அதுவரை தன் வெம்மையை வீசி மக்களை தவிக்க தவிக்க வேக வைத்த வெய்யோன் ஓய்வெடுக்கச் சென்றுவிட மதியும் தன் இருப்பை உணர்த்தும் நேரம் கருமேகங்கள் போட்டிப்போட்டு சூழுந்துகொண்டு ஆர்ப்பரித்தன அம்மாநகரில்.
எதிர்பாரா நேரத்தில் பெய்த கனமழையை சிலர் ரசிக்க, சிலர் வசவ, சிலர் ஆர்ப்பரிக்க இது எதிலும் சேராத சிலர் எப்போது மழை விடும் என்ற சிந்தனையுடன் மேற்கூரை இருக்கும் இடத்தில் ஒதுங்கினர். அதில் ஒருத்தியாய் யாழினியும் கைக்கடிகாரத்தை பார்ப்பதுமாய் வானத்தை பார்ப்பதுமாய் அரை மணி நேரத்தை ஓட்டியிருந்தாள். அதற்கு மேல் அங்கு நிற்க நிதானமில்லை அவளுக்கு.
தலைக்கவசத்தை மாட்டிக்கொண்டு தன் ஜீன்ஸ் பேண்டையும் லேசாக மேலேற்றி மடித்துவிட்டு சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் இறங்கி தன் இருச்சக்கர வாகனத்தை இயக்கினாள். முகத்தில் அறைவது போல் விழுந்த மழைத்துளிகள் தன் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்துக்கொள்ள யாழினியின் வாகனம் வேகமெடுத்தது.
மழை குறையவும் சாலையில் நெரிசல் பெருக, யாழினி இடப்பக்கமாய் வாகனத்தை இயக்கினாள். இன்னும் இரண்டு தெருக்கள் கடந்து நான்காக பிரியும் சாலையில் இடப்பக்கம் திரும்பினால் அவள் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்து விடலாம். தெருவை நெருங்க நெருங்க விசாலமான சாலை சுருங்கி மேடுபள்ளங்கள் அதிகரிக்க, ஒரு சில இடங்களில் சாலை கரைந்து மண்ணோடு சேர் சகதியுடன் வழுக்களாய் இருந்தது. அதை கவனிக்காமல் யாழினி வண்டியை இடப்பக்கம் வளைத்து தெருவுக்குள் செலுத்தவும் மழை நீரால் சகதியாய் இருந்த ரோடு வழுக்க சற்றே தடுமாறியவள் பிரேக்கை அழுத்தி பிடித்து வண்டியை நிறுத்தியிருந்தாலும் அது ஓரமாய் முன்னே நடந்து சென்றுகொண்டிருந்தவன் மீது மோதியே நின்றது.
எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த நிகழ்வில் யாழினி பதறிப்போய் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு இறங்க, கூட்டமும் கூடியது. ஆனால் இதில் காயம்பட்டவனோ எதுவும் நடவாதது போல் சகதில் இருந்து எழுந்து தன் சட்டையை உதறினான். சேர் அவனின் சிவப்பு சட்டையை விட்டு பிரிய மறுத்து பசை போல் ஒட்டிக்கொள்ள பெரிதாய் அலட்டிக்கொள்ளாதவன்,
“ஒன்னுமில்லை.” என்றுவிட்டு தன் நடையைத் தொடர்ந்தான்.
“ஹலோ சார்… சாரி.” யாழினி மன்னிப்பு வேண்டியது அவன் காதில் விழுந்ததா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு திரும்பியும் பாராது நடந்தான்.
“விடுமா அதான் ஒன்னும் ஆகலையே… ஊரு முழுக்க ரோடு எங்க இருக்குனு தேடுற நிலைமைதான். பார்த்து போமா…” என்று உடன் நின்ற ஒருவர் சொல்லிவிட்டு நகர இன்னொருவர் தண்ணீரை நீட்ட அதை பருகிவிட்டு யாழினியும் அங்கிருந்து கிளம்பினாள்.
