“முடிஞ்சிடுச்சா? என்ன முடிஞ்சுச்சு? இப்படி மொட்டையா சொன்ன எனக்கு எப்படி புரியும்?” என்று மணி பதற,
ஆழியின் ஆழத்தை ஒத்த பெருத்த அமைதி அவளிடம். அவளின் அமைதி அவன் சமநிலையை அசைத்துப்பார்க்க, “என்னாச்சு?”
“இத்தனை வருஷமா எவ்ளோ அறியாமைல இருந்திருக்கேன்னு இந்த ஒரு வாரத்துல புரிஞ்சுது.” என்றாள் அடக்கப்பட்ட அகத்திலிருந்து.
“என்ன ஏதேதோ சொல்றீங்க?”
“ஒன்னும் இல்லை. மனசு சரியில்லை. வீட்டுக்கு போக பிடிக்கல. கொஞ்ச நேரம் இப்படியே இங்க உட்காந்துட்டு போகலாம்னு வந்தேன்.” சிரத்தையின்றி ஒலித்த அவள் பதிலில் ஏன் இந்த பெண் இப்படி செய்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு.
மனம் கேளாது அவனும் பேச்சை வளர்த்தான், “மனசு சரியில்லைன்னா ஏன் இப்படி ராத்திரி நேரத்துல தனியா இருக்கீங்க எப்போதும்? பிரெண்ட்ஸ் யாரையாவது துணைக்காவது கூப்பிட்டு இருக்கலாமே?”
“என் பெஸ்டிக்கு நைட் ஷிப்ட். இப்போதான் வேலையே ஸ்டார்ட் பண்ணி இருப்பா. எப்படி அவளை கூப்புடுறது?” இருளில் அங்கு மிளிர்ந்த மின்விளக்குகள் வெளிச்சத்தில் யாழினியின் முகத்தை அவன் உற்று நோக்க, அவள் முகம் துடைத்து வைத்தது போல் இருந்தது. எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
குழப்பத்துடனே, “என்னங்க இந்த ஊருலே ஒரே ஒருத்தர்தான் உங்க பிரென்ட் மாதிரி சொல்றீங்க? அவங்க இல்லைனா வேற யாரையாவது கூட வச்சிருக்கலாமே? உங்க அண்ணனே பிரெண்டிலியாதான் இருப்பாங்கன்னு நினைக்குறேன்.”
“அவன் என்ன பண்ணிடப்போறன்? இல்லை என்ன பண்ணிட முடியும்? எல்லா விஷயத்துலையும் அவன் பேச்சை கேக்குற அப்பா இப்போ மட்டும் யார் சொல்றதையும் கேக்குறது இல்லை. அவர் எடுத்ததுதான் முடிவுன்னு இருக்காரு.” என்று விரக்தியாய் பகிர்ந்தவள் சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
“இருபத்தி ஆறு வயசாகுது, அஞ்சு வருஷமா வேலைக்குப் போறேன். தனியா எல்லா இடத்துக்கும் போயிடுவேன் எதுக்கும் முடிவெடுக்க தெரியாம தவிச்சது இல்லை. எனக்கு எது தேவை எது வேணும்னு தெளிவா இருப்பேன் அதை வீட்லையும் சொல்லி இருக்கேன். எனக்கு பிடிச்ச படிப்பை பிடிச்ச காலேஜ்ல படிச்சேன் ஆனா பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை எனக்கு இல்லையாம்.
எனக்கு விவரம் பத்தாதுன்னு எங்க அப்பா நினைக்குறாரு. எனக்கு புரியல இதுக்கு மேல இவங்க என்ன எதிர்பாக்குறாங்க என்கிட்ட? என்ன புரிதல் இல்லை எனக்கு?” பதில் வேண்டி அவனைப் பார்க்க, என்ன சொல்ல என்று அவனுக்கு விளங்கவில்லை.
