நகைக்கு பணம் கட்ட ரசீது தேடி கொண்டிருந்தவள், எங்கும் காணாமல் தாயின் இரும்பு பெட்டியில் கலைக்க, வந்து விழுந்தது பதினைந்து பவுணில் தாலி கொடி. அரண்டு போய் கைகள் நடுங்க எடுத்து பார்த்தவள் நெஞ்சில் இனம்புரியா உணர்வோடு மற்றவற்றை ஆராய. ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தவை அவளை திகைப்பில் தள்ளியது.
தாயிடமும் எதுவும் கேட்க தோன்ற வில்லை. ஏதோ புரியாமல் பேசுகிறார் என்று இருக்க பரிசம் போட்டு விட்டாரே. அவரிடம் கேட்டு இனி பயன் இல்லை, பரிசம் போட்ட மச்சான புடிச்சா எல்லாம் சரியாக போகும் என்ற யோசனையிலே கம்மாகரை நோக்கி சென்றாள். அன்று வேலை ஏதும் கிடைக்காமல் போக விறகு வெட்ட சென்றாள். போகும் வழியில் பவித்ராவை ஒரு எட்டு பார்த்து விட முடிவு செய்து வேலு வீட்டு வழியாக நடந்தவள், உள் வாயில் பூட்டி இருப்பதை கண்டு. பக்கத்து வீட்டு படிவுதாய் ஆத்தாவிடம் கேட்க.
பெரியாத்தாவின் நெருங்கிய நட்பு ஆதலால் நடப்பை மட்டும் சொல்லியது, “ ஏட்டி தெரியாததாட்டம் கேக்குறவ! உம் கூட்டாளி தான. வேலுக்கு தான் கல்யாண சீலை எடுக்க பூருக்காவ!” என்க.
குழம்பிய மனதுடன், அவரிடம் மேலும் துருவாமல் தன் போக்கில் நடந்தாள். கருவேல மரங்களை யோசனையோடே ஒவ்வொன்றாக சாய்த்தவள் நெஞ்சில் பளீரென்று மின்னல் வெட்ட. இதயம் தடதடவென ஓட இரு கை கொண்டு நெஞ்சை அழுத்தி பிடித்தவள். நெருஞ்சி முள் பாதையில் உணர்வின்றி அமர்ந்து விட்டாள் பூர்ணா. தம் உடம்பே கட்டுபாடின்றி விழுவது போல் உணர்வு. தன்னை நிலைப்படுத்தி கொண்டு ஒவ்வொன்றாக இணைத்து பார்க்க அனைத்தும் பொருந்தி போனது. ஆனால், கிடைத்த விடை தான் நெஞ்சை எரித்தது.
முதற்கட்ட அதிர்ச்சி குறைந்து, மறுகட்ட கோபம் வேலு மீது தான் திரும்பியது. கீழே கிடந்த அருவாளை தூக்கி கொண்டவள், வேக எட்டு வைத்து வேலுவை தாக்க ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஊரில் ஒரு விசேஷம் இருக்க, ஒருவரும் வேலைக்கு வரவில்லை. வேலு தான் மாறனை உடன் வைத்து கொண்டு கத்தரிக்கு உரம் வைத்து கொண்டிருக்க. அவன் நேர் எதிரே பூர்ணா ஆவேசமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். நிமிர்ந்து வேர்வை துடைத்தவன் பார்வையில் அருவாளுடன் பத்ரகாளியாக வரும் பூர்ணாவை கண்ட வேலு, திரும்பி மாறனை பார்த்தவன். மீண்டும் பூர்ணா பார்க்க, அவளும் அவனை தான் பார்த்து நடந்தாள். அவள் முக ஆக்ரோசம் விசயத்தை சொல்ல, நொடியும் தாமதிக்காமல் அருகில் இருந்த வேப்பை மரத்தில் ஒரே தாவாக தாவி எரிக்கொண்டான் வேலு.
