மீனாட்சியம்மன் கோவில்… பொற்றாமரைக்குளம் அருகிலுள்ள மண்டபம்…
நம்ம கதாநாயகி எப்படி இருந்தாங்க தெரியுமா !!!!
பட்டுப்புடவையெல்லாம் அவளுக்கு விருப்பமில்லை….
சாதாரண காட்டன்…
சிம்பிளாக ஒரு லாங்செயின்…
ஒப்பனையில் ஆர்வமதிகம் இல்லையென்பதால் சின்ன திலகபொட்டு அதன் மேல் ஒரு சிறு சந்தன கீற்று…
அப்புறம் சின்ன ஜிமிக்கி…
அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் மல்லிப்பூ…
அதோடு முகத்தில் ஆர்வம், வெட்கம், பதட்டம் என எல்லாம் சேர்ந்த கலவையாக பட்டாம்பூச்சி போல் கண்கள் படபடக்க நடந்து வந்தாள்.
அப்பா, அம்மா, அவள் மூவரும் நடந்து கோவில் மண்டபத்திற்குள் நுழையும்போது ஒரு தம்பதியர் வந்து கைகுலுக்கி பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டனர்.
அவங்க ஆதர்ஷ் அப்பாவும் அம்மாவும்….
அங்கே நிழலான ஒரு இடத்தில் அமர்ந்தார்கள்.
“வணக்கம் சார்… நான் பொன்மாறன். இது என் மனைவி வித்யா… நாங்க ரெண்டுபேரும் அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர்களா இருக்கோம்… நான் பிஸிக்ஸ்… இவங்க ஹிஸ்டரி டிப்பார்ட்மெண்ட்…எங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்… பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்தாச்சு…. கணவர், குழந்தையோட டெல்லியில இருக்காங்க….” பேசி முடித்தார் அவர்.
அனன்யா அப்பா பாண்டியன், தன்னையும் குடும்பத்தையும் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது கைபேசியில் ஏதோ பார்த்துக்கொண்டே அவன் வந்து தன் பெற்றோருடன் சேர்ந்துகொண்டான்.
சற்றும் தயக்கமில்லாமல் “வணக்கம் அங்கிள்… வணக்கம் ஆண்ட்டி… நான் ஆதர்ஷ்… தியாகராஜா காலேஜில் அசிஸ்டண்ட் ப்ரொபஸரா இருக்கேன்… “ என்று சொல்லிவிட்டு அனன்யா பக்கம் திரும்பியவன் வியப்புக்கான அறிகுறியாய் புருவங்கள் தூக்கி சற்று நின்றான்.
பின் பெரியவர்கள் இருப்பதை உணர்ந்து தலைமுடியை கலைத்துவிட்டு சிரித்து எப்படியோ சுதாரித்துக்கொண்டான்.
யாரும் பார்க்காமல் இவளும் அவனைப்பார்த்தாள். அவன் அதைப்பார்த்து புன்னகைத்தான்.
அச்சச்சோ… பாத்துட்டானே…சிரிப்பு அழகா இருக்குல்ல என்று நினைத்துக்கொண்டாள்….
ஒருவேளை நம்ம வம்பெல்லாம் சொல்லி மாட்டிவிட்டுடுவானோ… என்ற எண்ணம் உள்ளுக்குள் ஒலிக்க, இவளும் அவனைப்பார்த்து புன்னகைக்க முயன்று ஏதோ பேருக்கு சிரித்துவைத்தாள்.
அவன் அவளையே வியப்பாக பார்த்துக்கொண்டு எங்கும் திரும்பவில்லை… இது தெரிந்து அனன்யா அவனை நேராக பார்க்காமல் வேறு பக்கமே பார்வையை வைத்திருந்தாள்.
என்னடா இவன் என்று அவள் நினைத்தாலும் “ஒரு வெட்கம் வருதே வருதேன்னு…” பாட்டு ஒரு பக்கம் ஓட ஆரமிச்சுது.
