அந்த நாளும் வந்தது. மீனாவும் சந்தோஷமாக கிளம்பிச் சென்றாள். பஸ் ஸ்டாண்டுக்கு அவளை அழைக்க வெண்ணிலாவின் தந்தை சிதம்பரம் தான் வந்திருந்தார். அவரை கல்லூரியில் படிக்கும் போதே அவளுக்கு நன்கு தெரியும் என்பதால் அவரைக் கண்டதும் “அப்பா எப்படி இருக்கீங்க?”, என்று சந்தோஷமாக விசாரித்தாள் மீனா.
“நல்லா இருக்கேன் கண்ணு, நீ எப்படி இருக்க? கார்ல ஏறு. பேசிட்டே போகலாம்”, என்றார் சிதம்பரம்.
அவர் அருகில் ஏறி அமர்ந்த படி “நல்லா இருக்கேன் பா. அப்புறம் ரொம்ப தேங்க்ஸ் பா. நீங்க தான் எனக்கு இந்த வேலை வாங்கித் தந்தீங்க. அன்னைக்கே உங்க கிட்ட போனைக் கொடுக்க சொன்னேன். ஆனா நீங்க பிசியா இருக்கீங்கன்னு வெண்ணிலா சொல்லிட்டா”, என்றாள் மீனா.
“என்ன மா சொல்ற? என்ன வேலை? எனக்கு ஒண்ணும் புரியலையே”
“மீனா நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலையே மா. நீ வேலைக்கு போறியா? எங்க வேலைக்கு போற? ஆமா சபாபதின்னா யாரு?”
“அப்பா….. அப்ப நீங்க எனக்கு ரெக்கமண்ட் பண்ணலையா? வெண்ணிலா நீங்க ரெக்கமண்ட் பண்ணினதா தானே சொன்னா”
“இந்த சின்னக் கழுதை ஏதோ விளையாடிருக்கு போல மா. நான் வேலை வாங்கித் தந்தா இந்த மதுரைல தான் வாங்கித் தந்திருப்பேன். அதுவும் கவர்ன்மெண்ட் வேலை தான் வாங்கித் தந்துருப்பேன். சென்னைல எதுக்கு வேலை வாங்கித் தரப் போறேன்? ஏதாவது கவர்ன்மெண்ட் வேலைக்கு போட்டாங்கன்னா பரீட்சை எழுதிட்டு சொல்லு மா. முன்ன பின்ன ஆனாலும் நான் வேலை வாங்கித் தரேன்”, என்று புன்னகையுடன் சொன்னார் அவர்.
“சரிப்பா”, என்று சொன்ன மீனாவுக்கு மனம் முழுவதும் அதிர்ந்து போய் இருந்தது.
வெண்ணிலாவா தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றினாள் என்று எண்ணி அவள் கண்கள் கூட கலங்கி விட்டது. அவளைப் பார்க்காமல் அப்படியே இங்கிருந்து ஓடி விடலாம் போல இருந்தது. ஆனால் சிதம்பரம், மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பற்றி பெருமை பேசிய படியே வர அதை கேட்டுக் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை மீனாவுக்கு. அதனால் அமைதியாக அமர்ந்திருந்தாள். வீடு வந்ததும் அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா. ஆனால் மீனாவிடம் தன்னாலே ஒரு ஒதுக்கம் வந்திருந்தது.
மாப்பிள்ளையை பார்க்க போகும் எதிர்பார்ப்பு, தோழியைக் கண்ட சந்தோஷம் என மிகவும் சந்தோஷமாக இருந்த வெண்ணிலாவுக்கு மீனாவின் விலகல் புரியவே இல்லை. தன்னுடைய தந்தை உண்மையை உடைத்திருப்பார் என்று அவள் யோசிக்கவே இல்லை. அதனால் தோழியிடம் சந்தோசமாகவே உரையாடினாள். அவள் சந்தோசத்தைக் கண்ட மீனாவும் அதைக் கெடுக்க மனதில்லாமல் சாதாரணமாக அவளிடம் பேச முயன்றாள்.
அதன் பின் நேரம் நிற்காமல் சென்றது. வெண்ணிலாவுக்கு அலங்காரம் செய்வதில் பாதி நேரம் கழிந்தது. அதன் பின் மாப்பிள்ளை வீட்டினர் வந்தார்கள். மாப்பிள்ளை கோகுல் வெண்ணிலாவுக்கு பொருத்தமாக அழகாக இருந்தான். அவன் கண்களும் வெண்ணிலாவை காதலோடு நோக்கியது. அவர்கள் இருவரையும் கண்ட மீனாவுக்கு ஏன் தனக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்ற எண்ணம் தான் வந்தது.
நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்தவுடன் அவர்கள் கிளம்பிச் சென்று விட வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.
அப்போது “சரி டி, நான் கிளம்புறேன்”, என்றாள் மீனா. அவளுக்கு வெண்ணிலாவிடம் கேட்க பல கேள்விகள் இருந்தது தான். ஆனால் கோகுலை நினைத்து கல்யாணக் கனவில் பூரிப்பான முகத்துடன் இருந்த வெண்ணிலாவின் சந்தோசத்தைக் கெடுக்க மனதில்லாததால் தான் கிளம்பி விட்டாள் மீனா.
