மின்னியையும் அவள் காதலனையும் முதலில் கண்டு கொண்டது சத்யா தான். “ஐய்யோ இவங்களா?” என்ற பரபரப்புத் தொற்றிக் கொள்ள, ஃப்யூஷன் சீஸ் இன்ஃப்யூஸ்ட் சிக்கனை ஆசையாக வாயினுள் கொண்டு செல்ல எத்தனித்த ராகாவின் கைகளைத் தட்டி, அவளிடம் மின்னியைக் காட்டவும் ராகாவின் கண்கள் அதிர்ச்சியில் குத்திட்டு சத்யாவை பயத்துடன் ஏறிட்டன.
சத்யாவின் முகமும் சில நொடி வெளிரித்தான் போயிற்று. ஆனால் சட்டென்று சுதாரித்துக் கொண்டவன், “கம்…கெட் அப்” என்று சொல்ல, தன் கைப்பையை எடுத்துக் கொண்ட ராகாவை, அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் இருந்து கைகழுவும் இடம் நோக்கி இழுத்துச் சென்றான்.
கைகழுவும் அறையின் வாயில் கண்ணாடிக் கதவு இருந்தது. அந்த உணவகம் இருந்ததோ இரண்டாம் மாடியில்.
“இப்போ என்ன பண்ணறது சத்யா! மின்னி நம்மளைப் பார்த்தா கண்டிப்பா மிருதுளாகிட்ட சொல்லிடுவாங்களே” என்று பதற்றம் முகத்தில் அப்பட்டமாகப் படிந்து போக பயத்துடன் வினவினாள். விடுவிடுவென நடுங்கத் துவங்கிய அவள் கைகளைச் சத்யா பற்றிக் கொண்டது கூட உணரவில்லை.
“சாதாரணமா மீட் பண்ணோம் அப்படியே பேசிட்டு இருந்தோம்னு சொல்லிடலாமா?” என்று ராகா மீண்டும் வினவ, அவள் பதட்டம் அவனைக் கொஞ்சமும் சென்றடையவில்லை. கைகழுவும் இடத்தில் இருவர் மட்டுமே நிற்க இயலும். அதிலும் எந்த நேரமும் கை கழுவனெவ மின்னி அங்கே வந்துவிடக் கூடும். அந்த எண்ணமே இன்னமும் ராகாவைப் பதற வைத்தது.
“மடியிலே கணம் இருந்தால் வழியிலே பயம்” என்று சும்மாவா சொன்னார்கள்? அவள் மனதில் இருந்த கள்ளத்தனமும் சத்யாவின் பால் சென்று விட்டிருந்த அவள் மனதும் அவளை மின்னியைக் கண்டு நடுநடுங்க வைத்தன
ராகாவின் செய்கை சத்யாவிற்கு வேடிக்கையாக இருந்தது. அவள் கேட்டது போல, “ஜஸ்ட் இந்த ரெஸ்டரெண்ட்ல மீட் பண்ணோம், அப்படியே பேசிட்டு உட்கார்ந்துட்டோம்” என்று சுலபமாக மின்னியைச் சமாளிக்க இயலும்.
அப்படியே மின்னி சென்று சத்யாவையும், ராகாவையும் ஒன்றாக உணவகத்தில் சந்தித்தேன் என்று மிருதுவிடம் சொன்னாலும், மிருது பெரியதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. “ஒரு உணவகத்தில் எதார்த்தமாய்ச் சந்தித்துக் கொண்டோம். தெரிந்தவர் என்ற முறையில் ஒன்றாகச் சாப்பிட்டோம்” என்று சொல்வதால் பெரிதாய் எந்தப் பிரச்சனையும் வந்துவிடப் போவதில்லை.
ஆனால் ராகாவின் பதற்றம் அனைத்தையும் கெடுத்துவிடும் என்றும் உணர்ந்த சத்யா, நொடியில் நிலைமையைத் தன் கையிலெடுத்துக் கொண்டான். ராகாவின் கண்கள் கை கழுவும் இடத்தின் வாயிலிலேயே குத்திட்டு நின்றிருந்தது. மின்னி எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்ற பயம் அவள் மூளையை உறையச் செய்துவிட்டதைச் சத்யா உணர்ந்தான்.
