நந்தா அறைக்குள் வந்ததும், கயலிவிழிக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. அங்கே ஹாலில் வைத்து எதோ செய்தானே, அது போல் எதுவும் செய்வானோ என அவளுக்கு ஒரே படபடப்பு.
அவள் நந்தாவுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டாள். அதை அவனும் கவனித்தான்.
“கயல், அந்த எண்ணெய்யை எடு.”
எண்ணெய்யை எடுத்து வந்தவள், அதைத் தள்ளி இருந்தே கொடுக்க… நந்தா புன்னகையை வாய்க்குள்ளேயே அடக்கி வைத்தான்.
அவள் கொடுத்து விட்டு திரும்ப, சட்டென்று அவளை எட்டி பிடித்தவன், அவளைத் தன் பக்கம் திருப்பி அனைத்துப் பிடித்தான்.
“இப்ப ஏன் இவ்வளவு டென்ஷன்?”
“நான் ஒன்னும் டென்ஷனா இல்லை.”
“ஓ… அப்ப நீ என்னைப் பார்த்து பயப்படலை?” கயல் இல்லை எனத் தலையசைக்க…
“சரி அப்ப நான் என்ன வேணா பண்ணலாம்.” என அவன் புன்னகைக்க, கயல் பதட்டமானாள்.
“இன்னும் எத்தனை நாள்ன்னு நானும் பார்க்கிறேன்.” என்றவன், அவளை விடுவிக்க… அதன்பிறகுதான் கயலுக்கு மூச்சே வந்தது.
நந்தா அவளைப் பார்த்து புன்னகைக்க… பதிலுக்குக் கயலுக்கும் சிரிப்பு வந்தது. இருவரும் வெளியே செல்வதற்காகக் கீழே இறங்கி வந்தனர்.
அங்கே சோபாவில் அமர்ந்து தாரணி அழுது கொண்டிருந்தாள். அவளைக் குழலி சமாதானம் செய்து கொண்டு இருந்தார். வருணும் அங்குதான் இருந்தான்.
நந்தா எதாவது கேட்பான் என்று பார்த்தால். அவன் தாரணி அழுததைக் கண்டுகொள்ளவே இல்லை.
“அம்மா, நாங்க வெளிய போயிட்டு வரோம்.” என்றவன், வருணிடம், “இருடா கொஞ்ச நேரத்தில வந்திடுறோம்.” எனச் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
என்ன இவரு இப்படிப் பண்றாரு? எனக் கயலுக்கு இருக்க… அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
வெளியே நந்தா பைக்கை எடுக்க, அவன் அருகில் வந்தவள், “என்னங்க, அண்ணி அழறாங்க.” என்றாள்.
வண்டி கிளம்பி சென்ற சத்தம் கேட்டதும், தாரணி தன் அம்மாவிடம், “அவளுக்கு ரொம்ப வக்காலத்து வாங்கினீங்க. இப்ப அண்ணன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா இல்ல.” என்றாள் கோபமாக.
“அவ சொல்லலை நான்தான் சொன்னேன். ஆனா எனக்கே நந்தா இப்படி நடந்துப்பான்னு தெரியாது.”
“நேத்து உன் சித்தி சொன்னா, தாரணிக்கு அவ அண்ணன் வேணும்னா ஒழுங்கா நடந்துக்கச் சொல்லுங்கன்னு. நான் அப்ப கூட நந்தா உன்னை விட்டுக் கொடுப்பான்னு நினைக்கலை. ஆனா அதுதான் இப்ப நடந்திருக்கு.”
“உனக்கு அறிவு இருந்திருக்கணும். ராதிகா பேச்சை கேட்டுட்டு ஆடின. இப்ப உனக்கு நல்லா வேணும். இனியாவது பார்த்து நடந்துக்கோ. நான் யாருக்குன்னு பார்க்க முடியும்.” என்றார்.
நந்தா கயல்விழியை அழைத்துக் கொண்டு கடைவீதிக்கு சென்றவன், அவளுக்குச் சுடிதார் வாங்கினான்.
“உனக்கு வேற எதாவது வாங்கனும்னா வாங்கிக்கோ.” அவன் சொல்ல… அவளுக்குச் சில உள்ளாடைகள் தேவைப்பட்டது. எப்படிக் கேட்பது என அவளே யோசித்துக் கொண்டுதான் இருந்தாள்.