படபடப்பு சற்று மட்டுப்பட்டிருக்க, வாகனத்தை மிதமான வேகத்திலேயே இயக்கி வீடு வந்து சேர்ந்தாள். இறங்கி வாயிற்கதவை திறந்தவள் வண்டியை உள்ளே விடவென மீண்டும் வண்டியில் எற, அவள் இடித்த சிவப்பு சட்டைக்காரன் பக்கத்து வீட்டுக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைவதை கண்டு இறங்கினாள்.
“ஹலோ சார்…” என்றபடி விரைவாய் அவனை நோக்கி நடக்க அவனோ இரும்புக்கதவை மூடிவிட்டு உள்வாயிலில் செருப்பை கழற்றினான்.
இவள் விடாது, “ஹலோ சார்… சார்… ஹலோ ரெட் ஷர்ட்…” என்று குரலை உயர்த்த, குனிந்து தன் சட்டையை பார்த்தவன் தன்னை தான் அழைக்கிறாள் என்பதை உணர்ந்து திரும்பி அவளைப் பார்த்தான்.
இரும்பு கேட்டிற்கு மறுபுறம் நின்ற யாழினி, “சாரி சொல்லலாம்னு கூப்பிட்டா நீங்க பாட்டுக்கு காதுல வாங்காம போறீங்க?”
அவனோ நெற்றி சுருக்கி அவளை நோக்கி வந்தான், “நீங்க யாரு? எதுக்கு சாரி சொல்லனும்?” அவனது கேள்வியில் புருவம் உயர்த்தியவள்,
“நான் யாரா? நல்லது. சந்தோஷம். எனக்கு இது தேவைதான்!” கிடைத்த பதிலில் கடுப்பானவள் அதற்கு மேல் அங்கு நிற்காது தன் வீட்டிற்கு நடையை கட்டினாள்.
ஏதோ முணுமுணுப்புடன் செல்லும் அவளையே பார்த்தவன் சுருக்கிய நெற்றியை தேய்த்துக்கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தான்.
“எலே என்ன பண்ணிட்டு வந்திருக்க? சட்டையெல்லாம் கரையா இருக்கு? எவனோட சண்டை போட்டு பொறண்டுட்டு வந்த…” சுலோச்சனா மகனின் நிலை கண்டு வாரிக்கொண்டு வர, மகனோ காதில் வாங்காதது போல் அறைக்குள் சென்று சட்டையை கழற்றினான்.
“இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன் எனக்கென்னனு போயிட்டு இருக்க?” சுலோ விடாமல் அவன் பின் சென்று கத்த,
“உனக்கு இப்போ என்ன வேணும்?” என்று அவனும் மெலிதாய் குரல் உயர்த்தினான்.
“இப்படி போற வர இடத்துல எல்லாம் சண்டைக்கு நிக்குறதாலதான் எவனும் உனக்கு வேலை குடுக்க மாட்டிங்குறான். அப்போவும் நீ திருந்த மாட்டில்ல?”
“நான் சண்டை போட்டதை நீ பார்த்தது பார்த்தாவே இருக்கட்டும். என் வேலையை பத்தியெல்லாம் நீ கவலைப்படாத.” என்று இவனும் பதிலுக்கு பதில் பேசியவன் துண்டையும் கறைபடிந்த சட்டையும் தோளில் போட்டுக்கொண்டு வீட்டின் பின்கட்டிற்கு துவைக்கச் சென்றான்.
பேச்சுவாக்கில் தன்னை குத்திக்காட்டியதை கப்பென்று பிடித்துக்கொண்ட சுலோவும் விடாமல் அவனைப் பின்தொடர்ந்து, “நான் நேர்ல பாக்கலைனாலும் நீ சண்டைதான்டா போட்டிருப்ப. உருப்படியா ஒரு வேலையாவது செய்றீயா? எதைப்பத்தியாவது கவலை இருக்கா உனக்கு? உன் விருப்பத்துக்கு வர, போற, சாப்புடுற, தூங்குற? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? உனக்கும் சேர்த்து ரவிதான் பாவம் நேரங்காலம் பாக்காம உழைச்சு கொட்டுறான். அதுல உக்காந்து சாப்புடுறோம்னு கொஞ்சமாச்சும் சொரணை இருக்கா? காலைல அவன் சட்டையை அயர்ன் பண்ணி கொடுக்காம எங்க போய் தொலைஞ்ச? பாவம் புள்ள சாப்பிடாம ஒழுங்கான துணி கூட போடாம வேலைக்கு போனான்.”
