“இந்த மணி எங்க போய் தொலஞ்சான்? டேய் மணி… மணி…” ஐந்து ரூபாய் நாணயத்தை பையினுள் போட்டபடி பரபரவென அடுப்பங்கரையில் இருந்து வெளியே வந்த சுலோச்சனா மணியை தேடி அழைப்புமணி விடுக்க,
“எங்கமா அவன்? உதவாக்கரை, காலங்காத்தால என் உயிரை வாங்குறான். இன்னைக்கு போட்டுக்க சட்டையில்லை. எல்லாம் அயர்ன் பண்ணாம கிடக்கு. என்ன வெட்டி முறிக்கிறான் அவன்?” என்று ரவி ஒருபுறம் முகம் சுழித்து குரல் உசத்தி வந்தமர்ந்தான்.
சுலோவின் பார்வை தன்னால் கடிகாரத்திற்கு சென்று மீண்டு தன் மகன் மீது படிந்தது, “மணியாகிடுச்சா ரவி? சட்னி அரைக்க பச்சை மிளகாய் வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு இந்த பயலை தேடுறேன். ஆளையே காணோம். இவன் இப்படி எதுக்குமே லாயக்கு இல்லாம உருப்படாம போவான்னு தெரிஞ்சிருந்தா உன் அப்பனோட சேர்த்து இவனையும் அனுப்பி இருப்பேன்… அப்படியே அப்பன் புத்தி வந்திருக்கு.” என்று பல்லோடு சேர்த்து மணியையும் குதறி துப்பினார் சுலோச்சனா.
“அவன் எப்போ மிளகா வாங்கிட்டு வந்து, நீ எப்போ சட்னி அரைச்சு, நான் எப்போ வேலைக்குப் போறது? அவன்தான் பொறுப்பில்லாம இருக்கான்னா நீயும் அப்படியே இருப்பியா? தேவையானது எல்லாம் முன்னாடியே வாங்கி வச்சிக்க மாட்டியா? காலையில எட்டு மணிக்கு தான் உனக்கு எல்லாம் நியாபகம் வரும். ச்சை வேலையில தான் நிம்மதி இல்லைனா வீட்லையும் ஒரு வேளை சாப்பாடு நிம்மதியா சாப்பிட முடியல.” என்று கடுப்படித்தவன் விருட்டென எழுந்தான்.
சினத்தில் சிறுத்திருந்த ரவியை ஏறெடுத்தும் பார்க்கத் தயங்கிய சுலோ, “என்னப்பா இப்படி பேசுற? ஒருநாள் தாமதமாகிடுச்சு அதுக்காக இப்படி நீயும் எடுத்தெறுஞ்சு பேசுறியேப்பா. எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா?” என்று மூக்கை உறிஞ்சினார்.
“இப்படித்தான் ஒவ்வொரு நாளும் சொல்ற. முந்தா நாள் மாவு அரைக்க அரிசி இல்லை, நேத்திக்கு வெங்காயம் இல்லை, இன்னைக்கு மிளகாய் இல்லை. இன்னும் என்னலாம் இல்லைனு மொத்தமா சொல்லு நானே வாங்கிட்டு வந்து தொலைக்குறேன்.” என்று சத்தம் போட்டவன் அந்த வீட்டில் இருந்த ஒற்றை அறைக்குள் சென்று கசங்கிய சட்டையொன்றை மாட்டியபடி வெளியே வந்தான்.
“நா என்ன வேணும்னா வாங்காம இருக்கேன்? இருக்குற காசை வச்சு வாயை வயித்தை கட்டி குடும்பத்தை நடத்திட்டு இருக்கேன்.” பெரிய மகனின் கடுப்பு மணியிடமிருந்து தன் மீது திரும்புவதை உணர்ந்து அங்கலாய்த்தார் அந்த அன்னை.
கவனமும் விரலும் சட்டை பொத்தானை போடும் வேலையில் இருந்தாலும் ரவியின் நா ஓயாது வசவியது, “மாசம் பொறந்தா எல்லா சாமானும் வாங்க நிறைய தான காசு கொடுக்குறேன் அந்த காசெல்லாம் என்னதான் பண்றியோ தெரியல. போதலைன்னா வாயை திறந்து கேட்க வேண்டியதுதான?”
