தாரணி வாரத்தில் பாதி நாட்கள் அம்மா வீட்டிற்கு வந்து விடுவாள். அப்படி வருபவள், ஞாயிற்றுக்கிழமை இரவுதான் கிளம்பி செல்வாள். வருண் வந்துதான் அழைத்துச் செல்வான்.
அப்படி வரும்போது சில நேரம் ஷாப்பிங், பீச், கோவில் என்று செல்லும்போது, கண்டிப்பாக வருண் கயலையும் அழைப்பான். எல்லா நேரமும் கயல் அவர்களோடு செல்ல மாட்டாள். அவர்கள் இருவரும் தனியாகச் செல்லவும் விரும்புவார்கள் அல்லவா… அதனால் சில நேரங்கள் மட்டும் செல்வாள்.
முன்பு குழலிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வு இருக்காது. இப்போதுதான் கயல் வந்தபிறகு, அவள் வீட்டை பார்த்துக் கொள்வதால்… அவர் தோழிகளோடு சேர்ந்து எதாவது கோவில், ஷாப்பிங் என்று செல்ல ஆரம்பித்தார்.
ஒருவார இறுதியில் அவர் தோழிகளோடு வெளியே சென்று இருந்தார். வருணும் தாரணியும் வீட்டில்தான் இருந்தார்கள். பரணியை விடுமுறை நாட்களில் வீட்டில் பார்க்கவே முடியாது. அன்றும் அவன் வீட்டில் இல்லை.
வருண் மீன் வாங்கிக் கொண்டு வர…. அதைக் கயல்விழி அவள் அம்மாவிடம் எப்படிச் செய்வது என்று கேட்டுக் குழம்பு வைத்துக் கொடுத்தாள்.
எப்போதும் கிடைக்கும் மீன் அல்ல.. ஆற்று மீன். எப்போதோ ஒருமுறைதான் கிடைக்கும். வருணுக்கு தெரிந்தவர்கள் யாரோ கொடுத்திருந்தார்கள்.
சமைத்து முடித்ததும், ஒரு சின்னத் தட்டில் கொஞ்சமாக எடுத்து சுவை பார்த்த வருண், “கயல், கையைக் கொடு.” என் அவள் கைபிடித்துக் குலுக்கியவன், “நிஜமாவே அசத்துற, கேட்டு செஞ்சதுக்கே, இப்படிச் சூப்பரா செஞ்சிருக்க. செம டேஸ்ட்.” என்றவன், குழம்பை வழித்துச் சப்புக்கொட்டி சாப்பிட்டான்.
“ஒரு டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் தனியா எடுத்து வை. நான் போய் எங்க அப்பா அம்மாவுக்குக் கொடுத்திட்டு வரேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்றான்.
கயல் அவன் சொன்னது போலப் பாத்திரத்தில் குழம்பு கொண்டு வந்து கொடுக்க, தாரணி “ஏன் அவங்க மீன் குழம்பு சாப்பிட்டதே இல்லையா? ரொம்ப அதிசயமா பண்ணாதீங்க.” என அவள்தான் ஆரம்பித்தாள்.
“இது எப்பவும் வாங்கிற மீன் இல்லை. ஆத்து மீன். அதுவும் கயல் சூப்பரா குழம்பு வச்சிருக்கு. அவங்களும் சாப்பிட்டு பார்க்கட்டுமே.”
“அவங்க சாப்டிட்டு ஆஹா ஓஹோன்னு உங்க தங்கச்சியைப் புகழனும், நீங்க அதைக் காது குளிர கேட்டு ரசிக்கணும். அதோட தாரணிக்கு சமைக்கவே வரலையேன்னு உங்க அம்மா மட்டம் தட்டனும். அது தான உங்க ஆசை?”
“நானா தேவை இல்லாம வம்பு இழுக்கிறேன். உங்க அம்மா அப்படிச் சொன்னதே இல்லையா?”
