“இப்படி சின்ன பொண்ணு மாதிரி அடம் பிடிச்சா என்னமா அர்த்தம். நீங்களும் உங்க அப்பாகூட சேர்ந்து ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்க.. ஒரு ஒர்க்கிங் வுமனுக்கு காது கேட்கறது ரொம்ப முக்கியம் மா…இது இல்லைன்னா உன்னால இந்த சொசைட்டில சர்வே பண்ண முடியாது. இனி உங்க ஆபீஸ் ஒர்க் எல்லாத்தையும் நீ மட்டும் தான் பார்க்குறது போல இருக்கும். அப்ப நிறையக் கஷ்டப் படுவ மா… உனக்கு இப்ப புரியாது. நீ இங்க இருந்து வெளியே போய் சர்வே பண்ணும் போது தான் இதெல்லாம் உனக்குப் புரியும்… கொஞ்சம் யோசிச்சு சொல்லுமா… ஃபர்ஸ்ட் உன்னை செக் பண்ண ஆடியோலஜிஸ்ட் வர சொல்றேன். அவரும் என் ப்ரெண்ட் தான். அவர் சொன்னா உனக்கு இன்னும் இதைப் பத்தி புரிய வாய்ப்பு இருக்கு…” குடும்ப மருத்துவர் என்பதையும் தாண்டி அவருக்கும் எப்போதும் குறும்பான ஆரியை பிடிக்கும் என்பதால் மென்மையாகச் சிறு பிள்ளைக்கு எடுத்துக் கூறுவது போல் கூறினார் அந்த மருத்துவர்.
அப்போதும் ஆரியின் தலை வேண்டாம் என்பதைப் போல் தான் ஆடியது. பெருமூச்சுடன் “அப்பறம் உன் இஷ்டம் மா… இப்பவே நீ செத்துட்டா உன்னை அடக்கம் பண்ண மட்டும் வரேன்னு சொல்ற சொந்தத்துக்கு மத்தியில வாழ்ந்துட்டு இருக்க. இந்த நிலைமையில் உனக்கு இப்படியொரு குறையிருக்குன்னு தெரிஞ்சா? கண்டிப்பா உனக்கு ஆபத்து வரும். சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் வரேன் மா…” என ஆரிக்கு எழுதி காட்டியபடியே பேசியவர் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டார்.
“நீங்க என்ன சொல்றீங்க அங்கிள்..” என்றவள் வார்த்தைகளைக் கோர்க்கச் சற்றே சிரமமாக இருந்தது. பேச்சு வரவே இல்லை ஆனாலும் பேசினால் மீண்டும் அதே வார்த்தைகளைக் கோர்த்து நிதானமாகக் கேள்வி கேட்டாள்.
அடுத்த வார்த்தையும் அதே போல் தடுமாற்றம் தான் வந்தாலும் ஒரீரு முறை தான் அந்த தடுமாற்றம் கூட மூன்றாம் முறையில் கோர்வையாக வந்தது மங்கையின் பேச்சு…
ஆரியின் இந்த முயற்சி முற்றிலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது மருத்துவருக்கு அதை வெளிக்காட்டாமல் திரும்பி நின்று காரிகையைக் கண்டார்.
“நீங்க என்ன சொல்றீங்க அங்கிள்? நான் இங்க வந்து எத்தனை நாளாச்சு? யார் என்ன சொன்னாங்க?… என் ரிலேட்டிவ் இங்க தான் இருக்காங்களா? ஆனால் யாரும் என்னைப் பார்க்க வரலையே அங்கிள். நீங்க யாரை சொல்றீங்க…” என விடாமல் கேள்வி கேட்டவள் சின்ன தயக்கத்திற்குப் பிறகு
“என் ஃபேமிலியை கடைசியாக ஒரு தடவை பார்க்கணும் அங்கிள்… அவங்க மார்சரில தானே வைச்சு இருக்கீங்க? நம்ம இப்ப போயி பாக்க முடியுமா? கடைசியா ஒரே ஒரு தடவை பாத்துக்கிறேன் அங்கிள்…” எனக் கேட்டவள் அழுகவில்லை ஒரு துளி கண்ணீர் மங்கையின் கண்களிலிருந்து வெளியில் வரவில்லை. ஆனால் அழுகையை அடக்குவது புரிந்தது. அழுகையை அடக்கியதால் தொண்டையில் வலியெடுத்தது. மூச்சு வாங்கினாள். நெஞ்சை நீவிக் கொண்டே
“இங்க வலிக்குது அங்கிள்…” என்றாள்.
