சத்யாவின் பேச்சு ராகாவிற்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கவில்லை. இதெல்லாம் ராகா அறியாத விஷயங்களா என்ன? அவனுக்கு மட்டும் தான் சங்கடங்களும், பிரச்சனைகளும் இருக்கின்றனவா? ஏன் தனக்கு இல்லையா? என்னும் கேள்வி தான் அந்த நேரத்தில் மனதை ஆக்கிரமித்தது.
அவரவருக்குத் தன் நியாங்கள் எப்போதும் பெரியது. என்னவோ அவனுக்கு மட்டுமே அத்தனை சிக்கல்கள் இருப்பதாகப் பாவித்துப் பேசியது ராகாவிற்கு ரசிக்கவில்லை. “உடனே நிச்சயதார்த்தம்” என்ற செய்தி சற்றே திடுக்கிட வைத்தது என்னவோ உண்மை. அதை ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த மட்டில் கூடப் பதட்டம் இராதா? இருந்தது. ஆயினும், இதில் தான் என்ன செய்ய வேண்டும் என்று சத்யா தானே முடிவெடுக்க வேண்டும்?
அவன் முடிவை நான் எடுப்பது தவறு. அதிலும் நீ முடிவெடுத்துச் சொல் அதன் படி செய்து கொள்ளலாம் என்று நிர்பந்திப்பது அதை விடவும் பெரிய தவறு.
“இதெல்ல கழுவுற மீன்ல நழுவற மீனாட்டம் கதை சொல்லிகிட்டு?” என்ற எண்ணம் அசூசையை ஏற்படுத்தியிருக்க, ஆத்திரத்தில் வார்த்தைகள் விட்டுவிடக் கூடாது என்று நினைத்த ராகா, ஆழ்ந்த பெருமூச்சு எடுத்துக் கொண்டு அமைதியாகக் கடலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.
ஹோட்டலில் எங்கிருந்தோ தவழ்ந்து வந்த வார்த்தைகளற்ற பாடலின் ஒலி அந்த நிசப்தத்தை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டது.
“நிலவு தூங்கும் நேரம்..
நினைவு தூங்கிடாது..” என்று மென்மையாய்க் கசிந்துருகியது.
அந்தப் பாடலைக் கேட்கவும், ராகாவின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது, அவள் தந்தையின் மிகவும் விருப்பமான பாடல் அது. அதைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு நிம்மதி படர்வதைப் போல இருக்கும் என்று அவள் தந்தை கூறுவார்.
அவரது குரலோடு சேர்த்து அவர் சொன்ன வார்த்தைகளும் நினைவில் வந்தாடின. “இந்தப் பாட்டு என்ன ராகம் தெரியுமாம்மா? இது பேர் மோகனராகம். இந்த ராகத்தோட ஸ்பெஷலே இதைக் கேட்கறப்போ மனசு அப்படியே லேசாகி ஒருவித நிம்மதி உண்டாகும். அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். இதை வச்சு நிறையச் சினிமா பாட்டெல்லாம் வந்திருக்கு. ஏன் “திருவாசகப் பாடல்கள்” கூடத் தொன்று தொட்டு இந்த ராகத்தில தான் பாடப்பட்டு வருது”
“உனக்குக் கூட மோகனப்பிரியான்னு பேர் வைக்கணும்னு தான் நினைச்சேன் ராகா. உங்கம்மா விடலை. தெருவுக்கு நாப்பது பிரியா இருக்கு. அதனால இந்தப் பேர் வேண்டாம்னு சொல்லி, ராகமாலிகான்னு பேர் வச்சா” என்று ராகாவின் பெயர் காரணம் பற்றிய பேச்சு எழும் போது தவறாது இந்தப் பாடலைப் பற்றிப் பேசுவார்.
“தன நான நா னா..
தன நான நா னா.. தன ந நன..னா “என்று வார்த்தைகள் இல்லாமல், தாளத்தை மட்டும் மெட்டெடுத்து மென்மையாக முணுமுணுப்பார்.