சுலோவின் புலம்பலை சிறிதும் பொருட்படுத்தாமல் சட்டையை நன்கு துவைத்து அலசியவன் அதை முறுக்கிப் பிழிந்து அங்கிருந்த கொடியில் நன்கு உதறி காயப்போட்டான். சட்டை கீழே விழாமல் இருக்க சட்டை பொத்தானையும் போட்டுவிட்டு உள்ளே நுழைய முனைய,
அவனை வழிமறைத்த சுலோ, “நான் இவ்ளோ பேசுறேன் கொஞ்சமாச்சும் காதுல வாங்குறியா நீ? அப்படியே அப்பனை மாதிரி நிக்குறது.” என்று குதற, தந்தையுடன் ஒப்பிடப்பட்ட துவேஷத்தில்,
“தினமும் நீ எனக்கு பழைய சோறுதான போடுற… அதான் சொரணை பத்தலை போலிருக்கு… காரசாரமா உப்பு போட்டு சோறு போடு, சொரணை வருதான்னு பாப்போம்.” குரல் உயரவில்லை என்றாலும் விழியை கூர்மையாக்கி சொற்களில் அழுத்தம் கூட்டி அவன் தீட்டிய பதிலில் சற்றே வாயடைத்து போன சுலோச்சனா அவனுக்கு வழிவிட, துண்டை உதறி தோளில் போட்டபடி அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.
பேச்சிழந்து நின்றதோ சில நொடிகள் தான் என்றாலும் தன்னை மீட்டெடுத்துக்கொண்ட சுலோ கதவை தட்டி, “இப்படி பேசி என் வாயை வேணும்னா அடைக்கலாம். உண்மையை, ஊர் வாயை எப்படி அடைப்ப? எந்தவொரு ஒரு விசேஷத்துக்கும் நிம்மதியா போக முடியல. மணி என்ன பண்றாண்ணு தான் கேக்குறாங்க. பதில் சொல்ல முடியல… உன்னால ரவிக்கு பொண்ணு கொடுக்க கூட யோசிக்குறாங்க.” என்று புலம்ப,
படக்கென கதவைத் திறந்த மணியோ வேறு உடை மாற்றிக்கொண்டு வெளியே செல்லத் தயாராய் இருந்தான். அதுவரை புலம்பிய சுலோ புலம்பலை நிறுத்தி கேள்வியுடன், “எங்க போற? ஒழுங்கா ரவி சட்டையெல்லாம் இஸ்திரி போட்டு வச்சிட்டு எங்க வேணும்னாலும் போ.” என்க, பல்லை கடித்த மணி,
“எனக்கு வேலை இருக்கு… சும்மா தினமும் இதே பாட்டை பாடிட்டு இருக்காதா. ராத்திரி எவ்ளோ நேரம் ஆனாலும் உன் புள்ளை துணியை அயர்ன் பண்ணி வச்சிட்டு தூங்குறேன். போதுமா தாயே? இப்போ நான் வெளில போலாமா?” என்று கேட்டு நிற்க,
“புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கியா?” என்று ஆர்வமுடன் கேட்டார் சுலோச்சனா.
“இன்னும் இல்லை. ஆனா கேட்டிருக்கேன், கிடைச்சுடும்.” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மணி.
அதே நேரம் அடுத்த வீட்டிலும் மணி தான் அவலாய் அம்மா மகள் பல்லில் மெல்லப்பட்டிருந்தான்.
“விடு யாழிமா… பெருசா பிரச்சனை எதுவும் ஆகாம இதோட முடிஞ்சுதுன்னு சந்தோஷப்படு. ஏன் திரும்ப அதையே யோசிக்கிற?” என்ற மைனா மகளுக்கு சூடான காபியை நீட்டினார்.