இதழ்கள் அழுகையில் துடிக்கக் கண்கள் கலங்க… முகம் சுருக்கி கூறியவளைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவருக்கும்
கண்ணீர் வந்ததோ? பின்னால் திரும்பிக் கொண்டார் கண்களில் அவரையும் மீறி வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார். அவருக்கு இது போல கேஸ் புதிது அல்லவே இருந்தும் என்றும் குறும்பாகப் பேசி சிரித்திடும் ஆரியின் தற்போதைய உணர்ச்சி பேச்சும், தவிப்பும் இவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.
அதே சமயம் தனக்குத் துடிக்கும் அளவிற்குக் கூட இவளின் சொந்தபந்தங்களுக்குத் துடிக்கவில்லையே என்ற எண்ணம் மருத்துவரின் மனதில் எழாமல் இல்லை… காரிகையின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆசை தான். இருந்தும் என்ன செய்ய ஆக்ஸிடென்ட்டான அடுத்த நாள் காலையிலேயே இறந்த மூவரையும் நல்லடக்கம் செய்துவிட்டனர் ஆரியின் சொந்தங்கள். அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு இதுவும் இழுத்துட்டே இருந்தா நல்லெண்ண அடிப்படையில் கொன்னுடுங்க சார்…” என்ற சொந்தங்களின் பேச்சு இன்னும் மருத்துவருக்கு கசப்பைத் தான் கொடுத்தது…
இங்கு ஆரிக்கோ தலையிலிருந்த காயம் வலியைக் கொடுத்தது. அதையும் மீறி எந்நேரமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் இரைச்சல் சத்தம் ஒரு வித கோபத்தைக் கொடுத்தது… அதே கோபத்தோடு “ஏன் எதுவும் சொல்ல மாட்டீங்கறீங்க…” எனக் கேட்டாள்.
“நீங்க அட்மிட்டாகி ஒன் வீக் ஆகுது மா. இன்னைக்கு மண்டே… அண்ட் உங்களுக்குத் தலையில் காயம் இருந்ததுனால நீங்க கண் விழிக்கவே இரண்டு நாள் ஆச்சு… தென் அதுக்கு அப்பறம் வந்த நாள் தான் உங்க மெளன விரதத்துல போயிடுச்சுன்னு உங்களுக்கே தெரியும். சொல்லப்போனால்
இந்த வீக்கே உங்ககிட்ட ட்ரீட்மென்ட் பத்தி பேச வேண்டாம் நினைச்சேன். ஆனா நீங்க இருந்த நிலை என்னைப் பேச வைச்சுட்டுச்சு…” என்றதும் அவரை நிமிடம் ஆழ்ந்து பார்த்தவள் “அப்பா, அம்மா, பப்பு…” குரல் வரவேயில்லை இருந்தும் கேட்டாள்.
“நல்லடக்கம் பண்ணிட்டாங்க மா…” என்றார் அமைதியான குரலில்
“ஓ…” என்றவள் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு
“நான் பண்ணத் தப்புக்குக் கடைசி வரைக்கும் எங்க முகத்தை நீ பார்க்க கூடாதுன்னு நினைச்சு இருப்பாங்க போல…” என மெல்லிய குரலில் கூறியவளின் கண்களில் அவளையும் மீறி ஒரு சொட்டு நீர் பட்டெனப் பாவையின் வலது கையில் விழுந்தது.
“இல்லை ஆரியா… அவங்க மூணு பேரும் காருலயே பாதி…” என எழுதிக் காட்டியவரின் கைகளைப் பிடித்துக் கொண்டவள் ‘வேண்டாம்…’ எனத் தலையாட்டினாள்.
ஆரிக்கும் கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருந்தது… கார் மோதிய வேகத்தில் இவள் அமர்ந்திருந்த டோர் ஓபனாகி விட்டது. இவள் தரையில் உருண்டு விழுந்த அடுத்த நிமிடம் காதை கிழிக்கும் சத்தமும் தன் அப்பா,அம்மா, பப்புவின் ஓங்கி ஒலித்த குரலும் இன்றும் கேட்டது. அதற்கு பின்னான சத்தம் எதுவும் கேட்கவில்லை. ஆழ்ந்த மயக்கம் அவளுள் அதற்குப் பிறகு விழித்தது என்னவோ ஐந்து நாட்களுக்கு முன்பு தான்.
