“ஏன் இப்படி? இதெல்லாம் வேண்டாம் அவங்கள கட்டாயப்படுத்தி எதுக்காகச் செய்ய வெக்கணும்” என்றவளை கையைக் கட்டி நின்று பார்த்திருந்தான் சேனாபதி.
“திலோ என்னைப் பாரு” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் “இதெல்லாம் நாம சொல்லாமலே அவங்க செஞ்சிருக்கணும், அவங்க வாழ்க்கை எப்படியோ விருப்பம் இருந்ததோ இல்லையோ ஆனா நீ… நீ அவங்களுக்கு முக்கியம் இல்லையா!”.
“உனக்கான எதையுமே செய்யாம இத்தனை வருஷத்தைச் சுயநலமாவே வாழ்ந்துட்டாங்க, இந்தக் கல்யாணம் இதுல மட்டுமாவது அவங்களோட பொறுப்பு என்னனு தெரிஞ்சு செய்யட்டும் அவங்க செஞ்சுதான் ஆகணும், இந்த விஷயத்துல என்னைக் கேள்வி கேக்காத” என்றவனை பார்த்து நின்றவள் ஒன்றும் கூறாமலே திரும்பிச் சென்றாள்.
இந்த முறை ஸ்வேதா மகன்களை அழைத்து வந்திருந்தாள் திலோத்தமாவுடன் குடும்ப வீட்டிலே அவளும் தங்கிக்கொண்டாள், வேலைக்கு மங்கா அங்கிருந்தபோதும் பாண்டியம்மாவை அழைத்துவந்து இங்கு விட்டிருந்தான் சேனாபதி, திலோத்தமாவின் அனைத்து தேவைகளையும் அவரே பார்த்துக்கொண்டார்.
அந்தப் பிள்ளைகளும் இவளுடன் ஒட்டவில்லை இவளுக்கும் அவருடன் ஓட்டமுடியவில்லை.
“உங்க அம்மாவோட நகை எல்லாத்தயும் நீதானே வாங்கிட்டு போன அதைத் திருப்பிக் குடு, அது எல்லாமே நியாயமா திலோவுக்கு சேரவேண்டியது” என்றான் கரண் ஸ்வேதாவிடம்.
“அது என் அம்மாவோடது”.
“ஆமா உன் அம்மாவோடது… அதுக்கப்புறம் உன் பொண்ணுக்குத்தானே அப்போ திலோவுக்குத்தானே” என்றவனின் விழிகள் அவளுடைய இரு மகன்களின் மீது பதிந்தது.
அவளுடைய வெள்ளைக்கார கணவனை உரித்து வைத்திருந்தார்கள் இருவரும், பழவழக்கம் அனைத்தும் அப்படியே கரணின் பார்வையின் அர்த்தத்தை அவள் புரிந்துகொண்டாள் ‘உன் பிள்ளைகளுக்கோ அவர்கள் கல்யாணம் செய்யும் பெண்களுக்கோ அது தேவை படாது’ என்றது அவன் பார்வை.
பழைய கால தங்கநகைகள் அதோடு வைர நகைகளும் பல லக்ஷங்கள் ஆயிற்றே அனைத்தும், அதை எப்படி கொடுக்க என்ற யோசனை ஸ்வேதாவிற்கு, மகளுக்கு நகைகளைக் கொடுக்கும்போதே பேத்திக்கென்று தனக்கு பிடித்த பரம்பரையாகப் பாதுகாத்த சில நகைகளை எடுத்துவைத்திருந்தார் திலோத்தமாவின் பாட்டி.
வேறு வழி இல்லாமல் நகைகளைக் கொடுக்க ஒத்துக்கொண்டாள் ஸ்வேதா அதைப் பெற்றுக்கொள்வதில் சேனாவிற்கு சிறிதும் விருப்பமில்லை என்றாலும் திலோவிடம் விட்டுவிட்டான் முடிவுகளை அவளே தீர்மானிக்கட்டும் என்று.
“எனக்காக என் பாட்டி குடுத்துட்டுப்போன நகைகள் இருக்கு அதுவே போதும் நீங்க எடுத்துட்டுப்போனது எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டாள் திலோத்தமா.