“நீ உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு இங்கயே இரு. நான் வந்து பணம் கொடுக்கிறேன்.” என்றவன், அவளை அங்கேயே விட்டுவிட்டு அவன் மட்டும் வெளியே சென்றான்.
கயல் இரண்டு செட் உள்ளாடைகள் வாங்கிவிட்டு அவனுக்காகக் காத்திருக்க, சிறிது நேரத்தில் நந்தா கையில் இரண்டு பைகளோடு வந்தான்.
“என்ன அது?” கயல்விழி ஆர்வமாகக் கேட்க,
“உனக்குத் தேவையில்லாதது.” என்றான். அவன் அதைக் கோபமாகச் சொல்லவில்லை என்பது மட்டும் தெரிந்தது.
அவள் எடுத்து வைத்திருந்த உள்ளாடைகளை, அவன் கையில் எடுக்க… அவசரமாக அவன் அருகில் வந்தவள், அவனிடம் இருந்து அதைப் பறித்தாள்.
“ரெண்டு செட் தான் வாங்கி இருக்க, போதுமா?” என்றவன், அங்கிருந்த விற்பனை பெண்ணிடம் இன்னும் இரண்டு செட் கொடுக்கச் சொன்னான்.
கயல்விழிக்குச் சங்கடமாக இருந்தது. அவள் வேறு எதையோ தீவிரமாகப் பார்ப்பது போல் நடித்தாள். ஓரக்கண்ணில் அவளைப் பார்த்தவனுக்கோ சிரிப்பு தாங்கவில்லை.
பணம் கொடுத்துவிட்டு, கயல்விழியின் பக்கம் திரும்பியவன், “மேடம் போகலாமா?” என்றதும், குனிந்த தலை நிமிராமல். அவன் பின்னே சென்றாள்.
கடையை விட்டு வெளியே வந்ததும், “உனக்கு வேற எதாவது வேணுமா?” என்றதும், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவள், “எனக்கு மல்லிகை பூ வேணும்.” என்றாள்.
நந்தா அவளை அழைத்துக் கொண்டு பூ விற்பவரிடம் சென்று, “ஒரு முழம் பூ கொடுங்க.” என்றான்.
பூவை கையில் வாங்கிய கயல், “எங்க ஊர்ல எல்லாம் நெருக்கமா கட்டி இருப்பாங்க. இங்க ஒரு முழ பூவை இழுத்து கட்டி, ரெண்டு முழமா கொடுக்கிறாங்க.” என்றதும், பூ விற்பவருக்குக் கோபம் வந்துவிட்டது.
“அப்ப உங்க ஊர்லையே போய்ப் பூ வாங்கிக்க வேண்டியது தான.” என்றார் பட்டென்று.
“அது எங்களுக்குத் தெரியாது பாருங்க. உண்மையைச் சொன்னா உங்களுக்குக் கோபம் வருதா?” எனக் கயலும் பதிலுக்கு மல்லுக்கு நிற்க… நந்தா அவளை இழுத்துக் கொண்டு வந்தான்.
“உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமாடி?”
“நீங்க போலீஸ் தான, நீங்க அவங்களைக் கேட்க வேண்டியது தான.”
“பூக்காரி கூடச் சண்டை போடத்தான் நான் I.P.S படிச்சேன் பாரு. வேணா உன் அண்ணன் வக்கில்கிட்ட சொல்லி, கன்சூமர் கோர்ட்ல கேஸ் போடு.”
கயல் நந்தாவை செல்லமாக முறைத்தபடி பூவை தலையில் வைத்தாள். இருவரும் பைக்கில் வீடு திரும்பினர். வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு கயலிடம் இருந்த பைகளை நந்தா வாங்கிக் கொண்டான்.
அதில் ஒரு பையை மட்டும் உணவு மேஜையில் வைத்தவன், மீதி பைகளைக் கொண்டு போய் அவர்கள் அறையில் வைத்துவிட்டு வந்தான்.
“அம்மா, சாப்பிடலாமா? பசிக்குது.”
நந்தாவின் குரல் கேட்டதும், அறையில் இருந்து வருண் வெளியே வந்தான்.