கண்களை இறுக மூடித் திறந்தவள் மருத்துவருக்குப் பின்னால் வேலும், ரத்னாவும் நின்றிருப்பதைப் பார்த்தாள். “வாங்க…” என்பதைப் போலத் தலையாட்டினாள்.
ரத்னா ஓடி வந்து ஆரியை அணைத்துக் கதறி விட்டார்… அவர் பேசியது புரியவில்லை என்றாலும் அவர் என்ன கூறியிருப்பார் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. கூடவே அன்றைய நினைவுகளும் அவளைத் தாக்கத் தான் செய்தது..
“இல்லை பாப்பா இவனுங்க கிடைக்கறானுங்க… லீவ் விட்டா எங்காவது போகணும் போகணும் சொல்லிட்டு தான் இருப்பானுங்க… நீ சும்மா இரு…” என்ற ரத்னாவைப் பார்த்துச் சிரித்தவள்
“ஆசை படறானுங்க ஆன்டி… நீங்களும், அங்கிளும் ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு போயிட்டு வாங்க…” என்றவள் போர்ட்டிகோவில் அமர்ந்திருந்த தந்தையிடம்
“அப்பா, வேலு அங்கிளுக்கு ஒன் வீக் லீவ்…அண்ட் அவர் போனை நான் வாங்கி வைச்சுட்டேன்… நீங்க அவருக்குக் கால் பண்ணா நான் தான் எடுப்பேன்…” என்றாள் குறும்பாக .
“ஆரி என்ன பண்ற? அவர் போனை அவருகிட்ட கொடு… ஏதாவது ஆத்திரம், அவசரத்துக்கு வேலுக்குத் தான் கால் பண்ணுவோம்…” எனக் கணவருக்கு காபியை கொடுத்தபடியே கூறினார் பத்மா.
“அதுக்காக தான் போனை வாங்கி வைக்கிறேன் மா.. வருசத்துக்கு ஒரு நாலஞ்சு நாளாவது அவரை ஃப்ரீயா விடுங்க…அப்படியும் ஏதாவது தேவைன்னா ரத்னா ஆண்டிக்குக் கால் பண்ணிக்கலாம்…” என்றவள் கையோடு வேலின் குடும்பத்தை ஊட்டிக்கு அனுப்பி இருந்தாள். அவர்கள் சென்ற அடுத்த நாளே ஆரியின் குடும்பத்திற்கும் விபத்து ஏற்பட்டு இருந்தது…
நிச்சயம் இவர்களுக்கு விபத்து பற்றிய தகவல் தாமதமாகத் தான் சென்றிருக்கும் என்று நினைத்தவள் அவர்களின் கண்ணீரை மௌனமாகப் பார்த்தாள்.
துள்ளலோடு வளம் வரும் பனிமலரின் மௌனம் கணவன், மனைவி இருவருக்குமே சொல்லென வலியை உண்டாக்கியது.”என்னாச்சு பாப்பா ஏன் பேசவே மாட்டேங்குற…” அழுகையுடனே வினாவினார் ரத்னா…
“அவங்களுக்கு நீங்க பேசறது புரியாது…” இத்தனை நேரம் அமைதியாக இருந்த மருத்துவர் வாய் திறந்தார். இருவரிடமும் அனைத்தும் கூறியவர்
“ஆரியை ட்ரீட்மென்ட்க்கு ஒகே சொல்ல சொல்லுங்க… இப்படியே இருந்தா அது இவங்க வேலையைப் பாதிக்கும். நாள் போக அதுவே இவங்களுக்கு ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கு…கொஞ்சம் சொல்லிப் புரியவைக்க முயற்சி பண்ணுங்க. இத்தனைக்கும் இவங்க பொண்ணு.
சாதாரணமா பொண்ணுனாலயே இந்த சொசைட்டில சர்வே பண்ண முடியாது.இவங்களுக்கு காதும் கேட்கல கண்டிப்பா சர்வே பண்றது ரொம்ப கஷ்டம்…” என்று எழுதிக் காட்டியபடியே பேசியவர் அங்கிருந்து நகர்ந்தார்.
கண்களை இறுக மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை வெளியிட்டபடி “அங்கிள்…” எனச் சோர்வாக அழைத்தவள் தனக்குத் தேவையானதை எடுத்து வரச் சொன்னாள். அவள் பேசவே காத்திருந்தவர் போலக் கண்களில் மின்னிய கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடி அவள் கூறியதைச் செய்யச் சென்றார் வேலு.