ஸ்வேதாவின் முகத்தில் சட்டென்று சதோஷத்தின் சாயல், கரணுக்கு பயம் பிடித்தது ‘இவள் வேண்டாம் என்கிறாள் ஆனால் அவன் விடமாட்டானே, நூறுபவன் இருநூறுபவன் என்று கேட்டுவிட்டால் அதையும் நானே கொடுக்கவேண்டுமா’ என்று.
அதற்கான தேவையே வரவில்லை சீதனமாக ஒன்றுமே இவர்களிடம் அவர்கள் வாங்கவில்லை, மண்டபம் முதல் வந்து செல்பவர்களுக்கான தாம்பூலம் வரை அனைத்தையும் சேனாவின் வீட்டினரே பார்த்துக்கொண்டனர், கரண் மற்றும் ஸ்வேதாவிடம் ஒரு ரூபாய் கூட அவர்கள் வாங்கவில்லை.
சடங்குகளை மட்டும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவர்களைச் செய்ய வைத்தான் கரணுடன் பூஜா வந்து நிற்கப் பூபதி பாண்டியன் மறுத்துவிட்டார் ‘பெற்றவள் உயிரோடு இருக்கிறாளே அவளை நிற்க வையுங்கள்’ என்று.
“அண்ணி… அண்ணா கூப்பிடுறாங்க” என்ற கீர்த்தியை திரும்பிப் பார்த்தவள் “என்னைத் திலோனே கூப்பிடு கீர்த்தி” என்க.
“ஹும்ஹூம் முடியாது, அண்ணின்னு கூப்பிட இந்த வீட்டுக்கு ஒருத்தங்க வரமாட்டாங்களானு எவ்ளோ ஆசை பட்டிருக்கேன் தெரியுமா, எனக்கு அப்படி கூப்பிட தான் பிடிச்சுருக்கு” என்றவளை ஒன்றும் சொல்ல முடியவில்லை.
திருமணத்திற்கு இன்னும் ஒருமாதம் இருக்க திலோத்தமாவை இங்கேயே அழைத்து வந்துவிட்டனர் “அண்ணா மாடில இருக்காங்க” என்றவள் கீழே சென்றுவிட இவள் படிகள் ஏறினாள்.
“ஏன் இப்போ? என்னவா இருக்கும்” என்ற யோசனையோடு.
மேலேறி செல்ல மொட்டைமாடியை நடையால் அளந்துகொண்டிருந்தான் “கூப்டீங்களா” என்றவள் குரலில் நின்றவன் அவளைப் பார்த்து “ஹ்ம்ம்” என்றுவிட்டு மீண்டும் நடந்துகொண்டிருந்தான்.
“என்னவாயிற்று!” என்ற யோசனையோடு இவளும் நிற்க.
“திலோ உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்னாச்சு?” என்றவள் அவனை நெருங்க “நான்… நான் சொல்லிடுறேன் திலோ” என்றான் பின்னில் நகர்ந்துகொண்டு.
அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒவ்வாமை தோன்றியது, தான் தெரிந்த கொள்ள விரும்பவில்லை என்று கூறிய விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறான் என்று.
“எனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம்” என்று திரும்பி நடக்க போனவளை தடுத்து நிறுத்தியது “அவ ஒரு காலேஜ் ஸ்டுடென்ட்” என்ற வார்த்தை.
சட்டென்று திலோவின் விழிகள் குளம் கட்டியது “மினிஸ்டர்ஸ் கூடச் சில டைம் வெளில போவோம் அவங்களுக்கு எப்போவும் எல்லா ஏற்படும் ரெடியா இருக்கும், நானும் கதிரும் தனியா தங்கிப்போம், அந்தத்தடவை இந்தப் பொண்ணும் வந்திருந்தா இதெல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்குற விஷயம் அங்க, ஆனா அந்தப் பொண்ணை என் ரூம்க்கு அனுப்பினப்போ முதல்ல எனக்கு ஒன்னும் புரியல தெரியாம வந்துட்டான்னு நெனச்சேன்”.
