மிருதுளா – சத்யசாய்ராமின் திருமண வைபவத்தை எப்படிச் சிறப்பாக நடத்துவது என்று மணக்களைப் பெற்றவர்களைக் காட்டிலும் பொறுப்புடன் திட்டமிடத் துவங்கியிருந்தது ஷ்ருஷ்டீஸ் குழு.
“வழக்கம் போல, மாப்பிள்ளையோட எக்ஸ்க்லூசிவ் காண்டாக்ட் நம்ம வனிஷா. அதே மாதிரி பொண்ணோட காண்டாக்ட் பர்சன் மைக்கில். இவங்க ரெண்டு பேர்த்தையும் மேற்பார்வை பார்த்துட்டு இங்க கம்பெனிய கோ ஆர்டினேட் பண்ணற வேலை ராகாவோடது. ஷிவானி வில் அசிஸ்ட் யூ ராகா, இன் ஆல் யுவர் வர்க்ஸ். எனி டவுட்ஸ்?” என நடாஷா வினவ, வேறு எதுவும் கேள்விகள் இல்லை எனும் தினுசில் அமைதியாயினர் மைக்கிலும், வனிஷாவும்.
ஆனால் அந்த அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஷிவானிக்கு நடாஷாவின் பேச்சு கொஞ்சம் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தது. அவள் மூளையை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை நடாஷாவிடம் கேட்டிருந்தாள். “மாப்பிள்ளைக்கு மைக்கிலும், பொண்ணுக்கு வனிஷாவும் ஹெல்ப் பண்ணா தானே நடாஷா சரி வரும். மாத்தி சொல்லறீங்களே!” என ஷிவானி வினவ, நடாஷா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கே கைகட்டி அமைதியாக நின்றிருந்த ராகாவை நோக்கி பார்வையைச் செலுத்தினாள்.
“நான் எக்ஸ்பிளைன் பண்ணிக்கறேன்” என்று ராகா அமர்த்தலாய் சொல்ல, நடாஷா அந்த கான்ஃபரண்ஸ் அறையிலிருந்து வெளியேறினாள். அவள் சென்றதும், ஷிவானியின் பக்கம் திரும்பிய ராகா,
“சீ, மத்த கம்பெனில எப்படியோ தெரியாது. இங்க இதான் ப்ராசஸ். நம்ம கம்பெனில, பொண்ணு மாப்பிள்ளைக்குன்னு தனித்தனியா பாயிண்ட் ஆஃப் காண்டாக்ட் அரேஞ்ச் பண்ணிடுவோம். அதாவது, அவங்க கல்யாணம் முடியற வரைக்கும் அவங்க கூடவே இருந்து, ஆர்கனைஸ் பண்ணற ஒரே பர்சன், அவங்க தான். அவங்களுக்குத் தெரியாம பொண்ணும் மாப்பிள்ளையும் கல்யாண அரேஞ்ச்மெண்ட்ஸ்ல முடிவெடுக்க கூடாது.” என்று சிறிய புருவ நெரிப்புடன் பேசினாள் ராகமாலிகா.
“அது சரி ராகா!ஆனா, மாப்பிள்ளை எதாவது பர்சனலா டிஸ்கஸ் பண்ணனும்னா அது இன்னொரு ஆம்பிள்ளையா இருந்தா அதானே கம்பர்டபுளா இருக்கும். அதே தானே அந்த கல்யாண பொண்ணுக்கும்.”
“நீங்க ஒண்ணும், மாப்பிளை பொண்ணோட துணை மாப்பிள்ளையோ துணைப் பொண்ணோ இல்ல. அவங்க பர்சனல் எல்லாம் டிஸ்கஸ் பண்ண அவங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ்னு நிறைய இருப்பாங்க. நம்ம வேலை அவங்க கூட ட்ராவல் பண்ணறது, அவங்க ப்ரைடல் ஷூட், ப்ரீ வெட்டிங் ஷூட், அதுக்கான ப்ளேசஸ், அவங்க கல்யாண டிரஸ் பர்சேஸ்னு நமக்கு பிக்ஸ் எங்கெல்லாம் தேவைப்படுமோ அங்க எல்லாம் அவங்க கூட நீங்க இருப்பீங்க. முக்கியமா, டெஸ்டினேஷன்.” என்று விளக்கமாக ராகா சொல்லச் சொல்ல, நடாஷா ராகாவை ஏன் இவ்வளவு திட்டமாக நம்புகிறாள் என்ற உண்மை ஷிவானிக்கு விளங்கியது.
