அன்று அலுவலகம் முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லாமல் வண்டியை நேராக மணி வேலை செய்யும் கடைக்கு செலுத்தினாள். இவளைக் கண்டதும் அங்கு வேலை செய்யும் நபர் பத்து நிமிடத்தில் ஒவ்வொரு தட்டாய் எடுத்து வந்து அவள் மேசையில் அடுக்கினான்.
பாவையின் பார்வையோ மேசையை விடுத்து அக்கடை முழுதும் சுற்றி சுற்றி வந்தது. விழிமணிகள் மணியை ஆவலாய் தேட அவன் சிக்காமல் போக்கு காட்டினான். பொறுத்து பொறுத்து பார்த்தவள் அனைத்து உணவும் மேசைக்கு கொண்டு வந்து வைத்தவனை ஏறிட்டு, “நான் சாப்பாடு கேக்கவே இல்லையே? ஆர்டர் எடுக்காமலேயே எல்லாத்தையும் கொண்டு வந்திருக்கீங்க?” என்று கேட்கவும் தயங்கிய அந்த நபர்,
“மேம்! வழக்கமா நீங்க இதெல்லாம் தான் ஆர்டர் பண்ணுவீங்க?” என்று இழுத்தான். வந்த வேலையை விடுத்து பிரச்சனை செய்து நேரத்தை கடத்த விரும்பாது,
“உங்க கடையில ஒர்க் பண்ற மணிகண்டன் எங்க? லீவா இன்னைக்கு?” என்று வந்த காரணம் உணர்த்தினாள்.
ஆர்வக்கோளாறில் அனைத்தையும் கொண்டு வந்து அடுக்கிய அந்த சர்வர் இவள் சிக்கலை இழுக்கவில்லை என்றதும் பெருமூச்சிழுத்து ஆசுவாசமாய் பதில் உரைத்தான், “அவர் வேலையை விட்டு நின்னுட்டாரு மேம்.”
அவனின் நிலைக்கு எதிர்பதமாய் அதிர்ச்சியுற்றவள், “என்ன? எப்போலேந்து?”
“ஒரு வாரமாச்சு மேம். ஒரு மாசம் கூட முழுசா வேலைல இல்ல பட்டுனு விட்டுட்டாரு.”
ஓரிரு நொடி யோசித்தவள் அவனை எப்படி தொடர்பு கொள்வது என்று குழம்பி, “அவரோட நம்பர் கிடைக்குமா?” என்று அவனையே வேண்டினாள். நினைத்தால் வீட்டிற்கே சென்று அவனிடம் பேசிவிடலாம் ஆனால் அப்படி சட்டென அவர்கள் வீட்டு வாசலில் சென்று நிற்க அவள் விரும்பவில்லை.
“பர்சனல் டீடைல்ஸ் ஷேர் பண்ணலாமான்னு தெரியல. உங்களுக்காக சொல்றேன்.” என்று மணியின் அலைபேசி எண்ணை பகிர, யாழினி அலைபேசியில் பதிந்து கொண்டாள்.
அங்கிருந்து நகராது அவள் முகத்தையே அந்த ஆடவன் பார்க்க, என்னவென்று யாழினியும் வினவினாள்.
“உங்களை கேக்காம நான் மெனுல இருக்குற எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்க கூடாது. ஓனர்கிட்ட சொல்லிடாதீங்க… பிரச்சனையாகிடும்.” என்று தயங்க யாழினி எப்போதும் போல் அனைத்தையும் பார்சல் வாங்கிச் சென்று விநியோகித்துவிட்டு வழக்கமாய் அவர்கள் சந்திக்கும் இடமான பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள்.
எப்போதும் பொறுமையாய் ஒவ்வொன்றாய் ஆர்டர் செய்து கடை அடைக்கும் நேரம் வரை கடையிலே அமர்ந்திருப்பாள். இன்றோ அவள் சென்ற நோக்கம் மணிகண்டன் என்பதால் அவன் இல்லையென்றதும் நேரமே கிளம்பி வந்திருக்க, பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமிருந்தது. வாகன நெரிசலும் பெருகியிருக்க என்ன செய்வது அவள் நின்று யோசிக்க கூட இடமின்றி ஹாரன் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, வேறு வழியின்றி வீட்டிற்கு கிளம்பினாள்.
வண்டி வீட்டை நெருங்கியதும் பாவை பார்வை தானாய் மணி வீட்டின் மீது பதிந்து மீண்டது. ஏன் வேலையை விட்டான் என்ற காரணம் அறியும் ஆவல் ஒருபுறம் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஒருபுறம் என அக்கணம் அவனது தரிசனம் தேவைப்பட்டது மங்கைக்கு.
