சத்யா திரும்ப அழைத்துப் பேசுவான் என்று தான் ராகா பெரிதும் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அழைப்பிற்குப் பதிலாக, குறுஞ்செய்தி மட்டுமே வந்திருந்தது. அதுவும் எந்த மனநிலையில் அனுப்பப்பட்டது என்று ராகாவால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஒரு ஹாய் இல்ல, ஒரு பை இல்ல. வெறுமனே ஒரு நியூஸ் மாதிரி. இந்த இடத்தில இத்தனை மணிக்கு வந்துருன்னு அனுப்பியிருக்கான்” என்று நினைக்கும் போதே, சத்யாவின் எண்ணம் ஓரளவிற்கு ராகாவிற்குப் புரிந்தது. ஆனாலும் குரங்கு தன் புண்ணைச் சொரிந்து தானே சிரமப் படுவதைப் போல, சத்யா அனுப்பியிருந்த முந்தைய செய்திகளை எல்லாம் மேலே ஸ்க்ரால் செய்து திரும்பத் திரும்பப் படித்தாள் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டாள்.
“ஹாய்” என்றால் அதனுடன் சேர்த்து நான்கு சிரிக்கும் எமோஜி இருக்கும்.
“பை” என்றால் ஒரு முகம் சூம்பும் எமோஜி இருக்கும்.
“கிளம்பிட்டியா?”வில் பத்துக் கேள்விக் குறிகளாவது இருக்கும்.
“நான் ஒரு மணி நேரமா வெயிட் பண்ணறேன். நீ மெதுவா வா, அவசரமில்ல” என்பதில் நக்கல் கலந்த கோபம் மிளிரும்.
“ஹலோ, டைமாச்சு. தூங்குடா கைப்புள்ள” என்பதில் வடிவேலு ஸ்டிக்கர் இருக்கும்.
இப்படி இருவருமே எந்த ஒரு விஷயத்தையும் செய்தி போலவெல்லாம் தட்டச்சுச் செய்து கொள்ள மாட்டார்கள். அச்செய்தியில் இருந்து வேறு ஏதேணும் விஷயம் பற்றிப் பேச்சுத் திசை மாறிச் சென்றிருக்கும்.
ஆனால் இன்றோ ஒரு சின்னச் சிரிப்பு எமோஜி கூட இல்லை. அதை விடவும், “நான் உன் பிஜி வாயிலுக்கு வந்து அழைத்துச் செல்கிறேன். தயாராக இரு” என்று சொல்லித் தான் சத்யாவிற்கு வழக்கம்.
“இங்கே வந்துவிடு” என்று தனியாக அவன் எங்கேயும் இப்படி அவளைத் தானாக வரச் சொல்லியதில்லை. அதுவே அவளுக்கு விகல்பமாகத் தெரிந்தது.
கொஞ்ச நேரம் தன் அலுவலகத்தின் வாஷ்ரூமில் கதவைப் பூட்டிக் கொண்டு அழுதாள். அதுவும் சிறிது நேரம் தான். கண்களைத் தாண்டி கண்ணீர் கன்னத்தில் வடியவும், அவள் உள்மனது விழித்துக் கொண்டு, “சே, கண்ணைக் கண்ணைக் கசக்கிகிட்டுச் சின்னப் புள்ள மாதிரி! எதுக்கு அழுகற இப்போ? என்னாச்சு பெருசா? கண்ணைத் துடச்சுட்டு யோசி” என்று மண்டையில் கொட்டியது.
சிறுவயது முதலே ராகாவிற்கு அழுவது பிடிக்காது. அதிலும் மற்றவர் முன் அழுகவே மாட்டாள். அந்த வழக்கம் இன்றளவும் மாறவில்லை.
நீண்ட நேரம் வாஷ்சென்ற ராகாவைக் காணவில்லை என வனிஷா அவளைத் தேடிக் கொண்டு வரவும், வாஷ் பேசினில் முகத்தில் நிறையத் தண்ணீர் ஊற்றி தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.