“கல்யாணம் ஆனா புதுசுல எல்லோருக்குமே சமைக்கத் தெரிஞ்சிருக்காது. மத்தவங்களைக் கேட்டு பார்த்துச் செய்றதுதான். இப்ப கயல் செய்யலை. ஆனா நீ கொஞ்சம் கூட முயற்சியே பண்ணமாட்ட.”
“எங்க அம்மாவுக்கும் வயசு ஆகலையா? அவங்களே எவ்வளவு வேலை தனியா செய்வாங்க? அதனாலதான் எதாவது சொல்லி இருப்பாங்க. அதுவும் எப்ப? முன்னாடி.”
“உங்க ரெண்டு பேர் அக்கப்போரு தாங்காமத்தான், நான் அவங்களுக்கு வேலைக்கு ஒரு பெண்ணைச் சேர்த்து விட்டேன். இப்ப அவங்க உன்னை எதுவுமே சொல்றது இல்லையே?”
“மத்த நாள்தான் காலேஜ் போறேன்னு ஒண்ணுமே செய்ய மாட்ட… லீவ் நாளும் உங்க அம்மா வீட்டுக்கு வந்திடுற.”
“நானும் சின்னப் பொண்ணு கொஞ்ச நாள் போனா சரியாகிடும்ன்னு அட்ஜஸ்ட் பண்ணித்தான் போறேன். ஆனா நீ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ, இன்னும் அப்படித்தான் இருக்க.”
“நாங்க எல்லாம் வாழறதுக்காகச் சாப்பிடுறவங்க. உங்களை மாதிரி சாப்பிடறதுக்காக வாழறது இல்லை. அதனால எனக்கு இவ்வளவு செய்யத் தெரிஞ்சா போதும்.”
வருண் நிதானமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தான். தாரணி இப்படிச் சொன்னதும் அவனுக்கு வந்ததே கோபம்.
ஏய் எனத் தாரணியை அடிக்கக் கையை ஓங்கியவன், அவளின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து கையை இறக்கினான்.
தன்னுடைய செய்கையை நினைத்து அவனே வெட்கினான். “சாரி.” என்றவன், தன் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
வருணும் தாரணியும் எப்போதும் இப்படி வாக்குவாதம் செய்வதுதான். ஆனால் இன்று கொஞ்சம் அதிகமாகவே போய்விட்டது. கயலே இந்த அளவுக்கு வரும் என்று நினைக்கவில்லை.
குழலி இருந்தால் அவர் எதாவது பேசி சண்டை வராமல் தடுத்திருப்பார். அவரும் வீட்டில் இல்லை. இப்போது என்ன செய்வது எனக் கயல்விழிக்கு ஒன்றுமே புரியவில்லை.
மதியம் உணவு நேரம் ஆகியும் வருண் வீட்டிற்கு வரவில்லை. அப்போது அறைக்குள் சென்ற தாரணியும் வெளியே வரவில்லை.
காலை ஒன்பது மணிக்கே வருண் மீன் வாங்கி வந்து கொடுத்து இருந்தான். மீன் குழம்பு சமைத்து சிறிது நேரமாவது இருக்க வேண்டும் என்று அப்போதே செய்து விட்டாள். சோறு மட்டும் இப்போதுதான் வடித்தாள்.
ஆசையாக வாங்கி வந்து கொடுத்தவன், சாப்பிட வரவில்லையே எனக் கயல்விழிக்குக் கவலையாக இருந்தது. வாசலை வாசலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அந்நேரம் குழலி போன் செய்தார். “என்ன சமைச்ச கயல்?”
“அண்ணன் ஆத்து மீன் வாங்கிட்டு வந்து கொடுத்தார் அத்தை. மீன் குழம்பு வச்சேன்.”
“சரி சாப்டீங்களா?” என்றதும், கயல் முதலில் தயங்கியவள்,
“அண்ணனுக்கும் அண்ணிக்கும் சண்டை. அண்ணன் வெளிய போனவர், இன்னும் வீட்டுக்கு வரலை. அவங்க வீட்டுக்குக் குழம்பு கொண்டு போறேன்னு சொன்னார். அதுவும் எடுத்திட்டு போகலை.”
“ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை. நானும் வர ராத்திரி ஆகிடும், பரணியும் மீன் சாப்பிட மாட்டான். எல்லாம் வீனாகிடுமே.”
“சரி போயிட்டு வா… நான் வந்து தாரணிகிட்ட பேசிக்கிறேன். நீ எதுவும் பேசாத.”
“சரிங்க அத்தை.” எனப் போன்னை வைத்தவள், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த குழம்பை தங்களுக்கு வைத்துக் கொண்டு, மற்றதை எல்லாம் வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு வருண் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.
செல்வதற்கு முன் தாரணியின் அறைக்கதவை அவள் மெதுவாகத் திறந்து பார்க்க… வருண்தான் வந்து விட்டானோ என ஆர்வமாகத் திரும்பிய தாரணிக்கு, கயலை பார்த்ததும் எரிச்சல் வந்தது.
“கதவை தட்டிட்டு வரணும்ன்னு தெரியாதா?” என எரிந்து விழுந்தாள்.
இப்ப இதுக்குத்தானே சண்டை வந்தது. சரியான பட்டிக்காடு எதுவுமே புரியாது. எங்க இருந்துதான் அண்ணன் இதைப் போய்ப் பிடிச்சிட்டு வந்தாரோ என மனதிற்குள் தாரணி கயல்விழியைத் திட்டிக்கொண்டு இருந்தாள்.
தெருமுனையில் இருந்து ஆட்டோவில் ஏறி கயல்விழி வருண் வீட்டிற்குச் சென்றபோது, அவன் வண்டி அங்கேதான் இருந்தது.
நல்லவேளை அண்ணனும் இங்கத்தான் இருக்காங்க என நினைத்தவள். வீட்டின் உள்ளே சென்றாள். அவளைப் பார்த்ததும் ஹாலில் இருந்த வருணின் தந்தை எழுந்து வந்து வரவேற்றார்.
“வா மா….” என்றவர், உள்ளே திரும்பி தன் மனைவியை அழைத்தார்.
“வா கயல்.” என்றபடி வந்த சுமித்ரா, அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
அவர்கள் வீட்டில் இப்போதுதான் சமையல் நடந்து கொண்டு இருந்தது. கயல்விழி தான் கொண்டு வந்த குழம்பை எடுத்து வெளியே வைத்தாள்.
“என்ன கயல் இது?”
“இன்னைக்கு வீட்ல ஆத்து மீன் குழம்பு வச்சோம். அதுதான் உங்களுக்கும் கொண்டு வந்தேன்.”
“அண்ணனுக்கு மட்டும் இல்லை, உங்களுக்கும் சேர்த்துதான் கொண்டு வந்தேன்.”
“ஆமாம் என்ன ஆச்சு? சண்டையா? முகத்தைத் தூக்கி வச்சிட்டு வந்தான். யார்கிட்டயும் பேசலை, நேரா அவன் ரூமுக்கு போயிட்டான்.”
“தெரியலை பெரியம்மா?” என்றுவிட்டாள் கயல்விழி. அவள் எதாவது சொல்லி, எதற்கு வம்பு என்று நினைத்தாள்.
“நான் சிக்கன் பண்ணேன். வா நீயும் எங்களோட சாப்பிடு.” என்றவர், சத்தமாக வருணை அழைத்தார்.
தன் அம்மா அழைத்ததும் எழுந்து வந்த வருண் அப்போதுதான் கயல்விழியைப் பார்த்தான்.
“வா கயல்.”
“அத்தை உங்களுக்கு ஆத்து மீன் பிடிக்கும்ன்னு கொடுத்திட்டு வர சொன்னாங்க அண்ணா.” என அவனைக் காட்டிக் கொடுக்காமல் கயல்விழி பேச… வருணும் அதையே தொடர்ந்தான்.
“சரி வா சாப்பிடலாம்.” என வருண் அழைக்க… கயல்விழியும் மறுக்கவில்லை.
தாரணி அவளோடு உட்கார்ந்து எல்லாம் சாப்பிட மாட்டாள். அவள் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டேதான் சாப்பிடுவாள்.