“வா டா சாப்பிடலாம். கயல், சாப்பாடு எடுத்து வை.”
கயல் உணவு வகைகளை மேஜையில் கொண்டு வந்து வைத்தாள். குழலி எல்லோருக்கும் தட்டுக் கொண்டு வந்தார். அவர் முகமே சரியில்லை.
ராதிகா, பரணி எல்லோருமே உணவு அறையில் இருக்க.. தாரணி மட்டும் அங்கு இல்லை.
“கொஞ்சமா சாப்பிடு தாரணி.” வருண் சென்று அழைக்க, அவள் பதிலே சொல்லவில்லை. அவன் வெளியே வந்த பிறகு குழலி சென்று அழைத்தார்.
“நீதான் இப்ப பிரச்சனையைப் பெரிசாகிட்டே போற. வந்து சாப்பிடு வா.”
அதற்கும் தாரணி பதில் சொல்லவில்லை. குழலிக்குத் தலைவலித்தது. அவர் சோர்ந்து போய் வெளியே வந்தார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த நந்தாவின் முகம் கடுத்தது.
கயல்விழிக்கு நந்தா பேசியது தெரியாது அல்லவா. அதனால் என்ன பிரச்சனை எனப் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கயல் நந்தாவுக்கு உணவு பரிமாற, அவன் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்ததும், தன்னைத்தான் அடிக்கப் போகிறானோ எனக் கயல் பயந்தே விட்டாள். பின்னே அவ்வளவு வேகம் அவனிடம்.
நேராகத் தன் அம்மாவின் அறைக்குச் சென்றவன், “இப்ப உனக்கு என்ன பிரச்சனை தாரணி? உன்னைச் சாப்பிட சொல்லி எல்லோரும் கெஞ்சணுமா?” என்றதும், தாரணி பதறி அடித்து எழுந்து அமர்ந்தாள்.
“நான் பொதுவாத்தான் சொன்னேன். நீ ஏன் அதுக்கு அழுகிற? நான் உன்னைச் சொல்லலையே? நீ தப்பு பண்ணலைனா உனக்கு ஏன் குறுகுறுக்குது?” என நேரடியாகவே கேட்டான்.
“வருண் வந்து கூப்பிடுறான், அம்மா வந்து கூப்பிடுறாங்க, அப்படியும் நீ அசையாம இருக்க. யாரையும் மதிக்கிறதே இல்லை. எனக்கு இந்த மாதிரி நடந்துகிறது சுத்தமா பிடிக்காது.”
நந்தாவின் கோபத்தைப் பார்த்து வீடே ஸ்தம்பித்தது. வருண் தான் முதலில் சுதாரித்தான். “விடுடா, நான் பார்த்துகிறேன். நீ போய்ச் சாப்பிடு.” என்றான்.
“ரெண்டு நிமிஷத்துல நீ அங்க இருக்கணும்.” எனத் தாரணியைப் பார்த்து சொல்லிவிட்டு நந்தா வெளியே சென்றான்.
“நீதான் எல்லாத்தையும் இழுத்து விடுற. நான் அப்பவே கிளம்பலாம்ன்னு சொன்னேன். அதையாவது கேட்டியா? வா சீக்கிரம் சாப்டிட்டு, நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்.” என வருண் அவளை அழைத்துச் சென்றான்.
நந்தாவின் விஸ்வரூபத்தைப் பார்த்து கயல்விழி அவ்வளவு பயந்து போய் இருந்தாள். அவள் இதுவரை நந்தா இந்த அளவுக்குக் கோபப்பட்டுப் பார்த்ததே இல்லை.
அவள் கை நடுங்க, குழம்பை ஊற்ற முடியாமல், அவள் திணறுவதைப் பார்த்த நந்தா, “நீ வச்சிட்டு போ.” என்றே சொல்லிவிட்டான். கயல்விழியும் விட்டால் போதும் என்று அங்கிருந்து செல்ல, பிறகு குழலி வந்து பரிமாறினார்.
“அப்புறம் டா, அந்த மில் கேஸ் எந்த அளவுல போயிட்டு இருக்கு.” நந்தா வருணை பேச்சுக்குள் இழுக்க, அவர்கள் பேசுவதைக் கேட்டபடி மற்றவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.