“ஏ, என்னாச்சு ராகா!” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு வனிஷா வினவ, “தலை வலி” என்று பொய் சொல்லி அங்கிருந்து நழுவினாள். இன்னமும் சிறிது நேரம், தன் அறையில் கணினியை வெறித்துக் கொண்டிருந்துவிட்டு, மாலை நான்கானதுமே அலுவலகம் விட்டுக் கிளம்பிவிட்டாள்.
உடனே பிஜிக்குச் செல்ல மனம் ஒப்பவில்லை. காலார கபன் பார்க்கில் இலக்கில்லாமல் நடந்தாள். மாலையின் இதமான சூழலுக்கும், குளிருக்கும் ஏதுவாக, சூடான மசாலா டீ வாங்கிக் கொண்டு பெஞ்சில் அமர்ந்து ஆழ்ந்து ரசித்துக் குடித்தாள்.
தேநீர் தொண்டையில் கரையும் போதே அவள் கவலைகளும் தலைவலியும் கரைந்து போய்விட்டதைப் போன்ற உணர்வு. மனம் ஒரு முடிவினை எட்டியிருந்தது. ரேணுவிடம் பேசிய பின்பு நிறையத் தெளிவு ஏற்பட்டிருந்தது.
“சத்யா கூடப் பேசறது எனக்குத் தப்பாவே தெரியலை. ஆனா, ரேணுவுக்கு, வனிஷாக்குலாம் வேற மாதிரி தானே தோணியிருக்கு. என் மேல இந்தச் சமுதாயம் நிறைய அவமானங்கள் சுமத்தும். பணக்காரனை வளைச்சுப் போட பார்க்கறான்னு அபாண்டமா பேசும். இதையெல்லாம் கூடத் தூக்கி ஓரமா வச்சு யோசிச்சாலும், சத்யாவோட வசதி ரொம்ப மிரட்சியானது.”
“என்னோடது ரொம்ப ரொம்பச் சாதாரணமான ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். சொந்தமா சென்னையில ஒரு ஃப்ளாட், ஒரு கார், பேங்கிலக் கொஞ்சம் பணம். ரிடையர்ட் ஆகிட்ட அப்பா அம்மா, ஐடில வேலைக்குப் போற அண்ணன், அண்ணி. இவளோ தான் என்னோட பேக்கிரவுண்ட்.”
“அவன் அப்படியா? விக்கிபீடியால ஒரு பக்கத்துக்கு அவங்க வியாபார சர்கிள் பத்தின ஆர்டிகல் மட்டுமே இருக்கு. சோ, இதையெல்லா வச்சு பார்க்கறப்போ, அவன் அன்னைக்குக் கட்டி புடிச்சாங்கற ஒரு விஷயத்தை மட்டுமே வச்சுகிட்டு, அவன் என்னைக் காதலிக்கறான். அவனோட என்கேஜ்மெண்ட்டை ப்ரேக் பண்ணிட்டு எங்கூட வந்துருவான்னு நினைக்கறது அபத்தமா இருக்கு. சுத்த ஹம்பக்கான இந்த எண்ணம் ஏன் எனக்கு வந்துச்சு?”
“அப்படியே ஒரு சின்ன அட்ராக்ஷன் இருந்தா தான் என்ன இப்போ? அவன் பேசறது சிரிக்கறது, பழகறது எல்லாமே பிடிச்சிருக்குன்னே வச்சுக்கோ! அதனால என்ன? உடனே அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறது எவளோ முட்டாள்தனம். இதுவே சத்யாவுக்கும் மிருதுவுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சத்யாவ நான் மீட் பண்ணியிருந்தா, இப்படித் தான் அவன், மிருதுவை டைவர்ஸ் பண்ணிட்டு, என்னைக் கல்யாணம் பண்ணிக்குவான்னு நினைப்பேனா?”