குரங்கை போல் ஒரே தாவில் மரத்தில் ஏறி கொப்பில் அமர்ந்தவனை கண்டு அதிர்ந்த மாறன். வேலு என்று சத்தமாக அழைக்கும் முன், வேலு என்று மற்றொரு சத்தம் பின்பக்கம் கேட்டது. யாரது என்று திரும்பி பார்க்க, ஏற்றி இடுப்பில் சொருகிய சேலையும், கையில் அருவாலும், ஓடி வந்ததில் மேல் மூச்சு வாங்க நின்றவள கண்டு அரண்டு போன மாறன். “ ஏலே வேலு! மத்தியானம் சுடுகாட்டு காடு வேண்டாம்னு சொன்னேன்ல! பாருலே எதுவோ எந்திருச்சு வந்துருக்கு” என்க.
“அடச்சீ நிறுத்து சொங்கி பய! ஏலே வேலு! உமக்கு புது மாப்பிளை சோக்கு கேக்குதோ! எம்புட்டு தைரியம் இருந்த, எம் வீடு தேடி வந்து பரிசம் போடுவ! உன்ன போலி போடுறேன் வாலே!” என பூர்ணா கோபமாக கத்த
அவள் சேதியை கிடப்பில் போட்ட மாறன். “ அட நம்ம சொம்பு! ஏலே வேலு! இங்காருலே, நீயி பேயின்னு நினைச்சு பயந்தையாக்கும்! நம்ம சொம்பு! வா வா வேலு!” என மாறன் கூறிய நொடி,
“என்ன லந்தா! மணிமாற மண்டை பத்ரம்! எனக்கு பதினேழு வயசாக்கும் மாமன் மவன் கேலி பேசுறான்னு ரசிக்க! போலே கூறு கெட்ட பயலே!”
“ஏலே வேலு இறங்குலே! சொந்தத்த தாண்டி உன்னிய நினைக்க, என்னை கூறு போட்டு பார்க்க துணிஞ்சுடல!”
“ஏலே சம்மு! என்னாவே பேச்சு இது. என்னிய பத்தி உமக்கு தெரியாத? எம் கைல எதுவும் இல்லவே! எல்லாம் ஆத்தா பண்ண வேலை?” என மரத்திலிருந்தே பதில் சொன்னான் வேலு. உண்மைக்ககும் அவனுக்கு பூர்ணா மீது பயம் தான். அசால்ட் துணிச்சலோடு தான் எதிர்த்து நிற்பாள். கோபத்தில் வார்த்தையை விடுவது, கை நீட்டுவது எல்லாம் பழக்கம் தான்.
“இந்த ஒன்னும் தெரியாத பேச்சை எல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்கோ! எந்திருச்சு நிக்க வக்கில்லாதவனுக்கு எட்டு பொண்டாட்டி கேட்டுச்சாம்!” என பூர்ணாவின் எகத்தாளம் பேச்சில், கோபம் கொண்ட மாறன் ,
“ஏட்டி! என்ன வாயி நீளுது, உம் நல்லதுக்கு நாங்க யோசிச்சா! நீயி எங்களையே போட்டு பாக்குற! காலம் தான்” என மாறன் சொல்ல
அந்த வார்த்தை அவளை காய படுத்தியது, “ எனக்காக ஏன் பார்க்கணும். நீங்க யாரு எனக்கு பார்க்க, நான் என்ன சேலையை கிழிச்சுட்டு சுத்துரேனா! இல்ல நாலு வீடு தான் ஏறி இறங்குரேன! திடமா உழைச்சு எம் காசுல நான் வாழ்றேன். யாருக்கு பாரமா இருக்கேன்” என அமைதியாக சொன்னவள்.
மேல் நோக்கி வேலுவை பார்த்து, “ இங்காரு வேலு! உமக்கு துணை வேணும்னா சொல்லு நானே நல்ல பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன். அதை விட்டு ஆத்தா சொல்லுச்சு ஆட்டு குட்டி சொல்லுச்சுன்னு தட்டை ஏந்தி வந்த. நான் பேச மாட்டேன் எம் அருவாள் தான் பேசும். பார்த்துகிட்டு, திருநெல்வேலிகாரி லேசா எடை போடாத!” கொஞ்சம் கோபமாக சொல்லி முடித்தாள்.
