ராகாவின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே இயலவில்லை சத்யாவிற்கு. ஏதோ மந்திரக் கட்டு போன்று அவள் தோளில் முகம் புதைத்து, கழுத்தில் தன் வாழ்வைத் தொலைத்து, காணாமல் போன எஞ்சிய காலத்தை அவள் நெஞ்சில் தேடிக் கொண்டிருந்தான்.
இது தவறு என்று ஒரு நொடிப் பொழுதும் தோன்றாமல் போனது தான் ஆச்சர்யமான உண்மை. “சத்யா, என்ன செய்யற? இதெல்லாம் தப்பு! உனக்கு இன்னொரு பொண்ணு கூட நிச்சயம் ஆகப் போகுது. நீ மிருதுளாவை மட்டும் ஏமாத்தலை. உன் நடத்தையால அவதிப்படப் போறது ரெண்டு பொண்ணுகளோட வாழ்க்கை. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்” என்றெல்லாம் இந்நேரத்திற்கு அவன் மூளை தன் சலைவையைத் துவங்கியிருக்க வேண்டும்.
ஆனால் அவனது ஆறாம் அறிவு உட்பட, “உன் அம்மா போனதுக்கு அப்பறம் இந்த மாதிரி நீ பாதுகாப்பா ஃபீல் பண்ணினதில்ல சத்யா! மிருதுவை கல்யாணம் பண்ணிக்கறது சரியான முடிவான்னு கொஞ்சம் யோசிச்சுக்கோ! அவ நல்லவ தான். ஆனா, உனக்கான நல்லவ கிடையாது சத்யா! அவளே ரொம்பச் சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணறவ! அவளைச் சொல்லியும் தப்பில்ல. சின்ன வயசில இருந்து கொஞ்சம் கூடக் கஷ்டமோ கவலையோ பார்க்காம வளர்ந்தவ! அப்பாவோட அருமை செல்லப் பொண்ணு. அவ இப்படித்தான்னு உனக்கு முன்னாடியே தெரியும். அவ உன்னைப் பார்த்துக்க மாட்டா, நீ தான் அவளைப் பார்த்துக்கணும்!”
“இன்னமும் சொல்லப் போனா, உனக்கு எதுனாலும் நீ தான் கவனிச்சுக்கணும். அவளுக்கு எதுன்னாலும் அதையும் நீயே தான் மேனேஜ் பண்ணனும். இப்போ நீ எதிர்பார்க்கற இந்த அணைப்பும், நீ ஏங்கித் தவிக்கற ஆதரவும் மிருது மூலமா உனக்கு வாய்க்கப் போறதில்லை” என்று அவன் இதயம் ராகாவையும் மிருதுவையும் எடை போட துவங்கியது.
அவனுக்குத் தன் செய்கையை நினைத்து கவலை உண்டாகவில்லை. இனி அடுத்து என்ன? இதை எப்படி எடுத்துச் செல்வது என்பதில் மட்டுமே புத்தி சென்றது. ராகாவின் இந்த அணைப்பையும், ஆதரவையும் மிருதுவிடம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதே நேரம் இந்த ஒரு காரணத்திற்காக மிருதுவை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு இந்தத் திருமணத்தை நிறுத்திவிட இயலுமா? என்ற கேள்விக்கும் அப்போது அவனிடம் பதில் இருக்கவில்லை.
“யோசிக்கணும். யாருக்கும் பாதகம் வராம இதை எக்ஸிக்யூட் பண்ணனும். ஒரு வேளை ராகாவுக்கு என் மேல ஒரு சின்னப் பாசம் இருக்கலாம். ஒரு அட்ராக்ஷன். மே பீ கொஞ்சம் லஸ்ட். இதை வச்சு யோசிக்கறது சரியா?”
“ரோட்டில அழுகற குழந்தையை, பக்கத்துவீட்டுக்காரங்க தூக்கி வச்சு கொஞ்சி சமாதானம் செய்யற மாதிரி, என் ஏக்கத்தைப் புரிஞ்சுகிட்டுக் கொஞ்சம் நேரம் அவ தோள்ல சாய்ச்சுகிட்டிருக்கலாம். அதை அட்வாண்டேஜ்ஜா எடுத்துகிட்டது நான் தான். ஆனா, ராகாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கற அளவுக்குக் காதலும் அன்பும் இருக்கான்னு தெரியலை. பேசலாம். கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுக்கலாம்”
“ஒரு பொண்ணு சுத்தமா பிடிக்காம இப்படித் தன் மேல சாய்ச்சுச் சமாதானம் பண்ண நினைக்க மாட்டா! ஆசையா அரவணைச்சுக்கவும் மாட்டா! புரியுது! ராகாவோட பாசம் எந்த அளவுக்கு இருக்கு, என்னை என்னோட பாசிடிவ் நெகடிவ்வோட ஏத்துக்குவாளா? அவ வீட்டில சிட்யுவேஷன் என்ன? என் டாடிகிட்ட, அக்காகிட்டன்னு சொல்லி புரியவைக்க முடியுமா? முக்கியமா மிருதுவுக்கு இதை எப்படிச் சொல்லறது?”