“இல்ல தானே! சே, அவன் வைஃப் குடுத்து வச்சவன்னு கொஞ்சம் பொறாமை பட்டுட்டு, அவன் வைஃப் மூக்கு கோணலா இருக்கு, மேட்சே இல்லைன்னு ஏதாவது ஒரு பழியைச் சுமத்தி அவங்களை இம்பர்ஃபெக்ட் கபுள் ஆக்கி என் மனசை சமாதானப்படுத்திட்டு, என்னோட அடுத்த வேலையைப் பார்க்க போயிருப்பேன்.”
“சோ, அவனை நேர்ல பார்த்து, சாரி ஃபார் எவ்ரிதிங், அன்னைக்கு நடந்ததை நாம அப்படியே மறந்திடலாம். பழையபடிக்கு சாப்பிட்டுட்டு ஊர் சுத்திட்டு ஜாலியா இருக்க முடியாட்டியும், ஹாய் பாய் அளவில பழக்கப்பட்ட நபர்களா பிரிஞ்சுடலாம். என்னைப் பார்க்கறப்போ அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண வேணாம்னு சொல்லிட்டு வந்துடணும்” என்ற முடிவினை நோக்கி அவள் மனம் மெல்ல மெல்ல என்ற போதும் திடமாக நகர்ந்தது.
நகர்ந்தது என்பதை விடவும், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு தன் மனதைத் தன் சொல்படி நகர்த்தினாள் என்றே சொல்ல வேண்டும். அதற்காகச் சத்யாவைப் பிரிவதில் துளியளவும் வலியோ,வருத்தமோ இல்லை என்று அர்த்தமில்லை.
இதுவே சத்யா, அன்றைய இரவுக்குப் பிறகான தினமோ, அதற்கு மறுதினமோ, அவளிடம் இதைப் பற்றிப் பேசி புரியவைத்து, அடுத்து என்னவென்று விவாதித்து ஒரு முடிவினை எட்டியிருந்தால், அந்தக் கதை வேறு. எந்த முடிவாக இருப்பிணும் அதை இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்து எடுக்கும் போது பெரியதாய் பாதிப்புகள் இருக்கப் போவதில்லை.
இவனானால், அவனாக அழைக்கவும் இல்லை, அவள் அழைப்பை ஏற்கவுமில்லை. இதை நினைக்கும் போது தான், “ஒரு வேளை இவனே நான் பணத்துக்காகத்தான் இவன் பின்னாடி சுத்தறேன்னு தப்பா நினைச்சிருப்பானோ! அவனைச் சொல்லியும் தப்பில்ல. ரேணு, வனிஷான்னு எல்லாருக்குமே அந்த எண்ணம் தானே மொதல்ல வந்திருக்கு. சோ, இவனும் அப்படி நினைக்கச் சான்ஸ் இருக்கு”
“அதனால தான் குழப்பத்தில என் காலைக் கூட அட்டெண்ட் பண்ணலை. இன்ஃபாக்ட் நானா கால் பண்ணாம விட்டிருந்தா அவனா கண்டிப்பா காண்டாக்ட் பண்ணியிருக்க மாட்டான். சரி, இதுவும் நல்லதுக்குத் தான். நேர்ல பேசிட்டு, எந்தப் பேட் மெமரீசும் இல்லாம பிரிஞ்சிடணும்.” என்று சாதகப் பாதகங்களை யோசித்து நல்ல முடிவையே எடுத்திருந்தாள்.
மாலை ஆறு மணிக்குத் தயாராகி, அவன் கூறிய இடத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்திருந்தாள். அது ஒரு ஒபன் கார்டன் தீம் உணவகம். புல்வெளியின் மத்தியில் அங்கங்கே மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மெல்லிய அளவில் தான் வெளிச்சம் பரவியிருந்தது. வெளிவாயிலும், உள்ளே வரும் கார்களும் தெரியும் படிக்கான ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டாள் ராகா. ஏழாவதற்கு இன்னமும் சில நிமிடங்களே இருக்க, ராகா மனதளவில் சத்யாவுடன் என்ன பேசுவது என்று தயாரகிக் கொண்டாள்.