“நீங்க எப்படி நடத்துக்குறீங்க, உங்க வீட்ல என்ன நினைக்குறாங்கனு தெரியாம நான் எப்படி இதுல உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்? நான் என்ன சொன்னாலும் தப்பாகிடுமே.” மனதில் இருந்தவற்றை மறையாது அவன் வெளிப்படுத்த,
“உங்களுக்கும் புரியல MK.” என்று அவள் பேசியது நிச்சயமாய் அவனை கடுப்பாகியது.
“நீ என்ன எதிர்பாக்குறேன்னு சத்தியமா எனக்கு புரியல யாழினி. முன்ன பின்ன இருந்தாதான் வாழ்க்கை. எப்போதும் சீரா இருந்தா அது சலிச்சிடும் அப்படி இருக்கவும் முடியாது. இப்போ நீ நிக்குற இடம் ரோட்ல இருக்குற ஸ்பீட் பிரேக்கர் மாதிரி ஒரு சின்ன மேடு அதை ஏறி இறங்கிட்டா அடுத்த மேடு வரவரைக்கும் சீரா இருக்கும். எனக்கெல்லாம் என்ன பிடிக்கும் எது எனக்கு செட் ஆகும்னே தெரியல இருந்தாலும் ஓடிட்டு இருக்கேன்.” என்று சலித்தவண்ணமே பேசினான் மணி.
“உங்க பிரச்சனை வேற என்னோடது வேற.”
“எல்லாத்தையும் காம்ப்ளிகேட் பண்ணிக்காதீங்க. உங்களுக்கு என்ன வேணும்னு தெரியும்னு சொல்றீங்கள்ள அதுல உறுதியா இருங்க.”
“நான் உறுதியா இருக்கேன் ஆனா அதை ஏத்துகிற மனநிலைல எங்கப்பா இல்லை. அவருக்கு நான் வீடு வாங்கணும்னுன் சொல்றது பிடிக்கலை. கல்யாணம் பண்ணிகிட்டு உனக்குன்னு வீடு வாங்கணும்னா வாங்கிக்கோ. அடுத்த வீட்டுக்கு வாழ போற பொண்ணு எங்களுக்கு நீ வீடு வாங்குறது எல்லாம் சரியா வராது. நாங்க தான் உனக்கு செய்யனும் நீ எங்களுக்கு செய்ய வேண்டாம்னு சொல்றார். அவரோட முடிவுல மாற்றமே இல்லைனு பிடிவாதமா இருக்கார். பொண்ணுங்குறதால என்னோட விருப்பத்தை நிராகரிக்கிறது என்ன நியாயம்?” என்று நான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்று அதிலே நின்றாள்.
“உங்க அப்பாவை மட்டும் நீ கோச்சுக்குறதும் நியாயம் இல்லை யாழினி. அவரு எதார்த்தத்தோட வாழ பழகிட்டாரு. அதை மாத்துறது அவ்வளவு சுலபம் இல்லை. நம்ம ஒருத்தரால அதை மாத்த முடியாது. பெரிய மாற்றம் வரணும் சமூகத்துல அப்போதான் காலங்காலமா கடைபிடிக்குறது எல்லாம் கொஞ்ச கொஞ்சமா மாற்றமடையும்.” நியாயம் இன்னதென அவளுக்கு புரியவைக்க மெனக்கெட்டான் மணிகண்டன்.
“அந்த மாற்றம் என்கிட்ட இருந்து துவங்கட்டுமே!” என்றாள் அவள்.
“மாற்றம் வரணும்னு நீங்க மட்டும் நினைச்சா பத்தாது. உங்க குடும்பமும் உங்களை மாதிரியே யோசிச்சாதான் உண்டு. இல்லைனா கஷ்டம்.”