“ராகா, ஏ, என்னைப் பாரு! என்னைப் பாருன்னு சொல்லறேன்ல” என்று அவள் தாடையைத் தன் பக்கம் திருப்பினான். “ம்ம்ம்” என்று பதில் கூறிய போதும், ராகாவின் கண்கள் வாயிலைப் பார்த்தபடிக்கே இருந்தன.
“சீ, ரிலாக்ஸ் ராகா! என்னை நம்பற தானே! நான் என்ன சொல்லறேனோ அதை அப்படியே செய்யணும். ஒ.கே வா?” என்று குழந்தைக்குச் சொல்வதைப் போல ராகாவிடம் வினவியவன், தலையை மட்டுமாய் வெளியே நீட்டி உணவகத்தை ஒரு கண் நோட்டம் விட்டான்.
“என்னாச்சு என்னாச்சு? மின்னி வர்றாளா?” என்று படபடத்த ராகாவின் உதடுகளின் மேல் தன் விரல் வைத்து பேசாதே என்று சமிக்கை செய்தவன், கை கழுவும் இடத்தின் எதிரே இரண்டடி தூரத்தில் மூடியிருந்த கதவு என்னவாக இருக்கும் என்று நொடிப் பொழுது யோசிக்க,
அந்த நேரம் மூடியிருந்த கதவின் உள்ளே இருந்து ஒரு வெயிட்டர் உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு வெளிப்பட்டான். “ ரெஸ்டரண்டோட கிச்சன். உள்ளேயிருந்து கிழ இறங்க கண்டிப்பா, ஸ்டேர்ஸ் இருக்கணும்” என்று எண்ணிய சத்யா, உணவகத்தை மீண்டுமாய் நோட்டம் விட, அங்கே மின்னி தன் மேஜையில் இருந்து எழுந்து கை கழுவ எழுந்து வருவது போலத் தெரிந்தது.
“ஹோல்ட் மை ஹேண்ட்ஸ்” என்று சொல்ல வாய் திறக்க அவசியமே இன்றி, ராகா ஏற்கனவே அவன் கைகளைப் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். மின்னியின் மேஜையை நோக்கி உணவுகள் எடுத்துச் சென்ற வெயிட்டர் மறைத்திருக்க, இது தான் தக்க சமயம் என்று உணர்ந்த சத்யா, ராகாவையும் இழுத்துக் கொண்டு இரண்டெட்டில் எதிரே இருந்த அறைக் கதவினைத் தள்ளித் திறந்தான்.
அதுவரையிலும் வீசிய உணவகத்தின் குளிர்ந்த காற்று நொடியில் மாயமாய் மறைந்து, அவ்விடத்தை பூண்டு நெடியுடன் கூடிய உஷ்ணக் காற்று ஆக்கிரமித்துக் கொண்டது.
உள்ளே, சிறிய கிச்சன் இயங்கிக் கொண்டிருக்க, கீழே தரை தளம் செல்ல இரும்புப் படிகள் ஒரு மூலையில் தென்பட்டன. சத்யாவும் ராகாவும் ஓட்டமாய்ப் படிகளை நோக்கி ஓட, அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.
ஆனால் அதில் ஒருவன் சுதாரித்து, “அவங்க பில் பே பண்ணாம ஓடப் பார்க்கறாங்க.. பிடிங்க பிடிங்க” என்று கத்த, இதற்குள் சத்யாவும் ராகாவும் முதல் மாடியை அடைந்திருந்தனர்.
“ஐய்யோ துரத்தப் போறாங்க!” என்று கழுத்தைத் திருப்பிப் பின்னால் பார்த்துக் கொண்டே ஓடிய ராகாவிடம், “அதெல்லாம் யோசிக்க டைமில்ல. சீக்கரம் இறங்கு,” என்று தரதரவென இழுத்துக் கொண்டு முன்னே சென்றான் சத்யா. பின்னால், “ஹலோ! நில்லுங்க. பில் பே பண்ணாம எங்க ஓடறீங்க?” என்று கத்திக் கொண்டே இவர்களுக்கு உணவு பரிமாறிய சிப்பந்தி பின்னால் தொடர்வது தெளிவாகக் கேட்டது.