“நேத்தே ஃபோன்ல அழுத மாதிரி பேசினதே கேவலமா இருக்கு. கொஞ்சம் கம்போஸ்டா பேசணும். நீங்க என் கூடப் பேசாம போனாலும் என்னைப் பெருசா அது அஃபெக்ட் பண்ணாது, வீ ஆர் மெசுயூர்ட் அடல்ட்ஸ்னு கேஷுவலா பேசணும். அதுவும் ரொம்ப நேரம் வளவளன்னு இதே டாப்பிக்கை ஓட்டக் கூடாது. சொல்ல வேண்டியதை சொல்லிட்டு,வேற எதாவது காமன் டாபிக் பேசிட்டு, அப்படியே பை சொல்லிடணும்” என்று மனதினுள் ஒரு அட்டவனையைத் தயாரித்திருந்தாள்.
ஃபோனில் சற்றே கம்மிய குரலில் அழுகை முட்டிப் பேசியது போல ஆகிவிடக் கூடாது என்பதில் தெளிந்திருக்க, கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
நேரம் ஏழானது. சத்யா இன்னமும் வந்திருக்கவில்லை.
ஆடர் கேட்டுச் சென்ற சிப்பந்தியிடம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொல்லிவிட்டு, மீண்டும் வாயிலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தாள்.
நேரம் ஏழரை ஆனது. சத்யா இன்னமும் வந்திருக்கவில்லை.
சிப்பந்தி கொண்டு வந்து வைத்த ஆரஞ்சு பழச்சாறை குடித்தாகிவிட்டது. இந்த அரை மணியில் சத்யாவின் எண்ணிற்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தாள். தொடர்பு எடுக்கப்படவில்லை.
ஒரு வேளை மறந்துவிட்டிருப்பானோ என்ற எண்ணத்தில் கொஞ்சம் தவிப்புக் கூடியது. “நான் ஹோட்டல் வந்துட்டேன். வேர் ஆர் யூ?” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். அதற்கும் பதிலில்லை.
மணி எட்டாகியது. இன்னமும் இரண்டு தடவை சத்யாவின் எண்ணிற்கு அழைத்துப் பார்த்தாள். “வர்றேன். வரலைன்னு” ஒரு பதில் சொல்லலாம்ல. இப்படி வந்து நான் காத்துகிட்டு இருக்க மாட்டேன்ல. இடியட்” என்று திட்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள். அவள் விழிகள் வாயிலில் கடந்து செல்லும் கார்களின் மீதே கண் பதித்திருந்தன.
ராகாவின் பொறுமை நிமிடத்திற்கு நிமிடம் கரைந்து கொண்டே இருந்தது. கைக்கடிகாரத்தின் முற்கள் நகர்வதையும், ஹோட்டலினுள் கார்கள் வந்து செல்வதையும் எத்தனை தடவை மாறி மாறி வெறிப்பது.
மணி ஒன்பதை நெருங்கத் துவங்க, ராகாவிற்கு அதற்கு மேல் பொறுமை இருக்கவில்லை. “சை, வரசொல்லிட்டு தானும் வராம, ஃபோனும் எடுக்கலைன்னா என்ன அர்த்தம்? மீட் பண்ண இஷ்டம் இல்லைன்னா, அப்பறம் எதுக்கு வர சொல்லணும்?” என்று மனம் குமுறியது.
முன்னர்ச் சுமூகமாகப் பேசிப் பிரிய வேண்டும், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எப்போதோ விடைபெற்றுச் சென்றுவிட்டது.
எரிச்சலுடன், பழச்சாறுக்கு உண்டான பணத்தை டேபிளில் வைத்துவிட்டு, கால்கள் அழுந்த ஹோட்டலின் வாயிலுக்கு வந்தாள். புக் செய்திருந்த உபர் ஆட்டோ வருகிறதா என்று பார்வையைச் சுற்றிலும் சுழலவிட,அங்கே பார்கிங்கில் ஓரமாய் நிறுத்தியிருந்த மினி கூப்பர் கார் அவள் கண்களில் விழுந்தது. கடந்த சென்ற மற்றொரு வண்டியின் வெளிச்சத்தில் காரின் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த சத்யாவின் உருவம் தென்பட ராகா, அந்தக் காரின் அருகே சென்றாள்.