அதில் வெகுண்ட மாறன், என்ன பெரிய திருநெல்வேலிகாரி? சவுடால் பேசுறவ? ஏலே வேலு! தூக்கிலே, முறைபொண்ண தூக்கிட்டு போய் தாலி கட்டுனா ஊருல நம்ம ஊரு! இந்தம்மா வாய்க்கு பயந்துட்டு மரம் ஏறி நிக்குறவன்!” என மாறன் சொல்ல,
அவனை முதுகோடு சேர்த்து வரப்பில் தள்ளி, “ தூக்குவலே தூக்குவ! நான் கைய கட்டி வேடிக்கை பார்த்த தூக்குவா! நான் நிக்குறேன். வாங்க ஒரு கை பார்க்கலாம்” அவள் அறைகூவல் விட,
அதிர்ந்த மாறன், “ஏலே வேலு! ஒரு பொம்பள வா பார்க்கலாம்னு நிக்குற, என்னி ய முதுகோட சாச்சுப்புட்ட, நீயி என்னான அனுமார் மாதிரி மரத்துமேலேரிகிட்டு இறங்கமாட்ரா! வந்து ஒரு கை பாருல!” என மாறன் காட்டு கத்தலாக கத்திய பின், ஒரு யோசனையோடே இறங்கிய வேலு. மெதுவாக பூர்ணா அருகில் சென்றவன், அவளின் காலுக்கு அடியில் முட்டி போட்டவன் தலை குனிந்து நின்றான்.
அதை பார்த்த மாறன், “ ஏலே வேலு! இதுக்கு தான் ஒய்யார கொப்பு ஏறுனைய! இப்படி மண்ணை கவ்வுறதுக்கு வீர வசனம் வேற? போட போக்கத்தவனே”
வேலு தலையை மட்டும் உயர்த்தி பூர்ணாவை பார்த்தவன், “உன்னிய எப்படியாச்சும் சீரும் சிறப்புமாக வாழ வச்சுப்புடனும்னு தவம் கிடக்குறேன்! நானே உன்னிய கட்டிகணும்னு நினைப்பேன! நியி வாழணும்லே ஊர் மெச்ச சந்தோசமா வாழணும்! அது தான் எனக்கு வேணும், வயசு புள்ளைல எப்படி இருப்ப சிரிச்ச முகமா, திரும்பவும் நான் பார்க்கணும் தலை நிறைய பூவும், சலங்கை கொலுசும் சிரிப்பு சத்தத்தையும். அதுக்கு நான் எனவும் செய்வேன், உமக்கு ஏன்லே கல்யாணம் வேண்டாம். ஒரு விளக்கமும் சொல்லாம வீம்புக்கு தாவு கெடக்குற! உன்னிய நினைச்சி அத்தை சாக கெடக்குற! கொஞ்சம் யோசிவே, இன்ன வரைக்கும் ஆத்தா சொன்னதுல நான் உடன்படல! இன்னமும் உம் வீம்புக்கு குடை பிடிச்ச” என்று ஒரு பெருமூச்சு விட்டவன் “ மாறன் சொன்னது தான் நடக்கும்” என அழுத்தமாக சொல்லி முடிக்க.
அவனை ஒரு பார்வை பார்த்த பூர்ணா அருவாளை தூக்கி வீசியவள் அங்கிருந்த வரப்பில் சோர்வாக அமர்ந்து, “ ஒருத்தனுக்கு முந்தி விரிச்சு சந்தி சிரிச்சது பத்தாத வேலு, உனக்கும் முந்தி விரிச்சு சீரழிய சொல்றியா” என்று கேட்க.
அவளை அதிர்ந்து பார்த்த இருவரும், “ஏட்டி என்னா பேச்சு இது? நம்ம வேலுவ பார்த்து” என மாறன் அதங்கமாக கேட்க. வேலு பேசவில்லை. ஆனால் என்னை நம்ப வில்லையா என்று ஒரு பார்வை பார்த்தான்.
“நெசத்த தான சொன்னேன் வேலு. கல்யாணம்ன எல்லாம் தானே, இதுக்கு மட்டும்தான்னு எதுவும் இருக்க என்ன?” வேலுவை பார்த்து சிறு சிரிப்போடு சொன்னவள்.