தந்தையைப் பற்றி நினைப்பு எழவும், அவர் அடிக்கடி சொல்லும் மற்றொரு விஷயமும் மனதில் அந்த நேரத்தில் மின்னி மறைந்தது. “நாம செய்யற எந்த விஷயமா இருந்தாலும், அது நம்ம மனசுக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்குதான்னு பார்க்கணும். ஏன்னா, நம்ம மனசைப் போல நமக்குச் சிறந்த எதிரி யாருமே இல்லை. ஏதாவது தப்பான காரியமோ, செயலோ பண்ணறப்போ, நிச்சயமா நம்ம மனசுக்குள்ள, “எ, என்ன பண்ணறன்னு?” அது சப்தம் போடும். அதனால நீ உன் மனசுக்கு நிம்மதி தர்ற எந்தச் செயலை வேணா செய் ராகா! அது தவறாவே போகாது!” என்று அடிக்கடி சொல்வதுண்டு
சத்யாவிடம் பேசும் முன்னர், தந்தை கூறிய இந்த விஷயம் ஏன் தனக்குத் தொடர்பில்லாமல் இப்போது நினைவில் எழுகிறது என்று ஆச்சர்யம் தான். இது போன்ற சின்னச் சின்னச் சமிக்கைகளை “யுனிவர்சின் செய்தி” என்று ராகா ரொம்பவும் நம்புவாள். இது ஏதோ தன் தந்தை தனக்குச் சொல்லும் அறிவுரை என்றே அவள் எண்ணினாள். அல்லாது போனால், மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடல் ஏன் இப்போது தன் செவிகளை எட்ட வேண்டும்?
“சரி, என் மனசு நிம்மதிக்கு என்ன வழியோ அதன் படியே நான் பேசறேன்” என்று முடிவெடுத்தாள் ராகா. தன் நீண்ட நேர மெளனத்தைக் கலைத்து சத்யாவை ஏறிட்டாள்.
“இதப்பாருங்க சத்யா! உங்க சைட் பிராப்ளம்ஸ் என்ன வரும்னு நீங்க சொல்லிட்டீங்க ஒ.கே. ஆனா முடிவை மட்டும் ஏன் நான் எடுக்கணும்னு எதிர்பார்க்கறீங்க? அதுவும் உங்களுக்கும் சேர்த்தி நான் எப்படி முடிவெடுக்கறது? நான் வேணும்னு நினைச்சா, அதுக்காக முயற்சிகளை நீங்க தானே செய்யணும்.?” என்று கேட்டுவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
சத்யா அவளையே பார்வையை விலக்காது விழிவிரிய பார்த்துக் கொண்டிருக்க, “பிரச்சனைகள் வந்தா சமாளிக்கணும் சத்யா. எல்லாரையும் சமாதானப்படுத்தணும். இதுவே என் சைட்ல பிரச்சனைன்னா நான் சந்திச்சுக்குவேன். அதானே நியாயம்! சும்மா ஒரு பேச்சுக்கு கேட்கறேன், நாளைக்கு நமக்குக் கல்யாணம் ஆகுதுன்னே வச்சுக்குவோம். உடனே உங்க ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலின்னு எல்லாரும் ஓடி வந்து கைகுலுக்கி “ரொம்பச் சந்தோஷம், வீ ஆர் வெரி வெரி ஹாப்பி ஃபார் யூன்னு” துள்ளிக் குதிக்கப் போறாங்களா?” என்று கேட்க சத்யா அமைதியாகவே இருந்தான். ராகா மேலும் தொடர்ந்தாள்.
“இல்லை தானே!! என்னைப் பார்க்கறப்போலாம், கைகாரி, என்ன என்னவோ பண்ணி மாப்பிள்ளையை மயக்கி, ஏற்கனவே நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி, தன்னோட விருப்பத்தைச் சாதிச்சுகிட்டான்னு தானே பேசுவாங்க. ஏன் உங்க அக்கா கேட்கமாட்டாங்களா? உங்க அப்பா என்ன நினைப்பார்? இப்படியொரு மிடில் க்ளாஸ் பொண்ணை மொதல்ல ஒத்துக்குவாங்களா? கல்யாணமே ஆனாலும் எல்லாருமே என்னைக் காலம் முழுக்க உங்க காசுக்காகக் கல்யாணம் பண்ணிகிட்டவன்னு தானே பேசுவாங்க. அதுக்காக நான் பயந்துட்டே இருக்க முடியுமா?”
