Skip to content
Post Views: 3,088
மீராவிடம் அர்ஜுன் பிடித்திருக்கா எனக் கேட்க… “முதல்ல யாருக்குன்னு சொல்லுங்க, அப்ப தான் சொல்வேன்.” மீரா சினுங்க… “உன் மேல தான போட்டுப் பார்த்தேன், அப்ப தெரியலையா…. உனக்குத் தான்.” என்றான்.
“எனக்கா…. எனக்கு எதுக்கு அர்ஜுன் இப்ப, ஆருவுக்கு வாங்கலையா?”
“புடவை நல்லா இருக்கா, இல்லையா… அதை மட்டும் சொல்லு.” அர்ஜுன் கேட்க…”மீரா நல்லா இருக்கு.” என்றாள்.
அர்ஜுன் பணம் கொடுத்து புடவையை வாங்கிக் கொண்டு மீராவுடன் வெளியே வந்தவன், “நீ இதை ஆரு கல்யாணத்துக்குக் கட்டிக்கோ என்று கொடுக்க…” மீராவும் சந்தோஷமாக வாங்கிகொண்டாள்.
இருவரும் மதிய உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, மாலில் சுற்றி கொண்டிருந்தனர். அப்போது அர்ஜுன் ஒரு கடையின் டிஸ்ப்ளேவில் இருந்த ஒரு அழகான இரவு உடையைப் பார்த்தான். ஆலிவ் பச்சையில், கழுத்தை சுற்றி சின்னச்சின்ன ரோஜா பூக்கள்…. ரோஸ் நிற நூலினால் அழகாக எம்ராய்டிங் செய்த ஸ்லீவ் லெஸ் நைட்டி. அர்ஜுன் சென்று அதையும் மீராவுக்கு வாங்க….
“ஐயோ என்ன பண்றீங்க? நான் இதெல்லாம் போட மாட்டேன்.”
“சரி நீ இப்ப போட வேண்டாம், நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் போடு.”
“அதுக்கு எதுக்கு இப்பவே வாங்கறீங்க? அப்ப வாங்கிக்கலாம்.”
“என்ன விளையாடுறியா… அப்ப இந்த டிரஸ் கிடைக்கலைனா என்ன பண்றது? எனக்கு இந்த டிரஸ் ரொம்பப் பிடிச்சிருக்கு, அதனால இப்பவே வாங்கிக்கலாம்.” என அர்ஜுன் அந்த உடையை வாங்க… மீரா தலையில் அடித்துக் கொண்டாள்.
மீராவும், அர்ஜுனும் கடையில் வழக்காடி கொண்டிருந்த போதிலிருந்து… அவர்களையே எதிரிலிருந்த கடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தினேஷ், பக்கத்தில் நின்று மும்முரமாகச் சுடிதார் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனாவிடம் திரும்பி, “நான் நினைச்சது சரி தான்.” என்று சொல்ல…. சஞ்சனா அவனைப் புரியாமல் பார்த்தாள்.
தினேஷ் சஞ்சனாவிடம் எதிரில் இருந்த கடையைக் காட்ட….அந்த கடைக்குள் இருந்த அர்ஜுனையும், மீராவையும் பார்த்ததும் சஞ்சனா திகைத்தாள். அர்ஜுன் மீராவோடு வெளியே வந்தவன், அவள் தோளில் கைபோட்டு… காதின் அருகே குனிந்து எதோ ரகசியம் பேசிக்கொண்டே சென்றதை பார்த்த சஞ்சனாவிற்குப் பொறாமையாக இருந்தது.
“நல்ல ஜோடி பொருத்தம் இல்லை…” தினேஷ் சொல்ல… சஞ்சனா ஆமாம் என்று தலை அசைத்தாள்.
“அன்னைக்கு நான் இவங்களைப் பத்தி சொன்னதும், வித்யா சித்தி தவிர மத்தவங்க முகத்தில் எல்லாம் சந்தோஷம் வெளிபடையாவே தெரிஞ்சது. அவங்களுக்கு மட்டும் தான் இவங்க விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறன்.” என்ற தினேஷ் “சரி நீ டிரஸ் பாரு…” என்றான்.
சஞ்சனாவிற்கு இப்போது டிரஸ் வாங்கும் மூட் இல்லை, அதனால் “எனக்கு இங்க எதுவும் பிடிக்கலை, வாங்க வீட்டுக்கு போகலாம்.” எனச் சொல்ல… தினேஷும் சரி என்றான்.