கார் சத்யாவினுடையது தான். இவள் வந்தபின்பு அவன் வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த வாகனம் கடந்து சென்ற நினைவு அவளுக்கு இல்லை. அப்படியென்றால் தான் வருவதற்கு முன்பே இவன் இங்கே வந்திருக்க வேண்டும். ஆனால் உள்ளே ஏன் வரவில்லை.
ராகா அந்தக் காரின் அருகாமையை அடையவும், அங்கிருந்து பார்த்தால், இவள் அமர்ந்திருந்த மேஜை துல்லியமாகத் தெரிந்தது. “கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா நான் தவிச்ச தவிப்பெல்லாம் இங்க உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு தான் இருக்கானா?” என்ற எரிச்சல் எழவும், காரின் சமீபத்தை அடைந்தாள்.
சத்யா, ராகா வருவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே உணவகத்திற்கு வந்துவிட்டிருந்தான். ராகாவின் இரண்டு மணி நேரப் மனத்தாங்கலை காரினுள் அமர்ந்து பார்த்துக் கொண்டுதானிருந்தான்.
அன்றைய தினத்தின் தன் பலவீனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும். அவளிடம் பழைய படிக்குச் சிரித்துப் பேசுவது இயலாது என்பதால் சுமூகமாய் நன்றி சொல்லி, பெஸ்ட் விஷஸ் சொல்லி விடைபெறுவது தான் சத்யாவின் முடிவாக இருந்தது.
ஹோட்டலின் உள்ளே வரும் வரையிலும் கூட மன உறுதி சிதையாமல் அப்படியே இருந்தது.ஆனால் ராகாவைப் பார்த்த பின்னர், அவளிடம் தான் எடுத்திருந்த முடிவைச் சொல்லும் தைரியம் வரவில்லை. தைரியம் என்பதை விடவும், ராகாவின் கண்பார்த்து, “நீ எனக்கு வேண்டாம். எனக்கும் உனக்கும் செட் ஆகாது. பெஸ்ட் விஷஸ் ஃபார் யுவர் லைஃப்” என்று சொல்லும் மனம் உண்மையில் அவனிடம் இல்லை.
“எப்படி வேண்டாம்னு சொல்லுவேன். இவகூட இருக்கற ஒவ்வொரு நொடியும் அப்படியே என் மனசில செதுக்கி வச்ச மாதிரி நியாபகம் இருக்கறப்போ, சிரிச்ச சிரிப்பும், வளவளன்னு பேசிய வார்த்தைகளும் ஒன்னுவிடாம நியாபகம் இருக்கறப்போ, எப்படி இனி உன் கூடப் பேச வேண்டாம்னு முடிவெடுத்திருக்கேன்னு சொல்லுவேன்.”
“எதுக்கு இவளோ அவஸ்தையா இருக்கு! ஹரிணி சொல்லறதை கேட்கறப்போ சரின்னு மனசில தோணவேயில்ல. என் ராகா, என் பணத்துக்காக என் கிட்ட பேசினவ இல்ல. ஈவன், சாப்பிடறப்போ கூடப் பெரும்பாலும் அவளே தான் பே பண்ணுவா. நான் பே பண்ணிட்டா கூட அதுக்குக் காம்பன்ஷேஷன் மாதிரி, வேற எதாவது வாங்கிச் சாப்பிட வச்சுடுவா. கொஞ்சம் பெரிய ஹோட்டலா இருந்தா, ரெண்டு பேருமே ஈக்வலா பில்லை ஷேர் பண்ணிக்குவோம்.”