“இதையெல்லாம் யோசிச்சுட்டு, “ஐய்யய்யோ எனக்கு வேண்டாம். இவளோ பிரச்சனையிருக்கு? அதுக்கெல்லாம் நீங்க தான் ஒரு வழி சொல்லணும். யாரும் என்னை ஒரு சொல் சொல்லிடாம நீங்க என்னைக் காப்பாத்தணும்!” தையா தக்கான்னு நானும் உங்ககிட்ட வந்து குதிச்சா எப்படியிருக்கும்?” என்று கேட்கும் போதே அவளுக்கு லேசாகச் சிரிப்பு மண்டியது.
தான் அவன் முன்பு அப்படியெல்லாம் பேசினால் என்ன செய்வான் என்று கற்பனை ஓடத் துவங்க, அதை இழுத்து நிறுத்தினாள்.
“ஸீ சத்யா! எஸ் ஐ லைக் யூ! உங்க கூட இருந்தா லைஃப் ஹேப்பியா இருக்கும்னும், ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப்போட நாம லைஃப்ல லாங் ட்ராவல் பண்ண முடியும்னும் தெரியும். உங்களைப் பிடிச்சிருக்கா இல்லையாங்கற கேள்விக்குத் தான் நான் பதில் சொல்ல கடமை பட்டிருக்கேன். கல்யாணம் யாரைப் பண்ணிக்கணும்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.” என்று நிறுத்தியவளை விநோதமாகப் பார்த்தான்.
அவனுக்கு ராகா சொல்ல வருவது புரியவில்லை என்பது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அதைக் காணவும், ராகாவிற்குத் தன் மனதின் நிலை இன்னமும் தெளிவாக விளங்கியது. முடிவு இது தான் என்று மனதில் உறுதியாகத் தெரிந்த பின்னர், ஒரு நிம்மதி படர்ந்ததை உணர்ந்தாள் ராகா.
“நான் சொல்லறது குழப்பமா இருக்கா சத்யா உங்களுக்கு? தெளிவாவே சொல்லறேன் கேளுங்க. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். பட், உங்களுக்கும் அதே விருப்பம் இருந்தா நாம மேல பேசலாம்னு நினைச்சேன். உங்களுக்குப் பலவிதமான பிரச்சனைகளைப் பார்க்கணுமேங்கற எண்ணம், எண்ணங்கறதை விடப் பயம்! அந்தப் பயத்தில, குழப்பமா யோசிக்கறீங்க”
“பயம் நல்லது தான் சத்யா! பயம் இருந்தா தான் தப்புச் செய்ய மாட்டோம்! சோ, உங்க பயம் நியாயமானது! நீங்க குழம்பவே வேண்டாம். உங்களுக்கு ஈஸி ஆப்ஷனா நான் சொல்லறேன். அதைக் கேளுங்க. அமைதியா பெங்களூர் கிளம்பிப் போய், மிருதுளாவை கல்யாணம் பண்ணிகிட்டு, பிசினஸ், ஷேர்ஸ், குடும்பம், மிருதுன்னு நிம்மதியா இருக்கப் பாருங்க.” என்று ராகா சொல்லச் சொல்ல சத்யா மறுப்பாய் தலையசைத்துப் பேச எத்தனித்தான்.
“இருங்க இருங்க! நான் சொல்லி முடிச்சிடறேன். ஆக்ட்சுவலி, அன்னைக்கு நைட் ஹோட்டல்லையும் நான் இதே விஷயத்தைத் தான் சொல்ல வந்தேன். நாம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியாது, சோ, ஜஸ்ட் பழக்கப்பட்டவங்கன்னு ஒரு இடத்தில பிரிஞ்சுக்கலாம். இனி பேசவோ, மீட் பண்ணவோ வேண்டாம்னு சொல்ல வந்தேன்”
“அன்னைக்கே நீங்க கார்ல இருந்து இறங்கி வந்திருந்தீங்கன்னா, இப்படித் தான் நிதானமா பேசியிருப்பேன். ஆனா, அது நடக்காம போயி, நான் ரொம்ப டென்ஷன்ல கத்த வேண்டியதா போயிடுச்சு. ஓ.கே. பாஸ்ட் இஸ் டன். சோ, அதை நினைச்சு எதுவும் ஃபீல் பண்ண வேண்டாம்.”