ராகாவின் பேச்சில் ஒரு வித நிதானம் இருந்தது. சொல்லும் வார்த்தையில் தெளிவு, அதே நேரம் மற்றவரின் மனதை நோகடித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு. எப்படியும் தான் சொல்ல நினைத்த விஷயத்தை மற்றவரிடம் கடத்திவிட வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமின்றி, அதை நல்ல விதமாக எடுத்துரைக்க வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்வு தென்பட்டது.
ராகா தன் முக்கால் கை சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். “நீ கேட்கற பாயீண்டுக்கு வர்றேன். சோ, இந்த பாயிண்ட் ஆஃப் காண்டாக்ட் பர்சன் ஆப்போசிட் ஜெண்டரா இருக்கறது ரொம்ப முக்கியம். அப்போ தான் ஈகோ க்ளாஷஸ் வராம இருக்கும். ஒரு பொண்ணுகிட்ட மாப்பிள்ளை ஹார்ஷா பேசமாட்டார். அதே மாதிரி தனக்கு அசிஸ்ட் பண்ணற பையனை கல்யாண பொண்ணும் கோபமா பேசமாட்டா. சோ, இங்க நம்ம ஷ்ருஷ்டீஸ்ல இந்த செட்டப் தான் ஷிவானி. ஒ.கேவா” என்று ராகா சொல்லி நிறுத்த,ஷிவானி அழகாய் தலையசைத்தாள்.
“அப்போ என்னோட வேலை என்ன ராகா? நான் என்ன பண்ணனும்.?” என்று ஷிவானி கேட்க, ராகா அதற்கு பதில் சொல்லும் முன்னர், முந்திக் கொண்ட மைக்கில், “நீ எங்க மூணு பேர்த்துக்கு கிடைச்சிருக்க அடிமை. அதாவது நாங்க மூணு பேரும் உனக்கு “ஆலம்பனா” புரியுதா?எங்க சொல்லு “ஆலம்பனா”.. என்று வினவ, தெலுங்கு பெண்ணான ஷிவானிக்கு மைக்கில் கூறியது புரியவில்லை.
உதட்டை குவித்து, “ஆலு.. ஆல்பனா!” என்று சொல்ல முயற்சித்தாள். மைக்கிலின் பேச்சும், அதற்கு ஷிவானியின் புரிதலும் கண்ட ராகாவிற்கு சிரிப்பு எழுந்தது. மைக்கிலின் தோளில் சகஜமாய் தட்டிய ராகா, “இக்னோர் ஹிம் ஷிவானி. நான், மைக்கில், வனிஷா, நாங்க மூணு பேரும் வெளி வேலையா நிறைய அலைய வேண்டியிருக்கும். சோ, ஆபீஸ்ல வர்ற கால்ஸ், அப்பறம் ஒருதருக்கு ஒருத்தர் கோஆர்டினேட் பண்ணறது இந்த மாதிரி வேலையெல்லாம் நீ ஆபீஸ்ல இருந்து பார்த்துக்கணும். நாம நாலு பேருமே ஒரு டீம்” என்று சொல்லியவள், ஷிவானியின் முகக் கலக்கம் கொஞ்சம் விலகிவிட்டதைக் கண்டு கொண்டு,
“பட், யு ரிப்போர்ட் ஒன்லி டு மீ. மைக்கில் எதாவது செய்ய சொன்னாலும், வனிஷா எதாவது வேலை குடுத்தாலும், அதை எங்கிட்ட அப்ரூவல் வாங்காம ப்ரொசீட் பண்ண கூடாது. புரியுதா?” என்று வேண்டிய இடத்தில் தன் அதிகாரத்தையும் நிலை நாட்டத் தவறவில்லை ராகா.