“ஒரேயடியா கம்பாடபிள் இல்ல மிருதுன்னு சொல்லிட முடியாது! ஏன்னா மிருது கெட்டவ கிடையாது. அவளோட எண்ணங்களும் தேவைகளும் வேற. அவளோ தான். சரி யோசிப்போம்” என்று மூளை பகுத்தறியத் துவங்கியது. அவனது நினைவலைகளில் இருந்து “சத்யா! சத்யா!” என்றழைத்த ராகாவின் குரல் அவனை மெல்ல நிகழ் காலத்திற்கு இழுத்து வந்திருக்க, ராகாவின் தோளில் இருந்து மெல்ல எழுந்து கொண்டான்.
“கூர்க்கா போயிட்டாங்க. நாம வெளிய போலாம்” என்ற ராகா, அதிகம் வேறெதுவும் பேசிவில்லை. அதே நேரம் அவன் கைகளை இறுக்கமாகத் தன் கை விரல்களுக்குள் பொதித்துக் கொண்டு, போகன்வில்லா கொடிகளை விலக்கி, வழி ஏற்படுத்தினாள்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் கைகள் கோர்த்த வண்ணம், அதிகம் பேசிக் கொள்ளாமல், அதே நேரம் இதமான ஒரு நெருக்கத்துடன் நடந்தனர் இருவரும். எல்லா விஷயங்களையும் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
சொல்லாமல் போனாலும் கூட, உடல் மொழிகளால் உணர்வுகளைக் கடத்தி விட முடியும். ஒருவரின் வார்த்தைகள் பொய் சொல்லலாம், பிடிக்காத பொருளை பிடித்தம் என்று வாயாடலாம், ஆனால் நயனங்களுக்குப் பொய் சொல்லிப் பழக்கமில்லை.
கைகளைப் பிடித்தபடிக்கு, அவ்வப்போது பக்கவாட்டில் பார்த்துக் கொண்டு, மென்மையாகச் சிரித்துக் கொண்டு, இதயத்தின் பிடித்தத்தைக் கைவிரல் இறுக்கத்தில் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு நடந்த இருவரின் விழிகளும் தங்களுக்குள் உண்மையாகவே இருந்தன.
அவளது பிஜியினுள் செல்லும் சமயம், சத்யாவின் நடையில் கொஞ்சம் தேக்கம் தெரிந்தது. ஏதோ சொல்ல வருகிறான் என்பதும், அதைச் சொல்லத் தயங்குகிறான் என்பதும் ராகாவிற்குப் புரிந்தது.
அவன் தடுமாற்றம் எதனால் என்று ராகாவால் உணர முடிந்திருந்தபடியால், அவன் கைகளைத் தன் கையினுள் பொத்திக் கொண்டவள், “எவ்ரிதிங் வில் பீ ஃபைன். சார்ட் அவுட் பண்ணிக்கலாம். டோண்ட் வர்ரி” என்று தெம்பூட்டும் படிக்கு மொழிந்தாள்.
அவள் சொற்கள் அவனிடம் பெரியதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதைக் குழம்பிப் போய்க் கிடந்த அவன் முகம் காட்டிக் கொடுத்தது. ராகாவின் எந்த விளக்கமும் அவன் குழப்பத்தை உடனே சரி செய்யப் போவதில்லை என்று புரிய, ராகா அமைதியானாள்.
“இது அவனாக யோசித்துத் தெளிவு பெற வேண்டிய விஷயம். இதில் நான் அதிகம் சொல்வதற்கு ஏதுமில்லை” என்று முடிவெடுத்தாள். அவள் பிடித்திருந்த கைகளை ஒரு முறை இறுக்கமாக பற்றி விடுவித்தவன், அவள் உள்ளே செல்லும் வரையிலும் காத்திருந்துவிட்டு, மெல்ல தன் வழியில் நடக்கலானான்.
