6…
“மாப்பிள்ளை..” என்று தயக்கத்துடன் அறையின் வாயிலில் நின்றிருந்த சேதுபதியை ஒரு நொடி அலட்சியமாய் ஏறிட்டவன், அதை அவர் கவனிக்கும் முன் அவசரமாய் தனது முக பாவத்தை சரி செய்து கொண்டு… பொய்ப் புன்னகை ஒன்றை இதழில் ஏந்திக் கொண்டு, ” வாங்க மாமா… ஏன் அங்கேயே நின்னுட்டீங்க, உங்க மருமகன் ரூமுக்குள்ள வர உங்களுக்கு என்ன தயக்கம் மாமா! , கூச்சப்படாம உள்ள வாங்க” என்று தான் மனதளவில் சிறிதும் மதிக்காத மாமனாரை தன் தங்கியிருந்த அறைக்குள் வர அனுமதித்தான் சுந்தர அகரன்.
தயங்கியபடி அறையினுள் வந்தவர்….” என்ன மாப்ள இங்க வந்து தங்கிட்டிங்க… மீனாட்சி உங்களுக்காக அந்தப் பெரிய பங்களால காத்துட்டு இருக்கு.. “என்றார் சேதுபதி.
” எந்தப் பங்களாவ சொல்லுறீங்க?” என்று ஒன்றும் அறியாதவன் போல் சுந்தர அகரன் கேள்வி எழுப்ப.. “ என்ன மாப்பிள்ள தெரியாத மாதிரி கேட்குறீங்க?, போன தடவ நீங்க இங்க வந்தப்போ தங்கி இருந்தீங்களே!, அந்தப் பங்களாவத் தான் சொல்லுறேன்” என்றார் சேதுபதி.
“ அது இந்த ரெசார்ட் ஓனருக்காக பார்த்துப் பார்த்து ஸ்பெஷல்லா கட்டின பங்களா தான, அங்க எப்படி என்னால ஸ்டே பண்ண முடியும்?, அதுனால உங்களுக்கு ப்ராப்ளம் வந்திடாது” என்றான் அகரன்.
“ என்ன மாப்பிள்ள சொல்லுறீங்க?, உங்க பங்களால நீங்க தங்குறதுல என்னப் பிரச்சனை வந்திடப் போகுது?” என்று குழப்பமாய் வினவினார் சேதுபதி.
விஷமமான புன்னகை ஒன்றை இதழில் பூசிக் கொண்டு, “ அங்க ஸ்டே பண்ண எனக்கு என்ன உரிமை இருக்கு மாமா. வசதியான ஓனரோட ஃப்ரெண்ட்ங்கறத தவிர வேற எந்த தகுதியும் இல்லாத நான் எந்த உரிமையில அந்த பெரிய பங்களால தங்குறது?, ” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கிண்டலாய் வினவினான் அகரன்.
முன்பு நடந்ததை மனதிற்க் கொண்டு தான் அவன் இவ்வாறு பேசுகின்றான் என்று எண்ணிக் கொண்ட சேதுபதி, “அன்னைக்கு ஏதோ ஒரு கோபத்துல பொண்ணு மேல இருந்த பாசத்துல அப்படி நடந்துக்கிட்டேன். பழசை எல்லாம் மறந்திடுங்க மாப்பிள்ளை” என்று தன்மையான குரலில் வேண்டிக் கொண்டார்.
பேசிக்கொண்டே அவருக்கு பின் வந்து நின்றவன்… ” அவமானத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட வலியும் வேதனையும் புரியும். அவமானப்படுத்தினவங்க எல்லாத்தையும் ஈசியா மறந்திடலாம். அந்த வலியையும் வேதனையும் அனுபவிச்சங்களால எப்படி அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியும்!.உங்களால நான் அனுபவிச்ச வலியை கொஞ்சாமாவது திருப்பித் தந்தாத் தானே எனக்கு கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும். ” என்று வில்லங்கமாய் பேசினான் புதிதாய் உறவில் இணைந்த புது மாப்பிள்ளை.