மீட்டிங்க் முடித்துக் கொண்டு அவரவர் இருக்கைக்கு வந்து சேர்ந்து, அன்றைய தினப்படி அலுவல்களைச் செய்ய ஆரம்பித்தனர் மூவரும். ஷிவானியின் உதடுகள் மாத்திரம் அவ்வப்போது, “ஆ…ஆல…ஆல்பனா” என மறவாமல் உருபோட்டுக் கொண்டே வேலை செய்தது.
********
ஷ்ருஷ்டீஸில் அவர்கள் திருமணத்தைப் பற்றிய திட்டங்கள் அதிவேகத்தில் செயல்படுத்தப்பட, அவள் வீட்டில் மிருதுளா, தன் கல்யாண கனவில் மூழ்கிப் போயிருந்தாள். மிருதுவின் கனவுகளுக்கு ஒத்து ஊத அவள் தோழிகள், மின்னியும், தீப்தியும் உடன் இருந்தனர்.
“மிருது! உன் வெட்டிங்கை முழுக்க நான் சின்ன சின்ன ரீல்ஸ் எடுத்து என் இன்ஸ்டால அப்லோட் பண்ண போறேன். ஒ.கேவா உனக்கு?” என்று ஆர்வமாக கைப்பேசியை மிருதுளாவின் முகத்தின் முன்னால் ஆட்டிக் கொண்டே வினவினாள் தீப்தி.
அவள் ஒரு ரீல்ஸ் பைத்தியம் என்று தெரிந்திருந்தபடியால் மிருதுளா மறுப்பேதும் சொல்லவில்லை. “யா யா யு கேன். இதெல்லாம் எங்கிட்ட கேட்கணுமா தீப்தி?” என்று தன் ஒப்புதலை வழங்கியிருந்தாள் மிருது.
தோழிகள் மூவரும் மிருதுவின் அறையில் அமர்ந்து வேலையாள் கொணர்ந்து வைத்துவிட்டுப் போன பதார்த்தங்களை மேய்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும், இந்திய, மற்றும் அயல்நாட்டு பிரைடல் மேகஜீன்கள் குவிந்து கிடந்தன.
“ப்ரைட் டு பீ”ல ஆலியா – ரன்பீர் மேரேஜ் பிக்ஸ் எக்ஸ்க்ளூசிவ்வா போட்டிருக்கான் பார்த்தியா மிருது?” என்று தீப்தி, சமோசாவை பிட்டு, அதை சாஸில் முக்கி, வாயினுள் தள்ளிய படிக்கே வினவினாள்.
“ஆலியா பிக்ஸ்லாம் ஏற்கனவே பார்த்துட்டேன் தீப்ஸ். எனக்கு என்ன தோணுதுன்னா, அந்த “காஸ்மோ-பிரைட்” மேகஜீன்ஸ் வாரம் ஒரு கபிள்ளோட வெட்டிங் அனென்ஸ்மெண்ட் போடறாங்க. அந்த மாதிரி நானும் பண்ணா என்ன?” என்று யோசனையுடன் மிருதுளா கேட்க, தோழிகள் உடனே அவர்களது கருத்தை முன்மொழிந்தனர்.
“ஏ சூப்பர் ஐடியாடீ மிருது! என் கசின் அமெரிக்கால இருக்கால, அங்க லோக்கல் நியுஸ் பேப்பர்ல அந்த அந்த கவுண்டில அப்கமிங் மேரேஜஸ் பத்தின இண்டர்வியூ போடுவாங்களாம். அதையே தான் இந்த மேகஜீனும் பண்ணியிருங்காங்க.” என்று தீப்தி தன் அமெரிக்க சொந்தம் பற்றிய புராணத்தைப் பாட, “நான் மட்டும் சளைத்தவளா என்ன?” என்று கோதாவில் குதித்த மின்னி,
“எங்க ஆபீஸ்ல கூட இது ட்ரெண்ட் ஆகிட்டு தான் இருக்கு, யாருக்கு வெட்டிங்க் வருதோ அவங்க, கபிள்ஸா பேப்பர், மேகஜீன்னு இண்டர்வியூ குடுக்கறாங்க. நார்மல் மேரேஜ்கே அவங்க இண்டர்வியூ குடுக்கறப்போ நீயும், சத்யாவும் கண்டிப்பா குடுக்கலாம் தப்பே இல்ல.” என்றாள்.