“அவங்க யோசிக்கல அதுதான் பிரச்சனை. இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சது நாள்லேந்து சமைக்க கத்துக்கணும்னு ரொம்ப பிரஷர். எனக்கு பிடிக்கல அதை சொன்னாலும் இதெல்லாம் கத்துக்கணும்னு அப்பா அட்வைஸ். இதெல்லாம் நான் பொறுமையா கத்துப்பேன்னு அம்மா அப்பாகிட்ட சொன்னாலும் அவர் கேட்க மாட்டேங்குறார்.” என்று மீண்டும் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள். அதை குற்றமென்று எண்ணாதே என்ற தொனியில் வந்தது அவன் பதில்.
“கல்யாணத்துக்காக வேண்டாம். உங்களுக்காக கத்துக்கோங்க. யாரையும் எதிர்பாக்காம உங்களுக்கு பிடிச்சதை நீங்களே செஞ்சுக்கலாம். சமையலும் ஒரு சர்வைவிங் ஸ்கில்தான் அதை கத்துகிறதால தப்பு ஒன்னும் இல்லை. எல்லாருக்கும் சமைக்க தெரிஞ்சா பொண்ணுங்க வேலையும் சுலபமாகிடும்.”
அவள் எண்ணவோட்டத்திற்கு ஏத்தவாறு அவனும் சமையல் பற்றி சமத்துவம் பேச மங்கை மனம் மலர்ந்து அகம் திறந்தது.
“உங்களை மாதிரி எல்லாரும் நினைச்சா நல்லா இருக்கும்.” என்று இடைவெளி விட்டவள், பார்வையை தொலைவில் செல்லும் வாகனங்கள் மீது பதித்து, “உனக்கு இதெல்லாம் புரியாது யாழிமா. இப்ப கொஞ்ச நாளா நான் அதிகமா கேட்குறது இதைத்தான்.”
“வேலைக்கு போய் ஒரு நல்ல நிலையில இருக்குற நீங்களே சுயமா முடிவெடுக்க முடியாத நிலைமையில இருக்கீங்க. என்பாடெல்லாம் சொல்லி மாளாது.” அவளுடன் தன்னையும் இணைத்துக்கொண்டான் மணிகண்டன்.
“என்னோட சேர்ந்து உங்க சோகப்பாட்டையும் அப்பப்போ வாசிக்குறீங்க MK.”
“வேற என்ன பண்ணறது? என் புழப்பே இங்க சோத்துக்கு சிங்கி அடிச்சிட்டு இருக்கு. நான் என்னத்த சொல்றது? கூடிய மட்டும் உங்க வீட்டில பேசுங்க இப்படி தனியா வந்து இருக்குறது எதையும் மாத்தப்போறது இல்லை.”
“எவ்ளோதான் பேசுறது MK? எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டேன் ஆனாலும் வீம்புக்கு போன வாரம் பாக்க வந்தவனுக்கே என்னை நிச்சயம் பண்றேன்னு அப்பா வாக்கு கொடுத்துட்டார். அவரை மீறி எப்படி இதை நிறுத்தப்போறேன்னு தெரியல.” என்று சலித்தாள் யாழினி.
“எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்க உண்மையிலேயே உங்களுக்கு அந்த பையனை பிடிக்கலையா இல்லை உங்க விருப்பத்தை உங்க வீட்ல கேக்கலைனு பிடிவாதமா இதை மறுக்குறீங்களா?” என்று அவள் விழி நோக்கி கேட்க, அவன் பார்வையை சந்திக்காமல் சிரம் தாழ்த்தியவள்,
“நான் அவனை சரியாக்கூடா பாக்கல. எனக்கு இப்போ வேணாம் அதுதான் மனசுல ஓடுது. வீட்லயும் இதேதான் சொன்னேன் அவங்க ஒதுக்கல, பேசி முடிச்சிட்டாங்க.”