சிறிதுநேர பேச்சுக்குப்பின்… பையனோட அம்மா சொன்னார், “கல்யாணம் பண்ணிக்க போறது அவங்கதான்… தனியாக பேசறதுன்னா பேசலாமே ”என்றார்.
“ம்ம்ம்ம் பேசலாமே ”என்று உடனே எழுந்தான் ஆதர்ஷ்…
அவளுக்கோ… உள்ளே ஓடிக்கொண்டிருந்த பாட்டு நின்றுபோனது சட்டென்று.
“டேய் இருடா… என்னம்மா அனன்யா பேசலாம்ல… பயப்படாம பேசு சரியா…!!!”என்றார் வித்யா.
“சரிங்க ஆண்ட்டி… ” என்று சொல்லிவிட்டு பெற்றோரைப்பார்த்தாள்…. போ என்பதுபோல் சைகைசெய்ய அவளும் எழுந்தாள்.
ஆதர்ஷ் வேகமாக நடக்க இவளால் சேலையுடன் ஓட முடியவில்லை….
இங்க என்ன ரன்னிங் ரேசா வைக்குறாங்க… இப்படி ஓட்றான் அவன் மண்டையில் ஒரு கொட்டு வைக்கணும்ன்னு மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.
குளத்தின் படிக்கருகில் சென்று அவன் திரும்பியபோது அவள் அப்போதுதான் பாதி தூரம் வந்திருந்தாள்.
“மெதுவாவே வாங்க… ஒன்னும் அவசரமில்ல” கொஞ்சம் கிண்டலாக சிரித்துக்கொண்டே சொன்னான்.
“அவனப்பாக்க ஏண்டி இவ்ளோ தயங்குற… ” மனசாட்சி கேள்விகேட்டதால், ஒருமுறை மட்டும் நிமிர்ந்துபார்த்து சரியென்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கு சென்றாள்.
அது வெட்கமா என்பது தெரியவில்லை அவளுக்கு… ஆனால் அவன் முகத்தைப் பார்க்காமல் போய் படிக்கட்டில் அருகில் அவளும் நின்றாள்….
இரண்டு அம்மாக்களும் சொந்த பந்தம், ஊர் நடப்பு என்று பேச… அப்பாக்கள் இருவரும் அரசியல் பேசத்தொடங்கினர்….
அது இவர்களுக்கும் கேட்டது… “ நாமளும் ஏதும் பேசலாமா !!! நான் உன்ன… சாரி உங்கள இங்க எதிர்பாக்கவே இல்ல… என்ன ஞாபகம் இருக்கா !!! ” என்று மௌனத்தைக் கலைத்தான்.
அனன்யா : மம்ம்ம்ம்…. ( மனசாட்சி – நம்மள ஞாபகம் வச்சிருக்கான்… ஆனா இப்போ போட்டோ பாக்கலையோ !!!!)
ஆதர்ஷ். : முன்ன பாத்தப்போ எல்லாம் அவ்ளோ பேசுனீங்க… இப்போ என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க…!!! வெறும் ம்ம்ம்ம் மட்டும் தானா…
அனன்யா : எனக்கு என்ன பேசுறதுன்னு தெரில…(உண்மைதான்… கூச்சம்.. தயக்கம்…பயம் எல்லாம் சேர்ந்த நிலை)
ஆதர்ஷ். : சரி நானே பேசறேன்… என் பேரு ஆதர்ஷ். எனக்கு பச்சை நிறம், கடல் பயணம், அடை மழை, பாட்டு கேக்றது, பாடறது, புகைப்படம் எடுக்கறது எல்லாம் ரொம்ப பிடிக்கும்…
இப்படி அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கைபேசி சிணுங்கியது….
ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தூரம் நகர்ந்து போய் பேசலானான்.