“என்ன டி அதுக்குள்ள போற? நைட் இருந்துட்டு நாளைக்கு போகலாம்லா?”
“நாளைக்கு ஆபீஸ் போகணும்”
“அப்ப சாயங்காலம் வரைக்குமாவது இரு டி. உடனே போறேன்னு சொல்ற?”
“இல்லை நிலா, இப்ப கிளம்பினா தான் நைட் போக சரியா இருக்கும். நைட் ரெஸ்ட் எடுத்துட்டு காலைல ஆபீஸ் போக முடியும்?”
“ஆமாள்ள, சரி இப்ப ஆபீஸ் எப்படி போகுது? பிரகாஷ் ஆஃபிஸ்க்கு வந்தாங்களா?”
“அதை பத்தி இப்ப எதுக்கு பேச்சு? நீ உன்னோட உட்பியை நினைச்சு சந்தோஷமா இரு. நான் கிளம்புறேன்”, என்று விலகளுடன் சொல்ல அப்போது தான் மீனா முகத்தை யோசனையோடு பார்த்தாள் வெண்ணிலா.
“என்ன ஆச்சு மீனா? ஏன் என்னவோ போல பேசுற?”
“ஒண்ணும் இல்லை டி நான் கிளம்புறேன்”
“இல்லை உன் மனசுல என்னமோ ஓடுது. என் கிட்ட சொல்ல மாட்டியா? என்ன நடந்துச்சு சொல்லு. ஏதாவது பிரச்சனையா? என்ன விசயம்னு சொல்லு மீனா”
“என்ன விசயம்னு நீ தான் எனக்கு சொல்லணும் நிலா”
“நானா? நான் என்ன சொல்லணும்?”
“என் வாழ்க்கைல இப்ப என்ன நடக்குதுன்னு நீ தான் எனக்கு சொல்லணும்”, என்று மீனா சொன்னதும் அதிர்வாக அவளையே பார்த்த வெண்ணிலா “என்ன டி ஆச்சு ஒரு மாதிரி பேசுற?”, என்று கேட்டாள்.
“உங்க அப்பா கிட்ட இன்னைக்கு காலைல வரும் போது வேலை வாங்கிக் கொடுத்ததுக்காக தேங்க்ஸ் சொன்னேன்”, என்று மீனா சொன்னதும் வெண்ணிலாவுக்கு அனைத்தும் புரிந்து விட்டது. சிதம்பரத்துக்கு தான் எந்த விஷயமும் தெரியாதே. “போச்சு, எல்லாம் சொதப்பிட்டேனே”, என்று வருந்தினாள்.
தோழிக்கு உண்மை தெரிந்ததில் வருத்தமாக இருந்தது வெண்ணிலாவுக்கு. தலை குனிந்த படியே “சாரி”, என்றாள் வெண்ணிலா. “இப்பவாது உண்மையை சொல்லுவேன்னு நினைக்கிறேன்”, என்று கூர்மையாக கேட்டாள் மீனா.
“சொல்றேன்”, என்று ஆரம்பித்து பிரகாஷ் காலேஜுக்கு வந்து தன்னிடம் பேசியதையும் உதவி கேட்டதையும் சொன்ன வெண்ணிலா “அந்த அண்ணன் உண்மைலே நல்லவங்க தான் டி. அவங்க அம்மா பண்ணிண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க? அதனால தான் நீங்க ஒண்ணு சேரணும்னு நான் இப்படி பண்ணினேன். சத்தியமா உன் நல்லதுக்காக தான் டி செஞ்சேன். என்னை மன்னிச்சிரு”, என்று முடித்த வெண்ணிலாவுக்கு மீனா முகத்தில் இருந்த இறுக்கம் திகைப்பைக் கொடுத்தது. இது வரை மீனாவை அவள் அப்படிக் கண்டதில்லை.
“நம்ம கிளாஸ்ல அவ்வளவு பிள்ளைங்க இருந்தாலும் இந்த வெண்ணிலா அப்படிங்குற பேர் தான் என்னை முதல்ல ஈர்த்துச்சு. ஏன்னா என் தங்கை பேரும் வெண்ணிலா தான். அதனால் உன்னை நான் வேற யாரோன்னு நினைக்கவே இல்லை. நமக்குள்ள இருக்குறது நட்பா இருந்தாலும் நான் உன்னை அதுக்கும் மேல தான் நினைச்சு வச்சிருந்தேன். ஆனா நீ கூட எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டல்ல? இவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்ட இருந்து மறைச்சிட்டல்ல?”
“சாரி மீனா….”