சஞ்சனா கடையில் இருந்து வெளியே வந்ததும் தினேஷிடம் “ரஞ்சனா அக்கா வீட்டுக்கு போகலாமா?” என்று ஆர்வமாகக் கேட்க… அவளைத் திரும்பி கவனமாகப் பார்த்த தினேஷ் “எதுக்கு? அர்ஜுன், மீரா பத்தி சொல்லவா…” என்று நேரடியாகக் கேட்க…. திகைத்த சஞ்சனா சமாளித்துக் கொண்டு “இல்லை, சும்மா தான். இங்க இருந்து அவங்க வீடு கிட்ட தான அதனால தான்.” என்றாள்.
“சரி போகலாம், ஆனா… ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோ…. நம்மால அவங்க குடும்பத்தில எந்தப் பிரச்சனையும் வர கூடாது சொல்லிட்டேன்.” தினேஷ் எச்சரிக்கை செய்ய… சரி என்று தலை ஆட்டிய சஞ்சனா, ச்ச …இனி எப்படி இவங்க விஷயத்தை வித்யா அத்தைட்ட சொல்றது? என்று சிந்தித்தபடி கணவனின் பின்னால் சென்றாள்.
தினேஷும், சஞ்சனாவும் ரஞ்சனா வீட்டிற்குச் சென்ற போது… அங்கே வித்யாவும், கணேசனும் பத்திரிகை கொடுக்க வெளியே கிளம்பி கொண்டு இருந்தனர். இவர்களைப் பார்த்ததும் வரவேற்றவர்கள், ரஞ்சனாவை பார்த்துக்கொள்ளச் சொல்விட்டு வெளியே சென்றனர்.
தினேஷ் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க.. ரஞ்சனா அவர்களுக்குக் கொடுக்க ஜூஸ் எடுக்க உள்ளே சென்றாள். அவள் பின்னே உள்ளே சென்ற சஞ்சனா மெதுவான குரலில், “அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா…இன்னைக்கு அர்ஜுனையும், மீராவையும் ஒரு மால்ல பார்த்தேன். ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்ஸா இருந்தாங்க. ரெண்டு பேரும் லவ் பண்றாங்க போலிருக்கு.” என்று ரகசியமாகச் சொல்ல…
ரஞ்சனா, “அப்படியா” என்றவள், அவள் பாட்டுக்கு ஜூஸ் தயார் செய்ய….. “என்ன கா எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்கேன், நீ அப்படியான்னு சாதரணமா கேட்கிற….”
“இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்ற சஞ்சனா?”
“அத்தைட்ட சொல்ல வேண்டாமா… அப்ப தான அவங்க உஷாரா இருப்பாங்க.” சஞ்சனா விளக்க….
“ஒன்னும் தேவை இல்லை. அர்ஜுனே அத்தைட்ட சொல்லிப்பான். காதலிக்கிறவங்களுக்கு வீட்ல சொல்ல தெரியாதா என்ன? இங்க பாரு நீ இந்த விஷயத்தில தலையிடாதே, அது அவங்க அம்மா பையன் பிரச்சனை அவங்களே பார்த்துக்கட்டும். நீ எதாவது சொன்னா…. அப்புறம் என் தலை தான் உருளும். இந்த விஷயம் எங்க வீட்ல அத்தைய தவிர எல்லோருக்கும் தெரியும்.” ரஞ்சனா பட்டென்று சொல்லிவிட்டு ஜூஸோடு வெளியே சென்றாள்.
ரஞ்சனா கொண்டு வந்து கொடுத்த ஜூஸசை இருவரும் அருந்தி கொண்டிருந்தபோது, அங்கே சூர்யா வந்தான். ஆருவிடம் பேசுவதற்காக வந்தவன், ஹாலில் அமர்ந்திருந்த தினேஷை பார்த்ததும் அவனோடு பேசிக்கொண்டிருந்தான். ரஞ்சனா திரும்ப ஜூஸ் போட உள்ளே செல்ல… ஆருவும் வந்து அவர்களோடு பேசிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் மீரா அங்கு வர…. அவளைப் பார்த்ததும் “அண்ணி…. மீரா வந்திருக்கா அவளுக்கும் ஜூஸ்.” ஆரு குரல் கொடுக்க… ரஞ்சனா கையில் மூன்று க்ளாஸ் ஜூஸ் கொண்டு வந்தாள்.
“எதுக்கு அண்ணி மூன்னு க்ளாஸ்…” ஆரு கேட்க… “இரு தெரியும்.” என்று மட்டும் ரஞ்சனா சொல்ல… அவள் எதிர்பார்த்தது போல் ஐந்து நிமிடம் சென்று அர்ஜுன் வந்தான். அர்ஜுனை பார்த்ததும் எல்லோரும் சிரிக்க… மீரா தெரியாதது போல் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள்.