‘கடைக்கு நான் வருவேன்னு தெரியாதா சொல்லாம கொள்ளாம வேலையை விட்டிருக்கான் பக்கி…’ என்று மனதில் அர்ச்சிக்க, இவள் வருவாள் என்று தெரிந்துதானே வேலையை விட்டே இருக்கிறான் என்று தெரிந்தாள் என்ன செய்வாளோ யாழி.
இவள் இப்படி வீட்டிற்குள் செல்லாமல் வாசலிலேயே சிந்தையில் மூழ்கி நிற்க, இவள் வண்டி சத்தம் கேட்டதும் முத்து வந்து கதவை திறந்துவிட்டு, “நான் உள்ள ஏத்தி வச்சிடுறேன் நீ உள்ள போய் ரெஸ்ட் எடு யாழி மா.” என்க, தந்தையின் குரலில் தன்னிலை உணர்ந்து வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்ற சில நிமிடங்களில் யாழினியின் கையில் சுட சுட காபி மணந்தது.
“ஸ்நாக்ஸ் கொடுமா பசிக்குது.” காபியின் மணத்தை உள் இழுத்தபடி யாழினி சோர்வுடன் சிற்றுண்டி கேட்க, அதுவும் தயாராய் அவள் கையில் வந்தமர்ந்தது, “உனக்கு புடிக்கும்னு அப்பா வாங்கிட்டு வந்தாரு.” என்ற கொசுறு செய்தியுடன்.
‘என்னடா நடக்குது இங்க?’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
“இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து கால் பண்ணாங்க யாழிமா. நிச்சயதார்த்ததுக்கு நாலஞ்சு தேதி குறிச்சி கொடுத்திருக்காங்க. நமக்கு எது தோது படுதுன்னு பார்த்து சொல்ல சொல்லி இருக்காங்க.” என்று முத்து தகவல் தெரிவிக்க, யாழினி இன்னும் சோர்ந்து போனாள்.
“எனக்கு வேண்டாம் அப்பா.”
“நாங்க உனக்கு கெடுதலா பண்ணுவோம்? நீயும் மாப்பிள்ளைகிட்ட பேசுனதான யாழிமா? அவரும் ஒத்துகிட்டாரு தான?” என்று முத்து பணிவாய் பேச, யாழினி மறுப்பாய் தலையசைத்தாள்.
“அவர் எங்க ஒத்துக்கிட்டாரு? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனா அப்பா அம்மாக்கு தெரிஞ்சு அவங்க இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா என்னால மறுக்க முடியாதுனு சொல்றார். இவரு எப்படி எனக்கு சப்போர்ட்டா இருப்பாரு?”
“கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரும் அப்படிதான் இருப்பாங்க. உனக்கு எங்களை கஷ்டப்படுத்த கூடாதுனு தோனுற மாதிரி அவருக்கும் தோணும்ல. போக போக எல்லாம் சரியாகும். உனக்காக அவங்க வீட்ல பேசுவாரு.” முத்து மகளை சமாதானம் செய்ய, மகள் மனம் சமனடையவில்லை.
“அதெப்படி மாறுவாருனு நீங்க உறுதியா சொல்றீங்க? அவரு மாறாமலும் இருக்க வாய்ப்பு இருக்கு. உறுதியா தெரியாம என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது.”
“அப்போ அவங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டா உனக்கு சம்மதமா?” என்று முத்து சுற்றிவளைக்க,
“முதல்ல பேசுங்க அவங்க ஒத்துக்கிட்டா பாக்கலாம்.” மறுக்க காரணம் கிடைக்கவில்லை யாழிக்கு.
போனை எடுத்துக்கொண்டு முத்து நகர்ந்து செல்ல, இங்கு மைனாவிடம் பாய்ந்தாள் யாழினி.
“என்னை ஒத்துக்க வைக்கணும்னு அப்பா தீவிரமா இருக்காரு நீ என்ன பார்த்துகிட்டு சும்மா இருக்க? உனக்கு தெரியாத எனக்கு என்ன வேணும்னு? பேசாம அவர் வாயையே பாத்துட்டு இருக்க? உன்கூட சேர்ந்து அந்த யாழனும் வாய் திறக்க மாட்டேங்குறான்.” என்று பொரிந்தாள் மகள்.
“அவரு பிடிவாதமா இருக்கும் போது நான் என்ன செய்ய முடியும் யாழிமா? மாப்பிளையோட அப்பா உங்கப்பாவோட பால்ய சிநேகிதர். சின்ன வயசுல அப்பாக்கு நிறைய உதவி பண்ணி இருக்காராம். அப்போவே அவரு பையனுக்கு உன்னை கட்டணும்னு ரெண்டு பேருமே விருப்பப்பட்டாங்க. நீங்க எல்லாம் வளர்ந்த பிறகு இதெல்லாம் மாறிடும்னு நினைச்சேன். ஆனா ரெண்டு பேருமே அவங்க ஆசையை மறக்கல.” என்று காரணத்தை நீட்டி முழக்கினார் மைனா.