சாப்பிட்டு முடித்துத் தட்டை எடுத்துக் கொண்டு சென்ற ராதிகா, அதைக் கழுவி வைக்காமல், கை மட்டும் கழுவிக்கொண்டு வர, அவள் பின்னே சென்ற நந்தா அதைக் கவனித்து விட்டான்.
ராதிகா தன் அறைக்குள் செல்லப் போக, நந்தா அவளை அழைத்தான்.
“சாப்பிட்ட தட்டு கூடக் கழுவி வைக்க மாட்டியா?”
“எனக்கு அதெல்லாம் செஞ்சு பழக்கம் இல்லை அத்தான். என் வீட்ல வேலைக்காரி தான் செய்வா.”
“இது உன் வீடு இல்லை ராதிகா. எங்க வீட்ல ஒருவேளை தான் வேலை செய்றவங்க வருவாங்க. நீ சாப்பிட தட்டை என் அம்மாவும், பொண்டாட்டியும் கழுவணுமா?”
இவர் ஏன் இன்னைக்கு இப்படி பண்றார்? என்று இருந்தது கயலுக்கு.
“உன் அம்மா, எங்களை நம்பி, உன்னை அனுப்பி வச்சிருக்காங்க. விருந்தாளிய திருப்பி அனுப்புற பழக்கம் எங்களுக்கு இல்லை. ஆனா ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போனா…. அங்க எப்படி நடந்துக்கணும்ன்னு போறவங்களுக்கும் தெரியனும். அது உனக்கு தெரியலை.”
“கயல் என்னோட வந்திடுவா. அம்மா வேலைக்குப் போயிட்டு வீட்டையும் பார்த்துக்கணும். இதுல உனக்கு எடுபிடி வேலை செய்ய எல்லாம் என் அம்மாவுக்கு முடியாது.”
“உன் வேலையை உன்னால பார்த்துக்க முடியும்னா இங்க இரு. இல்லைனா கிளம்பிட்டே இரு.”
“நான் உன் அம்மாவுக்குப் பயப்பட மாட்டேன். நான் இப்படிச் சொன்னதாவே அவங்ககிட்ட சொல்லு. அப்புறம் இன்னொன்னு, என் கல்யாணம் என்னோட விருப்பத்துல நடந்தது, அதைப் பத்தி நீங்க ஆராய்ச்சி பண்ண வேண்டாம். பிறகு மோசமான நந்தாவை நீங்க பார்பீங்க. அதையும் நியாபகம் வச்சுக்கச் சொல்லு.”
இப்படி நேரடியாகவே தாக்குவான் என ராதிகா நினைக்கவே இல்லை. அவள் முகம் கருத்து விட்டது. அவள் அறைக்குள் செல்ல திரும்ப…
வருண் கூட நந்தா ஏன் இன்று இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறான் எனப் புரியாமல் இருந்தான். தனக்குத் தெரியாமல் வேறு எதோ நடந்து இருக்கிறது என இப்போது புரிந்தது.
“டேய் இன்னைக்கு உனக்கு என்ன டா ஆச்சு? வா நாம கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்.” என்றவன், நந்தாவை வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றான்.
வருண்னோடு வெளிய வந்தாலும், இன்னும் நந்தாவின் கோபம் குறையவில்லை. அவன் கூடப் பொதுவாகச் சொல்லி விட்டுவிடலாம் என்றுதான் நினைத்து இருந்தான். ஆனால் தாரணி கொஞ்சம் கூட இறங்கி வருவதாகவே இல்லை. அதன் பிறகுதான் அவன் கோபம் எல்லையைக் கடந்தது.”
வருணிடம் நந்தா எதுவும் சொல்லவில்லை. இருவரும் பேசாமல் நடந்து கொண்டு இருந்தனர்.
“இல்லை, நான் அவளை நல்லா பார்த்துகிறேன். நீ கவலைப்படாதே.”
வருணிடம் தாரணிக்காகப் பேசினாலும், வீட்டுக்கு வந்ததும் நந்தா அவளைக் கண்டுகொள்ளவில்லை. வருணும் தாரணியும் அவர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.
கயல் சாப்பிட்டதும், எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்குச் சென்று விட்டாள். குழலி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்.
“அம்மா, என் மேல கோபமா?” நந்தா கேட்க, குழலி மௌனமாக இருந்தார்.