இருவரும் கீழ் தளத்தை அடையவும் அங்கிருந்து அவசர அவசரமாக ரோட்டிற்குச் செல்ல, இவர்கள் கெட்ட நேரமோ என்னவோ தெரு வெறுச்சோடிக் கிடந்தது. ஒரு ஆட்டோ கூடக் கண்ணில் தென்படவில்லை.
“இந்தப் பக்கமா போலாம். மெயின் ரோட் வரும்னு நினைக்கறேன்” என்று ராகா கைகாட்டிய திசையில் இம்முறை சத்யா பின் தொடர்ந்தான். இருவரும் பிடித்த கைகளை விடாமல், ஓட்டமாக ஓடி, அந்தத் தெருவைக் கடந்து, அடுத்தத் தெரு என்று ஓட, இன்னமும் வெயிட்டரின் குரல் பின் தொடர்வது போலவே ஒரு மாயை.
“இன்னும் துரத்திட்டு வர்றானோ?” என்ற கவலையில் திரும்பிப் பார்க்கவும், யாரும் வரவில்லை என்று உணர்ந்த பிறகே, ராகாவின் பதற்றமும் ஓட்டமும் குறைந்தது. சத்யா மூச்சு வாங்கிக் கொண்டு மெல்லமாக நடக்கத் துவங்க, அவனுடன் சேர்ந்து தன் ஓட்டத்தையும் நிறுத்திக் கொண்டு கைகோர்த்த படிக்கே நடக்கலானாள்.
மரங்கள் அடர்ந்திருந்த அந்தத் தெரு ஒரு குடியிருப்புப் பகுதியே! நள்ளிரவில் நிசப்தமாக உறங்கும் பெரிய பெரிய பங்களா வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களும், வீட்டின் உள்ளே குறைக்கும் நாய்களின் சப்தமும் மட்டுமே கேட்டன.
“கொஞ்ச நேரம் இங்க உட்காரலாமா மூச்சு வாங்குது?” என்று கேட்டுக் கொண்டே ராகா, ரோட்டின் ஓர நடைப்பாதையின் திண்டில் புஸ் புஸ் என மூச்சு வாங்கிக் கொண்டு அமர்ந்தாள். அவள் அருகில் கொஞ்சம் போல அவளை உரசிக் கொண்டு குறைந்த இடைவெளியில் சத்யாவும் அமர்ந்தான்.
அவன் தோளின் உரசலையும், வெகு அருகே அமர்ந்திருந்த பாங்கையும் ராகா இன்னமும் உணரவில்லை. அப்போதைக்கு அவள் கவலையெல்லாம், மின்னியைப் பற்றி மட்டுமே இருந்தது. “மின்னி பார்த்திருக்க மாட்டா தானே சத்யா?” என்று கேட்க, அவன் மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, பேச்சு எழாமல், “தெரியலை” என்று அயர்வுடன் தோள்களை மட்டுமாகக் குலுக்கினான்.
“என்ன தெரியலைன்னு கூலா சொல்லறீங்க?” என்று அவன் தோளை இயல்பாக இடித்து வினவினாள்.
“பார்த்திருக்க வாய்ப்பில்ல. ஆனா ஸ்யூரா சொல்ல முடியலை. அந்தப் பார்டீஷன் க்ராஸ் பண்ணறப்போ அந்த வெயிடர் நம்மளை மறைச்சிருப்பான். மிஞ்சிப் போனா ரெண்டு பேர் போனாங்கன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா நாமன்னு யோசிக்க வாய்ப்பில்ல”
“ம்ம்… ஆனா, இந்நேரத்துக்கு அந்த ரெஸ்டரெண்ட் முழுக்க ரெண்டு பேர் சாப்பிட்டதுக்குப் பில் பே பண்ணாம ஓடிட்டாங்கன்னு நியுஸ் பரவியிருக்கும்” என்று சொல்லும் போதே லேசாகச் சிரிப்பு எட்டிப் பார்த்தது ராகாவிற்கு.
“ம்ம்ம் அப்படியா சொல்லற? அவளோ அப்பட்டமாவா ஓடி வந்தோம்” என்று ராகாவின் நக்கலை உணர்ந்து சத்யாவும் சீண்டலாகவே திரும்ப வினவினான்.
“ஹலோ சார். நான்லாம் என் லைஃப் டைம்ல இப்படிப் பில் பே பண்ணாம ஒரு ரெஸ்டரெண்டை விட்டு வந்ததே இல்ல தெரியுமா?” என்றாள் ராகா பெருமை பீத்தலாக.