அதை வாங்கிப் பருகியவள், “மேட்டர் அதில்லை அம்மா… காலைல தினம் சுப்பிரபாதம் பாடுறாங்கல்ல அவங்க பையன் அவன்.”
“யாரை சொல்ற நீ?”
“ம்மா அதான் தினம் அலாரம் வைக்காமலே என்னை எழுப்பி விடுறாங்களே இந்த பக்கத்து வீட்டு அம்மா… அவங்க பையன் தான். அம்மாவும் பையனும் விடிஞ்சா போதும் அந்த கத்து கத்துறாங்க… இதோ இப்போ கூட அந்தம்மா கத்துறது கேக்குது.” காதை தேய்த்துவிட்டாள் யாழினி.
“அவங்க ஏதோ பண்ணிட்டு போகட்டும்… நம்ம காதுல வாங்காம இருந்துக்கனும்னு நான் முடிவு பண்ணிட்டேன்.”
“அவன் அப்படித்தான் இருக்கான். எதையும் காதுல வாங்காம. அதான் அந்தம்மா அப்படி கத்துது போலிருக்கு.” அவன் சுத்தமாய் தன்னை மதிக்கவில்லை என்ற கடுப்பு அவ்வப்போது வெளிப்பட்டது.
“முதல் முறை கேட்கும்போது கசக்கும், கடுப்பாகும். ஆனா திரும்பத்திரும்ப கேட்டா மரத்து போய்டும் யாழிமா. அப்படியே பழக்கமாகிடும் அப்புறம் ஒன்னும் தெரியாது. நீ இதெல்லாம் காதுல வாங்கி தேவையில்லாம டென்சன் ஆகாத. நமக்கு எதுக்கு அடுத்தவங்க வம்பு?” கண்டுகொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும் என்ற தன் மாற்றத்தை மகளிடமும் புகுத்த முயல யாழி வினாவுடன் புருவம் உயர்த்தினாள்.
“காலையில என்னவிட அதிகமா புலம்பிட்டு இப்போ என்ன அப்படியே பல்டி அடிக்குற மை அன்னா?”
“உன் அன்னாக்கு உன் அண்ணாவின் அறிவுரை மகளே. அக்கம்பக்கம் எல்லாம் கண்டுக்க கூடாதாம் அப்போ தான் நாம நிம்மதியா இருக்கலாமாம்.” மகன் சொன்னதை அச்சு பிசகாமல் மகளிடம் ஒப்புவிக்க,
“வந்துட்டான்னா அவன்? சத்தமே காணும்?” என்ற கேள்வியே மகளிடம்.
“வந்துட்டு ப்ரண்டை பார்க்க போயிருக்கான்.”
“எப்படி சீக்கிரம் வந்தான்? அவன் ஆபிஸ் லேட்டாதான முடியும், அங்கிருந்து வீட்டுக்கு வரவே ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுமே.” கேள்விகள் மட்டும் அவளிடம் பெருகிக்கொண்டே இருக்க, அலைபேசியில் அண்ணனுக்கு அழைப்பு விடுத்தபடி வாயிலுக்கு வந்தாள்.
மறுபுறம் அழைப்பு உடனே ஏற்கப்பட்டது, “என்ன யாழிமா வீட்டுக்கு வந்துட்டியா?”
“கிளைன்ட் மீட்டிங்காக கிளைன்ட் ஆபீஸ் போயிருந்தேன். அப்படியே அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்.” என்ற அவனின் பதிலுக்கு இவளது எதிர்வினையோ,
“சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்பதாய் மாறியது சிகப்பு சட்டைக்காரன் நீலச்சட்டையில் தன் வீட்டை கடந்து போவதை பார்த்ததும்.
காலடிகளை வேகமாக எடுத்து வைத்தவள் கேட்டை பிடித்து நின்று, “ஹலோ ப்ளூ ஷர்ட்…” என்று அழைக்க இம்முறை பட்டென திரும்பிப் பார்த்து உச்சி கொட்டினான்.