*****
ராகா தன் அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே தன் ஆருயிர் தோழியும், தன் அண்ணியுமான ரேணுவின் எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தாள். ஒரு வேளை ரேணு விழித்திருந்தால் திரும்ப ராகாவிற்கு அழைப்பாள் என்று காத்திருக்க, அவள் எதிர்பார்த்தபடியே ரேணு திரும்பக் கைப்பேசியில் அழைத்தாள்.
“ஏ தூங்கிட்டியா?” என்ற ராகாவின் கேள்வி அவளுக்கே அபத்தமாகத்தான் தொனித்தது.
“ம்ம்ம், ரெஸ்ட் ரூம் போக எந்திரிச்சேன். உன் கால் வரவும் ஃபோன் எடுத்துட்டு பால்கனிக்கு வந்துட்டேன். சொல்லு! நீ ஏன் இன்னும் தூங்காம முழிச்சுட்டு இருக்க? எதாவது பிரச்சனையா மாலி?”
“பிரச்சனைன்னு அப்படி அப்பட்டமா சொல்ல முடியாது! ஆனா பிரச்சனை இல்லைன்னும் சொல்ல முடியாது!” என்றாள் குழப்பமாக.
“ஏ ! ஏண்டீ அர்த்த ராத்திரில கால் பண்ணி இம்சையக் கூட்டற? உடம்புக்கு எதாவது பண்ணுதா? வயித்து வலி, லூஸ் மோஷன் இப்படி ஏதாவது?”
“சீ, அபசகுணமா பேசாத! நீ எதாவது கேட்டு வச்சு அப்படியே ஆகிடப் போகுது!”
“அப்போ என்ன டாஷ்க்கு டீ இப்போ கால் பண்ண?”
“ஏ திட்டாத ரேணு! உன்னை விட்டா நான் யார்ட்ட போய்ப் புலம்பறது சொல்லு! உனக்காச்சும் எங்கம்மாவை பத்தி திட்ட புலம்ப, நீ உளர்றதை எல்லாம் உம்ம்ம் கொட்டி கேட்க என் அண்ணன் இருக்கான்! எனக்கு யார் இருக்கா?”
“சத்யமா என்னால முடியலை! ப்ளீஸ் என்ன விஷயம்னு சொல்லித் தொலை. இல்லைன்னா நான் ஃபோனை வச்சிடுவேன்.”
“ஏ, ஏ வைக்காத ரேணு! இன்னைக்கு என்னாச்சு தெரியுமா? அந்தச் சத்யா இருக்கான்ல” என்று துவங்கி, அன்றைய தினம் நடந்த விஷயத்தை ரேணுவிடம் சொல்லத் துவங்கினாள்.
ரேணுவிற்கு ஏற்கனவே ராகா, சத்யாவுடன் இரவு உணவருந்த அடிக்கடிச் செல்லும் சங்கதி தெரியும். என்ன பத்து நாட்கள் தொடர்ந்து வெளியே சென்றால், இரண்டு நாட்கள் மட்டும் சென்றதாகக் கணக்கு வாசித்திருப்பாள் ராகா.
இன்றைக்கும், மின்னியைப் பார்த்தது, பில் கட்டாமல் ஓடி வந்தது, கை கோர்த்து இறுதியில் பிஜி அறைக்கு வந்தது என்று இடையில் நடந்த கட்டிபிடி வைத்திய நிகழ்வை மட்டும் அழகாய் கத்தரித்துவிட்டு மற்ற வற்றை ரேணுவிடம் கூறி முடித்தாள்.
ரேணு பொறுமையாக ராகா சொன்ன கதையினைக் கேட்டுக் கொண்டவள், “நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன். அவன் கூட ரொம்பப் பேசாத, பழகாதன்னு. நான் சொன்னதையெல்லாம் நீ என்னைக்கு மதிச்சிருக்க?”
“ஏ நீ இப்போ என் ஃப்ரெண்டா பேசறியா? இல்ல என் அண்ணியா அவதாரம் எடுத்து பேசறியா?”
“நேர்ல மட்டும் இருந்த மண்டைய பொழந்திருப்பேன். “ஒரு அண்ணி தன் நாத்தனார்கிட்டன்னு” டயலாக் பேசியே சாவடிச்சிருவேன் பார்த்துக்க!”
“ஏ ஏண்டீ நீயும் எங்கம்மா மாதிரி என்னைப் பயப்படுத்தற!”
“சரி, அதையெல்லாம் விடு, நீ விஷயத்துக்கு வா! நீ என்ன பண்ணப் போற அதைச் சொல்லு முதல்ல!” என்று ராகாவின் முடிவை கேட்டாள் ரேணு.