“அப்போ அது எனக்குத் தப்பா தெரியல திலோ ஐ ஆம் சாரி, உன்கிட்ட முழுசா சொல்லிடனும் எனக்கு ரொம்ப பாரமா இருக்கு ப்ளீஸ்” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
அடுத்தநாள் காலையும் அவனுக்குப் பெரிதாகக் குற்றவுணர்ச்சி ஒன்றும் இல்லை, மூன்று நாள் பயணமாகவே கூர்க் சென்றிருந்தனர் அன்று காலை முதலே அதிகமான மழை பொழிந்தது ஆகையால் அனைவரும் அறைக்குள்ளே முடங்கிவிட்டனர் அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்தான்.
அவள் இதழ்களில் ஏளன புன்னகை “ஒருவிதத்துல அப்படிதான், இந்தச் சமூகம் இதுல இருக்குற மனுஷங்க” என்றவளை பார்த்தவன் “புரியல அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்” என்க.
“என் கதையைத் தெரிஞ்சிக்க ஏன் ஆர்வம் உங்களுக்கு, அதனால எந்தப் பிரோயோஜனமும் இல்லை” என்றாள் அவள்.
“இருக்கா இல்லையானு நான் சொல்றேன், கோ ஆன்” என்றான் சேனா.
“புருஷனோட முடியாம தவிச்சுட்டு இருந்தா, நல்லா வெச்சுக்குறேன்னு சொன்ன ஒருத்தன நம்பி போய்த் திரும்பி வந்தா கைல ஒரு குழந்தையோட, அம்மாக்கு என்னைப் படிக்க வெக்கணும்னு ஆசை ஒருத்தனையும் நம்ப கூடாது சொந்த கால்ல நிக்கனும்னு சொல்லுவாங்க, சில பேரோட உதவியால காலேஜ் சேந்துட்டேன்”.
“ஆனா எல்லா செலவுக்கும் யாரையாவது தேடிகிட்டே இருக்கணும் வீட்டு செலவுக்குக் கூடக் காசு இல்ல காலேஜில சில பொண்ணுங்க இப்படி போறாங்க, அவங்க சொல்லித்தான் நானும்… என்னோட தேவைக்கு இப்போ நான் யார்கிட்டயும் கெஞ்ச வேண்டாம் என் குடும்பம் நான் ஏதோ பார்ட் டைம் வேலை பாக்குறதா நினைக்குறாங்க அப்படியே இருக்கட்டும்” என்றாள்.
கூர்கிலிருந்து வந்த ஒருவாரத்திலே அவளுடைய மீதம் இருந்த இரண்டு வருடத்துக்கான காலேஜ் பீஸ் ஹாஸ்டெல் பீஸ் மற்றும் அவளுடைய செலவுக்கு ஒரு தொகை என்று கொடுத்தான்.
“வேற என்ன தேவைன்னாலும் இந்த நம்பருக்கு கால் பண்ணு கதிர் வருவான்” என்று சொல்லியிருந்தான், இதன் மூலம் அவளை உபயோகப்படுத்தும் எண்ணமில்லை.
“என்னால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது நான் இதை வெச்சு உன்னைப் படுக்கைக்குக் கூப்பிட மாட்டேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம் உங்க அம்மா ஆசைப்படுற மாதிரி நல்லா படிச்சு வேலைக்குப் போ இங்கேயே பார்ட் டைம் வேலையும் ஏற்படு செஞ்சிருக்கேன்” என்று சொல்லிச் சென்றான்.
‘ஒரு பெண்ணின் வாழ்வை நல்ல முறையில் மாற்றியிருக்கிறோம்’ என்ற நிறைவு அவன் மனதிற்கு வந்தது, சரியாக ஒரு வருடம் சென்று அவளை மீண்டும் பார்த்தான் மணாலியில்.
முதலில் திருமணம் செய்துகொண்டாளா என்று ஆச்சர்யம் வந்தது, பிறகுதான் புரிந்தது இல்லை அவள் கால் கேள் என்று.