அவள் பேசும் முன் இவனே முந்திக்கொண்டு, “என்னங்க பிரச்சனை உங்களுக்கு? வண்டி ஓட்டத் தெரியாம என் மேல வந்து இடிச்சிட்டு சாரி சொன்னா எல்லா சரின்னு ஆகிடுமான்னு நான் சண்டை போடணுமா?” என்று கடுப்படிக்க, அவள் சினம் சிக்கென மேலேறியது.
“சண்டை போடணும்னா உங்க வீட்டுக்குள்ள மட்டும் போடுங்க. எங்களுக்கு கேக்குற மாதிரி தினம் கத்தி டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லத்தான் கூப்டேன்.” என்று கறாராக எதிர்ப்பு கொடி தூக்கினாள் மங்கை.
“என்ன?” புருவச் சுருக்கத்தால் நெற்றியில் கோடு விழ அவளை நெருங்கி வந்தான், “என்ன சொல்ல வரீங்க புரியல?”
“என்ன புரியல? தினம் சூரியன் உதிக்குதோ இல்லையோ உங்க வீட்ல சச்சரவு முந்திகிட்டு முன்னாடி வந்துருது. நீங்க உங்க வீட்டுக்குள்ள என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. ஆனா பக்கத்துல இருக்குற எங்களை தொந்தரவு பண்ற மாதிரி ஏன் நடந்துக்குறீங்க? நாங்க எல்லாம் இங்க குடி இருக்க வேண்டாமா?” சொற்களுக்கு ஏற்ப அவளது விரலும் நடனமாடியது.
முதலில் அவள் மன்னிப்பு வேண்டி தன் வீடு முன் வந்து நின்ற போது அவள் எப்படி தன் வீட்டு வாசலில் என்ற சந்தேகம் எழுந்தது, அது இப்போது தெளிவாகி விட மணி குரலை தாழ்த்தினான்.
“உங்களை இங்க இருக்க வேண்டாம்னு யாருங்க சொன்னது? சொல்லப்போனா எங்க வீட்டுக்கு அந்த பக்கம் இருக்குறவங்க யாரும் இதுவரைக்கும் ஒன்னும் சொன்னது இல்ல நீங்க தான் இப்படி சொல்றீங்க.” அவளின் கடைசி கேள்விக்கு மட்டும் பதில் சொன்னவன் அவளையே மடக்கி மேலும் வினா எழுப்பினான்.
“யாரும் சொல்லலைன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? எங்களுக்கு நீங்க பேசுறது சண்டை போடுறது தொந்தரவா இருக்கு. இதுக்கு ஒரு முடிவை சொல்லிட்டு போங்க.” என்று அடமாய் விடை வேண்டி நின்றாள்.
“ம்ச்… என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது. என் குரல் என் வீட்டை தாண்டி உங்களுக்குக் கேக்காது. போதுமா?” என்று தன் அளவில் மட்டுமே வாக்கு கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி இரண்டடி எடுத்து வைத்து பின் திரும்பி அவள் முன் வந்து, “உங்க சாரியை கண்டுக்காம போனதுக்கு சாரி மேடம். டக்குனு உங்கள என் வீட்டு வாசல்ல பார்த்ததும் யாருன்னு புரியல.”
“இடிச்சப்போ நான் சொன்ன சாரியை நீங்க காதுல வாங்கி இருந்தா நான் ஏன் உங்களை பார்த்ததும் உங்க வீட்டுக்கே வந்திருக்க போறேன்?” யாழினியும் தன் செயலுக்கான காரணத்தை முன்வைக்க, பேச்சு இரண்டொரு நொடி நீண்டது.
“அடி எதுவும் படல, சரி பிரச்சனை வேணாம்னு வந்துட்டேன். மத்தபடி நீங்க அங்க சாரி சொன்னதை நான் கவனிக்கல. சரிங்க நான் கிளம்புறேன்.” என்று பேச்சை கத்தரித்து நடையை கட்டினான் மணிகண்டன்.