“ பயபுள்ள யாரையும் விரும்புது போல… ம்ம்ம்ம்…. நமக்கு செட்டாகாது… அவனுக்கு குடுத்து வைக்கல டீ… ” வெளியில் பேசாவிட்டாலும் உள்மனம் பலவற்றை சொல்லியவண்ணம் இருந்தது….
ஆனால் அப்படி ஏதும் நடக்கக்கூடாது… இது திருமணம் வரை போகவேண்டுமென்று உள்ளே அடித்துக்கொண்டது.
அங்கு ஆதர்ஷ் அவன் நண்பன் மித்ரனிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்…
“மச்சா… என்னடா உன் லவ் மேட்டர் பத்தி சொல்லிட்டியா…” எதிர்முனையில் இருந்தவன் கேட்டான்.
“இல்லடா… எப்படி ஆரமிக்கிறதுன்னு தெரில…” என்றான் ஆதர்ஷ்.
“இப்படி தயங்கிட்டே இருக்காத… வாழ்க்கை கைய விட்டு போயிடும்..… அப்புறம் நேரா கல்யாணத்துக்கு தேதி தான்.…” இது மித்ரன்.
“சரி டா… நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்” சொல்லிவிட்டு ஆதர்ஷ் அழைப்பை துண்டித்தான்.
“ஹேய் அனன்யா தாமதம் ஆயிடுச்சா… என் நண்பன் தான் பேசினான்” என்று சொல்லிக்கொண்டே முன்பு நின்ற இடத்தில் வந்து அமர்ந்துகொண்டான்.
“ம்ம்ம்…ம்ம்ம்… நம்பிட்டேன் போ…”இதுவும் மனசாட்சி தான்… ஆனால் “ஓஓ… சரிங்க…“என்று லைலா மாதிரி கண்களை இடுக்கிக்கொண்டு சிரித்தாள் அவன் அடுத்து சொல்லப்போவதைப்பற்றி அறியாமல்…….
◆◆◆
அவள் அப்படி சிரித்ததைப் பார்த்ததும் அவனும் சிரித்துவிட்டான்…
“சிரிக்காதப்பா… ரொம்ப நல்லா இருக்க…” நினைத்துக்கொண்டே அவள் புன்னகைத்தாள்.
சார் எப்படி இருந்தார்ன்னு சொல்லவேயில்லையே உங்களுக்கு….
ஜீன் மற்றும் டீ ஷர்ட்…
க்ளீன் ஷேவ்…
கோவிலில் சாமிகும்பிட்டதற்கு அடையாளமாய் கொஞ்சம் விபூதி…
அப்புறம் முகம் முழுக்க சிரிப்பு…
கூடவே ஒரு இனம்காணமுடியா உணர்ச்சி…
ஆதர்ஷ் – ம்ம்ம்… பேச்சு பாதிலேயே விட்டுட்டேனே… என்ன உனக்கு ஞாபகம் இருக்கா அனு… உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்..?
அனன்யா – (அனுவா… இது நம்ம கணக்குலயே இல்லையே…) ம்ம்ம்…இருக்கு… நீங்க கல்லூரி கலைவிழாவுக்கு வந்தீங்கள்ல… மன்னிக்கணும்.… எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாய்டிச்சு அப்போ… நாங்க நடத்துன விழா… வேலை நிறைய… அதனால தான்…
ஆதர்ஷ் – என்ன அதோட விட்டுடீங்க… கல்லால அடிச்சது மறந்துபோச்சா… (சிரித்தான்)
அனன்யா கொஞ்சம் அசடு வழிந்தாள்…. “அது… அது வந்து… அதும் தெரியாம நடந்தது தான்… இன்னொரு மன்னிப்பு கேட்டு அறிக்கை விடணுமா…??” என குரும்புப் பார்வையுடன் கேட்டாள்.