“இங்க என்ன பண்ற?” என்றவனை பார்த்து முதலில் அதிர்ந்தவள் பிறகு தெளிந்துவிட்டாள் “நான் என்ன பண்றேன்னு கேக்க நீங்க யாரு” என்றவள்.
“ஏதோ காசு குடுத்து உதவி செஞ்சோம்னு உங்க இஷடத்துக்குத்தான் நான் வாழணும்னு எதிர்பாக்காதீங்க” என்றவள் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தவன்.
“என்னடி ரொம்ப துள்ளுற சின்னப் பொண்ணு வாழ்க்கை இப்படி வீணாப்போகுதேன்னு சரி பண்ண வழி காமிச்சா என்னை என்னைக் கேனயன்னு நெனச்சியா”.
“பீஸ் எல்லாம் கெட்டிட்டேன் செலவுக்கும் காசு குடுத்தேன், ஒரு வேலையும் வாங்கி குடுத்தேன் இதுக்குமேல என்ன தேவை உனக்கு, படிச்சு நல்ல வேலைக்குப் போய் நல்லபடியா கல்யாணம் செஞ்சு வாழலாம்ல இப்படி சீரழியிற”என்றான் ஆத்திரத்தோடு.
கன்னத்தை ஒரு கையால் தாங்கிக்கொண்டவள் “அவ்ளோதான் தேவைகளா… இந்த மாதிரி பிராண்டட் துணி எடுக்க முடியுமா, இந்த ஊரெல்லாம் கண்ணால பாக்க முடியுமா பிளைட்ல வந்துருக்கேன் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்குறேன் பேக், டிரஸ் ஷூ நகைன்னு எல்லாமே கிடைக்குது இதுதான் நான் ஆசைப்பட்டது”.
“கல்யாணத்துக்கு என்ன? நல்லா சம்பாதிக்குறவனா பாத்து செட்டில் ஆயிடுவேன், ஏன் எங்களுக்கு மட்டும்தான் கற்பா ஒரு நாள்தான் என்னைத் தொட்டீங்க அப்படினாலும் ஒரு கால் கேர்ள் கூட இருந்தவர் தானே நீங்க என்னமோ யோக்கியன் மாதிரி என்னைச் சொல்றீங்க”.
“எனக்கு அப்புறம் இல்ல எனக்கு முன்னாடி எந்தப் பொன்னையும் தொட்டதில்லையா, உங்களை மாதிரிக் காசு இருக்கறவங்களுக்கு இதெல்லாம் சாதாரணம்தானே நீங்க நாளைக்கு கல்யாணம் செஞ்சுக்க மாட்டீங்க, நல்ல குடும்பத்துல பொறந்த பொண்ணா அடக்க ஒடுக்கமா கற்போடா பாத்து பாத்து கட்டமாட்டீங்க”.
“நீங்கப் பண்ணும்போது எனக்கு மட்டும் என்ன, உங்களுக்குத் தைரியம் இருக்கா என்னை மாதிரி ஒருத்தி கூட மூணு
நாள் இருந்தேன்னு சொல்லித்தான் பாருங்களேன் கட்டிக்கப்போறவகிட்ட, இந்த உண்மையைச் சொல்லிட்டு கல்யாணம் செஞ்சுக்க முடியுமா” என்றாள்.
அந்தக் கேள்வி அப்படியே மனதில் தரைத்துவிட்டது முள்ளாக, ஒருவேளை தான் திருமணம் செய்யும் பெண்ணிற்கு இப்படியொரு முன் கதை இருந்து அதைத் தன்னிடம் அவள் மறைத்துவைத்து பிறகு ஒரு நாள் அது தனக்கு தெரியவந்தால் தன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா, அப்படித்தானே தன்னை மணந்துகொள்ளும் பெண்ணிற்கும் இருக்கும் அதற்காகப் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் தன்னுடைய கடந்த கால விஷயங்களைக் கூற முடியுமா என்று பலவாறாகச் சிந்தை குழம்பியது.