“ஓ நான்லாம் என் லைஃப்ல தினமும் ஒரு ரெஸ்டரெண்ட் போய்ச் சாப்பிட்டுட்டுப் பில் பே பண்ண காசில்லாம, பின்னால டோர் வழியா தப்பிச்சு ஓடி வருவேன். தினமும் செய்வேன். பல வருஷமாவே அப்படித்தான்” என்று சத்யா சிரிப்பு மாறாமல் கூற, அவன் சொன்ன தொனி கேட்டு, அவன் தோளில் இன்னமும் பலமாக இடித்தாள் ராகா.
இருவரும் கலகலவெனச் சிரித்துக் கொண்டே இயல்பாகக் கைகளை இறுக்கிக் கொள்ள, அப்போது தான் சத்யாவின் கைகளுக்குள் தன் கை விரல்கள் முற்றிலுமாய்ச் சிறை பட்டிருப்பதே ராகாவிற்கு நினைவில் தொனித்தது.
“சாரி” என்ற சின்னத் தயக்கத்துடன் கைகளை ராகா இழுத்துக் கொள்ள எத்தனிக்க, சத்யாவின் பிடிகள் அவள் விரலை வெளியே எடுக்க விடமால் லேசாக அழுத்தின. கொஞ்சம் தயக்கத்துடன் கை விரல்களில் பதித்திருந்த கண்களை மெல்லமாய் உயர்த்திச் சத்யாவின் முகம் பார்த்தாள் ராகா.
அவனும் அந்த நேரம் ராகாவின் முகத்தில் விழிகளைப் பதித்திருந்தான். கண் இமைக்கவும் மறந்து விட்டிருந்த ராகா, சத்யாவின் பார்வையில் தேங்கி போய்விட்டிருக்க, தலையைக் குனிந்து கொள்ளவோ, நயனங்களை விலக்கிக் கொள்ளவோ விருப்பப்படவில்லை.
பெங்களூரின் குளிர்ச்சி மெல்லமாய் இருவர் மீதும் பனிப் பூக்களைச் சிந்தத் துவங்கியிருக்க, அந்த நள்ளிரவு வேளையில், மஞ்சள் வண்ணம் சிதறிய தெருவிளக்கின் ஒளியும், அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றியும் மெத்தை விரித்திருந்த “ இந்தியன் கார்க் ட்ரீ” என்று அழைக்கப்படும் பன்னீர் பூங்களின் நறுமணமும் அவர்களுக்கான ஒரு தனிபட்ட உலகத்தையே சிருஷ்டித்திருந்தன.
சத்யாவின் தோளில் விழுந்த ஒரு பன்னீர் பூ, அவன் சட்டையின் ஓரத்தில் “இதோ இப்போதே கீழே விழுந்துவிடுவேன், என்னை எடுத்துக் கொள்” என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்க, பூ இருந்த இடம் நோக்கி ராகாவின் பார்வை சென்றுவிட்டிருந்தது. சத்யாவைப் பிடித்திறாத ராகாவின் இடது கை விரல்கள் பூவினை எடுக்கக் கைகளை நீட்டிய சமயம், திடுமென அந்த மோன நிலையினைக் கலைக்கும் அந்த கணீர் குரல் “ஏ, கெளன் ஹே” என்று கேட்டது.
அவர்கள் அமர்ந்திருந்த பங்களாவின் உள்ளே இருந்து கூர்க்காவின் குரல் இருவரையும் நிகழ் காலத்திற்கு இழுத்துவிட்டிருக்க, கேட்டது கூர்க்கா என்று உணராமல்,
“ஐய்யோ துரத்திட்டு வந்துட்டானுகளோ” என்ற நொடி நேர அச்சத்தில், இம்முறை சத்யாவின் கைகளை இழுத்துக் கொண்டு அந்தப் பங்களா கேட்டினை விட்டு பதறியடித்து எழுந்த ராகா, அடுத்த வீட்டின் காம்பவுண்டையும் நடைபாதையினையும் மூடியபடிக்கு அடர்த்தியாக வளர்ந்திருந்த போகன்வில்லா புதரின் பின்னால் சத்யாவுடன் தஞ்சம் புகுந்தாள்.