“ஆமா, மிருது! உன் ஃபேமலியும் சத்யா ஃபேமலியும் பெங்களூர் பிசினஸ் சர்கிள்ல ரொம்ப பாப்புலர் தான். உன்னோட ஷோஷியல் சர்கிள், சத்யாவோட பிசினஸ் சர்கிள்னு நீங்க ஆல்ரவுண்டர்ஸ் ஃபேமிலி. சோ! கண்டிப்பா நீ இந்த மேகஜீன் இண்டர்வியூ குடுத்தே ஆகணும்” என்று தீப்தி சொல்லிவிட்டாள்.
மிருதுவிற்கு ஒரு கனம் கூட, சத்யா இதற்கு ஒப்புக் கொள்வானா? அவனுக்கு இதில் விருப்பம் இருக்குமா என்ற கவலையெல்லாம் தோன்றவில்லை. அவள் மனதில் முடிவு உண்டான பின்னர், அவள் வேறு கவலையேதும் கொள்ளவில்லை.
உடனடியாக சத்யாவிற்கு அழைத்து, தன் மனதின் எண்ணத்தைப் படபடவெனக் கொட்டியிருந்தாள். சத்யாவிற்கு முதலில் மிருது என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை.
“மிருது! மிருது! ஒன் மினிட்! கொஞ்சம் பொறுமையா பேசு! என்ன மேகஜீன்? என்ன ஆர்டிகல்? மேகஜீன்ல உன்னை இண்டர்வியூ பண்ண போறாங்கன்னு சொல்லறியா?” என்று எதுவும் புரிபடாமல் சத்யா வினவியது மிருதுளாவிற்கு ரசிக்கவில்லை.
தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல், “நீங்க இப்போ எங்க இருக்கீங்க சத்யா? ஆபீஸ்லையா? ஒ.கே நான் நேர்ல வந்து என்ன விஷயம்னு சொல்லறேன்” என்று பட்டெனக் கைப்பேசியினைத் துண்டித்திருந்தாள்.
தன் தோழிகளிடம் பெருமூச்சு ஒன்றை சொரிந்துவிட்டு, “சத்யாவுக்கு கொஞ்சமும் ஐடியாவே இல்லை. நான் நேர்ல போய் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு வர்றேன்” என்று அங்கே சிதறிக் கிடந்த மாத இதழ்களைத் தூக்கிக் கொண்டு வேகமாகக் கிளம்பினாள்.
மிருதுளாவின் அழைப்பு வந்த போது, சத்யா ஒரு முக்கியமான விவாதத்தில் இருந்தான். ஏதோ அவசரமாக அழைக்கிறாள் என்று எண்ணியே மிருதுவின் அழைப்பை ஏற்றிருந்தான் சத்யா. ஆனால் அவளோ ரயில் வண்டி போலத் தடதடவென தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் ஒப்பித்துவிட்டுத் தான் நிறுத்தினாள்.
சத்யா என்ன மன நிலையில், என்ன சூழலில் இருக்கிறான் என்று கொஞ்சமும் மிருது நினைத்தாளில்லை. இந்த விஷயம் சத்யாவிற்கு பதியவில்லை என்ற போதும். “நான் நேர்ல வர்றேன்” எனத் தன் காரியம் மட்டுமே பிரதானம் என்ற ரீதியில் மிருதுளா நடந்து கொண்டது சற்றே வருத்தம் தான் அவனுக்கு.
“நம்ம கல்யாணம் விஷயம் பத்தி தான் அக்கறையா யோசிக்கறான்னாலும், நான் ஃப்ரீயா பிஸியான்னு கூட அவ கேட்கலையே. சரி வரட்டும் சொல்லிக்கலாம்.” என்று மேம்போக்காக நினைத்துக் கொண்டு தன் மீட்டிங்கில் மீண்டும் மூழ்கிப் போனான்.