கயல்விழி மட்டும்தான் சுமித்ரா சமைத்ததைச் சாப்பிட்டாள். மற்ற மூவரும் கயல் கொண்டு வந்த மீன் குழம்பை ஊற்றித்தான் சாப்பிட்டார்கள்.
“யாரு வச்சது மீன் குழம்பு?”
“வேற யாரு கயல்தான்.” சுமித்ராவின் கேள்விக்கு, வருண் பதில் சொன்னான்.
“ரொம்ப நல்லா இருக்கு. உனக்கு நல்ல கைப்பக்குவம். இப்படிச் சமைக்கிற பொண்டாட்டியை இங்க விட்டுட்டு நந்தா எப்படி அங்க தனியா இருக்கான்?”
“அவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.” வருண் சொல்ல…
தனக்குத்தான் அவனோடு இருக்கும் கொடுப்பினை இல்லை எனக் கயல்விழி நினைத்தாள்.
“உன் ப்ரண்ட் தான, நீ சொல்லேன் டா. ஒன்னு கயலை அங்க கூடிட்டுப் போகச் சொல்லு. இல்லைனா அவனை இங்க வர சொல்லு. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆளுக்கு ஒருபக்கம் இருக்கிறது நல்லாவே இல்லை.”
“அவனுக்குத் தெரியாதா மா… அவன் பார்த்துப்பான் விடுங்க.”
கயல் சாப்பிட்டதும், அவள் வீட்டிற்குக் கிளம்ப, அவளை விட்டுவிட்டு வருவதற்காக வருணும் கிளம்பினான்.
“வாசலிலேயே விட்டுட்டு வந்திடாத. சாயங்காலமா உன் பொண்டாட்டியை கூடிட்டு வா.” எனச் சொல்லித்தான் சுமித்ரா அனுப்பி வைத்தார்.
வருணுக்கும் மனைவியைச் சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இவர்கள் சென்றபோது, தாரணி ஹாலில்தான் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்தே கோபமாக இருக்கிறாள் எனப் புரிந்து கொண்ட கயல்விழி, கணவன் மனைவிக்குள் சமாதானம் செய்து கொள்ளட்டும் என மாடியில் அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.
நந்தா சில நேரம் மதியம் கூடப் போன் செய்வான். ஆனால் இன்று செய்யவில்லை. ஒரு வேலை போன் வேலை செய்யவில்லையோ என நினைத்து, கயல் எடுத்து வேலை செய்கிறதா எனப் பார்த்து விட்டு வைத்தாள்.
அவளுக்குக் கல்லூரி இருக்கும் நாட்களில் கூடப் பொழுது சென்றுவிடும். இந்தச் சனி ஞாயிறுகளில் தான் பொழுதே போகாது. அடுத்த வாரம் கல்லூரிக்கு அணிந்து செல்ல வேண்டிய உடைகளுக்கு இஸ்த்திரி போட ஆரம்பித்தாள்.
குழலி தனது உடைகளை வெளியே கொடுத்துதான் வாங்குவார். அவர் பெரும்பாலும் காட்டன் புடவைகளே அணிவதால்… கடையில் இஸ்திரி செய்தால்தான் சுருக்கம் இல்லாமல் நன்றாக இருக்கும்.
தாரணி சிறிது நேரம் வரை வருணை கண்டுகொள்ளவே இல்லை. பிறகு அவனாகத்தான் பேச்சை ஆரம்பித்தான்.
“சாப்பிட்டியா தாரணி?”
“உங்களுக்கு என்ன அதைப் பத்தி கவலை? ஆனா நீங்க சாப்பிட்டீங்க இல்லையா? உங்க தங்கச்சி தான் கொண்டு வந்தாங்களே.”
“திரும்ப ஆரம்பிக்காத. நீ முதல்ல சாப்பிடு. நீ நல்லா பசியில இருக்க. அதுதான் உனக்குக் கோபம் வருது.”