“நான் இப்படிப் பேசலைனா, தாரணி மாறவே மாட்டா. நான் கயலுக்காகப் பேசலை. ஏன்னா அதைக் கயலே விரும்பமாட்டா. ஆனா வருணை பத்தி நினைச்சு பாருங்க மா…”
“தாரணி அவனை மதிக்கிறளா? நீங்களே சொல்லுங்க. வருணா இருக்கப்போய் இவ்வளவு பொறுமையா இருக்கான். அவனும் எவ்வளவு நாள் இப்படி இருப்பான்?”
“தாரணி நல்லா வாழனும்னு தான் அப்படி நடந்துகிட்டேன். அவ புகுந்த வீட்ல நல்லபடியா எல்லோரோட சேர்ந்து வாழணும்னு நினைச்சா, நாம கொஞ்சம் விலகித்தான் இருக்கணும்.”
நந்தா சென்றபிறகு அவன் சொன்னதை யோசித்துப் பார்த்த குழலிக்கு, அவன் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தே இருந்தது.
குழலியை சமாளித்து மாடிக்கு வந்தால்… இங்கே கயல் அழுது கொண்டு இருந்தாள்.
“இப்ப உனக்கு என்ன டி பிரச்சனை?”
“நீங்க ஏன் என்னைக் கல்யாணம் பண்ணீங்க. அதுதான் இப்ப பிரச்சனை?”
“என் மேலத்தான் தப்பு. ஆனா நீங்க ஏன் எல்லோரையும் பேசுறீங்க.”
“எனக்கு இப்ப எதுக்கும் பயம் இல்லை. நீங்க என்னை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க. நான் அங்க இருந்துப்பேன்.”
“என்னலதான் இங்க இவ்வளவு பிரச்சனை. நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன்.”
கயல் பேசிக்கொண்டே செல்ல… நந்தாவுக்கு அப்படி ஒரு கோபம்.
தரையில் உட்கார்ந்து இருந்தவளை, முரட்டுத்தனமாகப் பிடித்துத் தூக்கியவன், “அன்னைக்கு உங்க அப்பாகிட்ட இருந்து காப்பாத்ததான், நான் உன்னைக் கல்யாணம் பண்ணதா நினைக்கிற இல்லை.”
“என்னை விட்டு போயிடுவியா நீ?”
“அப்ப இத்தனை நாள் என்னோட அன்பு உனக்குப் புரியவே இல்லை.”
கண்கள் சிவக்க அவன் நிற்க… கயல்விழி கண்ணீர் நிரந்த விழிகளால் அவனையே பார்த்தாள்.
“உனக்கு நாளைக்குப் பிறந்தநாள். அன்னைக்குத்தான் வரணும்ன்னு இருந்தேன். ஆனா நீ அழுததும் அங்க இருக்க முடியலை. உடனே கிளம்பி வந்தா, நீ என்னைப் பார்த்து எதுக்குக் கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்கிற?”
“உன் அப்பாகிட்ட இருந்து காப்பாத்த உன்னைக் கல்யாணம் பண்ணனும்ன்னு அவசியம் இல்லை. அதுக்கு ஆயிரம் வழி எனக்குத் தெரியும்.”
“உன்னைப் பார்த்த முதல் நாளே உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன். அப்ப உன்னோட பிரச்சனை எதுவுமே எனக்குத் தெரியாது. தெரிஞ்ச பிறகும் உன்னை விட முடியலை.”
“எனக்கு உன்னோட கடந்தகாலம் தேவையில்லை. அது முடிஞ்சு போனது. அதையே ஏன் எல்லோரும் கட்டிக்கிட்டு அழறீங்க?”
“ஆம்பிளையா இருந்தாலும் பொம்பளையா இருந்தாலும், இன்னைக்கு விவாகரத்து பண்ணிட்டு, ஈஸியா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுறாங்க.”
“கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ்ந்தவங்களே அப்படின்னா, காதலிச்சவங்க எல்லாம் எந்த மூலைக்கு?”
“பரணியை விழுந்து விழுந்து லவ் பண்ண பொண்ணு. அவனோட வசதியான பையன் வந்ததும், அவனை விட்டுட்டு போயிட்டா. அவ இப்ப இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலை?”