“நான் எல்லாத்தையும் மறந்துட்டேன், நீங்களும் எல்லாத்தையும் மறந்துடுங்கன்னு சொல்லி தானே மாப்பிள்ளை கல்யாணத்தை பண்ணிக்கிட்டிங்க.. இப்போ இப்படி மாத்தி பேசினா என்ன அர்த்தம்?, உங்க பேச்சை நம்பி ஒன்னும் தெரியாத என் அப்பாவி பொண்ண உங்களுக்கு கட்டிக் கொடுத்தேனே!, இப்ப அவ வாழ்க்கை என்ன ஆகிறது?, ” என்று பெண்ணைப் பெற்ற தகப்பனுக்கே உண்டான வேதனையுடன் பேசினார் சேதுபதி.
” ஆமா ஆமா உங்க பொண்ணு ரொம்ப அப்பாவி தான்.. என் பிரெண்டை கரெக்ட் பண்றதுக்காக தான் என் கூட பழகினேன்னு சொன்னா பாருங்க, அதிலேயே தெரிஞ்சிருச்சு உங்க பொண்ணோட அப்பாவித் தனம் என்னன்னு …” என்று கிண்டலாய் அகரன் கூறிட.. ” ஐயோ மாப்பிள்ளை அதெல்லாம் உண்மை இல்ல.. அவளை அப்படி சொல்ல வச்சதே நான் தான். எங்களுக்காக தான் அவ உங்களை பிடிக்காத மாதிரி அவ்வளவு மோசமா பேசினா. உண்மையிலே மீனாட்சி உங்களை ரொம்ப உயிருக்கு உயிரா காதலிக்கிறா.. ” என்று தன் மகள் மீது எந்த தவறும் இல்லை என்பதை பதட்டத்துடன் அறிவித்தார் சேதுபதி.
எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லாத சுந்தர அகரனோ சேதுபதியின் வார்த்தைகள் எதற்கும் செவி மடிக்காமல்.. அலட்சிய முக பாவனையுடன் மேலும் தொடர்ந்தான்., ” அது உண்மையோ பொய்யோ அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத விஷயம். அன்னைக்கு நான் அனுபவிச்ச வலியை வெறும் வார்த்தையால விவரிக்க முடியாது. அந்த வலி என்னன்னு உங்களுக்கும் புரியணும் தானே!” என்று எதையும் முழுதாய் விவரிக்காமல் இடையில் நிறுத்தினான் சுந்தர் அகரன்.
“மாப்பிள்ளை நீங்க என்ன சொல்ல வரீங்க?” என்று பரிதவிப்புடன் சேதுபதி வினவ..” உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? உண்மையிலேயே இந்த சொத்தெல்லாம் எனக்கு சொந்தமானது இல்லை. நான் நீங்க ஆசைப்பட்ட மாதிரி பணக்காரனும் இல்ல… “என்று அகரன் கூறிட.. ” நீ… நீ என்ன சொல்ல வர…” என்று அதிர்ச்சியுடன் அதுவரை கொண்ட மரியாதையை கைவிட்டு ஒருமையில் பேசினார் சேதுபதி.
“பணக்காரன் இல்லன்னு சொன்னதும் மரியாதை காத்தோடு போயிடுச்சு!, நான் என்ன சொல்ல வரேன்னு தானே கேட்டீங்க?, சொல்றேன் கேட்டுக்கோங்க அன்னைக்கு நீங்க எல்லாரும் என்னை இங்க இருந்து அவமானப்படுத்தி அனுப்புன விஷயத்தை என் ஃபிரண்ட் சுந்தர் கிட்ட போய் சொன்னேன். அவன் உங்களுக்கெல்லாம் ஒரு பாடம் கத்துக் கொடுக்கணும்னு தான்… அவனுக்கு பதிலா மாப்பிள்ளையா என்னை இங்க அனுப்பி வச்சான். ” என்று சுந்தர அகரன் கூறிக் கொண்டிருக்க… ஏதோ நினைவு வந்தவராக.. ” நீ … நீங்க” இவனுக்கு மரியாதை கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தடுமாற்றத்துடன் துவங்கியவர், பின், “இங்க பாருங்க துர்கேஸ்வரி அம்மாவோட பேரனை வேணா எனக்கு அடையாளம் தெரியாம இருக்கலாம். ஆனா துர்கேஸ்வரி அம்மாவை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அவங்க எதுக்கு தேவையில்லாம நீங்க தான் அவங்களோட பேரன்னு பொய் சொல்லணும்?.” என்று தனக்கு முன் இருப்பவன் கூறியது பொய் என நிரூபிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பினார் சேதுபதி.