“நீ எவ்வளவு சிரமப்பட்டு சம்பாதிக்குறேன்னு எனக்கு தெரியாதா ரவி. நீ போதுமான அளவு பணம் குடுக்குற தான், ஆனா…” என்று சுலோ இழுக்க,
“என்ன ஆனா?” என்று ரவியும் இழுத்தான்.
“அது மூணு பேருக்கு பத்த மாட்டிங்குது… காய்கறி மளிகை செலவு போக மணியோட போக்குவரத்து செலவுக்கும் அவன் வேலை விஷயமா ஆளுங்களுக்கும் கொடுக்கவே போதமாட்டீங்குது.
தேதி பத்தானா கையில எதுவும் தங்குறது இல்லை. நானும் என்னதான் பண்றது? ஏதோ மிளகாய் டப்பா, ஜீனி டப்பாக்குள்ள அப்பப்போ போட்டு வைக்குற காசை வச்சுதான் மொத்த மாசத்தையும் ஓட்டுறேன். உன்கிட்ட இதையெல்லாம் சொல்லி உன் தலையில மேல மேல பாரத்தை ஏத்த வேணாம்னு பாத்தா நீயே இப்படி பேசுறியே ரவி.”
“சரி புலம்பாத! என்னென்ன வேணும்னு சொல்லு பாண்டி அண்ணன் கடையில சொல்லிட்டு போறேன். மணியை போய் வாங்கிட்டு வரச்சொல்லு. பணம் குடுத்துறேன் நீ கொடுக்காத.” என்ற ரவி கசப்புடன் கசங்கி இருந்த தன் சட்டையை குனிந்து பார்த்த வண்ணம்,
“இதோட தான் ஆபீஸ் போகணுமா இன்னைக்கு?” சலிப்பு ஒட்டிக்கொண்டது அவனிடம்.
“அஞ்சு நிமிஷம் பொறு. மணி வந்ததும் அயர்ன் பண்ணி குடுத்துடுவான்.” என்று சுலோ அவனை ஆசுவாசப்படுத்த, ‘கிழிப்பான்’ என்று மனதிற்குள் வைதபடி தலைவாரினான் ரவி.
“என் மூஞ்சையே பாத்துட்டு நிக்காம போய் என்ன வேணுமோ அதை எழுதி எடுத்துட்டு வா.” என்று அன்னையையும் கடிந்துகொள்ள தவறவில்லை ரவி.
மனதிற்குள் மீண்டுமொரு சோர்வு, ‘இன்னைக்கு சட்டையும் அம்பேல் சாப்பாடும் அம்பேல்… நல்ல வாழ்க்கைடா சாமி. இந்த வீட்டுக்கு எவ்வளவு உழைச்சாலும் போதாது.’
நாவும் உளமும் சமனின்றி சிணுங்க, அறைக்குச் சென்று அலமாரியில் இவன் துணிகளுக்கு இடையில் இருந்த சிறு பெட்டியைத் திறந்தான். வங்கிச் சலான்கள் பல கன்னாபின்னாவென்று கலைந்து கிடைக்க, அதை மேலும் கலைத்தவன் பணம் எதுவும் இருக்கிறதா என்று தேடினான். ஆனால் கிடைத்தது என்னவோ நினைவுகள் தான். அதுவும் அவளது…
ஒரு நொடி ஒரே நொடி அவள் நினைவாய் இருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பொக்கிஷமாய் மீண்டும் அந்த பெட்டியினுள் சேகரித்தான். அதே பெட்டியினுள் கிடந்த சில நூறு ரூபாய் நோட்டுகளை பொறுக்கி எடுத்து சட்டை பையினுள் திணித்தவாறு வெளியே வர, சுலோச்சனா மளிகை பட்டியலை நீட்டினார். அதையும் பிடுங்கி சட்டையில் திணித்து வாய் திறவாது ரவி அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப, சுலோவின் மனம் புயலுக்கு பின் வந்த அமைதியை உள்வாங்கியது.
“ப்பா… ஒரு வழியா புயல் ஓஞ்சிடுச்சு… கடைய சாத்திட்டாய்ங்க.” என்றபடி கண்ணாடி முன்னின்று கருவிழிகளை எடுத்துக்காட்டி மெருகேற்றும் விதமாய் கண்மையிட்டாள் யாழினி.