“அவரு ஆசைக்கு நான் பலிக்காடா?” என்று மகள் பாய,
“நான் என்னமா செய்யட்டும்? நீயும் யாழனும் சின்ன புள்ளையா இருக்கும் போது அப்பாக்கு வேலை போயிடுச்சு, புது வேலை கிடைக்க மூணு மாசம் ஆச்சு. அந்த மூணு மாசமும் நாம வயிறார சாப்பிட உங்கப்பா பிரென்ட்தான் உதவுனாரு. அந்த நன்றியை அப்பா மறக்கல.”
“அதுக்குன்னு என்னை தூக்கி கொடுத்துடுவீங்களா? எனக்கு என்ன வேணும்னு பிடிவாதமா இருக்கச் சொன்னதே நீதான். நான் பிடிவாதமா போராடும் போது நீ சப்போர்ட் கூட பண்ண மாட்டேங்குற? அப்படியே அப்பா சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்க?” மகளின் கேள்வியில் தலைகுனிந்தவர்,
“என் பேச்சை கேட்டிருந்தா நாம எப்போவோ வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கலாம். சொல்ல சொல்ல கேக்காம அவங்க தம்பிகளுக்கு செய்றேன்னு எல்லாத்தையும் கொடுத்துட்டாரு உங்கப்பா. வேலை போனதும் ஒருத்தரும் நமக்கு உதவ முன்வரல. அப்போ அப்பா பிரெண்ட்தான் நமக்கு உறுதுணையா இருந்தாரு. என்னால பட்டுனு இந்த விஷயத்துல எதிர்த்து பேச முடியல யாழிமா. வேற யாரை இருந்தாலும் நான் பேசி இருப்பேன். அதோட மாப்பிள்ளையோட அம்மாவும் அமைதியானவங்க. உன்னை அவங்க பொண்ணு மாதிரி பாத்துப்பாங்க.” என்று மைனா பல்டி அடிக்க, மகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“நீயும் எல்லாத்துக்கும் ஜால்றா அடி.” என்று பல்லைக்கடித்தவள் விருட்டென எழுந்து அறைக்குச் செல்ல முயல, அவர்கள் வீட்டை தாண்டி மணி நடந்து செல்வது போல் தெரிய சட்டென வெளியே சென்றாள்.
மணியை கூப்பிட்டு நிறுத்துவதற்குள், “இப்போ அப்படிதான் பேசுவா. கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தைனு ஆகிட்டா எல்லாத்தையும் மறந்து மாறிடுவா. நீ இப்போ மட்டும் சரினு சொல்லு. அப்படியே மாறலைன்னாலும் அவள் லோனுக்குன்னு குடுக்குற பணத்தை வாங்கி நான் திரும்ப உன்கிட்ட குடுத்துடுறேன், யாழன் பாத்துப்பான் மிச்சத்தை.” என்று முத்து பேசுவது நாராசமாய் விழுந்தது.
வெறுத்துப்போனவள் கதவை உதைத்துவிட்டு மின்னலென உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டாள்.
மின்னலென உள் சென்ற மகளை கவலையுடன் பார்த்த மைனா கணவரைத் தேடி வெளியே வர, அவர் இன்னும் அலைபேசியில் பேசியவண்ணம் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
அவரை வழிமறித்த மைனா அழைப்பை துண்டிக்கச் சொல்லி சைகை செய்ய, தான் பேச நினைத்ததை பேசிவிட்டே வைத்தார் முத்து.
“என்ன பேசுனீங்க? யாழி வெளில வந்துட்டு உடனே உள்ள போய் கதவை சாத்திக்கிட்டா.” என்று பதட்டமாய் பேச,
“எல்லா பிரச்சனையும் சரியாகிடும். என் தோஸ்த்துனா சும்மாவா? நான் யாழிமா நினைக்குறதை எடுத்து சொன்னதும் புரிஞ்சிக்கிட்டான். கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும். யாழிமா நல்லா இருப்பா.” என்று பூரித்துப் பேச, மைனாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ஏன் இப்படி முழிக்குற? அவ நல்லா இருந்தா உனக்கு சந்தோஷம் இல்லையா?” என்று மனைவியை கேள்வியாய் பார்க்க, மகள் சந்தோஷமாய் இருந்தால் அவருக்கு கசக்கவா போகிறது?
“யாழிமா மனசுக்கு பிடிக்காத எதையும் செய்யாதீங்க.” என்று மட்டும் மைனா சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அறையின் உள்ளே தகித்துக் கொண்டிருந்த யாழினி அலைபேசியில் மணியை தொடர்ப்பு கொள்ள, ஒன்றிரண்டு அழைப்பில் எடுத்தான்.
“ஹலோ யாரு?”