“நான் சொல்லறது என்னோட இந்த நிமிஷத்துக்கான முடிவெல்லாம் இல்ல சத்யா. நான் நல்லா யோசிச்சு எனக்கு, முக்கியமா உங்களுக்கு ஒரு நல்ல முடிவா தான் எடுத்திருக்கேன். எனக்கு வளவளன்னு உங்களை மாதிரி இது பிரச்சனை அது பிரச்சனைன்னு பெருசா நீளமா லிஸ்ட்லாம் வாசிக்கத் தெரியலை. பிரச்சனைகள் இருக்கும் தான். அதெல்லாம் மீறி, நான் உங்க லைஃப்ல இருக்கணுமா வேணாமான்னு நீங்க முதல்ல முடிவெடுக்கணும்.” என்றவள், தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள்.
“உங்க கூட எனக்குச் செட் ஆகும்னு அப்போ திடமா தோணுச்சு. உங்களுக்கு அப்படித் தோணலைங்கறப்போ நாம இதைக் காம்ப்ளிகேட் பண்ணிக்கக் கூடாது. க்ளீன் ப்ரேக்கா இருக்கணும். சும்மா எனக்கு மெசேஜ் அனுப்பறதோ, கால் பண்ணறதோ இருக்கக் கூடாது. அப்பறம், நானும் உங்களை எந்த விதத்திலேயும் காண்டாக்ட் பண்ணமாட்டேன். அதுக்காக ஷ்ருஷ்டீஸ்ல இருந்து வெளிய போயிடாதீங்க! பர்சனல் ப்ராப்ளம்ஸ்காக க்ளையண்ட்ஸை இழக்க முடியாது. சோ, வீ வில் லீவ் இட் ஹியர்.” என்று பற்கள் தெரியாத புன்னகை ஒன்றைச் சிந்தினாள்.
“ராகா, அப்போ உன் முடிவு இதானா?”
“இதானான்னா? ஆமா, இதான் சத்யா! நீங்க தான் முடிவெடுக்க முடியாம தடுமாறறீங்க சத்யா! அதனால, உங்க முடிவை என்னை எடுக்க வைக்கப் பார்க்கறீங்க. உங்க பயத்தை என் மேல திணிச்சு, என்னால தான் நாம பிரிஞ்சோம்னு ஒரு பிம்பம் கொண்டு வந்தா உங்களுக்கு அதை ஏத்துக்க ஈஸியா இருக்கும்னு நினைக்கறீங்க.சரியா?”
“இப்போ என்ன? நானா உங்களை வேணாம், நமக்குச் செட் ஆகாதுன்னு சொன்னா உங்க மனசு நிம்மதி ஆகிடுமா? அப்படி நடக்கும்னா சொல்லுங்க, நான் சொல்லத் தயாரா இருக்கேன்! எனக்கு என் மனசுல என்ன இருக்குனு தெரியுமே சத்யா! என்னால இந்த ப்ரேக்கப் ஆகலைன்னும் தெரியும். சோ, எனக்குக் கொஞ்சம் கூட உறுத்தல் இருக்காது! வேணும்னா உங்க மனநிம்மதிக்காக எனக்கு உங்களைப் பிடிக்கலைன்னு கூடச் சொல்லறேன்”
“அதுவமில்லாம, காதல் ஒரு உணர்வு சத்யா. அதை எடுத்துச் சொல்லியோ, நிர்பந்தப்படுத்தியோலாம் கொண்டு வரது சாத்தியமில்ல. எனக்கு இதையெல்லாம் சொல்லவும் விருப்பமில்ல! என்ன பிரச்சனை வந்தாலும் நீ வேணும்னு சொல்லறது தான் காதல்!! பிரச்சனைகள் இருக்கு, காதல் வேணுமா வேணாமான்னு யோசின்னு குழம்பறது பேர் சுயநலம். சில விஷயம் கிடைக்கக் கஷ்டப்படணும். உழைக்கணும். தியாகம் பண்ணனும்.”
“வாழ்க்கையிலையும் அப்படித் தானே!. ஒரு விஷயம் வேணும்னா சில தியாகம் பண்ணனும். ஃபிட்டான உடம்பு வேணும்னா எக்ஸர்சைஸ் பண்ணனும். வலிக்கும். வலிச்சாலும் பண்ணனும். சிலதை பொறுத்துக்கணும். சிலதை எதிர்த்துச் சண்டை போடணும். இதெல்லாம் எதுவே செய்யாம, எதிர்க்கணுமா? ஐய்யோ? போராடணுமா? ஐய்யய்யோ! சில விஷயம் இழக்கணுமா, அப்பப்பான்னு சொல்ல முடியுமா?” என்று சிரிப்புடன் தான் பேசினாள்.