அதற்குமேல் அங்கே நிற்கவில்லை அன்றே அங்கிருந்து திரும்பிவிட்டான், எஸ்டேட் ஓனர் மகளுடன் பேச்சுவார்த்தையில் இருந்த திருமணத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
‘அனைத்தையும் கூறிவிட்டேன்’ என்பதாக அவன் அவளைப் பார்த்து, நிற்க அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை முன்பே தெரிந்தததுதான் என்றாலும் மீண்டும் அவன் வாய்மொழியே கேட்டபோது வலித்தது.
சில நொடிகள் அமைதிக்கு பிறகு எழுந்தவள் “நான் போகவா” என்றாள் அமைதியாக, அவளை நெருங்கியவன் அவள் கையில் ஒரு கவரை வைத்தான்.
“அன்னைக்கு நான் குடுத்த புடவையை நீ கட்டல… எனக்குப் புரியுது உன்னை நான் கட்டாயப்படுத்தல இதுவும் கட்டாயம் இல்ல, நம்ம ரெண்டு பேராலயும் ஒருத்தர பிரிஞ்சு ஒருத்தரால இருக்க முடியாது நம்ம கல்யாணம் நல்ல படியா நடக்கும்”.
“ஆனா அதுக்காக என்னை நீ உடனே ஏத்துக்கணும்னு இல்ல, உன்னால எப்போ என்னை முழுசா ஏத்துக்க முடியும்னு தோணுதோ அப்போ இந்தப் புடவையைக் கட்டு” என்றவன் “நீ கீழே போ நான் வரேன்” என்றான், அதை வாங்கியவள் ஒன்றும் பேசாமல் படிகள் இறங்கினாள்.
திருமணத்திற்கு முதல் நாள் சொத்துக்கள் பிரிப்பதை பற்றிப் பேச்சுவார்த்தை நடந்தது “ஏன் சேனா இப்போவே இதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்” என்றார் அவன் தந்தை முத்துப்பாண்டி.
“இல்லப்பா இதோட முடிஞ்சிடனும் கல்யாணத்துக்கு அப்புறம் இதை எதைப்பத்தியும் பேச்சு இருக்க கூடாது, இவங்கள பாக்கவே கூடாதுனு நினைக்குறேன்” என்றான்.
அவர்களுடைய குடும்ப வழக்கறிஞர் வந்திருந்தார் “நீங்கச் சொன்ன மாதிரியே எல்லாம் எழுதிட்டேன் மிஸ்டர் சேனாபதி, எல்லாரும் இருக்காங்களா படிச்சுடலாமா” என்க, அவன் விழிகள் திலோத்தமாவில் பதிந்தது அவள் சம்மதம் கிடைத்ததும் “படிங்க சார்” என்றான்.
“சுந்தரன் அய்யா எழுதிவெச்சபடி இந்தச் சொத்துக்களை எப்படி பிரிக்கணும் யாருக்கு குடுக்கும்னு முடிவு பண்ற உரிமை திலோத்தமாவுக்குத்தான் உண்டு, ஆனா அது அவங்க திருமணம் செஞ்சுகிட்டு அவங்களும் அவங்க கணவனும் சேர்ந்து முடிவு பண்ணனும் அதுதான் அவர் எழுதி வெச்சுருந்தது”.
“அதன் படி திலோத்தமாவும் சேனாபதி பாண்டியனும் சேர்ந்து முடிவு செஞ்சு என்கிட்டே சொன்னதுமாதிரி இந்தச் சொத்துக்களை பிரிச்சுருக்கேன்” என்றவர்.
“குடும்ப வீடு திலோத்தமா பேர்லதான் இருக்கும் அந்த வீட்டை யாருக்கும் குடுக்க அவங்க விரும்பல, அதோட தோட்டம் தோப்பு எதையும் பிரிக்கல அது எல்லாம் அவங்ககிட்டதன் இருக்கும்” என்க.
“அதெப்படி என்ன இது… எப்படி இப்படி பிரிக்கலாம் இதுக்கா இவ்ளோ நாள் காத்திருந்தோம்” என்றாள் ஸ்வேதா.
“நீயெல்லாம் எப்படி பிசினெஸ் பண்றன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு” என்ற சேனாவின் குரலில் கோபத்தோடு திரும்பிப் பார்த்தான் கரண்.