‘நான் நினைச்சதை விட என் மாமனார் ரொம்ப ஷார்ப்பு தான், ஒரு செகண்ட்ல என்னோட பொய்யை கண்டுபிடிச்சிட்டாரு. அது சரி இந்த அளவுக்கு கூட ஷார்ப்பா இல்லைனா பெரிய சொத்துக்காரனை மடக்கிப் பிடிக்க முடியுமா என்ன?’ என்று தனக்குள்ளேயே ஏளனமாய் எண்ணிக் கொண்டவன், ” நீங்க கேக்குறது நியாயமான கேள்வி தான் ஆனா அங்க தான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. இன்பாக்ட் இந்த நாடகத்துல சுந்தர் பாட்டி கூட ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் தான். நீங்களே யோசிச்சு பாருங்க, பாசமா தூக்கி வளர்த்த பாட்டி சொந்தப் பேரனோட கல்யாணம் முடிஞ்ச கையோட அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகாம, யாரோ மாதிரி எதுக்கு தனியா கிளம்பிப் போகணும்?” என்று தான் கூறும் பொய்க்கு வலு சேர்க்கும் விதமாய் மேலும் மேலும் பொய்களை அடுக்கிக் கொண்டே சென்றான் சுந்தர் அகரன்.
பொய்யை மெய்யென உணர்த்தும் விதமாய் சுந்தர அகரன் தெளிவாய் பேசிக் கொண்டிருக்க… இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று புரியாத குழப்பத்துடன் தடுமாறி.. அருகில் இருந்த நாற்காலியில் அதிர்ச்சியுடன் அமர்ந்தார் சேதுபதி.
இப்படி ஏமாந்தோமே என்ற தவிப்பும்…. இனி என்ன செய்வது என்ற புரியாத குழப்பமும் ஒருசேர அவர் முகத்தில் பிரதிபலிக்க.. அதை வாய் நிறைந்த புன்னகையுடன் சற்று நேரம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர அகரன்.
மாப்பிள்ளையை அழைத்து வருவதாக சொல்லிச் சென்றத் தந்தை வெகு நேரமாகியும் திரும்பி வராததால் அவரைத் தேடி வந்த விஷ்ணு தந்தையின் அதிர்ச்சி நிலையைக் கண்டு.. பதறி துடித்து வேகமாய் அவர் அருகில் சென்று.. “என்னாச்சுப்பா ஏன் இப்படி இருக்கீங்க?, ” என்று அக்கறையாய் வினவினான்.
” நாம ஏமாந்துட்டோம் விஷ்ணு.” என்று பரிதவிப்புடன் கூறினார் சேதுபதி.
” என்னப்பா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல, இவன்.. இவரு.. ஏதாவது சொன்னாரா?” என்று ஒருமையில் துவங்கியவன் சட்டென்று சுதாரித்து அடுத்த வார்த்தை பேசிட… இளையவனின் தடுமாற்றத்தை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டவன்…. “ஓ உனக்கு அடுத்தவங்களுக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுக்க கூட தெரியுமா?” என்று கிண்டலாய் வினவினான் சுந்தர அகரன்.
தங்கள் நிலைக் கண்டு கேலி செய்தவனை கோபமாய் முறைத்து விட்டு… ” அப்பா, என்னாச்சு?” என்று தன் தந்தையின் புறம் திரும்பி கேள்வி எழுப்பினான் விஷ்ணு.
” மாப்பிள்ளை என்னென்னவோ சொல்றாரு எனக்கு ஒன்னும் புரியல!, ” என்று கலங்கிய குரலில் கூறினார் சேதுபதி.