அர்ஜுன் தினேஷை பார்த்து வாங்க என்றவன், சூர்யாவின் அருகே அமர… ரஞ்சனா அவனுக்கும் ஜூஸ் கொடுத்தாள்.
“எப்படி அண்ணி நான் வரேன்னு தெரியும், ஜூஸ் எல்லாம் போட்டு ரெடியா வச்சிருக்கீங்க…வர வர நீங்க பெரிய ஆளா ஆகிட்டு வரீங்க அண்ணி.” அர்ஜுன் ரஞ்சனாவை வார… ரஞ்சனா பதிலுக்கு, “உனக்கு அண்ணியா இருக்கேனே அர்ஜுன், இது கூடவா தெரியாது.” என்றாள்.
“அப்படியா சொல்றீங்க அண்ணி, என்னால நீங்க பெரிய ஆளா ஆணா எனக்குச் சந்தோசம்” என்றவன், அப்போது தான் மீராவை பார்ப்பது போல் பார்த்து “ஹாய் மீரா, உங்களை நான் பார்க்கவே இல்லை, எப்படி இருக்கீங்க?” என்று வேண்டுமென்றே மீராவை வம்பு இழுக்க… மீராவுக்குக் குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் புரை ஏறியது.
மீராவின் தலையைத் தட்டிய ஆரு, “இங்க பாரு என்னோட ப்ரண்ட வம்பு இழுக்கிற வேலை எல்லாம் வேண்டாம்.” அர்ஜுனை எச்சரிக்க… தினேஷே ஒரு நிமிடம் குழம்பிவிட்டான். நாம இன்னைக்கு மால்ல அர்ஜுனையும், மீராவையும் தான் பார்த்தோமா என்று. அவன் முகத்தைப் பார்த்த சூர்யா… என்ன ஆச்சு தினேஷ்?” என்று கேட்க…
தினேஷ் அர்ஜுனை பார்த்துக் கொண்டே “நாங்க இன்னைக்கு மாலுக்குப் போய் இருந்தோம்.” என்று மொட்டையாகச் சொல்ல… சூர்யாவுக்குப் புரியவில்லை… ஆனால் அர்ஜுனுக்குப் புரிந்துவிட்டது. அவன் உடனே ஒரு மாலின் பெயரை சொல்லி, இந்த மாலா என்று கேட்க…. தினேஷ் ஆமாம் என்றான்.
“நானும், மீராவும் கூட இன்னைக்கு அங்க போயிருந்தோம்.” என அர்ஜுன் சாதாரணமாகச் சொன்னான். தினேஷ் மீராவின் முகத்தைப் பார்க்க அவளும் சாதாரணமாக இருந்தாள்.
தினேஷுக்கு அர்ஜுனோ, மீராவோ தங்கள் காதலை யாருக்கும் மறைக்க நினைக்கவில்லை என்று நன்றாகவே புரிந்தது. அப்போது சூர்யா “டேய் அர்ஜுன், நான் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு, தினேஷ் மீராவை பார்த்திட்டு, அவளை உன்னோட பொண்டாட்டின்னு சொன்னார்.” என்று சொல்ல…
“அப்படியா… இந்தக் கதை எப்ப நடந்துச்சு? எனக்குத் தெரியாதே… விளக்கமா சொல்லு…” அர்ஜுன் கேட்க…சூர்யாவும் சொன்னான்.
அர்ஜுன் எழுந்து சென்று தினேஷின் கையைப் பிடித்துக் குலுக்கியவன், “நீங்க பெரிய ஞானி சார், பின்னாடி நடக்கிறதை முன்னாடியே சொல்றீங்க பார்த்தீங்களா…” என்றான்.
“எதுக்குச் சார்ன்னு சொல்ற அர்ஜுன், சும்மா தினேஷ்னே கூப்பிடு.”
“சரி தினேஷ், நீங்க ரொம்பக் கிரேட்.” அர்ஜுன் புகழ… அங்கே சூர்யாவும், தினேஷும் சேர்ந்து அர்ஜுனை ஓட்டினர். அவர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி, மாற்றிக் கிண்டல் செய்ய… அதைப் பார்த்து மீரா, ஆரு, ரஞ்சனா சிரித்துக் கொண்டிருந்தனர். சஞ்சனா மட்டும் குழப்பத்தில் இருந்தாள்.
Advertisement
error: Content is protected !!