ஆதர்ஷ் “அய்யோ… அவ்ளோலாம் வேணாம்… அப்புறம் உங்களுக்கு நான் தான் பொண்ணு பாக்க வரபோறேன்னு தெரியுமா!!!” என்று ஆச்சரியமாய் கேட்டான்.
அனன்யா “தெரியும்… அம்மா முகநூலில் பாக்க சொன்னாங்க… பாத்துட்டுதான் வந்தேன்… ஆனா நீங்க என்ன மறந்திருப்பீங்கன்னு நெனச்சேன்… சந்தர்பவசத்துல தான நாம சந்திச்சோம்… அதான்..” என்று சொன்னாள்.
ஆதர்ஷ் மௌனமானான்…
அனன்யா – சரி நேரா விஷயத்துக்கே வரேன்… நீங்க யாரையோ விரும்புறீங்க தானே… கல்யாணம் வேணாம்னு நீங்க சொல்றீங்களா ?? நான் சொல்லட்டா ???
ஆதர்ஷ் – ஹேய்… நானே இதைத்தான் பேசனும்னு நெனச்சேன்… எப்படி சரியா கண்டுபிடிச்ச…
அனன்யா –(அச்சச்சோ… அப்போ உண்மைதான் போல என்று நினைத்து வாட்டமாய்) அப்படியா !!!
ஆதர்ஷ் – ஆமா…..
சிறு மௌனம் அங்கே நிலவியது…
விழியில் நீர்த்திரையிட்டது அனன்யாவுக்கு….
வானத்தை வெரித்துக்கொண்டிருந்த ஆதர்ஷ் தொடர்ந்தான்…
“ஐ லவ்யூ அனன்யா…உன்ன தான் நான் லவ் பன்றேன்… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா…!!!!!” வாக்கியத்தை முடிக்கும்நேரம் அவள்புறம் திரும்பி புன்னகை புரிந்தான்.
அனன்யா முகத்தில் ஈயாடவில்லை…. அப்டியே மரம்…கடல்.. அலை… எல்லாமே அசையாம நின்னுடுச்சு….
ஆதர்ஷ் – உன்னை தான் கேக்கறேன்….!!!நாலு வருஷமா தேடினேன்…திருச்சி முழுக்க…
அனன்யா – என்ன சொல்றீங்க… (இன்னும் ஆச்சர்யம் கூடியது அவள் வார்த்தையின் வீச்சில் புலப்பட்டது)
ஆதர்ஷ் தொடர்ந்தான்…
“உனக்காக அடுத்த மூனு வருஷம் உங்க கல்லூரி விழாவுக்கு வந்தேன்…எப்படியாச்சும் பாப்போமா… ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு…. ஒண்ணுமே நடக்கல…இனி தேடி பயன் இல்லைன்னு முடிவுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொன்னேன்….ஆனா… இங்க உன்ன எதிர்பாக்கல…”
“நானும் கதையில இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாக்கலை…” என்றாள் அனன்யா அவன் பேச்சை இடைநிறுத்தி.…
“இப்போகூட என் நண்பன் அதுக்குதான் பேசினான்… ஆனா அவனுக்கு நீதான் பொண்ணுன்னு தெரியாது..” என்றான் சிரித்தபடி கைகளை காற்றில் வீசி எதையோ பிடித்துவிட்டதுபோல்….
“கடற்கரையில் பாத்தப்போவே சொல்லியிருக்கலாமே…”
“என்னையே மறந்து நீ அலையில் ஆடினதை பாத்துட்ருந்தேன்… என்னால் நம்ப முடியலை நீதான்னு….
கல் விழுந்ததும் ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னே தெரில… என் கவனமும் மாறிடுச்சு…
அவங்ககிட்ட அப்போதான் நான் உன்னைப்பத்தி சொன்னேன்…
சமாதானம் செஞ்சதுலயே நேரம் போயிடுச்சு…
அப்போ உன்ன தவறவிட்டது தான் என் வாழ்க்கையில செஞ்ச பெரிய தப்புன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்….” என்று நிறுத்தினான்.