முக்கால் மணி நேரத்தில் சத்யாவின் அலுவலக வாயிலில் வந்திறங்கிய மிருது தன் தோழிகளிடம் சத்யாவின் அலுவலகத்தை பெருமையாகக் காட்டினாள். ஜெயாநகரின் பிரதான வீதியில் கம்பீரமாய் வீற்றிருந்தது “சாய் இண்டஸ்டிரீஸின்” ரீஜ்னல் அலுவலகம். ஐந்தடுக்கு கண்ணாடிக் கட்டிடத்தை மெச்சுதலுடன் பார்த்த தோழிகளிடம், “வெல்கம் யா” என்று சொல்லிக் கொண்டு உள்ளே விறுவிறுவென சென்றாள்.
சத்யாவின் பிரத்தியேக அறையின் உள்ளே மிருது நுழைந்ததுமே சத்யா அவளை ஓடோடி வந்து வரவேற்பான் என்று எண்ணியவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். சத்யாவின் அறை காலியாக இருந்தது. அவன் காரியதரிசியான ஐம்பது வயது “ரீனாசேச்சி”, “சார் ஒரு மீட்டிங்ல இருக்கார். இப்போ முடிஞ்சிரும். ப்ளீஸ் வெயிட் மேம்” என்று தன்மையாக சொல்லி விட்டு, மூன்று பெண்களுக்கும் பருக ஏதேனும் வேண்டுமா என உபசரித்துவிட்டு அறையிலிருந்து அகன்றாள்.
மீட்டிங்கை முடித்துக் கொண்டு அறையினுள் நுழைந்த சத்யாவிற்கு முகத்தில் நிறைய ஆச்சர்யம். “வெல்கம் மிருது! திடீர்னு என்ன ஆபீஸுக்கே வந்திருக்க! வெல்கம் தீப்தி, மின்னி” வலுவில் வரவழைத்த புன்னகையுடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.
சொல்லாமல் திடுமென வந்து நின்றது தவறோ என்று சில நொடிகள் யோசனை செய்த மிருது, தோழிகளின் முன்பு பெருமை காட்டிக் கொள்ளவென, “சொல்லிட்டு தான் வரணுமா என்ன?” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு நமுட்டுச் சிரிப்புடன் வினவினாள்.
“சே, சே நீ எப்போ வேணா வரலாம். இது உன் கம்பெனி” என்ற ரீதியில் சத்யா பதிலளிப்பான் எனப் பெரிதும் எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே. அவனோ சட்டெனத் திரும்பியவன், “ஒரு இடத்துக்கு போறோம்னா, அவங்க இருக்காங்களா இல்லையான்னு கண்டிப்பா கால் பண்ணி கேட்டுட்டு, அவங்க ஃப்ரீன்னா தானே போகணும். நீங்க வர்ற நேரம் அவங்க வீட்டில இல்லாம போயிட்டா என்ன பண்ணறது?” என்று வினவ, மிருதுவுக்குச் சிரித்துச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.
“ஹி ஹி.” என்று அசடு வழிந்த மிருது, சத்யா மேலே பேசும் முன்னர் அவசர அவசரமாகத் தான் கொண்டு வந்திருந்த பிரைடல் மேகஜீன்களை அவன் மேஜையின் மீது கிடத்தினாள். “இதெல்லாம் பாரு சத்யா” என்று ஒவ்வொரு மாத இதழிலும் வந்திருந்த திருமண அறிவிப்புகளை எடுத்து,
சந்திரமுகி ஜோதிகா போல, “ஒட்டியாணம், ஒட்டியாணம், காசுமாலை, காசுமாலை” என்று கண்கள் விரிய அபிநயம் பிடித்து காட்டினாள்.
மிருதுவின் பேச்சை ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சத்யா, பதில் சொல்லும் முன்னர், அவன் அறை கதவினை ஒரு முறை தட்டிவிட்டு உள்ளே வந்தார் அவன் காரியதரிசி ரீனாசேச்சி.
