“உன் தங்கச்சி படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்லி, இத்தனை நாள் பிள்ளை பெத்துகிறதை தள்ளிப்போட்டா, இப்பத்தான் பெத்துக்கலாம்ன்னு ஆசைபட்டா.” என்றவர், தாரணியிடம், “நீ ஒரு வருஷம் வேலைக்குப் போ, அதுக்குள்ள கயலுக்குப் பிரசவம் ஆகிடும். அப்புறம் நீ பெத்துக்கலாம்.” என்றார்.
தாரணியும் இப்போது கர்ப்பமானால், இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்று நினைத்தே சொன்னார்.
தாரணி சரி என்று சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த பத்மா, “அதெல்லாம் இனியும் தள்ளி போட சொல்லாதீங்க. தாரணியும் உண்டாகட்டும், நாம இத்தனை பேர் இருக்கோம் பார்த்துக்க மாட்டோமா?” என்றார்.
“ஆமாம் அத்தை, எங்க அம்மா தாரணியைப் பார்த்துப்பாங்க. அது ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றான் வருண். அவனுக்கு வெகு நாட்களாகவே குழந்தை ஆசை இருந்தது. நந்தா நண்பனின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.
“சரி குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்.” பத்மா சொல்ல, எல்லோரும் எழுந்தனர்.
“அண்ணி, நீங்க இந்த ரூம்ல குளிங்க.” எனத் தாரணியை அவர்கள் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்ற கயல், “குளிச்சிட்டு இந்தப் புடவை கட்டிக்றீங்களா அண்ணி.” என அவள் கட்டியிருந்த புடவை போலவே ஒன்றை கொடுத்தாள்.
“நல்லா இருக்கே. எப்ப எடுத்தீங்க அண்ணி.”
“நீங்க வர்றீங்கன்னு சொன்னதும், நானும் அம்மாவும் போய் எடுத்திட்டு வந்தோம்.”
தாரணி தயார் ஆகி வரும்வரை, கயல் அங்கேயே இருந்தாள். இருவரும் சேர்ந்தே அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.
ஒரே மாதிரி புடவை அணிந்து வந்த இருவரையும் பார்த்ததும், நந்தாவும் வருணும் பெரிதாகச் சிரித்தனர்.
“ரெண்டும் தனித்தனியா இருந்தாலே தாங்க முடியாது. இதுல ஒரே மாதிரி வேறையா?” வருண் கிண்டல் செய்ய,
“ஏன் அண்ணா? கயல் கேட்க,
“நம்மைப் பார்த்து பொறாமை.” என்றாள் தாரணி.
“உனக்கு இந்தப் புடவை அழகா இருக்கு மா.” பத்மா சொல்ல, தாரணி அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
எல்லோரும் சேர்ந்தே காலை உணவை சாப்பிட்டனர். காலை உணவை சாப்பிட்டதும், பத்மா அவர் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.
அவருக்கு வீட்டுக்கு போன் செய்து காரை அனுப்பி வைக்கச் சொல்ல வேண்டியது இருந்தது. நந்தா போன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததால்… தயங்கி நின்று கொண்டிருந்தார்.
“வர ரொம்ப நேரம் ஆகுமா.” எனத் தாரணி வருணிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்தவன், “உன் அண்ணி வரலையாம் நீயாவது வா.” என்றான்.
பத்மாவும் தாரணியை அழைத்தார். காரை எடுப்பதற்கு முன் நந்தா கயலை பார்க்க, அவள் முகம் வாடி இருந்தது. அவனுக்குத் தெரியும் அவளுக்குக் கஷ்ட்டமாக இருக்கும் என்று.
இவர்கள் சென்ற போது, வீட்டில் அன்பரசு இல்லை. அவர்களைப் பத்மா உள்ளே அழைத்துச் சென்றார்.
“உட்காருங்க டீ போடுறேன்.” என்றவர் அறைக்குள் சென்றார். கணவர் தோட்டத்து வீட்டில் இருப்பார் என்று ஊகித்த பத்மா, அறையில் இருந்த தொலைபேசியில் கணவரை அழைத்தார்.
“ஹலோ…”
“நான்தான், வீட்டுக்கு வந்திட்டேன். மாப்பிள்ளை, அவர் தங்கச்சி வீட்டுக்காரர் எல்லாம் வந்திருக்காங்க.”
“சரி நான் இப்ப வரேன்.”
அன்பரசு வருகிறேன் என்றதும், பத்மாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஹாலில் சென்று அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார்.
தாரணிக்கு வீட்டை பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அவள் இப்போதுதானே வீட்டை பார்க்கிறாள். திருமணதிற்கு வந்தபோது கோவிலில் இருந்தே சென்று இருந்தனர்.
இவ்வளவு பெரிய வீட்டுப் பெண்ணா கயல். அவள் ஒருநாளும் பெரிய இடத்துப் பெண் போலக் காட்டிக் கொண்டது இல்லையே என நினைத்தாள்.
அடுத்தப் பத்து நிமிடத்தில், அன்பரசு வீட்டில் இருந்தார். “வாங்க.” என எல்லோரையும் பார்த்து சொன்னவர், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.