ஒரு புறம் உடலின் சோர்வும் தலைவலியும் படுத்தி எடுத்தது. இருந்தும் வேலின் மூலம் மருத்துவச் செலவுக்கு யார் செலவு செய்தார்கள் என்று விசாரித்து அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினாள். மருத்துவர் கூறியது நினைவு வந்தது அப்படிக் கூறக் கூடியவர் யாரென்று தெரியும் என்பதால் அந்த நிலையிலும் பணத்தை கொடுக்க கூறினாள்.
கிட்டதட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு தெம்பாக எழுந்து அமரும் நிலைக்கு வந்திருந்தாள். அன்றே காசியையும் மருத்துவமனைக்கு வரவழைத்தாள்.
இரண்டு வாரத்தில் என்ன செய்தார்கள் என்பதைக் கோப்பாக எடுத்து வரக் கூறியிருந்தாள். அனைத்தும் கொண்டு வந்து கொடுத்தவனிடம் “இரண்டு வார லேபர் பேமென்ட் எவ்வளவுன்னு லிஸ்ட் வந்து கொடுத்துட்டு அங்கிள் கிட்ட அமௌண்ட் வாங்கிட்டு போங்க…” என்றாள். இந்த நிலையிலும் தொழிலாளர்களுக்காக யோசிக்கும் பெண்ணை பார்க்க ஆச்சரியமாகவும் அதே சமயம் பாவமாகவும் இருந்தது அது காசியின் முகத்திலும் பிரதிபலித்தது அதை ஆரி கவனித்தாலும் துளியும் கண்டுகொள்ளவில்லை..
ஏதோ நிரூபிக்கும் வேகம் பெண்ணிடத்தில். மருத்துவர் கூறியதைப் பொய்யென நிரூபிக்கும் வேகமாகக் கூட இருக்கலாம். உன்னால் எது முடியாதென்று கூறினாரோ அதை முடித்துக் காட்டும் வேகம் அவளுக்கு… ‘இந்த சொசைட்டியில ஒரு பொண்ணாலயே சர்வே பண்ண முடியாது இதுல இவங்களுக்கு காது கேட்கல.. கண்டிப்பா சர்வே பண்ண கஷ்டப்படுவாங்க…’ என்ற மருத்துவரின் முன் நின்று காட்டும் வேகம்.
அவள் நினைத்ததைச் செய்தாள். உணர்வுகளைக் கட்டுப்படுத்தினாள். மனதளவில் இறுகி நின்றாள். தாய் தந்தையை நினைக்கும் போதெல்லாம் கத்தி கதறவில்லை என்றாலும் மௌனமாய் கண்ணீர் வடித்தாள். அந்த மௌன கண்ணீர் இவளுக்கு இன்னும் இன்னும் இறுக்கத்தைக் கொடுத்தது. யார் என்ன பேசினாலும் சரி, எழுதிக் காட்டினாலும் சரி அவர்களிடம் வாய் வழியே பேசினாள். ஒரு சில வாரங்களில் லீப் ரீடிங் வகுப்பிற்கு ஏற்பாடு செய்தாள். காது கேளாதோர் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை அணுகியிருந்தாள் அவர்களின் பயிற்சியும் தொடங்கி இருந்தது.
மருத்துவமனையிலிருந்தபடியே அனைத்தும் கற்றாள். சில மாதங்கள் சிரமமாக இருந்தது ஒரு சில வார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகள் இதழ் அசைவை வைத்துப் புரிந்து கொண்டாள். யார் என்ன கேட்டாலும் உடனே பதில் அளிக்கவில்லை என்றாலும் சிறிது நேரம் கழித்து பதில் கொடுத்தாள். அதுவும் நாள் போக்கில் மாறியிருந்தது.
இது மட்டுமின்றி அலுவலக வேலைகளையும் பார்த்துக் கொண்டாள். ஆம் அலுவலக தகவல் முழுவதும் காசியால் தினமும் பகிரப்பட்டது. அதே போல் வாரத்திற்கு ஒரு முறை அலுவலக கோப்புகள் ஆரியின் கைக்கும் வந்திருந்தது…
தலையில் காயம். கைகளில் நடுக்கம், சிவந்த முகம். பேசத் தயங்கும் இதழ்கள். எந்த நேரமும் கலங்கி நின்ற விழிகள் என்று பார்ப்பதற்கே பாவமாக இருந்த பெண்ணா? என நினைக்கும் அளவிற்கு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தாள் ஆரியா ரெங்கநாயகி. கிட்டத்தட்ட ஆரியின் வீட்டிற்குச் செல்லவே ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. அதே சமயம் காசியின் திருமண அழைப்பிதழும் அவள் வீட்டிற்கு வந்திருந்தது.