பெருமூச்சு விட்டு, “ நொந்து போன உடம்பு வேலு இது, ஒன்னும் தேராது! வேற நல்ல பொண்ணா பாருவே, நியி நல்லா இருப்ப!” என்க.
அவளின் பேச்சில் கொதித்து போன வேலு, “ என்னாலே என்னிய சீண்டி பாக்குறிய! நாவடக்கு சொல்லிட்டேன், கைய ஓங்க வேணாம்னு பாக்குறேன்! நீட்ட வச்சுராத. நான் என்ன அப்படி பட்ட ஆள” என கோபமாக வேலு கேட்க.
மாறனும் என்ன இந்த புள்ளை இப்படி பேசுது என்று எண்ணியவன். அவர்களே பேசி தீர்க்கட்டும் என்று மெல்ல நழுவி விட்டான்.
“உண்மை தான் வேலு. உம் கல்யாண பஞ்சாயத்து பத்தி இதுவரை ஒன்னு கேட்ருப்பன! ஊர் கதை சொல்லுச்சு தான். ஆனா, எனக்கு என்ன தெரியுமா தோணுச்சு! சரியான முட்டா பாயலுக அப்படி தான் தோணுச்சு”
“ ஏதே” என்று அதிர்ந்து வேலு பூர்ணாவை பார்க்க.
“அட! ஆமால, ஒன்னுமில்லாத சண்டைய ஊதி விட்டு பெருசாக்கி பிரிச்சு விட்டாங்கன்னு தான் எனக்கு தோணுச்சு! மூணாவது மனுசி எனக்கு தோனுணது. ஆனா, உனக்கு அப்படியா! உம் அம்மா கடைசி வரை நடக்க முடியல, உம் கையும் சொட்டையா போச்சு! யாரோ ஊர் பேர் தெரியா தவன் கையில உம் ஆத்தா, அக்கா, மாமா அடி வாங்குனாங்க! வலி உனக்கு அதிகம், அனா, அந்த வலி உமக்கு புரியுதா?” என இரு கைவிரித்து இல்லை என்றவள்.
“சின்னது தொட்டு பழக்கம் நமக்கு, உமக்கு வலிக்கும்ன்னு தெரிஞ்ச எமக்கு உம் இடத்தில இருந்து வலிய புரிஞ்சுக்க முடியல பார்த்தியா” என விரக்தியாக பேசியவள்.
“அதே தான் எல்லாருக்கும். எம்புட்டு உசுரா பழகுனாலும் நம்ம இடத்தில இருந்து நம்ம கஷ்ட நஷ்டத்தை புரியிற மக்க கொஞ்சம் தான். சிலருக்கு கேலி, சிலருக்கு கிண்டல், சிலர் பாவம் பார்ப்பாங்க. சிலர் வன்மாமாவும் பார்ப்பாங்க. நம்ம வலியை உணர்வா புரிஞ்சுகிறது யாரு? அப்ப எதுக்கு எல்லார்கிட்டயும் மனச திறக்கணும். எம் வலி என்னோட உமக்கு எதுக்கு, கல்யாணத்துக்கு கேட்ட எம் பதில் முடியாது. அத்தோடு அங்கையே நில்லு” என தெளிவாக பேசிய பூர்ணாவை பார்த்தவன்.
அவளிடம் சொல்லப்படாத காயம் நிறைய இருக்கு என்று கணித்து, “ என்னாவே ஆச்சு, மனசுக்குள்ளே வச்சு கறையாதலே! உடைச்சு பேசு, நான உம் வேதனைய உணர மாட்டேன். போடி கூறு கெட்டவளே, உம் மேல நான் வச்ச பாசமும், நம்ம இணக்கமும் கண்டு தான் எம் ஆத்தா அம்புட்டு பெரிய முடிவு எடுத்தாக. நீயி சொன்ன மாதிரி முந்தி விரிக்க இல்லை, கடைசி வரை ஒருத்தருக்கொருத்தர் துணை நிப்போம்னு தான். அந்த அன்பு நமக்குள்ள இருக்குன்னு நம்புறாக! நீயி என்னிய நம்பலையே” என்று ஆவேசமாக கேட்டவன்.