அது என்னவோ உண்மைதான். ஆனால் அவன் சொன்னதும் சாப்பிட சென்றால், கெளரவம் என்ன ஆவது. அதனால் வீம்புக்கு உட்கார்ந்து இருந்தாள்.
“சாரி நான் உன்னை அடிக்கக் கை ஓங்கினது தப்புதான். நான் வேணா சாதம் போட்டுட்டு வரட்டுமா?”
வருண் இவ்வளவு சொன்னபிறகுதான் சாப்பிட எழுந்து சென்றாள்.
இவ்வளவு பேசிவிட்டு கயல் சமைத்த மீன் குழம்பை எப்படிச் சாப்பிடுவது. அதனால் தயிர் ஊற்றி, ஊறுகாய் வைத்துக் கொண்டு வந்து வருணிடம் கொடுத்தாள்.
வருண் எதுவும் சொல்லவில்லை. தட்டை வாங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான்.
மாலை கயல் கீழே வந்தவள், டீ போடலாம் எனச் சமையல் அறைக்குச் செல்ல… அதை யூகித்த தாரணி. “நீங்க உங்களுக்கு மட்டும் டீ போட்டுக்கோங்க. நான் எனக்கும் அவருக்கும் போட்டுகிறேன்.” என்றாள்.
அவள் டீ போடுவதென்றால்… எல்லோருக்கும் சேர்த்து போடுவது தானே… கயல் என்ன அவள் போடும் டீயை குடிக்க மாட்டேன் என்றா சொன்னாள்.
ஏன் தன்னை அவள் விரோதியாகவே பார்க்கிறாள் எனக் கயலுக்குப் புரியவில்லை.
ஒரு தடவை ஷாப்பிங் சென்ற குழலி இருவருக்குமே காட்டன் சுடிதார் வாங்கிவிட்டு, கயலுக்கு மட்டும் காட்டன் புடவையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.
அப்போதும் தாரணி அவரிடம் சண்டைக்குச் சென்றாள். எப்படி அவளுக்கு மட்டும் புடவை வாங்கலாம் என்று.
“நீ புடவை கட்ட மாட்ட… அவ காலேஜ்க்கு கட்டிட்டு போறா அதனால வாங்கினேன்.” எனக் குழலி சமாதானம் செய்தும் கூட முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே தான் இருந்தாள்.
“நீங்க வேணா அந்தப் புடவையை எடுத்துக்கோங்க அண்ணி.” எனக் கயல் சொன்னதற்கும், “நான் எங்க அம்மாவைதான் கேட்டேன். உங்ககிட்ட கேட்கலை.” என்று முகத்தில் அடித்தது போல் பதில் வந்தது.
“வீட்ல வேற பொண்ணுங்க இல்லையா, அதுவும் அவங்க அப்பாவை நினைச்சு ரொம்ப அழுவா, அதனால எல்லோரும் அவளுக்குப் பார்த்து பார்த்துச் செய்ய…. இப்ப நீ வந்ததும், அவ இடம் போயிடுமோன்னு பயம். வேற ஒன்னும் இல்லை. நீ தப்பா எடுத்துக்காத.”
“அதுவும் நான் உனக்குப் பேசினா… உன்கிட்டதான் அவ கோபம் திரும்பும். கொஞ்ச நாள் போனா சரியாகிடும்.” எனத் தாரணி இல்லாத போது குழலி கயலிடம் சொல்லி இருக்கிறார்.
தாரணி சில நேரங்களில் நன்றாகவும் நடந்து கொள்வாள். அதோடு இதற்கு முன்பு பட்ட துன்பத்திற்கு முன் இது ஒன்றுமே இல்லை எனக் கயல் நினைப்பதால்… அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.
தாரணிக்கு என்ன தைரியம் என்றால்… கயல் எதையும் தன் அண்ணனிடம் சொல்வதில்லை. நந்தாவுக்குத் தெரிந்திருந்தால் இந்நேரம் நடக்கும் கதையே வேறு… அந்தத் திமிரில் தான் ஆடிக்கொண்டு இருந்தாள்.