“இவங்களுக்கு வேற வேலையே இல்லை யாழி. விடிஞ்சிற கூடாது உடனே ஆரம்பிச்சுடுறாங்க. பேசாம கம்பிளைன்ட் பண்ணிடலாமா?” என்று கேட்டவாறு துணிகளை மடித்து அடுக்கினார் மைனா.
“யார்கிட்ட போய் என்னனு சொல்லுவ அம்மா? அப்பா விசாரிச்சாங்களாம், இது அவங்களோட சொந்த வீடாம்… எப்படியும் காலி பண்ண வாய்ப்பேயில்லை. நம்மால அவங்களை மாதிரி போய் அவங்களோட சண்டையும் போட முடியாது.” பேசிக்கொண்டே சிகை கோதி சீவினாள் யாழினி.
“அதுக்காக இப்படியே இருக்க முடியுமா? எப்போ பாத்தாலும் கத்தி கத்தி சண்டை போடறது. பக்கத்து வீட்ல இருக்கிறவங்களுக்கு தொல்லையா இருக்கும்னு கூட இவங்களுக்குத் தெரியாதா?” பேச்சிலும் முகத்திலும் சுணக்கம் வந்து ஒட்டியது மைனாவிற்கு.
“தெரியலையே என்ன பண்றது? அவங்க சண்டை போடுறது இங்க வரைக்கும் கேக்குதே… அப்போ நம்ப பேசுறதும் அங்க கேக்குமா என்ன? இந்த டவுட்டு நம்ம இங்க வந்த நாள்ளேந்து எனக்கு இருக்கு.” என்று யோசனையுடன் கேட்டாள் யாழினி.
அவர்கள் இந்த வீட்டிற்கு குடிவந்து ஒரு வாரமே ஆன நிலையில் சுப்ரபாதம் போல் தினமும் தவறாது செவியில் விழும் பக்கத்து வீட்டு சச்சரவில் சங்கடமே யாழினி குடும்பத்தினருக்கு.
“அவங்க கண்ணு மண்ணு தெரியாம கத்துறாங்க யாழி அதான் நமக்கு கேக்குது. நம்ம என்ன அப்படியா பேசுறோம்?” என்று மகளுக்கு பதில் தந்தவர் பெருமூச்சோடு, “உன் ஆபிசுக்கு பக்கமா இருக்குமேனு தான் ரெண்டாயிரம் ரூபாய் வாடகை அதிகமா இருந்தாலும் பரவாயில்லைனு இந்த வீட்டுக்கு வந்தோம். ஆனா நிம்மதியா இருக்க முடியாது போல யாழிமா. எத்தனை வீடு மாறுனாலும் நமக்குன்னு ஏதாவது பிரச்சனை வருது. ஒன்னு தண்ணி பிரச்சனை இல்லைனா நாய் பிரச்சனை இப்போ பக்கத்து வீடு பிரச்சனை!” விட்டால் சங்கடங்களை அடுக்கிக்கொண்டே சென்றிருப்பார் மைனா ஆனால் மகள் தடுத்து,
“விடுங்க மைனா மேடம்… நம்ம சீக்கிரம் சொந்தமா ஒரு வீடு வாங்கிடலாம். அப்புறம் பாரு எல்லாம் பாஸிட்டிவா நடக்கும்.”
யாழினியின் விழிகளில் கனவும் இலட்சியத்தை அடைந்துவிட வேண்டும் என்ற தீர்க்கமும் ஒன்றுசேர்ந்து மின்ன,
“நாலு பக்கமும் இடம் விட்டு நல்லா காத்தோட்டமா இருக்கிற மாதிரி வாங்கணும் இல்லைனா பால்கனி வச்சு பெரிய ஜன்னல் எல்லாம் இருக்குற அப்பார்ட்மென்ட்டா வாங்கணும் யாழி. சச்சரவு எதுவும் இல்லாம அமைதியா நிம்மதியா இருக்கனும்.” என்று மகளின் கற்பனைக்குள் நுழைந்து கொண்டார் மைனாவும்.