“மிஸ். ராகமாலிகா அண்ட் மிஸ்டர். மைக்கில் ஃப்ர்ம் “ஷ்ருஷ்டீஸ்” ஆர் வெயிட்டிங் இன் த லாபி” என்று செய்தி சொல்லவும், சத்யாவின் முகம் யோசனையுடன் சுருங்கியது. அதிலும் ராகாவின் பெயரைக் கேட்கவும் படபடத்த மனதை வெளிக்காட்டாமல், “அவங்க இப்போ இங்க எதுக்கு வந்திருக்காங்க?” என்று கேட்டு கொண்டே தன் சட்டையின் மடிப்பை சரியாக இழுத்துவிட்டுக் கொண்டான்.
ஆர்வமாக ரீனாசேச்சியிடம் திரும்பிய மிருது, “நான் தான் இங்க வர சொன்னேன். அவங்களை உள்ள கூப்பிடுங்க” என்று கூற, ரீனா தலையசைப்புடன் வெளியேறினார்.
சில நிமிடத்தில் கொஞ்சம் தயக்கத்துடன் மைக்கிலும், சற்றே அலட்சியமான புன்னகையுடன் ராகாவும் அறையினுள் வந்தனர். மைக்கில் சத்யாவைப் பார்த்து மரியாதை நிமித்தம் கை கொடுத்தான். ராகா வெறுமனே புன்னகை சிந்திவிட்டு, காட்டப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“இந்த மாதிரி ஆர்டிகல் தான் நான் சொன்னேன். இதைப் பாருங்க ராகா!” என்ற மிருது, திருமண இதழ்களைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த சத்யாவின் அருகே ராகாவை அழைத்திருந்தாள்.
ராகா ஏற்கனவே இதையெல்லாம் வார்த்தை விடாமல் படித்திருந்தாள் தான் என்ற போதும்,மிருதுவின் பேச்சிற்கு மதிப்பளித்துத் திரும்ப அந்த பளபளப்பான காகிதத்தில் கண்களை மேயவிட்டாள்.
ராகாவின் முழு பார்வையும் புத்தகத்தில் தான் இருந்தன. தலை குனிந்து புத்தகத்தில் லயித்திருந்த போதும், அவள் முகத்திற்கு பக்கவாட்டில் சில அடிகள் தூரத்தில் தெரிந்த சத்யாவின் பிம்பம் அவளைக் கொஞ்சம் போல அசைத்தது. ராகா அருகில் வந்ததுமே, அவள் கையில் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, நகர்ந்து விட்டவன், ரொம்பவும் தொலைவு செல்லாமல் சில அடிகளிலேயே நின்று கொண்டான்.
“நீங்க எங்க போறீங்க சத்யா! வாங்க, நீங்களும் இதைப் பாருங்க.! எனக்கு இந்த மாதிரி இண்டர்வியூ பண்ணனும்” என்று சற்றே நகர எத்தனித்த சத்யாவின் கைகளைப் பற்றி அருகே இழுத்து வைத்துக் கொண்டாள் மிருது. மூவரும் சேர்ந்து ஒரு புத்தகத்தை வாசிக்கும் நெருக்கத்தில் நின்றுவிட சத்யாவின் தடுமாற்றம் ராகாவிற்கு அப்பட்டமாய் புலனாயிற்று.
“எதுக்கு இவளோ நர்வெஸ் ஆகறான்? நான் என்ன பண்ணிட்டேன் இப்போ?” என்ற கேள்வி ராகாவின் மனதைக் குடைந்தாலும், “ஏன் நீ எதுக்கு இவளோ டென்ஷன் ஆகற இப்போ? அவன் ஃபியான்சி கூப்பிட்டான்னு அவன் பக்கத்தில் வந்து நிக்கறான். ஒரு ஜென் பக்கத்தில் நின்னாலே நீ அஃபெக்ட் ஆகிடுவியா? யார்கிட்ட கதை சுத்தற?” என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி, தடதடத்த இதயத்தை சமன் செய்து விட்டிருந்தாள்.