ராகாவின் பதற்றத்தையும், அவள் தன் விரல்களை இறுக்கமாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடிய பாங்கையும் எண்ணி சத்யாவிற்கு உண்மையில் சிரிப்பு வந்திருக்க வேண்டும். ஆனால், அவன் மனம் ஒரு உணர்ச்சிக் குவியலாய் மாறிவிட்டிருந்த காரணத்தினால், அவன் மூளையின் சிந்திக்கும் திறன் அனைத்தும் அப்போதைக்கு உறங்கிவிட்டிருந்தன. சிரிப்பு உட்பட.
மனம் என்ன சொல்கிறதோ அதுவே சரி என்ற சிந்தாந்தத்தினை ஏற்றுக் கொண்டு விட்டிருந்த மூளை தன் அறிவை ஆழ அமிழ்த்திக் கொண்டு இதயத்தின் பேச்சைக் கேட்டபடிக்கு, ராகாவின் கைப்பிடியில் இன்பம் சுகித்துக் கொண்டிருந்தது.
“உதர் கெளன் ஹே” என்று கேட்ட பங்களாவின் காவலாளி வெளியே டார்ச்சுடன் எதிர்பட, சத்யாவின் உடல் கொஞ்சம் பதட்டம் காட்டுவதை அவன் சொல்லாமலேயே ராகா உணர்ந்து கொண்டாள். புதரின் பின்னால் இன்னமும் சத்யாவைத் தன் அருகே இழுத்து வைத்துக் கொண்டாள்.
சொல்லப் போனால், அவள் தான் அப்போது வரையிலும் பதற்றத்துடன் மின்னியைக் கண்டு அஞ்சி, துரத்தி வந்த கடை சிப்பந்தியைக் கண்டு நடுங்கி, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி ஓடி வந்தவள். சத்யாவின் பின்னால் பம்பிக் கொண்டிருந்தவள்.
எந்த ஊந்துதலில் காரணமாகவோ, இம்முறை எதைப் பற்றியும் யோசனை இல்லாமல், சத்யா கவலைப்படுகிறான் என்று புரிபடவும், அவனைத் தன் மீது இழுத்துப் பிடித்து, தோளில் சாய்த்து அணைத்துக் கொண்டு பாதுகாப்பாக நின்று கொண்டாள்.
சத்யாவிற்கு அந்த நிமிடம், வேறு எந்த விதமான சிந்தனையுமே இருக்கவில்லை. மனம் எதையுமே யோசிக்கவில்லை. அந்த நொடி, அந்த அணைப்பும், அரவணைத்த கைகளும், தாங்கிப் பிடித்து நின்றிருந்த தோளும். அந்தத் தோளில் முகம் புதைய தான் நின்றிருந்த பாங்குமே போதுமானதாக இருந்தது.
“அரவணைத்திருக்கும் இந்தக் கைகளின் அணைப்புகளுக்குள் தான் பாதுகாப்பாக இருப்பது போன்ற எண்ணம். தான் ஒரு ஆண்மகன். நான் தானே ஒரு பெண்ணைப் பாதுகாக்கும் இடத்தில் வைத்து வளர்க்கப்பட்டவன். இவள் கையணைப்பில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என்பது என் ஆண்மைக்கு இழக்கு என்றெல்லாம் பத்தாம்பசலித்தனமாக யோசிக்கும் ரகம் சத்யா அல்ல.
பசி, தூக்கம், போன்று காதலும் காமமும் கூட ஆண் பெண் என்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் தாம் என்று தெரிந்தவன்.
ராகாவின் இந்த அரவணைப்பை தன் தாய் உயிருடன் இருந்த வரையில் மட்டுமே சத்யா உணர்ந்திருந்தான். தந்தை நடராஜ் பாசமானவர் தான் என்ற போதும், தொடுகையில் அன்பை வெளிப்படுத்துவது என்பது அன்னை தான் அல்லவா.
“நான் இருக்கேண்டா. கவலைப்படாத” என்று தந்தை கூறும் 100 அறிவுரைகளையும், தெம்பான பேச்சுகளையும், தாயின் ஒரு இறுக்கமான அணைப்பு கொடுத்துவிடும் வல்லமை பெற்றிருக்கும்.