“இந்த மூணு மாசத்தில் சின்னதா அவளுக்கு ஒரு விஷயம் வேணும்னு கூட என் கிட்ட சொன்னதில்ல. என் பணம் பத்தியோ, என் பிசினஸ் எப்படிப் போகுதுன்னோ, என்ன வருமானம்னோ எதுவுமே விசாரிச்சதில்லை. எந்த ஹெல்பும் கேட்டதில்ல. எனக்கும் சேர்த்து அவ தான் செலவு பண்ணியிருக்காளே தவிர, நான் எதுவும் அவளுக்குச் செஞ்சதில்லை.”
“இதை ஹரிணிக்கு எப்படி ப்ரூவ் பண்ண முடியும்? ஒருத்தர் கூடப் பழகிப் பார்க்கறப்போவே அவங்களைப் பத்தின ஒரு வைப் வரும் இல்லையா! இவங்க கூடச் செட் ஆகும், ஆகாதுன்னு தோணும். இந்த உணர்வை ஹரிணிக்கு எப்படிச் சொல்லி புரியவைக்க முடியும்?”
“இதோ நிமிஷத்துக்கு ஒரு தடவை வாட்ச் பார்த்துட்டு தவிப்பா உட்காந்திருக்கா. இவ முகத்தைப் பார்த்து எப்படி நான் என் முடிவை சொல்லுவேன்? அதை விடவும், கண் முன்னால என்னோட அழகான, அர்த்தமான வாழ்க்கை தெரியுது.”
“அதைக் கை நழுவவிட மனசில்லையே. இவளைப் பார்க்கறப்போ, இவகூட இருக்கறப்போ, எது வந்தாலும் பார்த்துக்கலாம், என்ன ஆகிடப் போகுதுன்னு ஒரு தனித் தெம்பு வருது? அன்னைக்கு இவளை கட்டி பிடிச்சு நின்னப்போ, அந்த அணைப்பில இருந்து எந்திரிக்கவே கூடாதுன்னு தானே தோணுச்சு. அவளோ தெம்பா பலமா இருந்துச்சே! நான் இருக்கேன்னு அந்த அணைப்பு சொல்லாம சொல்லுச்சே! அதை எப்படி இழக்கறது?”
வீட்டினரிடம் பேசி, புரியவைத்து, மிருதுவைச் சமாளித்து, சுற்றம் சமூகம் எல்லாவற்றையும் சரிகட்டி, ராகாவைத் திருமணம் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்! இதெல்லாம் சாத்தியப்படுமா? இதை நிகழ வைக்க என்ன வழிவகைகள் இருக்கின்றன? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டு காரில் இருந்து இறங்க மனமில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
அதைவிடவும் ராகாவின் முகத்தில் தெரிந்த தெளிவு அவனை அச்சுறுத்தியது. தன்னுடன் இனி பேசப்போவதில்லை என்ற முடிவில் அவள் இருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது. இறங்கிச் சென்று பேசினால், இதுவே ராகாவுடன் தான் பேசுவது கடைசியாக இருக்குமோ என்ற பயம் அவனைக் கீழே இறங்க விடவில்லை.
தன் காரை அடையாளம் கண்டு கொண்டு ராகா இப்படி வந்து நிற்பாள் எனச் சத்யா எண்ணவில்லை. அவள் காரை நோக்கி வரவும், வேறு வழியில்லாமல் காரில் இருந்து இறங்கினான்.
“இவளோ நேரம் கார்ல தான் உட்கார்ந்திருந்தீங்களா?” என்று கேட்ட ராகாவிற்குக் கூற சத்யாவிடம் பதில்மொழி இல்லை. அமைதியாக நின்றிருந்தான்.
“சொல்லுங்க, உங்களைத் தான் கேட்கறேன். எப்போ வந்தீங்க இந்த ஹோட்டலுக்கு?” என்று துளைத்தெடுப்பதைப் போல் பார்த்துக் கொண்டே வினவினாள்.
“ஆறு மணிக்கு” என்று அவள் கண்பாராமல் பதில் அளித்தான்.