“என்ன பண்ணப் போறான்னா? என்ன கேள்வி இது? நான் என்ன பண்ண முடியும் இதுல?” என்று ராகா தெளிவாகக் குழப்பத்துடன் பதில் கேள்வி கேட்க.
“அப்படியில்ல, சத்யாவை நீ லவ் பண்ணறியான்னு டீசண்டா கேட்டேன், உனக்குப் புரியலை. சரி சொல்லித் தொலை, சத்யாவை லவ் பண்ணறியா என்ன?” என்று ராகா தன் மனதிடம் கேட்க பயந்திருந்த வினாவினை ரேணு கேட்டிருந்தாள்.
“அது வந்து..” என்று ராகா இழுவையாகத் துவங்க, “இந்த வந்து போயிலாம் என்கிட்ட உளறாத. ஆமா- இல்லை ரெண்டே பதில் தான் இதுக்கு, ஆமாம் மாதிரி இல்லை, இல்லாத மாதிரி இருக்குன்னு குழப்ப எதுவும் இல்ல.”
“இப்படிக் கேட்டா எப்படி ரேணு பதில் சொல்ல?”
“வேற எப்படிக் கேட்கறது? லவ் பண்ணறியா, அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறியா சொல்லு”
“நான் ஆசைப்பட்டா மட்டும் போதுமா ரேணு?” என்று பதில் கேள்வி கேட்கத் தான் இயன்றது ராராவிற்கு.
“அப்போ ஆசைப்படறன்னு அர்த்தம். சரியா?”
“ஒரு பேச்சுக்கு சரின்னே வச்சுக்கோ! இப்போ என்ன பண்ணறது சொல்லு” என்று முழுவதுமாக ஒத்துக் கொள்ளாமல் ராகா சமாளிப்பாகவே பதில் கூறினாள். ஏனென்றால் நிச்சயமான விடை அவளுக்குமே தெரியவில்லை.
அவளுக்குப் பிடித்தம் தான். சத்யாவைத் தன் கையணைப்பில் வைத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும், அவன் மனம் சுருங்கிப் போய் விடாத படிக்கு பாதுகாப்பாய் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசை தோன்றியது உண்மை. ஆனால் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்ற நிலவரமும் உணர்ந்திருந்தாள். அதை ரேணுவிடமும் தயக்கம் இல்லாமல் சொல்லவும் செய்தாள்.
“சத்யாவை பிடிச்சிருக்கு ரேணு! அவன் பணக்காரங்கற காரணத்துக்காக இல்லை. பட், அதுவும் ஒரு சவுகரியம் தான்னு வையேன்! முழுசும் இல்லவே இல்ல, தெய்வீக காதல்னு ரீல் சுத்த மனசு வரலை. அவன் ஆள் பார்க்க ஹேண்ட்சம், ரிச், ஈசியா சிரிக்கறான், சிரிக்கவும் வைக்கறான். முக்கியமா அவன் கிட்ட பேசறப்போ ஒரு கம்ஃபர்ட் சோன் ஏற்படுது. என்ன வேணா தயக்கமில்லாம பேசலாம், ஏன் எதுவுமே பேசாம கூட அமைதியா நிம்மதியா நடக்கலாம். இதெல்லாம் நான் வேற யார்கிட்டையும் ஃபீல் பண்ணாத ஒரு உணர்வு”
“ராகா, நீ சொல்லறது உண்மையா இருக்கட்டும். இதே மாதிரி அவருக்கும் இருக்கணும் இல்லையா? உன்கிட்ட சிரிச்சு பேசறதையும், சாப்பிட டைம் ஸ்பெண்ட் பண்ணறதையும் மட்டுமே வச்சு நீயா ஒரு முடிவுக்கு வர்ற விஷயம் இது இல்ல!” என்றாள் ரேணு.
அவளிடம் ராகா, சத்யா தன் கையணைப்பில் பாதுகாப்பாகத் தன் மீது சாய்ந்து கொண்டு கழுத்து வளைவில் சொக்கிக் கிடந்த சங்கதியைச் சொல்லவில்லை என்பதால், ரேணுவின் சொற்களை ஒரேயடியாக மறுத்துப் பேசும் நிலையில் ராகா இருக்கவில்லை.
ரேணுவின் சொற்களைச் செவி மடுத்தே ஆக வேண்டிய சூழல் தான் ராகாவிற்கு. ஆனால் மனதிற்குள்ளாக ரேணுவின் கேள்விகளுக்குண்டான பதிலைச் சொல்லிக் கொண்டே தான் இருந்தாள்.