“எனக்கு என்ன செய்யுறதுனு தெரியல.” என்றாள் மொட்டையாய்.
இதற்கு மேல் பேசுவது யாரென்ற அறிமுகம் அவனுக்கு தேவையா என்ன?
“மறுபடி முதலிலிருந்தா?” என்று பதறியவன், “நான் வெளில இருக்கேன் அப்புறம் பேசுறேன்.” என்றுவிட, யாழியின் முகம் சுருங்கி குரலும் உள்ளே சென்றது, “ஃப்ரீயா இருக்கும்போது பேசுங்க.”
“பை.” என்று இவன் வைத்துவிட்டு கால் போன போக்கில் நடந்தான்.
மூளை அவளது குரலையும் முகத்தையும் ரீவைண்ட் மோடில் ஓடவிட உளம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மறுத்தது.
‘இந்த பொண்ணு என் நம்பரையும் வாங்கிடுச்சே. எப்படி தப்பிக்கிறது?’ என்றுதான் அவன் மனதில் ஓடியது.
இரண்டொரு நாட்கள் இப்படி அவள் அழைப்பதும் வெளியே இருக்கிறேன் என்று இவன் மறுப்பதும் வாடிக்கையாகிவிட, வீட்டிலும் காரிகை மனமும் கனவும் கானலாக, பொறுக்க மாட்டாமல் அன்று மாலை அலுவலகம் முடித்து மணிக்கு மணி அடித்தாள்.
“இன்னைக்கும் வெளில வேலையா இருந்தாலும் பிரச்சனை இல்லை. வீட்டுக்கு வந்ததும் சொல்லுங்க நான் உங்க வீட்டுக்கே வந்து பாக்குறேன்.” என்று மிரட்டிவிட, மணிகண்டன் மிரண்டுவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
“வீட்டுக்கு எல்லாம் ஒன்னும் வரவேண்டாம். நாம எப்போதும் சந்திக்கிற பஸ் ஸ்டாப்பிலே மீட் பண்ணலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்.” என்று அலைபேசியை வைத்தவன் இருக்கும் இடத்திலிருந்து பஸ் பிடித்து அங்கு சென்றான்.
அங்கு ஏற்கனவே இவனுக்காய் காத்திருந்தாள் அவள்.
“ஏன் இப்படி?” என்ற கேள்வியுடனே மணிகண்டன் அவளை நெருங்க,
“என்னோட பீலிங்ஸ்ஸ ஷேர் பண்ணி தெளிவா முடிவெடுக்க எனக்கு ஹெல்ப் பண்ண உங்களை விட்டா யார் இருக்கா?” என்று குறை படித்தவள் மாப்பிள்ளையிடம் பேசியது முதல் முத்து பேசியதை கேட்டது வரை அனைத்தையும் பகிர,
‘திரும்பவுமா?’ என்று பார்த்தான் மணி.
“எனக்கு தெரிஞ்சு இதுக்கு மேல உங்க வீட்ல பேசி ஒரு பயனும் இல்லை. உங்க அப்பாவோட பிரெண்டுனு சொல்றீங்க அதனால உங்களை அந்த வீட்டு பொண்ணாதான் பாப்பாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ண பாருங்க. அவங்க உங்களை கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க.” என்று வழக்கம் போல் அவன் தெளிவுரைக்க, யாழினி மனம் அதை ஏற்கவே இல்லை.
“எப்போதும் போல நீங்க எங்க அப்பா கட்சிதான்.”
“வேற என்னங்க செய்ய முடியும்? உங்களை நல்லா புரிஞ்சிக்கிறவங்க கூட இல்லாத வரைக்கும் எதுவும் சாத்தியமில்லை. நீங்க அந்த மாப்பிள்ளைக்கிட்ட திரும்ப பேசுங்க. நீங்க வீடு வாங்க ஆசைப்படுறது அவருக்கு ஓகே தான! அவரு வேண்டாம்னு ஒன்னும் சொல்லலையே. அவரு மனசு வச்சா எல்லாம் நடக்கும். உங்களை புரிஞ்சிக்குற துணை அமைஞ்சா எதுவும் சாத்தியம்.” என்று அவன் சலிப்பாய் பதில் உரைக்க, சிறு இடைவெளி விட்டு அவள் அடுத்து வீசிய அணுகுண்டில் நிலைகுலைந்து வாயடைத்துப் போனான் மணிகண்டன். அவளுக்கு எப்போதும் தெளிவு வழங்கும் அவன், தெளிய வழியின்றி பேந்த முழித்து நின்றான் அவள் சென்ற பின்பும்.
“அந்த துணை ஏன் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட நீங்களா இருக்க கூடாது MK? உங்களை விட என்னை யாரு பெட்டரா ஹேண்டில் பண்ண முடியும்? யோசிச்சு சொல்லுங்க.”