********
வாகனத்தின் சிறு அதிர்வால் தன் நினைவிலிருந்து வந்தவள் வேலுவை பார்த்தாள். “வீடு வந்துருச்சா அங்கிள்…” எனக் கேட்டபடியே இறங்கிக் கொண்டாள். அவரும் அந்த வீட்டின் போர்டிகோவில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கியவர் ஆரியை பார்த்தபடி நின்றார்.
“ஏதாவது கேட்கணுமா அங்கிள்…” என புருவம் உயர்த்தி கேட்டவளிடம்
” ஈ.என்.டி. டாக்டர் கிட்ட பேசிட்டு இருந்தது யாரைப் பத்தி டா பாப்பா… நீ சொன்னது ஏகலைவன் தம்பியைப் பத்தியா? அவரோட குரலைக் கேட்க ஆசைப்படறயா?…” திகைப்பும், வியப்புமாய் கேட்டார்…
“ஆசைப்படறனான்னு தெரியலை… அவர் என்கூட இருக்கும் போது எனக்கு ஒரு குறை இருக்கிறதுங்கறதே தெரியலை அங்கிள்… எப்படி சொல்றது இப்ப வரைக்கும் என்னைப் பாவமா, பரிதாபமா, நீ இவ்வளவு தான்னு பார்க்கறவங்களோட பார்வையைத் தான் பார்த்து இருக்கேன். முத தடவை என்னைப் பாவமா,பரிதாபமா பார்க்காம எப்பவும் போல என்கிட்ட பேசற ஆளை பார்க்குறேன். அதனால் தான் அவரோட குரலைக் கேட்க ஆசைப்படறேன். மத்தபடி டாக்டர் சொன்னது போல இல்லை… இனிமே அதுவும் ட்ரை பண்ண மாட்டேன் அங்கிள்…” என வேலுக்கு மட்டுமல்ல அவளுக்கும் சேர்த்தே ஒரு முறைக் கூறிக் கொண்டாள்.
இங்கு அதே சமயம் தன் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த கலையின் நினைவு முழுவதும் தான் எடுத்த முடிவு சரியா? என்பதைத் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.
அதன் விளைவு மீண்டும் குழப்பம் அவனைச் சூழ்ந்தது… மீண்டும் மதியும், மனமும் சேர்ந்து கலையைப் பந்தாடியது..
ஆரியின் மேல் உனக்கு இருப்பது வெறும் ஈர்ப்பா? அப்படியானால் எதற்காக அவள் மயங்கியதும் அத்தனை துடித்தாய்? கோபமாகக் கேட்ட மனதிற்குப் பதில் சொல்லும் முன் ஆடவனின் கண்முன்னே மீண்டும் அவன் தாய், தந்தையின் வாழ்க்கையை நினைவு படுத்தியது கலையின் புத்தி…
“உன் அப்பா, அம்மா வாழ்க்கையைப் பத்தி நான் சொல்லணுன்னு இல்லை. இதுக்கு மேலையும் அந்த குழிக்குள்ள நீ விழனுமான்னு நீயே யோசிச்சுக்கோ? நான் சொல்றதை சொல்லிட்டேன் இனி நீ தான் முடிவெடுக்கனும்…” என்ற மதியின் பேச்சு தான் இப்போதும் வென்றது.
‘நீ மதியத்திலிருந்து இப்ப வரைக்கும் இது ஒன்னை வைச்சே உருட்டிட்டு இரு… நான் வர வேண்டிய நேரத்துல வரேன்…’ என்றபடி அந்த நிமிடம் மறைந்து போனது கலையின் மனம்
தன் மதி கூறியது தான் சரியென்று நினைத்தவன் இனி ஆரியிடம் விலகி நிற்க வேண்டும் என்ற முடிவையே மீண்டுமொருமுறை எடுத்திருந்தான். அந்த முடிவை எடுத்த கணம் அவனையும் அறியாமல் அவன் முகம் இறுகி இருந்தது..
இனி அவளின் பக்கமே திரும்பக் கூடாது என்று கலையும். இனி அவனின் குரலைக் கேட்க முயலக் கூடாது என்று ஆரியும் ஒரே போல முடிவெடுத்து ஒருவழிப் பாதையில் பயணித்தனர்… பயணிப்பார்களா?