தன் தாயிடம் பாதுகாப்பாக இருப்பது போன்றதொரு உணர்வு தான் அப்போதைக்குச் சத்யாவின் நெஞ்சை நிறைத்திருந்தது. வாஸ்தவத்தில் இந்த நொடி, ராகாவியின் உதடுகள் உரசும் தூரத்தில் தான் இருந்தன. கண் இமைக்கும் நேரத்தில் கடக்கக் கூடிய தொலைவு தான். அதுவும் இப்படி இறுக்கமாகப் பிடித்திருக்கும் தருவாயில், கொஞ்சம் தலையை நிமிர்த்திப் பார்த்த சத்யாவின் முகத்தை ஏக்கமாகவும் கூச்சத்தோடும் சந்தித்த ராகாவின் தவிப்பும் அவனுக்கு வெகு சாதகமானவை.
சத்யாவின் முகத்தையும் உதட்டையும் மாறி மாறி ராகா பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ராகாவின் உதடுகளைக் கவ்வி இழுத்துச் சுவைத்திருக்கலாம் தான்.
ஆனால், அந்த நிமிடம் சத்யாவின் மனதில் அப்படியான எண்ணம் இருக்கவில்லை. அந்த அணைப்பும், பாதுகாப்பு உணர்வும் மட்டுமே போதுமானதாக இருக்க, தலையை மீண்டும் தாழ்த்தி அவள் கழுத்தில் இன்னமும் தன் தலையை அழுந்த பொதித்துக் கொண்டான்.
முத்தமிடுவானோ என்ற எதிர்பார்ப்பு ராகாவிற்கும் இருந்திருக்க வேண்டும். அவன் தலையை இன்னமும் அழுத்தமாகத் தன் கழுத்து வளைவில் பதிக்க, ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம்.
ஆனாலும் அவன் ஏக்கம் அவளுக்குப் புரிந்தது. அதுவும் அவன் சொல்லாமலே! அவனைத் தோளோடு சேர்த்து இரு கைகளாலும் இன்னமும் தன் மீது இழுத்துக் கொண்டு அணைத்தாள். முதுகில் படர்ந்த அவள் விரல்கள் ஆதரவாக அவன் தலையைப் பற்றிக் கொள்ள, மறு கையோ, அவன் தோளைச் சுற்றியிருந்தது அரணாக.
சத்யா எப்போது ராகாவின் கைகளை விடுத்து அவள் இடையினைச் சுற்றிலும் தன் கைகளைக் கோர்த்தான் என்று நினைவில்லை. ராகாவின் கைகள் அவன் தலையை அழுத்தமாக அவள் கழுத்துடன் பற்றியிருக்க, அந்தக் கழுத்தில் உதட்டைக் கொண்டு வருட வேண்டும் என்று தோன்றும் ஆசை எதுவும் அக்கணம் எழவில்லை என்பது விந்தை தான்.
“இந்த அணைப்பு வேண்டும்! இந்தப் பாதுகாப்பு வேண்டும்! எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல் கவலை கொள்ளாமல் இப்படி இந்தக் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருக்கும் பாசம் வேண்டும்” என்ற நினைவு மட்டுமே பிரதானமாக தென்பட்டது சத்யாவிடம்.
ராகாவின் கைகள் சத்யாவின் தலையைப் மெல்ல தன் பால் அழுத்த, அதற்குப் பதில் மொழியாக, அவளைக் கட்டியணைத்திருந்த அவன் கைகள் ராகாவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டன. அவன், தன் கழுத்தில் முத்தமிடவோ, கைகளை அவள் மீது படறவிடவோ போவதில்லை என்று ராகாவிற்குப் புரிந்ததும், அவன் மீது அளப்பறிய பாசம் உண்டாயிற்று.
பாசத்திற்காக, தாயின் அணைப்பிற்காக ஏங்கும் குழந்தையைப் பிடித்திருந்ததைப் போலவே உணர்ந்த ராகாவின், நெஞ்சம் ஆழமாகப் பெருமூச்சு விட, சத்யாவின் தலை கழுத்தில் இருந்து கொஞ்சமாகக் கீழே இறங்கி, அவள் நெஞ்சில் சரணடையத் துவங்கவும் ராகா நிறையத் தடுமாறினாள்.