“எங்க அப்பா கிட்ட என்ன சொன்னீங்க?” என்று கோபத்துடன் விஷ்ணு வினவ… ” உண்மையைச் சொன்னேன்..” என்று அலட்சியமாய் ஒற்றை வரியில் பதில் தந்தான் சுந்தர அகரன்.
” என்ன உண்மை?” என்று பொறுமை இழந்து கொதிப்புடன் வினவினான் விஷ்ணு.
“எதுக்கு இவ்ளோ கோவம்?, உனக்கு நார்மலாவே பிஹேவ் பண்ண தெரியாதா மச்சான்!, எண்ணெய் சட்டியில போட்ட அப்பளம் மாதிரி எதுக்கெடுத்தாலும் பொரிஞ்சு தள்ளுற.. ” என்று அவன் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் வேண்டுமென்றே பேச்சை வளர்க்கும் விதமா வேறு எதையோ அகரன் பேசிக் கொண்டே இருக்க.. ” நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க.. அப்பா கிட்ட என்ன சொன்னீங்க?” என்றான் விஷ்ணு.
“இந்த பிராப்பர்ட்டி எல்லாம் என்னோடது இல்ல, நீங்க நினைக்கிற மாதிரி நான் பணக்காரனும் இல்லைன்னு சொன்னேன். அதைக் கேட்டு தான் இப்படி ஷாக்காகி உட்கார்ந்து இருக்காரு. பாவம் பணக்கார வீட்டு சம்பந்தம் கிடைச்சிடுச்சு இனி கிடைக்கிற வசதி வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருப்பாரு, அந்த நினைப்புல இப்போ மண்ணு விழுந்திருச்சுல.. அதான் அடுத்து என்ன செய்றதுன்னு புரியாம புலம்பிட்டு இருக்காரு. ” என்று. சேதுபதியை பார்த்து கிண்டலாய் கூறினான் அகரன்.
தந்தை மகன் இருவரையும் ஏளனப் புன்னகையுடன் எதிர்கொண்டு நின்ற சுந்தர அகரன் மீது கோபம் கொண்ட விஷ்ணு வேகமாய் சென்று அவன் சட்டையை பற்றி… ” நான் அப்பவே நினைச்சேன். நீ ஏதோ பிராடு தனம் பண்ணித் தான் இந்த இடத்துல வந்து நிக்கிறன்னு, கல்யாணத்தை கூட இன்னொரு தடவை யோசிச்சிட்டு முடிவு எடுப்போம்னு சொன்னேன். இவர் தான் கேட்கல, கடைசில உன் புத்திய காட்டிட்டேல.. ” என்று ஆத்திரத்துடன் பேசினான் விஷ்ணு.
தன் மேல் சட்டையை பற்றி இருந்தவன் கையை அலட்சியமாய் தட்டி விட்டு… ” புத்தியை காட்டுறது நானா இல்ல நீங்களா?, பணக்காரன்னு தெரிஞ்சதும் பல்லுளிச்சுட்டு, இப்போ பணக்காரன் இல்லைன்னு சொன்னதும் சட்டையை புடிக்கிறீங்களே இந்த மாதிரி கேவலமான புத்தி எனக்கு இல்ல..” என்று மேலும் மேலும் அவமானப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டே சென்றான் சுந்தர அகரன்.
” பணக்காரன்னு பொய் சொல்லி எங்களை ஏமாத்தி கல்யாணத்தை பண்ணதும் இல்லாம எங்களையே கேவலமா பேசுறியா?, அவ்வளவு தான் உனக்கு மரியாதை ஒழுங்கா இந்த இடத்தை விட்டு ஓடிடு இல்லன்னா.. அன்னைக்கு மாதிரி அடிச்சு துரத்துவேன்.” என்று தன் அக்காவின் கணவன் என்றும் பாராமல் மரியாதை குறைவாக பேசி அகரன் கழுத்தைப் பற்றி வெளியேத் தள்ளினான் விஷ்ணு.
விஷ்ணு தள்ளிய வேதத்தில் தடுமாறப் போனவன் சட்டென்று சுதாரித்து கால்களை அழுத்தமாய் ஊன்றி… தடுமாறி விழாமல் தாக்குப் பிடித்துக் கொண்டவன்… நடந்த அவமானங்களுக்கு கலங்கி போகாமல் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான்.