“நியாயமா பாத்தா உனக்கு இந்தச் சோத்துல எந்தப் பங்கும் கிடையாது, அவர் பொண்ணும் பேத்தியும் கேட்டா அதை ஒத்துக்கலாம், என்ன பேசிஸ்ல நீ கேக்குற அவர் சொத்தை வாங்கி சாப்பிட வெக்கமா இல்லை” என்றான் கரணை பார்த்து.
இந்த அவமானத்தைத் தாங்கி இந்தச் சொத்துக்களை வாங்க வேண்டுமா என்று எண்ணியவன் கோபமாக ஏதோ சொல்லவர அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் பூஜா.
“அமைதியா இருங்க இதுவே கிட்டத்தட்ட ஆறு கோடி சொத்து ஏதாவது பேசிக் கெடுத்துடாதீங்க, அவளுக்கும் கிட்டத்தட்ட அவ்ளோதான் கிடைச்சிருக்கு” என்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான், அவர்களைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் தலையில் அடித்துக்கொண்டனர் என்ன கேவலமான பிறவி என்று.
“எனக்கும் குடும்ப வீட்டில உரிமை இருக்கு நான் அங்கதன் தங்குவேன்” என்ற ஸ்வேதாவை பார்த்தவன் “உங்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சதை மாத்தி எழுத வெச்சுடாதீங்க” என்றான் எரிச்சலோடு.
“நீங்க யாரும் அந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது அதைத் திலோ விரும்பல” என்றவன் “பெத்தவங்களா ஒழுங்கா நாளைக்கு வந்து எல்லா சடங்கையும் முறையா செஞ்சு கல்யாணத்தை முடிச்சா மட்டும்தான் இதுல நானும் என் மனைவியும் இதுல கையெழுத்து போடுவோம்” என்றவன் பேச்சு முடிந்தது என்று எழுந்து சென்றுவிட அனைவரும் களைந்து சென்றனர்.
கரண் ஸ்வேதா பூஜா மட்டும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்றனர்.
திருமணம் வெகுசிறப்பாக நிறைவாக நடந்து முடிந்தது எந்தக் குறையும் இல்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தான் அவளுக்காக, தாலியை வாங்கிக்கொண்டவள் விழிகள் நிறைய அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
அவள் விரும்பியது போல விரும்பியவனுடன் நிறைவான திருமணம், சாந்தி முகுர்த்தத்துக்கு அன்றே நாள் குறித்திருந்தனர், அறையை அலங்கரிப்பதை அவன் தடுக்கவில்லை முடிவு என்னவோ அது தங்களுக்குள் இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.
“சரி சரி நான் ஒன்னும் சொல்லல, இருங்க நான் ஹெல்ப் பண்றேன்” என்று அழகாகக் கட்டிவிட்டாள், மருமகள் கையில் பால் சொம்பை கொடுத்த வெண்மதி அவள் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பிவைத்தார்.
திலோத்தமாவிற்கு எந்தத் தயக்கமும் இல்லை தன்னை இந்தப் புடவையில் பார்த்தால் என்ன சொல்லுவான் என்ற நினைப்போடு புன்னகை மாறாமல் அவன் அறைக்குச் சென்றாள், வாயில் கதவை அடைக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“ஏய்…” என்று அருகில் வந்தவன் விழிகளில் அத்தனை ரசனை “திலோ!” என்றவன் உண்மையில் பேச்சு வராமல் நின்றுவிட்டான், அவன் முதன் முதலாக வாங்கி கொடுத்த பச்சை நிற பட்டை உடுத்திருந்தாள்.
“பிடிச்சிருக்கா” என்றவள் இதழோடு இதழ் பதித்தவன் அப்படியே இடையோடு அவளை அள்ளிக்கொண்டு கட்டிலுக்கு சென்றான்.
இனி அவள் தடுக்கி விழப்போவதில்லை அவன் கரங்களில் மொத்தமாக விழுந்துவிட்டாள் இனி எப்பொழுதும் அவன் அணைப்பில் அவள் பாதுகாப்பாக நிம்மதியாக இருப்பாளே