பின்பு, தணிந்த குரலில், “ “செத்த மனுசன பத்தியும் விசாரிச்சேன். வேலை பார்த்த பள்ளியிடத்தில ஒருத்தரும் தப்பு சொல்லல, பிள்ளை இல்லான்னு உம் நத்துனார்கள் கூட பஞ்சாயத்தாகி வாழ மாட்டேன்னு வந்துட்டதாக சொன்னாங்க. பிள்ளைகளா கூட கை நீட்டி அடுக்க மாட்டாராம்” என வேலு கூற.
கலகலவென சிரித்தவள் வேலுவை பார்த்து, “ ம்ம்ம்ம் அடிக்க மாட்டாங்க தான். ஆனா உயிர் போற அளவுக்கு கிள்ளி வைப்பாங்க” என்று பூர்ணா சொன்ன நொடி அதிர்ந்து போய் பார்த்த வேலு. அவள் சொன்ன செய்தியை கிரகித்து தன்னை நிலைப்படுத்தி கொண்டான்.
“ஏட்டி சம்மு! என்னாலே சொல்ற?”என நம்ப முடியாமல் வினவ,
“ஆமாலே வேலு! ராத்திரி அந்தாளு தேவை தீர்ந்த பின்னாடி, வெத்து உடம்புல அவன் இஷ்டத்துக்கு கிள்ளி வைப்பான். அலறி துடிப்பேன், ஆனாலும் கண்டுக்க மாட்டான். கை நீட்டி அடிச்சா தானே காயம், தழும்பு ஏற்படும். கண்ட இடத்தில கிள்ளி வச்சா வலி மட்டும் தான். என்னோட வலி தானே அவனுக்கும் தேவை, யாராவது நம்புவாங்கள. அடிச்சா மட்டும் தான் கொடுமையா! உலை கொதிக்கிற சுடு தண்ணில எம் தலையா புடிச்சு முகத்த காட்டுவான். தீயா எரியும், கொஞ்சமும் பாவபட மாட்டான்.” இன்னும் ஏதேதோ சொல்ல வந்தவள் சேலை முந்தனையை கொண்டு மூக்கை துடைத்து விட்டு,
“ நானும் மூணு அக்கா, தங்கச்சிய பெத்தவங்க இடத்தில இருந்து கட்டி குடுத்தவரு, நமக்கும் அப்பா இல்ல நம்மையும் நல்லா தான் பார்த்துகுவாருன்னு ஆசை பட்டு தான் வாக்கப் பட்டு போனேன். ஆன, விதி அதோட பாதையை காட்டிருச்சு”
“ தோற்றத்தை வச்சு மட்டுமல்ல வேலு, வெளியில காட்டுற குணத்தை வச்சும் யாரையும் எடை போட முடியாதுலே. வெளியே பந்தாவா பொண்டாட்டிய அடக்குறவன் கூட வீட்டுக்குள்ள அடங்கி போவான் . ஆனா, வெள்ளையும் சொல்லையுமா கருத்து பேசிகிட்டு நான் ரொம்ப நல்லவன்னு திரியுரான் பாரு, ஆவன மட்டும் நம்பகூடதுலே!”
அந்தாளும் பொறுப்பா மூணு பேர கரையேத்துனான் தான். ஆனா, நாலு சுவத்துக்குள்ள அலறி அடிச்சு நான் பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். ஊருக்கே நல்லது சொல்ற மனுசன் எம்புட்டு நல்லவன்னு எனக்கு மட்டும் தான தெரியும். குடிக்காம, தப்பு பண்ணாம, அடுத்த பொம்பளைய பார்க்காம, யார் குடியும் கெடுக்காமா இருக்கிறவன் தான் நல்லவன்னா அந்தாளு நல்லவன் தான் போல.”
இப்படி தன் போக்கில் சொல்லி கொண்டே வந்தவள் நிறுத்தி வேலு முகம் பார்க்க, அவன் முகம் அரண்டு போய் சிலயாக நின்றிருந்தான்.