“என் ஃபோனை ஏன் எடுக்கலை?” என்று அடுத்ததாய் வினவினாள். எரிச்சல்படக் கூடாது, கோபமாகப் பேசக் கூடாது, நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும், எமோஷனல் பேச்சுக் கூடாது என்று பலவாறாக அவள் எடுத்திருந்த முடிவுகள், எப்போதோ காற்றில் கரைந்துவிட்டிருந்தன.
“உங்களைத் தான் கேட்கறேன் சத்யா! வாட் இஸ் யுவர் ப்ராபளம்? சீ, அன்னைக்கு நைட், தட் வாஸ் ராங். ஐ அக்ரீ! சரியா! ஆனா, அதை வச்சுகிட்டு நான் ஒருகோல்ட் டிக்கர்னோ உங்களை ப்ளாக்மெயில் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லிடு வேணோன்னு யோசிக்காதீங்க!”
“ஏதோ ஒரு கனெக்ட் இருந்துச்சுன்னு நினைச்சேன். உங்களுக்கும் அது ஃபீல் ஆச்சுன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். பட், அதுக்காக, நீங்க என்னை ட்ரீட் பண்ண விதம் சரியில்லை. உங்க பணத்துக்குப் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையற ஆள் நானில்ல.” என்று சத்யாவை பேசவே விடாமல் தன் மனதில் இருந்ததை எல்லாம் வடிகால் இல்லாமல் பேசத் துவங்கினாள்.
சத்யா பதில்மொழி சொல்ல வாய் திறக்க, அவனைக் கையமர்த்திவிட்டு, “சீ, ஒருவிஷயம் நா தெளிவா சொல்லிடறேன். ஐம் நாட் அட் த பேக் ஆஃப் யுவர் மணி. நீங்க பணக்காரன்னா அது உங்களோட வச்சுக்கோங்க. அதனால உங்ககிட்ட நான் பேசிப் பழகலை. இங்க வந்து ரெண்டு மணி நேரமா காரை விட்டு இறங்காம உட்கார்ந்திருக்கீங்கன்னா என்ன அர்த்தம் சத்யா? என் கிட்ட பேசவோ, அன்னைக்குச் சிட்யுவேஷன் பத்தி விளக்கவோ வாய் வரலை அதானே அர்த்தம்?” என்று ஆத்திரம் மேலோங்க கத்தினாள்.
இரண்டொருவர் இவர்களை வேடிக்கை பார்த்துச் சென்றனர். மற்றவர் பார்வைக்குக் காட்சிப் பொருளாக இருக்கின்றோமே என்றெல்லாம் வருத்தப்படவில்லை ராகா.
“ராகா நான் அப்படியெல்லாம் நினைக்கலை” என்று அவன் பேசத் துவங்க, அவன் பேச்சை அப்படியே அந்தரத்தில் நிறுத்தினாள்.
“நீங்க எதுவுமே சொல்ல அவசியம் இல்ல மிஸ்டர். சத்யசாய்ராம்! நான் சொல்லறதை மட்டும் கேளுங்க. நீங்க பேசறதுக்கு நான் நிறைய டைம் குடுத்தேன். பட் அதை நீங்க யூஸ் பண்ணிக்கலை. எனக்கு உங்க மேல கொஞ்சம் இண்டிரஸ்ட் இருந்துச்சு.உண்மை தான். நாம பேசறப்போ, சிரிக்கறப்போ, சாப்பிடறப்போன்னு ரொம்ப ஈஸியான ஒரு கம்ஃபர்ட் இருந்துச்சு.”