ராகாவின் சில நொடி பரிதவிப்பை சத்யா உணர கூட அவகாசம் அளிக்கவில்லை. “#பீகேர்ஃபுல்” என்று மீண்டும் மீண்டும் மனதில் உருவேற்றிக் கொண்டு, மிருதுளாவிடம் திரும்பினாள் ராகா.
நல்ல வேளையாக சத்யாவிற்கு ஏதோ தொலைப்பேசி அழைப்பு வந்துவிட, அப்பாடா என்ற பெருமூச்சுடன் அங்கிருந்து இரண்டடி நகர்ந்து போனான். அவன் செல்லவும், ராகாவும் மிருதுவும் அந்த ஆர்டிகல் பற்றியும், அது போல் ஃபோட்டோ சூட் செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்க துவங்கியிருந்தனர்.
இன்னும் சில நேரம் மிருதுவுடன் பேசிவிட்டு, அவளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு, “நாங்க மேகஜீன்ல பேசிட்டு, எப்போ ஷூட் வச்சுக்கலாம்னு அப்டேட் பண்ணறோம்.” என்று விடைபெற்றுக் கொண்டாள் ராகா.
மைக்கில் மிருது மற்றும் சத்யாவின் பர்சனல் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு, “எந்த நேரத்தில வேணாலும் நீங்க காண்டேக்ட் பண்ணலாம்.” என்று அவன் எண்ணையும், வனிஷாவின் எண்ணையும் மிருதுவிடம் கொடுத்து விடைபெற்றான்.
ராகா, சத்யாவிடம் சொல்லிக் கொள்ளலாம் என அவனை ஏறிட அவனோ, மறுபக்கமாகத் திரும்பி நின்று அலைபேசியில் இன்னமும் பேசி கொண்டிருந்தான். மிருதுவிடம் சொல்லிக் கொண்டு, அறையின் கதவு வரையிலும் சென்ற ராகா சற்றே தயங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை சத்யா நின்றிருந்த திசையினை ஏறிட, “ஓ, டோண்ட் வரி. ப்ளீஸ் நோ ஃபாட்மாலிட்டீஸ் ராகா! சத்யாகிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணிக்கறேன். பை. சீ யூ” என்று சிரிப்புடன் மிருதுளா விடை கொடுத்தாள்.
ராகா பதிலேதும் சொல்லாமல் தலையசைத்து அந்த அலுவலகத்திலிருந்து வெளிபட்டாள். சத்யாவின் செய்கை சற்றே ஏமாற்றம் அளித்திருந்தது அவளுக்கு! “ஒரு ஃபார்மாலிட்டாக அட்லீஸ்ட் திரும்பி பார்த்திருக்கலாம்” என்று மனம் ஏங்கியது.
அவனிடம் சொல்லாமல் சென்றால் தான் என்ன? வந்த வேலை மிருதுவுடன் பேசுவது தானே! அதைச் சரியாகச் செய்தாயிற்றே! பிறகும் என்ன சமாதானம் ஆகாதது போல, முற்றுப் பெறாதது போன்ற எண்ணம்” என்று உள்ளே சொல்லிக் கொண்டவள் கீழே ரோட்டில் நிறுத்தியிருந்த மைக்கிலின் பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சத்யாவைப் பற்றிய நினைப்புடன் எதார்த்தமாக அந்த கட்டிடத்தினை நிமிர்ந்து பார்க்கத் தோன்றியது அவளுக்கு. வெளியே இருந்து பார்த்தால் முகம் பார்க்கும் கண்ணாடியாக உருவத்தை மட்டுமே பிரதிபலிக்கும் கட்டிடத்தின் நான்காம் மாடியில் தன்னறையின் ஜன்னலருகே நின்றிருந்த சத்யசாய்ராம், கொஞ்சம் போல ஏக்கத்துடன் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்த ராகாவைத் தான் அப்போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் அவனை அறியாமல், “ராட்சஸி” என்று மெல்லமாய் முணுமுணுத்தன.