கூச்சத்தில் நெழியும் தன் உடலையும், “ம்ம்ம்” என்று கேவலாகத் அடித்தொண்டையில் தொக்கி நின்ற உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த பெருமுயற்சி செய்து, அது முடியாமல் போகவும், அவன் தலையைத் தன் நெஞ்சில் இன்னமும் அழுத்தமாகப் பதியவைத்து, இறுக்கிக் கொண்டாள்.
சத்யா விரசமாக எதையுமே செய்யமாட்டான் என்ற நம்பிக்கை அவன் மீது எப்போதோ ஏற்பட்டிருக்க, அவனை ஆதுரமாகப் பிடித்துக் கொண்டு, இறுக்கமாகத் தன் அணைப்பில் நிறுத்திக் கொண்டு எவ்வளவு காலமானாலும் நிற்கலாம் என்ற எண்ணம் ராகாவின் மனதில் திடமாகத் தோன்றிய நொடி அது தான்.
“சத்யா எனக்கானவன். நான் அவனுக்கானவள். இல்லாமல் போனால் இப்படி அவனை அணைத்துக் கொண்டு காலமெல்லாம் நிற்க வேண்டும் என எனக்குத் தோன்றப் போவதில்லை. அவனும் மொத்தமுமாய் என் நெஞ்சில் சரணடையப் போவதில்லை.”
“ஆனால் இவன் இன்னொருத்திக்கு சொந்தமாகப் போகிறானே!” என்ற கவலையெல்லாம் ஒரு நொடிப் பொழுது தான் உண்டாயிற்று.
“என்ன தான் இன்னொருத்திக்கு நிச்சயம் செய்யப்பட்டவன் என்ற போதும், நிச்சயதார்த்தம் கூட இன்னமும் நடந்தேறவில்லை தானே! முகூர்த்தம் வரையிலும் கூட வந்து நின்று போய்விட்ட திருமணங்கள் எத்தனை இருக்கின்றன! இவனுக்கு மிருதுளாவுடன் திருமணப் பேச்சு வார்த்தை தானே நடந்திருக்கிறது. இன்னமும் மணமாகவில்லை என்னும் போது, இவன் இன்னொருத்திக்கு எப்படி உரிமைப்பட்டவனாக இயலும்”
சத்யா இன்னமும் அவன் நெஞ்சில் தலை வைத்து ஆழ்ந்த பெரு மூச்சுகளை எடுத்தவண்ணம் தன்னை மறந்து நின்றிருந்தான்.
“சத்யா” என்று மிக மெல்லிதாய் அவள் அழைக்க, “ம்ம்” என்று அதே மிருதுவான மறுமொழி அவனிடமிருந்து வெளிபட்டது.
“கூர்க்கா போயிட்டாங்க” என்று அவன் தலை முடியை வருடிக் கொண்டே ராகா அதிகம் சப்திக்காமல் கூற, “ம்ம்ம்” என்று மீண்டுமாய்ப் பதிலளித்தவன் இன்னமும் அவள் நெஞ்சினுள் புதையத் துவங்கினான்.
“சத்யா, கூர்க்க போயிட்டாங்க. போலாமா?” என்று மீண்டுமாய் அவள் கூற, தலையை மெல்ல நிமிர்த்தி ராகாவை ஏறிட்டவன், சில நொடி அவள் கண்களை இமைக்காமல் பார்வையால் மேய்ந்தான். என்ன நினைத்தானோ மீண்டும் அவள் மறுகழுத்தின் வளைவைத் தேடி தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு “டூ மினிட்ஸ் ராகா” என்று சொல்லிக் கொண்டு, அவளின் முகத்தையும் தாடையையும் வைத்து அழுத்தி “ப்ளீஸ்” என்ற உச்சரிப்புடன் அவளை இன்னமும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.
“என்னோட சத்யா” என்ற எண்ணத்துடன் ராகாவின் கைகள் அவன் தலையினை அரவணைப்பாய் பிடித்துக் கொண்டன. “இவன் என்னுடையவன். என் உடைமை. இந்த அணைப்பையும், அரவணைப்பையும் மிருதுளா ஒரு நாளும் அவனுக்கு வழங்கப் போவதில்லை. இதை அவனும் உணர்ந்திருப்பான். இதை மிருதுவுக்குப் புரியவைத்து, எப்படியும் இந்தத் திருமணத்தை நிறுத்திவிடலாம்” என்று மனதாற முடிவெடுத்தாள் ராகா.