“அப்பார்ட்மெண்ட் தான? வாங்கிடலாம் வாங்கிடலாம்… எனக்கும் கூடிய சீக்கிரம் ப்ரோமோஷன் வரும்னு நினைக்குறேன். ப்ரோமோஷன் வந்தா லோன் எடுத்துடலாம். அதுக்குள்ள டவுன் பேமெண்ட்டுக்கு ரெடி பண்ணனும்.” யோசனைகள் வேரூன்ற தயாராய் இருந்தாலும் அலுவலகத்திற்குச் செல்ல நேரமாகிறது என்பதை உணர்ந்த யாழினி ஒருமுறை கண்ணாடியில் தன்னை சரிபார்த்தாள்.
“இட்லி ஊத்தி ஹாட்டபாக்ஸ்ல வச்சி இருக்கேன். எடுத்து போட்டு சாப்புடு யாழி. இன்னும் கொஞ்சம் டிரெஸ் எல்லாம் பெட்டியிலிருந்து எடுத்து அடுக்க வேண்டியது இருக்கு.” என்ற மைனாவிற்கு மறுப்பாய் தலையசைத்த மகள்,
“நான் ஆபீஸ் கிளம்புன பிறகு இந்த வேலை எல்லாம் செஞ்சிக்கோ. இப்போ என்கூட வந்து சாப்புடு. எனக்கு தனியா சாப்பிட பிடிக்காதுன்னு தினமும் உனக்கு நியாபகபடுத்தனும் மைனா…”
“என்ன மைனாவா? அடிங்க… உன் அப்பாவே என்னை பேர் சொல்லி கூப்பிட மாட்டாரு நீ சொல்றியா?” போலியாய் முறைத்து மகளுடன் கிட்சன் சென்று இருவருக்கும் உணவு எடுத்துவந்து ஹாலில் அமர்ந்தார்.
“அது மை அன்னானு சொன்னேன் உன் காதுல மைனான்னு விழுந்திருக்கும்.” என்ற நமட்டுச் சிரிப்புடன் இட்லியை நன்றாக பொடியில் பிரட்டி எச்சில் ஊறிய நாக்கில் வைத்ததுதான் தெரியும் அமிர்தமாய் உள்ளிறங்கியது யாழினிக்கு.
மகள் போல் அல்லாது வேகமாய் இட்லிகளை உடைத்து உள்ளே தள்ளினார் மைனா. கூடவே பேச்சும் நீண்டது.
“சமாளிக்குறதுனாலும் ஒரு நியாயம் வேணாமா யாழிமா… அண்ணாவாம் அண்ணா…” என்ற நக்கல் மைனாவிடம்.
“ஐய்யே அம்மா… நான் சொன்ன அன்னா ஒரு டிஸ்னி கேரக்டர்.” என்று வாதாடிய யாழினியோ அதற்கு மேல் அன்னையிடம் வம்பிழுக்காது இட்லியை பொடியில் பிரட்டி ரசித்து ருசித்து நிதானமாய் உண்டு கிளம்பினாள்.
“மழை வந்தாலும் வரும்னு யூடுப்ல பாத்தேன்… சாயங்காலம் பார்த்து வா யாழிமா… மழை வந்தா நனஞ்சிட்டே வராத…” என்ற மைனாவின் அறிவுரையை போகிற போக்கில் காதில் வாங்கி மனதில் பதிக்கத் தவறிய யாழினி தன் ஸ்கூட்டியை வீட்டின் வெளியே எடுத்து ஏறி அமர்ந்தாள்.
பார்வை தன்னால் பக்கத்து வீட்டிற்கு சென்று நிலைத்தது. இவர்கள் வசிக்கும் வீட்டை ஒட்டியே சுவர் எழுப்பி கட்டப்பட்டிருந்தது. மாடி எதுவுமின்றி ‘ஷீட் போட்ட வீடு’ என்று அடையாளம் சொன்னால் இந்த தெருவுக்கு வரும் எவரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வண்ணம் அவ்வீடு மட்டுமே ஒற்றை அடுக்கு வீடாய் தனித்துத் தெரிந்தது. சுண்ணாம்பு பூச்சு மழுங்கி கருத்திருந்த மதில் சுவரில் துருப்பிடித்த ஒரு கேட். கலையின்றி இருந்த வீட்டை கண்ட யாழினிக்கு அங்கிருக்கும் ரவி யார் மணி யார் என்ற எண்ணமும் அவர்கள் மேல் அனுதாபமும் வந்து மறைந்தது. வண்டியும் அலுவலகத்திற்குக் கிளம்பியது.