அவள் பேச்சை விடவும், அவள் சிரிப்பு தான் சத்யாவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியது. “என்ன ராகா கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம சிரிச்சுட்டு பேசற! ஆர் யூ நாட் அஃபெக்டட்? நான் உன் லைஃப்ல இல்லாம போறதுல உனக்கு வருத்தமே இல்லையா?” என்று தான் சொல்ல வந்த விஷயத்தை விடுத்து, அவள் சிரிப்புடன் எதிர்கொள்ளும் விதத்தைக் கண்டு வியப்புடன் விசாரித்தான்.
எப்படிச் சிரிக்க முடிகிறது இவளால்? அவனால் ராகா போல இயல்பாக இருக்க முடியவில்லை. இனி அவன் வாழ்வில் அவள் இல்லை என்ற எண்ணம் அவ்வளவு வலித்தது. தன் தாயின் சடலத்தை வீட்டில் இருந்து இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது, “இது தான் வீட்டில் இவர் இருக்கும் கடைசி நொடி” என்ற உணர்வு எப்படி வலியைக் கொடுத்ததோ அப்படி இருந்தது ராகா தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டது. ஆனால் அவளானால் முகத்தில் படிந்திருந்த சிரிப்பு மாறாமல் பேசுகிறாள். அது இன்னமும் குத்தியது.
“வருத்தம் இருக்கு சத்யா! இட் இஸ் பார்ட் ஆஃப் க்ரோயிங் அப் தெரியுமா. இந்த வலி, வேதனையெல்லாம் இருந்தா தானே அவன் மனுஷன். எதுவுமே அஃபெக்ட் ஆகாம இருந்தா அது கல்லு! அப்படி எப்படி இருக்க முடியும்? அதுக்காக உங்க முன்னாடி அழுகணும்னு நீங்க எதிர்பார்த்தா அது என்கிட்ட கிடைக்காது சத்யா!”
“உங்க முன்னாடி நான் உடையணும்னு அவசியம் இருக்கா சத்யா? எனக்கு எப்போ தோணுதோ அப்போ மெதுவா ஃபீல் பண்ணுவேன். மே பீ உங்க மேரேஜ் டே அன்னைக்குக் கொஞ்சம் ஃபீலிங்கா இருக்கும். அன்னைக்கு ரெண்டு பீட்சா, அரைக் கிலோ ஐஸ்க்ரீம்னு சாப்பிட்டு, என் புண்பட்ட மனதை பன்-பட்டர்-சீஸ் வச்சு தேத்திக்குவேன். அவளோ தான். இட்ஸ் பார்ட் ஆஃப் த ஜர்னி” என்று ஸ்டைலாகத் தோளைக் குலுக்கினாள்.
“ராகா இப்படிப் பாதில பேசப் பேசப் போறியே!”
“சத்யா, இனி பேச எதுவுமே இல்லை. வேற வேற வார்த்தைகள்ல வேணா, இதே விஷயத்தை நாம பேசலாம். ஆனா சாராம்சம் இதான். உங்க லைஃப்க்கு என்ன வேணும்னு நீங்க முடிவெடுங்க. எனக்கு அதுபத்தி இனி கவலையில்லை. ஏன்னா, என் லைஃப்க்கு நீங்க வேணாம்னு நான் முடிவெடுத்துட்டேன். பை. டே கேர் ஆஃப் மிருது. ஷி இஸ் ரியலி எ ஸ்வீட் பர்சன்” என்ற முறுவலித்த ராகா, அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.
அங்கிருந்தும், அவன் வாழ்வில் இருந்தும் அகன்றிருந்தாள்.
உணவகத்தில் இருந்து வெளிவந்தவளுக்கு என்னவோ அந்த நொடி மனதின் பாரமெல்லாம் வடிந்தோடியது போலவும், மனம் நிர்மலமாய்த் தூய்மையாகி விட்டதைப் போன்றும் தோன்றியது.
இது தான் தந்தை சொன்ன அந்த இதயத்திற்கு நிம்மதி கொடுக்கும் மோகன ராகத்தின் மகிமையோ? என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டு,
“நிலவு தூங்கும் நேரம்…
ல ல லா ல, லா லா”
என்று அவள் தந்தையைப் போலவே முணுமுணுத்துக் கொண்டே வீடு நோக்கி செல்லலானாள்.