பத்மா எல்லோருக்கும் டீ கொண்டு வர, “டீ வேண்டாம். தோட்டத்தில இருந்து இளநீர் கொண்டு வந்தேன் பாரு.” என்றவர், “செல்வம், அந்த இளனியை உடைச்சுக் கொண்டு வா.” எனக் குரல் கொடுத்தார்.
வரும்போதே தோட்டத்தில் இருந்து இளநீர் கொண்டு வந்து இருந்தார்.
நந்தாவும், வருணும் லாவகமாக இளநீர் குடிக்க, தாரணிக்கு அப்படியே குடிக்கத் தெரியவில்லை.
“இந்தா, பாப்பாவுக்குக் கிளாஸ்ல ஊத்திக் கொடு.” என அன்பரசு சொல்ல, பத்மா ஒரு செம்பில் ஊற்றிக்கொடுத்தார்.
ஆளுக்கு இரண்டு இளநீர் குடிக்க, வயிறு திம்மென்று இருந்தது. அன்பரசுவும் வருணும் தான் பேசிக்கொண்டு இருந்தனர்.
“நானும் நந்தாவும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ். தாரணியை எனக்குப் பிடிச்சிருந்தது. நான் பெண் கேட்டேன். இவங்க வீட்லயும் கொடுத்திட்டாங்க.”
அன்பரசுவுக்கு வருண் சொன்னதை இன்னும் கூட நம்பமுடியவில்லை.
“நீங்க எந்த ஆளுங்க.”
“அது எதுக்குங்க? நானும் மனுஷ சாதிதான், நீங்களும் மனுஷ சாதிதான். அப்புறம் அதுக்குள்ள எதுக்கு இன்னொரு ஜாதியை கொண்டு வந்திட்டு.” என்றான் வருண்.
நம்ம ஆளுங்கல்ல மாப்பிள்ளையா இல்லை என்பதைப் போல நந்தாவை ஒரு பார்வை பார்த்தார். அதன்பிறகு அவர் வருணோடு பேசவே இல்லை.
“சரி நாங்க கிளம்புறோம்.” என்றதும், அன்பரசுவின் பார்வை சமையல் அறைப் பக்கம் சென்றது. பத்மாவும் தாரணியும் மட்டும் வெளியே வர, கயல் இங்கே வரவேயில்லை என்பது அவருக்கு அப்போதுதான் தெரியும். அவள் உள்ளே இருக்கிறாள் என்றே நினைத்துக் கொண்டு இருந்தார்.
அவர் முகம் மாற, நந்தா அதுவரை அவரையேதான் பார்த்துக் கொண்டு இருந்தான். மகளைத் தேடுகிறார் எனப் புரிந்து கொண்டான்.
வெளியே வந்து காரில் ஏறியதும், “உன் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா.” நந்தா வருணிடம் சொல்ல,
“நீங்க ரெண்டு பேரும் சரியான கேடிங்க. ஆனாப் பாரு ஒருத்தர் போலீஸ், இன்னொருத்தர் வக்கீல். என்ன கொடுமை?” தாரணி சலித்துக்கொள்ள, நந்தாவும் வருணும் வாய்விட்டு சிரித்தனர்.
வீட்டிற்குள் அன்பரசு குட்டி போட்ட பூனை போல, ஒரு இடத்தில் உட்காராமல் நடந்து கொண்டே இருந்தார்.
“இவங்க எல்லாம் வந்திருக்காங்க. உன் பொண்ணுக்கு வர முடியலையா?” அன்பரசு பொறுக்க முடியாமல் கேட்டே விட,
“அவ வீடு தேடி போய், அவ முன்னாடியே அவ புருஷனை மிரட்டினா, இங்க வருவாளா? அவ இன்னும் கோபமா இருக்கா.”
“இருக்கட்டும் எனக்கு ஒன்னும் இல்லை.”
“நாம போட்ட நகை ஒன்னு கூட அவகிட்ட இல்லை. நீங்க எதோ பசங்களைப் படிக்க விடாம செஞ்சிங்கலாமே. அவங்களுக்கு வெளியூர்ல படிக்க, எல்லா நகையையும் கழட்டி கொடுத்திருக்கா.” பத்மா சொல்ல, கேட்ட அன்பரசு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தார்.
“போதும்ங்க, ஊர் வாயில நின்னது போதும். வாழுற வயசுல ஒரு பையன் ஜெயில்ல இருக்கான். வீட்டுக்கு வந்த மருமகள் வாழவெட்டியா இருக்கா. நம்மால ஒரு உயிர் போயிடுச்சேன்னு, கயல் இப்பவரை மனசுக்குள்ள குமுறிகிட்டுதான் இருக்கா.”
“நம்ம பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா தானே நாம சந்தோஷமா இருக்க முடியும்.”
“இனியாவது உங்க ஜாதி வெறி எல்லாம் விட்டுட்டு, நம்ம பிள்ளைங்க, குடும்பம்னு வாழப்பாருங்க.”
“ஒரு நாளாவது உங்க பிள்ளைங்களோட சேர்ந்து பேசி, சாப்பிட்டு இருப்பீங்களா?”
“இப்ப ஊருக்கு பெரிய மனுஷனா இருந்து என்ன சாதிச்சீங்க?”