லேசாக சிரித்தவள், “ என்னாலே! எப்பவும் ரோசம், சுய கௌரவம், தன்மானம் பெருசுன்னு பாக்குறவ புருசன் கிட்ட மட்டும் எல்லாத்தையும் உதிர்த்துட்டு வாழ்ந்திருக்கான்னு பாக்குறியா!” என கேட்க
வேலுவிடமிருந்து தலையாட்டல் மட்டுமே கிடைக்க, பெருமூச்சு விட்ட படி, “என்னத்தவே சொல்ல பொம்பள மனசு புருசனா சரிகட்டி வாழ தான் தோணுச்சு! ஒத்த பிள்ளை பொறந்தா எல்லாம் சரியா போகும்ன்னு நினைச்சேன். ஆனா, இன்னும் தப்பா தான் போச்சு! மலடின்னு பேர் வாங்கி வீடு வந்துட்டேன்” என்று வேதனையாக சொல்லி முடிக்க.
தன் சம்முக்கு இத்தனை கஷ்டமா என்று கவலையோடு அவள் அருகே வர, கை நீட்டி தள்ளி நிறுத்தியவள், “ வாய் வெந்து போற அளவு சூடு பட்ட பூனை இது வேலு, கறந்த பசும்பாலை கொண்டு வந்தாலும் நம்பாது. எனக்கு சின்னது தொட்டு கூட வளர்ந்த வேலுவ தான் தெரியும். ஆன, புருசனா வேலு எப்படின்னு எனக்கு தெரியாது. உன்னோட உண்மையான பிம்பம் நாலு சுவத்துகுள்ள உம் பொண்டாட்டிய நடத்துறதுல தான் இருக்க. அதை யோதிச்சு அறிய எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு நண்பனா இருக்குற வேலு மட்டுமே போதும். எம் பொழப்ப நான் பாக்குறேன். உம் பொழப்ப நியி பாரும்”. என்று நிதானமாகவே சொல்லியவள் தம் முடிவையும் சொல்லி வீடு நோக்கி நடையை போட்டாள். அவள் அம்மாவை ஒரு பிடி பிடிக்க.
மனம் வேதனை காண அதே வரப்பில் அமர்ந்த வேலு போகும் பூர்ணாவை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
அதே நேரம் பெரியாத்தாவும் ஐயனார் கோவில் ஆல மர மந்தையில் தான் அமர்ந்திருந்தார். மத்தியானம் ஒரு மணி திகில் பரவும் அமைதியோடு ஆல மர கொப்பு அசைவு மட்டும் இருக்க. அமைதியாக நிலம் நோக்கி பார்த்திருந்தார் மனதில் வேண்டுதலோடு. இவர்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம் உண்டு, ஏதேனும் காரியத்திற்கு ஐயனார் கோவில் ஆல மர அடியில் சகுனம் கேட்பது வழக்கம். வீட்டின் சுப நிகழ்ச்சி தொடங்கி வெள்ளாமை வரை சகுனம் கேட்பார்கள். அவர்கள் முன்னோர் காலம் தொட்டு வந்தது, இன்னும் விடாது தொடருவர்.
சூழ்நிலை காணமாக வேலுக்கு பூர்ணா பரிசம் போட்டாலும், ஐயனாரிடம் ஒரு வாக்கு கேளாமல் இருப்பது மனதை உறுத்த, வந்து விட்டார் கோவிலுக்கு. மத்திய ஒரு மணி மேல், சாயங்காலம் ஆறு மணி மேல் தான் சகுனம் கேட்பது. மனதில் வேலு, பூர்ணா குறித்த வேண்டுதலோடு பெரியாத்தா அமர்ந்திருக்க, மூன்று முறை சகுனம் கொடுத்து உத்தரவு தந்து விட்டார் ஐயனார். கண்களில் நீரோடு தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டவர், மன நிறைவோடு வீடு வந்தவர். அடுத்த நாள் அம்மன் கோவிலில் திருமணத்திற்கு பதிவு செய்து விட்டார்.