“நீங்க ஏன் உங்க அப்பா பார்த்திருக்கிற அந்த பையன் கிட்ட பேசக்கூடாது? உங்க கனவுகளை நிறைவேற்ற அவரு உறுதுணையா இருந்தா உங்களுக்கு சம்மதம் தானே? உங்க கனவு நனவாகுறதுதான் உங்க லட்சியம்னா அது எப்படி நடந்தா என்னங்க? அவரு உங்களுக்கு துணையா இருந்தா உங்க அப்பாகூட உங்க ஆசைக்கு தடை போட முடியாது. உங்க கனவும் நனவாகிடும் உங்க அப்பா ஆசைப்பட்டது மாதிரி உங்க கல்யாணமும் நடந்துடும். யாருக்கும் எந்த மனக்கசப்பும் இருக்காது.” என்ற யோசனையுடன் சேர்த்து,
“உங்களுக்கு எது பிரச்சனைன்னு முதல்ல நீங்க தெளிவாகுங்க! கல்யாணமே பிரச்சனையா இல்லை உங்க விருப்பப்படி வீடு வாங்கவிடாம முடக்குறது உங்க பிரச்சனையா?” என்று கேள்வி எழுப்ப, அவனின் உசுப்பலில் அவள் விழிகளில் தெளிவு வந்தது.
“கரெக்ட்தான்… எனக்கு கல்யாணம் பிரச்சனையில்லை. என் ஆசையை மதிக்காம அவங்க முடிவெடுக்குறதுதான் பிடிக்கல. நீங்க சொல்ற மாதிரி நான் நம்பர் வாங்கி அந்த மாப்பிள்ளைக்கிட்ட பேசுறேன். என் கனவு நனவானா ஐ வில் பீ தி ஹாப்பியஸ்ட்.” என்ற பின்தான் அவள் இதழ் வளையவா என்று மெலிதாய் விரிந்து வளைந்தது.
“அது என்னவோ தெரியல என்னோட பல்ஸை நீங்க சரியா புடிச்சிடுறீங்க. உங்ககிட்ட பேசுன பிறகு தெளிவு கிடைக்குது. போன முறை மீட் பண்ணப்போ நீங்க சொன்னதால்தான் நான் மாப்பிள்ளை பாக்கவே வீட்ல ஒத்துக்கிட்டு தயாரானேன். இந்த முறையும் அதேபோல எனக்கு நல்ல ஐடியா குத்திருக்கீங்க. தேங்க்ஸ் MK.” என்றாள் உளமார.
பின், “நான் அவரோட பேசிட்டு முடிவெடுக்குறேன். உங்க லைஃபும் சீக்கிரமே மாறும்… ஓவரா சோக கீதம் வாசிக்காதீங்க. அது உங்க அம்மா கெத்துக்கு செட் ஆகல.” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவன் இதழிலும் பெருநகை.
“கூடிய சீக்கிரம் திருமதி. யாழினியை இங்க பாக்கலாம்.” என்றான் அவனும் கேலியாய்.
“திருமதி ஆகிட்டா யாழினி ஏன் இங்க வரப்போறா? அவளோட திரு.வோட டூயட் பாட போயிருவா.” கண்ணடித்து அவள் வண்டியை எடுக்கச் செல்ல,
“மேடமுக்கு இப்போவே கல்யாண கலை வந்துடுச்சு.” என்றபடி இவனும் பின் சென்றான்.
அடர் இருளை மாய்த்த வண்ணம் மிளிர்ந்த மின்விளக்குகள் ஒளியில் அவள் முகம் மிக அருகே தெரிய, எச்சில் கூட்டி விழுங்கினான். சில கணங்களுக்கு முன் துயர் தாங்கி குழம்பியிருந்த அவள் விழிகள் செழிப்புற்று வண்ணங்களை அள்ளித் தெளிக்க, அதில் தன்னையும் மீறி தொலைந்து போனான் மணிகண்டன். அவளின் காந்த விழிகள் வா என்பது போல் அழைக்க இவனின் வறண்ட விழிகள் முதல் முறையாய் அவளின் வடிவை அளந்தது.