“அவன் ஏமாத்தினதை விட நீ ஏமாத்தினது தான் ரொம்ப வலிக்குது டி”
“இல்லை மீனா உன் நல்லதுக்கு தான்…”
“என் நல்லதுக்கு பாக்க நீ யாரு? அதுக்கு என் அம்மா அப்பா இருக்காங்க”
“மீனா”
“பேசாத. இப்படி நம்பிக்கை துரோகம் செஞ்ச உன் கிட்ட நான் இனி பேச விரும்பலை. நான் கிளம்புறேன்”, என்று சொன்ன மீனா வெண்ணிலா எவ்வளவு தடுத்தும் ஒரு ஆட்டோ பிடித்து கிளம்பி விட்டாள். சிதம்பரம் வீட்டில் இல்லாததால் மீனா கிளம்பிச் சென்றதை மற்ற யாரும் கவனிக்க வில்லை.
அவள் சென்று வருத்தமாக இருந்ததால் அறைக்குள் சென்று ஒரு மூச்சு அழுதாள் வெண்ணிலா. பின் பிரகாஷிடம் உண்மையை சொல்ல எண்ணி அவனை அழைத்தாள். ஆனால் அவனுக்கோ லைன் போகவே இல்லை.
என்ன செய்ய என்று தெரியாமல் அவள் கலங்கி போய் அமர்ந்திருக்க அப்போது அவளுக்கு நிச்சயமான கோகுல் அவளை அழைத்தான்.
யாரோ என்று எண்ணி எடுத்த வெண்ணிலாவுக்கு கோகுல் என்றதும் படபடப்பாக இருந்தது. அவன் நட்பு மற்றும் காதலோடு பேச வெண்ணிலாவோ மீனா கோபப் பட்டு போன வருத்தத்தில் அவனிடம் முழு மனதுடன் பேச முடியாமல் திணறினாள்.
தன்னளவுக்கு அவளிடம் ஆர்வம் இல்லாததை உணர்ந்த கோகுல் “ஏன் நிலா உனக்கு என்னைப் பிடிக்கலையா? எங்க அப்பா கிட்ட கெஞ்சி, உங்க அப்பா கிட்ட கெஞ்சி உன் நம்பரை வாங்கி ஆசையா கால் பண்ணினேன். ஆனா நீ சரியா பேச மாட்டிக்க. உனக்கு இந்த கல்யாணம் ஓகே தானே? இல்லை உண்மைலே பிடிக்கலைன்னா சொல்லு. ஒரு பிரண்டா உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன். ஏதாவது பிரச்சனையா?”, என்று உருக்கமான குரலில் கேட்க அவன் பேச்சில் நெகிழ்ந்த வெண்ணிலா அடுத்த நொடி அழுது விட்டாள். அவள் அழ கோகுலுக்கோ பயம் பிடித்துக் கொண்டது. போட்டோவைப் பார்த்தே காதல் வளர்த்த அவனுக்கு அவள் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவாளோ என்று கவலையாக இருந்தது.
“என்ன ஆச்சு நிலா?”, என்று பதட்டத்துடன் கேட்க அடுத்த நொடி மடை திறந்த வெள்ளம் போல மீனாவைப் பற்றியும், அவளுடைய திருமணம் பற்றியும், இப்போது உண்மை தெரிந்து அவள் கோப பட்டு போனதைப் பற்றியும் சொல்லி விட்டாள்.
அனைத்தையும் கேட்ட கோகுலுக்கு அவளை மேலும் பிடித்தது. கூடவே அவளுக்கு தன்னை பிடிக்கும் என்ற உண்மை அறிந்து அவனுக்கு அப்பாடா என்று நிம்மதியாகவும் இருந்தது.
அப்போது கவலையில் இருக்கும் தன்னுடைய வருங்கால மனைவியை தேற்றுவது தான் முக்கியம் என்று புரிய “இங்க பாரு நிலா, உன் பீலிங்க்ஸ் எனக்கு புரியுது, அந்த பிரகாஷ் பக்கமும் புரியுது. ஆனா நாம மீனா பக்கமும் யோசிக்கணும்ல? உண்மை தெரியாதப்ப அவங்க இப்படி தான் ரியாக்ட் பண்ணுவாங்க. உண்மை தெரிஞ்ச அப்புறம் உன் கிட்ட பேசுவாங்க டா”, என்று சமாதானம் சொல்லி வேறு பேச்சை திசை திருப்பி அவளிடம் காதல் பேசி அவளை சிவக்க வைத்து விட்டே போனை வைத்தான். மனதில் இருக்கும் பாரம் நீங்கியதால் நிம்மதியாக படுத்த வெண்ணிலா அடுத்த நொடி நன்கு தூங்கி விட்டாள்.
பஸ் ஸ்டாண்ட் சென்ற மீனாவுக்கு கண்டிப்பாக நாளைக்கு வேலைக்கு செல்ல மனதில்லை. அவளுக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதனால் இப்போது சென்னைக்கு செல்வதா, இல்லை தன்னுடைய வீட்டுக்கு செல்வதா என்ற குழப்பம் வந்தது. பின் தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி விட்டாள். ஒரு இரண்டு நாள் இருந்து விட்டு போகலாம் என்று எண்ணி தான் கிளம்பினாள். பஸ்ஸில் போகும் போது முழுவதும் பிரகாஷை மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டே தான் சென்றாள்.