“என் மேல எந்த ஆசையும் இல்லாம தான் அப்படி இறுக்கமா கட்டி பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தானா? சும்மா பேசறதையும், கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணறதையும் மட்டுமே நம்பி இப்படி முடிவெடுக்க நான் என்ன லூசா?” என்றெல்லாம் ரேணுவிடம் சொல்லத் தோன்றியது.
ஆனால் சொல்ல முடியாத கோபத்தை, பற்களின் நறநறப்பில் காட்டினாள் ராகா. “இதப்பாரு மாலி! உன் மனசில என்ன நினைக்கறன்னு தெளிவா யோசிச்சுக்கோ! இது விளையாட்டுக் காரியம் இல்ல. உன் லைஃப் மட்டும் இதில சம்பந்தப்படலை. சத்யா, மிருது, நீ, உன் ஃபேமிலி, அவங்க ஃபேமலின்னு நிறைய இருக்கு! மனசில நினைக்கறதை எல்லாம் செய்ய நினைக்காத! எது எல்லாருக்கும் நல்லதுன்னு யோசி” என்று ரேணு ஒருவாறு தன் சொற்பொழிவை நிறுத்திவிட்டிருக்க,
“ம்ம்ம்.. சரி. தூக்கம் வருது, வைக்கறேன்” என்று மட்டுமே அப்போதைக்குக் கூறி கைப்பேசியை அணைத்தாள் ராகா.
“அதானே! உன் காரியம் முடிஞ்சதுன்னா தூக்கம் வந்துருமே! “ என்று அணைந்து போன கைபேசியிடம் புலம்ப மட்டுமே முடிந்தது ரேணுவால். ராகாவின் மனம் ரேணுவின் கேள்விக்கு உண்டான பதிலை எப்படி டான் டானென்று சொல்லிக் கொண்டிருந்ததோ, அதே போன்று அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற பட்டியலையும் வாசிக்கத் துவங்கியது.
சத்யா தானா பேசற வரைக்கும் கொஞ்சம் டயம் குடுக்கணும். அவன் மேல போய் விழுந்து விழுந்து பேசக் கூடாது. அவனை யோசிக்க வைக்கணும். அவனுக்கு எது வேணும்னு தேர்ந்தெடுக்க வைக்கணும்.
அதுக்கு முதல்படி, நாளைக்கு அவன் வெளிய மீட் பண்ண கூப்பிட்டான்னா போகக் கூடாது. ஃபோன் பண்ணா அட்டெண்ட் பண்ணக் கூடாது.
அதே நேரம், ரொம்பவும் அசால்ட்டா இருக்கவும் கூடாது. மிருது அவனுக்குச் செட் ஆக மாட்டான்னு எக்ஸாம்பில்ஸ் காட்டிட்டே இருக்கணும். உதாரணமா, “அவ, சத்யாவோட அக்கா நிச்சயத்துக்கு வர்றதை விட, அவளோட டிரஸ் தான் முக்கியம்னு ஆர்ப்பாட்டம் பண்ணப்போ” “நான் ஹெல் பண்ணறேன்னு. நாங்க இருக்கோம்னு வாசன் ஐ கேர் மாதிரி ” உள்ள குதிச்சு மிருதுவை சமாதானப்படுத்தி, அவ பிரச்சனையைச் சால்வ் பண்ண மாதிரி செய்யக் கூடாது.
மிருதுவை கல்யாணம் பண்ணா நீ என்ன மாதிரியான நிலைமையில இருப்பன்னு சத்யாவுக்குக் காட்டிட்டே இருக்கணும். அவன் தானா உணரனும். அதை நான் உணர்ந்தணும். மிருது கெட்டவ இல்ல தான். ஆனா சத்யாவுக்கானவளும் அவ இல்லை. இதைச் சத்யாவே உணர்ந்து, மிருதுவோட நடக்க இருக்கற கல்யாணத்தை நிறுத்திட்டு என்கிட்ட வரவைக்க என்னலாம் செய்யணுமோ அதைத் திறமையா செய்யணும்.
என்று அவள் மனது வாசித்த பட்டியலைக் கேட்கக் கேட்க ராகாவின் முகத்தில் அவளது ஆக்மார்க் ஈவில் விட்ச் புன்னகை தானாக அரும்பத் துவங்கியது.
அத்தோடு சேர்த்து, “நான் நல்லவ தான். ஆனா ரொம்ப நல்லவ இல்ல” என்று தலைவரின் “பேட்ட” டயலாக் மனதிரையில் ஓட, தன் ஈவில் விட்ச் புன்னகையை இன்னமும் பெரிதாக்கினாள் ராகமாலிகா.