” இவ்வளவு அசிங்கப்படுத்தினதுக்கு அப்புறமும் சிரிச்சிட்டு நிக்கிற!, மூளை குழம்பி போச்சா உனக்கு?, ” என்று விஷ்ணு மேலும் கை ஓங்கி கொண்டு அகரனை நெருங்கிட.. “என்கிட்ட இருக்கிற பணம் தான் நீங்க எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையே தீர்மானிக்கிற அளவுகோல் அப்படித்தானே!” என்றவன்… அறையினுள் நகர்ந்து சென்று கட்டிலின் அருகில் இருந்த மேசையைத் திறந்து அதில் இருந்த சில ஆவணங்களை எடுத்து விஷ்ணு புறம் நீட்டி, ” இது என்னோட ட்ரிவிங் லைசென்ஸ், இது ஆதார் கார்டு, இது பான் கார்டு, இதெல்லாம் நான் யாருன்னு நிரூபிக்கக் கூடிய ப்ரூப்….., நான் தான் சுத்தர அகரன் இந்தச் சொத்துக்கு எல்லாம் சொந்த்தக்காரன்னு நிரூபிக்க இந்த ஆதாரம் போதுமா? இல்ல டிஎன்ஏ டெஸ்ட் எதுவும் வேணுமா?” என்றான் அகரன்.
எதிரில் இருந்தவன் வார்த்தையில் நம்பிக்கை இல்லாமல் அவன் கையில் இருந்த ஆவணங்களை பறித்து ஒரு முறை சரி பார்த்துக் கொண்ட விஷ்ணு, “ எதுக்கு இவ்ளோ நேரம் தேவையில்லாம எங்க கிட்ட பொய் சொல்லிட்டு இருந்தீங்க?” என்று எரிச்சலுடன் வினவினான்.
தான் ஏமாறவில்லை என்பது புரிந்ததும் தெளிவடைந்து எழுந்து நின்ற சேதுபதி… ” என்ன விளையாட்டு இது மாப்பிள்ளை, நான் பயந்தே போயிட்டேன். ” என்று நிம்மதி பெருமூச்சை வெளியேற்றிய படி கூறினார்.
” சும்மா… ஒரு ஷாக் ட்ரீட் மெண்ட்… ” என்றவன், ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு, ” அங்க வந்தா நான் மறக்கணும்னு நினைக்கிற சில கசப்பான இன்சிடென்ட்… மறுபடியும் என் ஞாபகத்துக்கு வரும். சோ.. எனக்கு அந்த பங்களாவுக்கு வர விருப்பம் இல்ல. நான் இங்கே ஸ்டே பண்ணிக்கிறேன்” என்று இறுகிய குரலில் தன் முடிவை அறிவித்தான் சுந்தர அகரன்.
தன் மருமகன் கூறும் கசப்பான சம்பவம் எது என்று புரிந்ததால் அதற்கு மேல் விவாதம் புரியாமல் அமைதியாய் தன் மகனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார் சேதுபதி.
இருவரும் அறையை விட்டு விலகிச் சென்றதும்.. ‘கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட உங்களால என்னை அக்சப்ட் பண்ண முடியல, என்கிட்ட இருக்கிற பணம் தான் உங்களுக்கு பெருசா தெரியுது!, மனுஷங்க குணத்தை விட பணம் தான் பெருசு என்று நினைக்கிற உங்களுக்கு என்னோட பனிஷ்மென்ட் தான் சரியான டிரீட்மென்ட்..’. என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டவன் தனது அலைபேசியை எடுத்து அதில் யாரையோ தொடர்பு கொண்டவன்.. எதிர் முனையில் பேச துவங்கவும்.. ” நாளைக்கு நைட்டு அவங்க அங்க இருப்பாங்க. நான் சொன்னபடி எல்லாத்தையும் ரெடி பண்ணிடுங்க.. சின்ன மிஸ்டேக் கூட இருக்கக் கூடாது. என்ன புரிஞ்சதா?” என்று உத்தரவிட்டான்… தன்னை அவமதித்தவர்களை பலித்திருக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்த சுந்தர அகரன்.