“அன்னைக்கு நைட் என்னை ஹக் பண்ணப்போ, ஐ ஃபெல்ட் வெரி மேடர்னல். ஒரு குழந்தைய அம்மா பார்த்துக்கற ஃபீல் தான் இருந்துச்சு. உங்களை நல்லா பார்த்துக்கணும், பத்தரமா என் கைக்குள்ள வச்சு அரவணைச்சுக்கணும். உங்களை எதுக்கும் ஏங்க விடக் கூடாது. இப்படியெல்லாம் தான் நான் நினைச்சேன். இட் வாஸ் எ வீக் மொமெண்ட்.! உங்களுக்கும் அப்படியெல்லாம் இருந்திருக்கும்னு நம்பிட்டேன். அதான் நான் பண்ண தப்பு”
“இல்ல, ராகா அன்னைக்கு” என்று சத்யா வாயைத் திறக்க,
“ப்ளீஸ். ஸ்டாப். இப்போ நீங்க சொல்லற எந்த விளக்கமும் எனக்குத் தேவையில்ல. என் மனசில அது ஏறப்போறதும் இல்ல. என் ஃபோனை எடுக்காம, ஒரு மெசேஜ் கூடப் பண்ணாம நீங்க அமைதியா அவாய்ட் பண்ணப்போவே நான் புரிஞ்சுட்டு இருக்கணும். உங்களுக்குத் திரும்பத் திரும்பக் கால் பண்ணி நிர்பந்தப்படுத்தி இங்க வரவச்சுட்டேன். மை மிஸ்டேக். அன்னைக்கு நடந்ததைப் பேசி ஒரு க்லோஷர் கிடைக்க வைப்பீங்கன்னு நம்பினேன்.”
“பழைய மாதிரி ஃப்ரெண்ட்ஸா இல்லாட்டியும், அட்லீஸ்ட் ஒரு ஹாய் – பாய் ரெலேஷனாவது இருக்கணும்னு நினைச்சேன். பட். இட்ஸ் ஓவர் சத்யா. நாம இனி மீட் பண்ணிக்க வேண்டாம். என்னைக் காண்டாக்ட் பண்ண எந்த விதத்துலையும் முயற்சிக்காதீங்க. மீறி பேச நினைச்சா, என்னை ஹராஸ் பண்ணறீங்கன்னு கம்பீளைண்ட் பண்ணிடுவேன்.” என்று மிரட்டல் வைத்தாள். எங்கிருந்து இப்படியான வார்த்தைகள் வந்து விழுந்தன என்று அவளுக்குமே தெரியவில்லை.
சத்யாவின் முகத்தில் அதிர்ச்சியான பாவமும், அடிபட்ட பார்வையும் கூட ராகாவைக் கொஞ்சமும் இளக்கவில்லை. இங்கே வந்த போது, நண்பர்களாக இல்லாவிடினும், பழக்கப்பட்டவர் என்ற ரீதியிலாவது சத்யாவை நிறுத்த நினைத்தவளுக்கு, இந்த ஏமாற்றமும், கோபமும், அவமானமாகத் தன்னை அவமதிப்பதாக எண்ண வைத்தது.
“நமக்குள்ள இருந்த அந்தச் சின்ன ஸ்பார்க், அட்ராக்ஷன், ஃப்ரெண்ட்ஷிப் இப்படிக் கொஞ்ச நஞ்சம் ஒட்டிகிட்டு இருந்த அந்தப் பாண்டை நீங்க என்னைக்கோ உடைச்சுட்டீங்க. நான் அதை இன்னைக்கு ப்ரேக் பண்ணறேன். இனி உங்களை நான் எந்த விதத்துலையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என் டிக்னிட்டி எனக்கு எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம். தேங்கியூ ஃபார் எவ்ரிதிங் அண்ட் குட்லக்” என்று இம்மியளவும் படபடப்புக் குறையாமல் பேசி முடித்த ராகா, அதன் பின்னர் அங்கே ஒரு நொடி நிற்கவில்லை.
அவள் அழைத்திருந்த ஆட்டோ வந்துவிட்டிருக்க, ஸ்தம்பித்து நின்றுவிட்ட சத்யாவைத் திரும்பி ஒரு பார்வை கூடப் பாராமல் அங்கிருந்து சென்றிருந்தாள். அவன் வாழ்க்கையில் இருந்தும் வெகு தூரம் சென்று விட முடிவெடுத்திருந்தாள்.