இப்படி அவன் சொல்லச்சொல்ல அவள் முகம் வெவ்வேறு மனநிலைகளைப் பிரதிபலித்தது…
அவள் முகத்தைப்பார்த்து “மன்னிச்சுக்க அனு… உன் மனசுல என்ன இருக்குன்னே தெரியாம நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்” என்றான்.
தன்னை இப்படி ஒருவன் விரும்புவான் என்று அவள் நினைத்ததே இல்லை… எப்போதுமே காமெடிபீஸ் ஆக மட்டுமே வகுப்பில் இருப்பாள்… வீடு, புத்தகம் தவிர வேறெதுவும் தெரியாது….
இந்த வார்த்தைகள் அவளை வேறொரு உலகிற்கே தூக்கிச்சென்றன…
“எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு டா… லூசுப் பையா….” என்று ஓடிப்போய் கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. ச்சே… இது என்ன சினிமாத்தனமா இருக்கு என்று தனக்குத்தானே சொல்லி புன்னகைத்துக்கொண்டாள்.
சில்லென்ற தென்றல் கொஞ்சம் அவள் கூந்தலை கலைத்துவிட்டுப்போனது…
அவன் காற்றில் அலைபாயும் அவள் கூந்தலை இமைக்காமல் பார்த்திருந்தான்.
அனன்யா என்ன நடக்கிறது என்பதை மறந்தவள்போல் அவனருகில் சென்று ஒரு நிமிடம் அமைதியாக நின்றாள்…
கண்கள் மட்டும் ஏதோ செய்தி பரிமாறிக்கொண்டன. மின்சாரம் பாய்வதுபோன்ற உணர்வும், இன்னும் சில இன்ப அவஸ்தைகளாலும் இருவருக்கும் இதயம் படபடத்தது…
இடைவெளி குறைந்ததை உணர்ந்தவள் “எனக்கு சம்மதம்ன்னு சொல்லிடறேன்…” சிரித்துக்கொண்டே படியேறி ஓட முயல…
“ஒரு நிமிஷம்….” என்றான் ஆதி.
என்ன என்பதுபோல் பார்த்தாள்.
“உங்களுக்கு பிடிச்சா மட்டும்….…
ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா…” கண்கள் கெஞ்சுவதுபோல் பார்த்தான்.
“ம்ம்ம்… அங்க வாங்க… குடும்பத்தோட எடுத்துப்போம்…” அவனிடம் சிக்காமல் கண்ணிமைத்துவிட்டு மற்றவர்கள் இருந்த இடத்திற்கு விரைந்தாள்.
அவனுக்கும் பின்னால் ஓடி அவளைப்பிடித்துவிட தோன்றியது… வீட்டில் உள்ளவர்கள் கூட இருப்பதை உணர்ந்தவன், மெதுவாக நடந்து அவ்விடம் அடைந்தான்.
அங்கு எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அவள் என்ன சொல்லியிருப்பாள் என்று ஊகித்து அவனும் அவர்கள் மகிழ்வில் கலந்துகொண்டான்.
அம்மன் முன்பு, வித்யா அனன்யாவுக்கு பூவைத்து பொட்டு வைத்துவிட்டார்…
ஆதர்ஷ் அங்கு நடப்பவை அனைத்தும் தன் கைபேசிக்குள் படம்பிடித்துக்கொண்டிருந்தான்….
“எல்லாரும் ஒரு ஈஈஈஈஈ சொல்லுங்க.. ஒரு செல்ஃபிஈஈஈஈஈ…..”கிளிக்செய்துவிட்டு அவளைப்பார்த்து வெற்றிப்புன்னகை செய்தான்….
அனன்யாவோ நான்தான் வெற்றிபெற்றேன் என்பதுபோல அவனப்பார்த்து முகத்தை எட்டுகோணலாக்கி பழிப்புகாட்டினாள்.